-முனைவர் சு. செல்வகுமாரன்                                  

முன்னுரை

எட்டுத்தொகை நூல்களில் சிறப்புக்குரிய ஒன்றாக விளங்குவது கலித்தொகை.  கலித்தொகையின் selvapicமொத்தப்பாடல்கள்-150 ஆகும். இவற்றுள் முல்லைக் கலிப்பாடல்கள்-17 (சோழன்நல்லுருத்திரன்), மருதக்கலிப்பாடல்கள்-35 (மருதன் இளநாகன்), குறிஞ்சிக்கலிப்பாடல்கள்- 29 (கபிலர்), பாலைக்கலிப் பாடல்கள் – 35 (சேரமான் பெருங்கடுங்கோ), நெய்தற்கலிப்பாடல்கள் – 33 (நல்லந்துவன்) என்பதோடு நெய்தற்கலிப் பாடிய நல்லந்துவனாரே ஒரு கடவுள்வாழ்த்துப் பாடலையும் பாடி இதனைத் தொகுப்பித்துள்ளதாக அறியமுடிகிறது. இக்கட்டுரையானது, கலித்தொகையில் முல்லைக்கலிப் பாடல்கள் முல்லைநில மக்களான ஆயர் வாழ்வினை கருத்தியல் மற்றும் காட்சிப்படுத்தல் ரீதியாக எடுத்துரைப்பதன் மூலம் எப்படி அப்பாடல்களை புலவர் கவிதைவளம் மிக்க பாடல்களாக உருவெடுக்கச் செய்துள்ளார் என்பதை ஆராய்கின்றது.

காலம்

ஒரு இலக்கியத்தை வாசிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் அது உருவாக்கப்பட்ட காலமும் சூழலும் மிகவும் அடிப்படையானது. அந்த வகையில் சங்க இலக்கிய உருவாக்கத்தின் காலம் குறித்த பார்வை நமக்குத் தேவையாய் உள்ளது. சங்க இலக்கியத்தின் காலம் குறித்து ஆய்வுசெய்த பேராசிரியர் ச. வையாபுரிபிள்ளை, கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  காலத்தால் பிற்பட்டதாக இருக்கலாம் என்று கருதுகின்றார். பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களும் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய மூன்று நூலினையும்  பழமையான சங்கப் பிரதிகளிலிருந்து நீக்கிவைக்க வேண்டும் என்கிறார். கருத்துநிலை, பாடலின் சொல் மற்றும் தொடர் அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்பிரதிகள் பிற பிரதிகளிலிருந்து வேறுபடுவதாக அவர் கருதுகின்றார் என்பதாக வீ.அரசு அவர்கள் தன் கட்டுரையில் எடுத்தாளுகின்றார். மேலும் இவை குறித்துத் தனது கருத்தினை முன்வைக்கும் வீ. அரசு சங்கப் பிரதிகளின் மேல்எல்லை கி.மு. 550 எனில் கீழ் எல்லை கி.பி 400 என்று கொள்ளலாம். ஆனால் கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றின் மேல்எல்லை கி.பி 5ஆம் நூற்றாண்டு எனில் கீழ்எல்லை கி.பி 9ஆம் நூற்றாண்டு வரை அமையலாம் என்பதாக தனது யூகத்தை முன்வைக்கின்றார். சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வெறியாட்டு, பலி, நடுகல் உள்ளிட்ட சடங்குகளின் அம்சங்களைக் கொண்டே அவர் இந்த முடிவுக்கு வருகின்றார். மேலும் சங்க இலக்கியத்தை எட்டுதொகை, பத்துப்பாட்டு என்ற நிலையில் வகைமைப்படுத்தும் அமைப்பு முறையினையே கட்டுடைப்பு செய்கின்ற பேராசிரியர் வீ. அரசு அவர்கள் அதனை,

“தொகுதி ஒன்று – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து

தொகுதி இரண்டு – பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை

தொகுதி மூன்று – கலித்தொகை.

தொகுதி நான்கு – பரிபாடல், திருமுருகாற்றுப்படை” 1

என்ற நிலைகளில் வரிசைப்படுத்துகின்றார். இதற்கு அவர் வைக்கும் சான்றுகளில் ஒன்றினை இங்குக் குறிப்பிடுவது அவரது கருத்தினை நாம் ஏற்புடையதாக்கிக்கொள்ள பெரிதும் உதவியாய் அமைந்திடும். வெறியாடல் சடங்கானது முதல் தொகுதியில் 36 இடங்களிலும், இரண்டாம் தொகுதியில் 3 இடங்களிலும், நான்காம் தொகுதியில் ஓர் இடத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார். மூன்றாம் தொகுதியில் அதாவது கலித்தொகையில் இடம்பெறவில்லை என்பதாகவும் பதிவுசெய்கின்றார். இத்தன்மை கலித்தொகையின் காலம் பிற்காலமே என்பதனை ஓரளவு உறுதிசெய்து கொள்ள ஏதுவாகின்றது.

