நிர்மலா ராகவன்

குழந்தைகளின் திறன்

நலம்-1-2-1

உங்கள் வீட்டுக்குக் குழந்தை சுவற்றில் கிறுக்கினால் கோபம் எழுகிறதா? என்னதான் காகிதமும் பென்சிலும் கொடுத்தாலும், குழந்தைக்கு என்னவோ கண்ட இடத்தில் கிறுக்குவதுதான் உவப்பாக இருக்கும். பெரியவர்கள் திட்டினால், தம் தொடையிலேயே வரைந்துகொள்ளும் குழந்தைகளையும் கண்டிருக்கிறேன். அவர்களால் வரைவதை நிறுத்த முடியாது.

இயற்கை ஒவ்வொரு குழந்தைக்கும், அவர்களுக்கே தெரியாமல், ஏதோ திறமையைக் கொடுத்திருக்கிறது. பெற்றோருடையதை ஒத்திருக்கும் என்பதுமில்லை.

சிறு வயதிலேயே ஒரு குழந்தையின் திறனைக் கண்டுகொள்ளும் பெற்றோர் அது மேன்மேலும் வளர துணை புரிகிறார்கள். மகா புத்திசாலி என்னும் குழந்தைகூட எல்லாத் துறைகளிலும் சிறந்திருக்காது. ஏதோ, ஒன்றிரண்டில்தான்.

மிகப் பிரபலமான ஒரு மிருதங்க வித்வான் என்னிடம் கூறியது: “நான் முதலில் வாய்ப்பாட்டுதான் கற்றேன். ஒரு திருவிழாவின்போது என் தகப்பனார் தன் தோளில் என்னைத் தூக்கிக்கொண்டு நடந்தபோது, அவர் தலையில் இரு கைவிரல்களாலும் தாளம் போட்டுக்கோண்டே இருந்தேன். `இந்தப் பயலுக்கு தாளத்தில்தான் அதிக ஆர்வம்!’ என்று அவர் என்னை மிருதங்கம் கற்க அனுப்பினார்”.

பதினெட்டு வயதிலேயே இந்தியாவில் தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். குருகுல வாசம் என்னும் முறைப்படி பல மாணவர்களுக்கு இக்கலையைப் போதிக்கிறார். உலகின் பல பாகங்களிலும் இவரது பாணி தவறாது, சீடர்கள் தாளவாத்தியக் கலையைப் பரப்புகிறார்கள்.

கேள்வி: யார் இவர்?

இன்னொரு சிறுவன் தன் அண்ணன் தற்காப்புப் பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் ஏக்கத்துடன் கதறி அழுவான். இவனுக்கோ நான்கு வயதுதான். சமாதானப்படுத்த அண்ணனைப்போன்ற உடை வாங்கிக்கொடுத்தார்கள் பெற்றோர். ஏழு வயதில் முறையாக ஆரம்பித்த பயிற்சியால் இன்று நாட்டைப் பிரதிநிதித்து முன்னணியில் இருக்கிறான். இது மலேசியாவில்.

பிரபல தபேலா வித்வான் ஜாகிர் ஹுசேன் பள்ளிப்பருவம் வரும்வரை காலை ஆறு மணியிலிருந்து வாத்தியத்தை வாசித்துப் பழக வேண்டும் என்று அவருடைய ஆசிரியர் (தந்தை) கண்டிப்பாக இருந்தார். ஆறு வயதுக்குமேல் அதிகாலை இரண்டு மணியிலிருந்து சாதகமாம்! அவருக்கு ஆர்வமும் திறமையும் ஒருங்கே அமைந்திருந்தன. அதனால் பிற குழந்தைகளை அவரைப்போல் பெற்றோர் நடத்தவில்லை என்பது குறையாகப்படவில்லை.

ஒரு கச்சேரிக்குப்பின், விமர்சகரான நான் அவரைப் பாராட்டியபோது, வெட்கத்துடன் நுனிநாக்கை வெளியே நீட்டி, தோள்களைத் தூக்கிக்கொண்டார் – ஒரு குழந்தைபோல! எதுவும் பேசவில்லை!

சுவற்றில் கிறுக்கிய குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே வித விதமான வண்ணக்கலவைகளும், வரைவதற்கென்றே தயாரிக்கப்பட்ட பென்சிலும் வாங்கிக் கொடுத்தாள் அதன் தாய். தான் தொடையில் கிறுக்கிக்கொண்டது அவளுக்கு மறக்கவில்லை. மணிக்கணக்கில் சாப்பிடக்கூட மறந்து வண்ணம் தீட்டுகிறாள் அந்தப்பெண்.

