மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’
ஸ்டாலின் குணசேகரன்
*************************************************************************************************************************
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா ’
*************************************************************************************************************************
மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு நகரில் ஆண்டுதோறும் பாரதி பிறந்தநாளாகிய டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய முறையில் ‘ பாரதி விழா ’ நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் ‘ பாரதி விழா ’ 11.12.2017 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு – கொங்கு கலையரங்கில் நடைபெற்றது. பேரவை
நடத்துகிற பாரதி விழாவில் ஆண்டுதோறும் மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெறுகின்றன :
1) பாரதி 1921 ஆம் ஆண்டு இறுதியாக உரை நிகழ்த்திய ஈரோடு – கருங்கல்பாளையம் நூலகத்திலிருந்து பாரதி விழா நடைபெறும் அரங்கம் வரை, பாரதியின் ஈரோடு வருகையை நினைவுகூரும் பொருட்டும் அவ்வருகையின் போது அவர் நிகழ்த்திய ’மனிதருக்கு மரணமில்லை, ‘இந்தியாவின் எதிர்கால நிலை ‘ என்ற தலைப்புகளிலான இறுதிப் பேருரைகளை நினைவுகூரும் விதத்திலும் ’ பாரதி ஜோதி ‘ ஏந்திய வண்ணம் பேரவையின் தன்னார்வலர்களாக விளங்கும் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அணிவகுப்பு…
2) தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமை ஒருவருக்கு ‘ பாரதி விருது ’ வழங்குதல்…
3) காலமாகிவிட்ட நாட்டுக்குழைத்த நல்லோர் ஒருவரின் திருவுருவப்படத் திறப்பு…
மாலை 4.30 மணிக்கு ‘ பாரதி ஜோதி ‘ கருங்கல்பாளையம் நூலகத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் வி.ஜீவகுமாரன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. இவரின் உரைக்குப் பின்பு அணிவகுப்பு தொடங்கியது.
இந்த ஆண்டின் ‘ பாரதி விருது ‘ தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்களுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், கல்வியாளர் – சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்களால் விழாமேடையில் வழங்கப்பட்டது.
கவிஞர் தமிழ்ஒளியின் திருவுருவப்படத்தை பொதுவுடைமை இயக்கத் தலைவர் திரு ஆர் நல்லகண்ணு அவர்கள் திறந்து வைத்தார்.
முன்னதாக மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் விழா அறிமுகவுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய நலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம். மயிலானந்தன் அவர்கள் தலைமையேற்றார்
பேரவையின் செயலாளர் ந.அன்பரசு வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் க.அழகன் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் பல கல்வி நிலையங்களைச் சார்ந்த, மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்களாகத் திகழும் மாணவ – மாணவியர் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர்.
ஊர்ப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் பல்வேறு பொதுநல அமைப்புகளின் பொறுப்பாளர்கள், பெண்கள் என பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களின் உரைகள், எழுச்சியுடன் பங்கேற்ற பார்வையாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அமைந்தது.
மிகச்சரியாக மாலை 6 மணிக்குத் தொடங்கிய கூட்டம், முன் கூட்டியே அறிவித்திருந்தவாறு இரவு 8.30 மணிக்கு நிறைவு பெற்றது.
விழா அரங்கில், பேரவையின் சார்பில் ‘ பாரதி விழா சிறப்பு நூலரங்கம் ’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவிஞர் தமிழ்ஒளி, சிலம்பொலி சு.செல்லப்பன், பொற்கோ, ஆர்.நல்லகண்ணு ஆகியோரின் நூல்களோடு மொழி, இலக்கியம், கவிதை மற்றும் தமிழாய்வு சார்ந்த ஏராளமான நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.