திணை

சங்க இலக்கியம் குறித்த ஆய்வுகளில் திணையும் அதன் உள்ளீடான முதல், கரு, உரிப்பொருட்கள் குறித்த இலக்கண நூற்களின் பாகுபாடும், அவைகளின் கருத்தியல் நிலையும் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றினைக் கருத்தில் கொள்ளாது, அல்லது உரிய காரணங்களின்றி முற்றிலும் மறுத்துச் சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வினைச் செய்ய இயலாது. நாம் எடுத்துக் கொண்டுள்ள கலித்தொகைப் பிரதியானது அன்பின் ஐந்திணையான முல்லை என்ற பாகுபாட்டில் இடம் பெறுவதாகிறது. இதற்குரிய முதற்பொருள் அதாவது நிலம் காடும் காடு சார்ந்த இடமாகவும், பெரும்பொழுது கார்காலமாகவும், சிறுபொழுது மாலை நேரமாகவும் சுட்டப்படுகிறது. கருப்பொருட்களான நீர் – காட்டாறு, மரம் – கொன்றை, குருந்தா, புதல், பூ – முல்லை, பிட, தளா, பறவை – காட்டுக்கோழி, விலங்கு –  மான், முயல், உணவு – வரகு, முதிரை, தொழில் – நிரை மேய்த்தல், பறை – ஏறுகோட்பறை, யாழ் (பண்) – சாதாரி, தெய்வம் – மாயோன் (திருமால்), தோன்றல் – ஆயன், ஆய்ச்சி, ஊர் – பாடி, சேரி என்பதாகவும், உரிப்பொருளாக – இருத்தலும் இருத்தல் நிமித்தத்தினையும் முல்லை திணைக்குரியனவாகத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. பிற இலக்கணநூல்கள் இவற்றோடு சிலவற்றை இணைத்தும் விரித்தும் கூறுவதனையும் காணலாம்.

“கைக்கிளை, மற்றும் பெருந்திணைகள் தொல்காப்பியம், இலக்கண விளக்கம், முத்துவீரீயம், தொன்னூல் விளக்கம், சுவாமிநாதம் போன்ற இலக்கண நூல்களில் அகமாகவும், புறப்பொருள் வெண்பாமாலையுள் புறமாகவும், வீரசோழியத்துள் அகப்புறமாகவும் இடம்பெறுகின்றன.

     நம்பியகப்பொருள் மற்றும் மாறன் அகப்பொருள் ஆகிய இரு நூல்களிலும் கைக்கிளையும், பெருந்திணையும் அகத்திணையியலில் அகமாகவும், ஒழிபியலில் அகப்புறமாகவும் சுட்டப்படுகின்றன. களவியற், காரிகை கைக்கிளையை அகப்புறம் எனக் கூறுகின்றது.”2 என்பார்.

செம்மொழித் தகுதி – இலக்கிய வளம்

ஒரு மொழி செம்மொழித் தகுதியாக்கம் பெற்றிட அம்மொழியின் தொன்மையோடு அதன் இலக்கிய வளமும் முக்கியப் பங்களிப்பு செய்கின்றது. அந்த வகையில் தமிழ் செம்மொழித் தகுதிபெற்றிட சங்க இலக்கியங்கள் முதன்மைக் காரணியாய் விளங்கின என்றால் மிகையல்ல. அவ் இலக்கியங்களுக்கு அத்தகைய சிறப்பு என்ன என ஆராய்கின்றபோது அறிஞர்கள் ஓர் இலக்கியம் செழுமை அல்லது முழுமை பெற்றிட அதற்குத் தேவையான சில பொதுமைக் கூறுகளை அவ்இலக்கியம் கொண்டிருக்க வேண்டும் என வரையறை செய்கின்றனர். இதனைப் பாவணர் அவர்கள் ‘தொன்மை, முதன்மை, என்மை, ஒன்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை’ எனப் பதினாறு நிலைகளில் வகைமைப்படுத்திப் பார்க்கின்றார். மணவை முஸ்தபாவின் கருத்தினைத் தனது கட்டுரையில் எடுத்தாளும் பேரா. மு. பழனியப்பன் அவர்கள் அவற்றை தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு – பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித்தாக்கமில்லாத் தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத்தன்மை, மொழிக் கோட்பாடு’ என வரையறை செய்கின்றார்.