இப்படியாக, கலை, விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களுடைய இயற்கையான ஆர்வமும் திறமையும் பெற்றோராலும், ஆசிரியர்களாலும் வளர்க்கப்பட்டிருப்பது புரியவருகிறது.

சாதனையாளர்கள்தாம் குழந்தைப் பருவத்திலேயே தம் திறனை வெளிக்காட்டுகிறார்கள். பெற்றோருக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த துறையைப்பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், ஊக்கம் அளிக்கிறார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சியே முக்கியமாகப்பட, `இதனால் பணமும், புகழும் கிடைக்குமா?’ என்ற யோசனை வருவதில்லை.

ஒருவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மனதில் அமைதி நிலவுகிறது. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்துப் பொறாமை எழுவதில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தாம் செய்வதில் மனநிறைவு கிட்டிவிடுகிறது.

சிறு வயதில் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டையாக பெற்றோர் இருந்திருந்தாலோ, இயற்கைத்திறன் அப்போதே நசித்துவிடும். ஏக்கமும், ஏமாற்றமும்தான் தொடரும்.

திறமையை எப்படி வெளிக்கொணர்வது?

படிப்பது, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை, மனிதர்கள் என்று பல விஷயங்களிலும் ஒரு சிறுவனை ஈடுபடுத்துவது நல்லது. தனக்குப் பிடித்தது என்னவென்று புரிந்து, அதில் முனைப்புடன் ஈடுபடுவான்.

வாய் ஓயாது தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சிறுமி எழுத்தாளராகவோ, பேச்சாளராகவோ ஆகலாம். உதாரணம்: அடியேன்!

பிடித்துத் தள்ளாதே!

சிலருக்குத் திறமை இருந்தும் அத்துறையில் ஆர்வம் இல்லாது போகலாம். அப்போது அவர்களை வற்புறுத்தி அதில் ஈடுபடச் செய்வது மகிழ்வை ஊட்டாது.

`நீ பெரிய பாடகியாக வேண்டும். விளையாடி பொழுதை வீணாக்காதே!’ என்று பிற குழந்தைகளுடன் கலந்து பேசி, விளையாடக்கூட அனுமதிக்காத தாயைப்பற்றி கசப்புடன் பேசும் பாடகியை அறிந்திருப்பீர்கள்.

ஆசையா, பேராசையா?

குழந்தைப் பருவத்திலேயே பல துறைகளிலும் சிறந்து விளங்கவேண்டும், அல்லது ஒரே துறையில் முழுமனதாக கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசைதான்.

பாடம், பயிற்சி என்பதெல்லாம் மகிழ்ச்சி ஊட்டுவதாக, `அடுத்த பாடம் எப்போது?’ என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணுவதாக இருக்க வேண்டும். அலுப்புக்கும், அச்சத்திற்கும் அங்கு இடமில்லை. திட்டியும் அடித்தும் பாடம் சொல்லிக்கொடுக்கிற ஆசிரியர்கள், `படிப்பதெல்லாம் போட்டிக்காக, அல்லது பரீட்சை சமயங்களில்தான்!’ என்ற சலிப்பை உண்டுபண்ணுகிறார்கள்.

இளமைக்காலத்துக்கே உரிய களிப்பு, சிரிப்பு, விளையாட்டு, பிறருடன் பழக முடிவதால் யாரை நம்பலாம், யாரை ஒதுக்க வேண்டும் என்ற – வாழ்க்கைக்கு முக்கியமான — அனுபவங்களெல்லாம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆத்திரம் வராமல் என்ன செய்யும்?

ஒப்பிடாதே!

எல்லாருமே சாதனையாளர்கள் ஆகிவிட முடியுமா? இதனால் மற்ற குழந்தைகள் திறமையற்றவர்கள் என்று அர்த்தமில்லை.

`நீயும் இருக்கிறாயே! உன் தம்பியைப் பார்! எவ்வளவு புத்திசாலி!’ என்று இழித்துரைக்கும் பெற்றோர் இத்தகைய ஒப்பிடுதலால் தாழ்வு மனப்பான்மையை விதைத்து, ஒரு சிறுவனுக்கு இருக்கும் சொற்ப திறமையையும் அழித்துவிடுகிறார்கள்.

`அடக்க முடியவில்லை!’ என்று பள்ளிக்கூடத்தில் தண்டிக்கப்பட்ட குழந்தைகள் ஏன் அப்படி இருக்கிறார்கள்?