உலகில் உயர் தனிச் செம்மொழித் தகுதிபெற்ற அரபி, சீனம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், சமஸ்கிருதம், ஜெர்மன், லத்தீன், பாரசீகம், ஹீப்ரு, கிரேக்கம் ஆகிய பத்து மொழிகளின் இலக்கிய வளங்களோடு தமிழின் தொன்மை இலக்கியங்களை ஒப்பிட்டு அணுகிய இரா. நடராசன் அவர்கள் தமிழ் மொழியைப்பற்றிக் குறிப்பிடுகிறபோது “தமிழ் உயர்தனிச் செம்மொழி மட்டுமல்ல. அது தொன்மை மொழிகளின் முடிசூடா ராணி. செம்மொழிகளிலேயே அதுதனித்த பல சிறப்புகள் கொண்டது. மற்ற எல்லா செம்மொழிகளுக்கும் முன்னதாக இலக்கண நூல்களைக் கண்டது தமிழ்.

விஞ்ஞானம், தத்துவம், இலக்கியம், கணிதம் என அனைத்துத் துறையும் செழித்த ஒரேமொழி” 3 என்று அதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்.

செம்மொழி பற்றிப்பேசும் டாக்டர். மு.வ தனது மொழிவரலாற்று நூலில் ஓரிடத்தில் 1952லேயே “இன்று உலகச் செம்மொழிகளுள் ஒன்றாக மட்டும் கருதப்படும் தமிழ்மொழி, உலகப் பெருமொழிகளுள் ஒன்றாகக் கருதப்படும் நிலையையும் பெற்றிருக்கும்” 4 என்று குறிப்பிட்டிருப்பது அவர்களின் மொழி குறித்த ஆழ்ந்த பார்வையினையும், தமிழ்மொழியின் தன்னிகரற்ற சிறப்பினையும் உணர்த்திநிற்கின்றன. இன்னும், தமிழைச் செம்மொழியாக்குவதில் ஆரம்பம் முதலே குரல்கொடுத்த வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி, பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் கருத்தும், பார்வையும் கூட இங்கு முதன்மைக்குரிய ஒன்றாக எண்ணிப்பார்க்க வேண்டியதாகின்றது.

கட்டுரையின் மையமான இலக்கியவளம் என்பது இங்குக் கவிதைக்குரிய வளமாகவே இனங்காணப்படுகின்றது. கவிதையின்  உறுப்புகள் பற்றிக் குறிப்பிடும் திறனாய்வாளர்கள் கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்று நான்கினை மிகவும் அவசியமாக கருதுகின்றனர். அப்படியாயின் இவைகள் இல்லாது ஒரு கவிதை முழுமை பெற்றதாகவே வளம் மிக்கதாகவே அமைய இயலாது என்பது நினைவிற் கொள்ளத்தக்கது. எனவே இலக்கிய வளம் என்பதனை இலக்கியத்தின் உட்கூறுகளில் ஒன்றாக மட்டுமே நம்மால் பொருத்திப்பார்க்க முடியாது. கவிதை உருவாக்கத்தின் மையமாய்த் திகழும் புனைவு மொழியும், அந்த மொழியை உருவாக்குகின்ற, கட்டமைக்கின்ற, மொழியின் கூறுகளை அடுக்கிச் சொல்லுகின்ற, ஒரு படைப்பை முழுமைப்படுத்துகின்ற அல்லது படைப்பை நீட்டிச் செல்லுகின்ற ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு படைப்பாளியின் சிந்தனைவளம், கற்பனைவளம், கருத்தியல் வளம், அழகியல் வளம் என்பன நிறைந்து கிடக்கின்றன. அவை இன்றிப் படைப்பு செழுமையான படைப்பாக, வளம் மிக்க படைப்பாக வெளிப்பட முடியாது என்பது இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

கவிதையின் வளமையை நாம் தனிமைப்படுத்திப்பார்ப்பது கடினம். சுருங்கச் சொன்னால் கவிதை மொழியின் இயங்கியலாய் அதன் உள்ளீடாய் செயல்படுகின்ற கற்பனை, கருத்தியல், சிந்தனை, அழகியல் கூறுகள் படைப்பாளியின் அனுபவத் திரட்சியிலிருந்து வெளிப்படுகின்ற போதே ஒரு படைப்பானது உருவாக்கம் பெறுகின்றது. இத்தருணத்திலேயே படைப்பாளியிடமிருந்து உவமைகளும், உருவகங்களும், தொன்மங்களும், குறியீடுகளும், படிமக் காட்சிப்படுத்தல்களும், கதைசொல்லல் நிகழ்வுகளும் அவனால் உருவாக்கப்படுகின்ற படைப்பிற்குள் ஊடுருவிச் செல்கின்றன. ஒரு வகையில் சொல்வதானால் இந்த ஊடுருவலையும் படைப்பையும், படைப்பாளியையும் நம்மால் பிரித்தறிவது மிகவும் இயலாதது என்பதே சரியாக இருக்கும். அதுபோலவே ஒரு கவிதையை அதன் கட்டமைப்பு, கருத்தியல், அழகியல், நோக்கம், மொழி, ஒலி அமைப்பு ஆகிய ஏதேனும் ஓர் அளவுகோலை வைத்து வளம்மிக்க படைப்பு என்றோ, வளம்குன்றிய படைப்பு என்றோ வரையறுத்துவிடவும் முடியாது.

படைப்பு குறித்து விவாதிக்கும் ஜானதன் கல்லர் “இலக்கியத்தின் வள ஆதாரங்கள் மற்றும் உற்பத்தி நுணுக்கங்களைப் பற்றிய விவரணை என்ற விதத்தில் இலக்கியவியல் என்பது சொல்லணி வகைகளின் (Rhetorical figures) விவரணையாகக் குறுக்கப்படத்தக்கதல்ல. ஆனால் இலக்கியமொழி சார்ந்த எல்லா வகையான செயல்பாடுகளுக்குமான வளஆதாரங்களையும் ஆய்வு செய்யும் விரிவுபடுத்தப்பட்ட அணியிலக்கணத்தின் ஒருபகுதியில் பார்க்கப்பட முடியும்”5 என்னும் கருத்து ஏற்புடையதாகின்றது. மேலும் “இலக்கியம் வளர்ந்தெழுவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள், மக்களும் இயற்கையுமே. இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களைப் பற்றியும் அல்லது மக்களை விடுத்து இயற்கையைப் பற்றியும் புலவர் பாடுவாரேல், அவ்விலக்கியம் குறைவுள்ள இலக்கியமாகவே விளங்கும். (There are two great subjects of poetry, the natural world and human nature. It is a terrible business for poetry when it is wholly employed on men or wholly employed on nature – Stop – ford Brooke) தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு, முதற் பொருளாக மக்களையும், துணைப்பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர். இயற்கையை தமிழ்ப்புலவர் கையாண்ட முறையில், வேறு எம்மொழிப் புலவரும் கையாண்டிலர்.” 6 என்னும் தனிநாயக அடிகளாரின் கருத்தும் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும்.

கலித்தொகையின் சிறப்பு – கவிதை வளம்

கலித்தொகையின் அமைப்புமுறை பற்றிக் குறிப்பிடும் பழம் பாடல் ஒன்று ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ எனப் பதிவுசெய்திருப்பதன் மூலம் கலித்தொகையினைப் பிற நூல்களிலிருந்து தனித்த சிறப்புடையதாக அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது எட்டுத்தொகை நூல்களில் யாப்பு அமைப்பினால் பெயர்பெற்ற இரண்டு நூல்களில் ஒன்றாகவும் கலித்தொகை விளங்குகின்றது. தொல்காப்பியர் அகப்பொருளில் அமைந்த பாடல்களைப் பாடுவதற்குரிய இரண்டு யாப்புகளில் ஒன்றாக கலியாப்பினை அடையாளம் காட்டுகின்றார். “கலியே பரிபாட்டு ஆயிருபாவினும் உரியதாகும் என்மனார் புலவர்” 7 கலித்தொகை ஏறுதழுவுதல் என்ற புறம்சார்ந்த வீரத்தை மையப்படுத்திப் பேசியிருந்தாலும் அதற்கு அடிப்படையாக அகம் விளங்குவதும் கலித்தொகையின் சிறப்புகளில் ஒன்றாக இனங்காணத்தக்கது. கலியாப்பு பலவாறாய் விளங்குகின்றது. அவற்றுள் ஒத்தாழிசை எனும் யாப்பு வகையில் பாடப்பெற்றவை கலித்தொகைப் பாடல்கள்.