கதை

ஒரு வயதுக்குள்ளாகவே ஏதாவது ராகத்தை இழுத்துக்கொண்டிருப்பாள் சந்திரிகா. ஒன்றரை வயதில் கதை சொல்வாள் – மழலையில்தான். அவளுக்கு நான்கு வயதானபோது, பாலர் பள்ளி ஆசிரியை புகார் செய்தாள் – அடிக்கடி வகுப்புக்கு வெளியே அவள் போய்விடுகிறாள், அவளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் போய்விடுகிறார்கள் என்று.

தாய் மகளிடம் கேட்டபோது, “நடப்பது உடம்புக்கு நல்லது என்று சொல்லியிருக்கியேம்மா! எனக்கு டீச்சர் சொல்லிக்கொடுப்பது புரியவில்லை. அதுதான்!” என்றாள்!

முதல் வகுப்பிலிருந்து பல வருடங்கள் அவளுடைய கையெழுத்து மோசம் என்ற புகார் வந்தது.

இம்மாதிரிக் குழந்தைகளின் திறமைகளைப் பாராட்டி, குறைகளைப் பெரிதுபடுத்தாது இருத்தல் நலம். பள்ளிக்கூடத்தில் திட்டி, அடிக்கிறார்களே என்று தாயும் அதுபோல் செய்யாது, மகளுக்குப் பக்கபலமாக இருந்தாள்.

ஒரே ஒரு ஆசிரியை மட்டும் சொன்னாள், `இவளைப்போன்ற புத்திசாலியைப் பார்த்ததேயில்லை!’ என்று. ‘SUPER BRAINS’ என்ற பிரிவைச் சேர்ந்தவள் சந்திரிகா.

வயதுக்குமீறிய அறிவு இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளை வேலை செய்யும் வேகத்திற்கு கைகள் ஒத்துழைக்காது. எதையும் வேகமாகச் செய்ய முற்படுவதால் எழுதுவது கிறுக்கலாக இருக்கும். எதையும் வித்தியாசமாக யோசிப்பார்கள்.

இன்று இசை, கல்வி இருதுறைகளிலும் முன்னிலையில் இருக்கிறாள் உளவியல் பேராசிரியையான இப்பெண்.

மேற்கொண்டு செய்யவேண்டுவது

உங்கள் குழந்தைக்குப் பாட்டு கேட்கப் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். (`யாருக்குத்தான் பிடிக்காது?’ என்று கேட்கக் கூடாது, ஆமாம்! ஔரங்கசீப்புக்கு இசை பிடிக்காது என்று படித்திருக்கிறேன்). உங்களுக்கோ சங்கீதத்தில் ஞானமோ, ஆர்வமோ கிடையாது. இருந்தாலும், குழந்தையை பாட்டு வகுப்பில் சேர்த்துவிடுகிறீர்கள். மாதாமாதம் ஆசிரியருக்குச் சம்பளம் கொடுத்துவிடுவதோடு உங்கள் கடமை முடிந்து விடுவதில்லை. அத்துறையில் சிறந்தவர்களின் கச்சேரிக்கு அழைத்துப்போனால், அறிவு விரிவடையும். இப்போதுதான் இணையத்தில் எந்தத் துறை வேண்டுமானாலும் கிடைக்கிறதே! ஆனாலும், நேரில் கற்றுக்கொடுக்க, தவற்றைத் திருத்த, ஒரு குரு அவசியம்.

தோல்வியா? மக்கு!

போட்டிகளில் வெற்றிபெற்றால் குழந்தையைக் கொண்டாடி, தோல்வி அடைந்தால் தண்டிப்பது ஒரு குழந்தையைப் பயங்கொள்ளியாக ஆக்கும் செயல்.

மாறாக, `அடுத்த முறை நன்றாகச் செய்வாய், பார்!’ என்பதுபோல் ஊக்கமளித்தால் தன்னம்பிக்கையுடன், எந்த நிலையிலும் ஊக்கத்தை இழக்காது இருப்பதுடன், வேறு புதிய துறைகளிலும் ஆர்வத்துடன் வளர்வான்.

எல்லாக் குழந்தைகளும் சாதனையாளர்கள் ஆகமுடியாதுதான். ஆனாலும், அவர்களால் முடிந்ததைச் செவ்வனே செய்து முடிக்கப் பிறர் ஆதரவு காட்டினால், திருப்தியாவது கிடைக்குமே!

பி.கு: யார் அந்த மிருங்க வித்வான்?

பதில்: குரு காரைக்குடி மணி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.