சங்க அகப்பாடல்களில் கைக்கிளையில் அமைந்த பாடல்கள் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.(கலி- 56,57,58,100) அவ்வாறே பெருந்திணைப்பாடல்களும் கலித்தொகையில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. (கலி-138-147) தொல்காப்பிய அகத்திணையியல் அகத்திணைகள் ஏழு எனச்சுட்டும்; “கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக்கிளந்த எழுதிணை என்ப” 8 இவ்விலக்கணத்துக்குரிய இலக்கியம் கலித்தொகை ஒன்றே ஆகும். மேலும் பிற முல்லைப் பாடல்களில் இடம்பெற்றிராத ஏறு தழுவுதலைக் காட்சிப்படுத்தலும் கலித்தொகையின் முல்லைக்கலிக்குரிய சிறப்பாகக் கொள்ளத்தக்கன. முல்லைக்கலிப் பாடல்கள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோலப் பிற இலக்கியங்களுக்கு இல்லாத பல தனித்த சிறப்புகளை உடையன. இதனைப் பாடுபொருள் – கருத்தியல் அடிப்படையில் வகைமைப்படுத்திடும் பேராசிரியர் ராஜ்கௌதமன் “ஆயர்கள் ஏறுதழுவுதலும், குரவை அயர்தலும் (பா – 101,102,103,104,105,106), ஏறு தழுவியவழி களவு, களவு வெளிப்பாடு மற்றும் அறத்தொடு நிற்றலும் (107,111,114,115), கைக்கிளை-பெருந்திணை சார்ந்த அகப்புறத்தலைவன் தலைவியரான ஆயமகனும் ஆயத்தியும் பற்றிய இயல்பில்லா காமியமும் (108,110,112,113,116,117) என்பதாக மூன்று நிலைகளில் பிரித்து நோக்குகின்றார்” 9

முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் அதில் இடம்பெறும் பாத்திரங்கள் (Character) ஆயர்குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் எருமைகளை வளர்ப்பவர்கள் கோட்டினத்தார், பசுவை வளர்ப்பவர்கள் கோவினத்தார், ஆடுகளை வளர்ப்பவர்கள் ஆட்டினத்தார் என்றும் சுட்டப்படுவதை அறியமுடிகிறது. முல்லைக்கலிப் பாடல் 101இல் ஆயர்கள் ஏறுதழுவுவதைத் தலைவிக்கு வெவ்வேறு நிலைகளில்  தோழி காட்சிப்படுத்துகின்றாள். இப் பாடலின் முற்பகுதி முல்லைநில மக்களின் நிலம்குறித்த ஒரு புறச்சூழலை நம் கண்முன் கொண்டு நிறுத்துகின்றது.

   “தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட்புறப் பிடவமும்
குளி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று…10

கார்காலத்தின் தொடக்கத்தில் பெய்த முதல்மழையில் நிலம் குளிர்ச்சியடைந்து செடிகளிடத்தே நிரம்ப அரும்புகள் தோன்றியுள்ளன. பிடவமலர்ச் செடியானது காற்றில் அசைந்தாடுகின்றது. அதனை கள்ளுண்டான் நிலைபோல அசைந்தாடுவதாகவும், அதன் மொட்டானது வளைந்த துடுப்பு போன்றது என்றும் புலவர் காட்சிப்படுத்துகின்றார். இந்த படிமச் சித்தரிப்பு சார்ந்த காட்சிப்படுத்தல் கவிதையை இங்கு வளமையுடையதாக்குகின்றது. இவற்றின் அழகியல்தனம் வாசகனைக் குறிப்பிட்ட படைப்பை விரும்பி வாசிக்க ஆர்வப்படுத்துகின்றது. அத்தோடு வாசகனின் மனத்தில் தான் கண்டுணர்ந்த அனுபவப் பொருள்களின் மூலம் எளிதில் பதிவுபெற்றுவிடவும் இந்த அணிவகைச் செயல்பாடுகள் காரணியாக அமைகின்றன. இதனைக் கவிதை வளமையின் ஒரு நிலையாக நாம் கண்டுணர முடிகின்றது.

தொடர்ந்து முல்லைக்கலிப்பாடலானது ஏறுதழுவுதலை எடுத்துரைக்கின்ற போது ஏறுதழுவுதலின் கடுமைசார்ந்த நிகழ்வுகள், புராணக்கூறுகளின் மூலம் காட்சிப்படுத்தப்படுவதும் முதன்மையான பதிவுகளாக விளங்குகின்றன.

     “அம்சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
      நெஞ்சம் பிளந்து இட்டு நேரா நடுவண், தன்
      வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்.” 11
    “படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்

      இடரிய ஏற்று, எருமை நெஞ்சு இடத்து இட்டு
      குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்” 12
    “ஆர்இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்

      தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
      தோளின் திருகுவான் போன்ம்;” 13         

அதாவது, முல்லை நிலத்து மலர்களைத் தொடுத்து கண்ணியாகச் சூடியிருந்த ஆயர் இளைஞர்கள், தாம் விரும்பிய பெண்களை அடைதல் பொருட்டும், தமது வீரத்தை வெளிப்படுத்துகின்ற விதத்திலும் தொழுவினுள் நுழைந்து இறைவனின் குந்தாலிப் படைபோன்று கூர்மையுடையதாய் சீவப்பட்ட கொம்புகளை உடைய ஏறுகளை அஞ்சாது தழுவுகின்றனர். அவ்வாறு ஏறுதழுவுகின்ற இளைஞர்களை எருதுகள் தம் கூரிய கொம்புகளால் குத்தி அவர்களின் குடலைச் சரியச் செய்கின்றன. அத்தோற்றமானது, அழகிய திரௌபதியின் கூந்தலிலே கை நீட்டிய துச்சாதனின் நெஞ்சைப் பிளந்து, பகைவர் நடுவே தன் வஞ்சினத்தை நிறைவேற்றிய வீமனைப் போன்றிருந்தது என்றும், ஊழி முடிவிலே, பசிய நிறத்தைத்தன் பாகத்தே உடையக் கடவுள், உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனுடைய நெஞ்சைப்பிளந்து, குடரைக் காளிக்கு இட்டு அதன் வயிற்றை நிரப்புவது போன்றிருந்தது என்றும், கரிய இருள் என்றும் கருதானாய், நடுஇரவிலே வந்து, தன் தந்தையைக் கொன்றவனைத் தன் ஆற்றலின் வலிமையினால் தலையைத் திருகிய அசுவத்தாமனைப் போன்றிருந்தது என்றும் தோழியின் வாயிலாக புலவர் தலைவிக்கு காட்சிப்படுத்துகின்றார்.

     இங்கு பலம் பொருந்திய எருதுகளையும், பசுக்களையும் அடக்கி ஆளத்தெரிந்த வலிதிறன் மிக்க இளைஞன் ஒருவனையேத் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கொண்டவளாய் விளங்கிடும் தலைவியின் எண்ணம் பிரதிபலிக்கப் படுகின்றது. மட்டுமல்லாது கடுமை நிறைந்த அந்த ஏறுதழுவல் காட்சியினைக் கண்ட தலைவியானவள் தான் விரும்பிய தலைவன், தன்னுடன் களவு மேற்கொண்டிருந்த தலைவன் ஒரு வேளை தனக்கு கிடைக்காமல் போய் விடுவானோ என்று கலக்கமுறுகின்றாள். அப்போது அங்கே நிகழக்கூடிய நல்ல பல நிமித்தங்களை எடுத்துக் கூறி தோழி தலைவியினை ஆற்றுப்படுத்துகின்ற விதம் முல்லைநிலத்துக்கே உரிய ஆற்றி இருத்தல் என்னும் கற்பு ஒழுக்கத்தை நினைவுபடுத்தும் விதமாய் உள்ளன.

     இங்கு மேற்காணும் பகுதிகளில் செம்மொழியின் கூறுகளாகக் கருதப்படும் தொன்மை, பண்பாட்டுக்கலை அறிவு – பட்டறிவின் வெளிப்பாடு, தனித்தன்மை, பொதுமைப் பண்பு போன்ற பல கூறுகளும் இடம்பெற்றிருப்பதை நாம் கண்டுணர முடிகிறது. இவை கவிதையின் தனித்த கூறுகளாக விளங்குபவை என்றாலும், அவை கவிதையைப் பொதுமை நிலையில் வளமைப்படுத்துகின்ற பன்முகப்பட்ட அடிப்படைக் கூறுகளாக விளங்குவன என்பதும் கவனத்திற்குரியது. இவை படைப்பாளியின் காலம், இடம், அனுபவம் என்பதோடு படைப்பு குறித்த புரிதலைப் பொறுத்து சற்றே மாறுபடுவதை நாம் காணலாம்.

[தொடரும்]

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.