நிர்மலா ராகவன்

`உடனே வேண்டும்!’

நலம்

ன்ன மனிதரோ! யாருடனும் ஒத்துப்போகாத ஜன்மம்!’

அந்த ஒத்துப்போகாத மனிதர் – கோபு — எப்போதும் தன் அறையில் படித்துக்கொண்டு இருப்பார். அதன்மூலம் புதிய விஷயங்களைக் கற்பார். இல்லாவிட்டால், ஏதாவது சாதனத்தைப் பிரித்து, மீண்டும் பொருத்துவதில் முனைவார்.

மனைவி மீனாவோ, “யாராவது பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தால், எனக்கு சாப்பாடு, தூக்கமே வேண்டாம்!” என்னும் வர்க்கம். பெரிய குடும்பத்தில் வளர்ந்ததாலோ, என்னவோ, இவளுக்கு ஓயாத சத்தம் ஒரு பொருட்டில்லை. சிறிது நேரம் தனியாகக் கழிக்க நேர்ந்தால், தவித்துப்போய்விடுவாள். யாருடைய குரலையாவதைக் கேட்டாக வேண்டும் — அது தொலைகாட்சி அல்லது தொலைபேசிவழி இருந்தாலும்!

படிப்பது என்ன வழக்கமோ!

கோபு வீட்டில் எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார்.

“வயதான காலத்திலே அக்கடா என்று இருக்காமல், அப்படி என்ன படிப்போ!” என்று கண்டனம் செய்பவளை அமைதியாக எதிர்ப்பார் கோபு: “பில் கேட்ஸ் (Bill Gates) வாரத்தில் ஐந்து மணி நேரமாவது படிச்சு புதுசு புதுசா எதையாவது கத்துக்கறார், தெரியுமா?”

மீனா அயல்நோக்கு கொண்டவள். படிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அற்றுப்போய்விடும், படிப்பதெல்லாம் பள்ளி, கல்லூரி நாட்களில் பரீட்சையில் தேர்ச்சி பெறத்தான் என்று சாதிக்கும் கட்சி. ஆகையால் அமைதியையும் மௌனத்தையும் நாடும் கணவரது குணம் புரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஏன் படிக்கணும்?

படிப்பதால் மூளைக்கு வேலை அளிக்கப்படுகிறது. வயதானவர்களுக்குச் இயற்கையிலேயே ஏற்படும் மறதிசார்ந்த நோய்கள் அதிகம் படிப்பவரை அணுகுவதில்லை.

ஓயாமல் கதை புத்தகங்கள் படிப்பவர்கள் கதாபாத்திரங்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்வார்கள். இதனால் தம்மைத் தாமே புரிந்துகொள்வதும் சிலருக்குச் சாத்தியமாகிறது.

உள்நோக்கும் அயல்நோக்கும்

உள்நோக்கு உடையவர்களுக்கு தனிமையில் செய்யக்கூடிய காரியங்களில்தான் நாட்டம் போகும். உடலில் இறுக்கமின்றி ஓய்வாக இருக்க படிப்பது, எழுதுவது, வரைவது, வாத்தியம் இசைப்பது போன்ற ஏதாவது ஒரு காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபடுவார்கள்.

கல்யாண வீடு போன்ற இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு இவர்களை அழைத்துப்போனால், மரியாதைக்குக் கொஞ்சம் பேசுவார்களே தவிர, சீக்கிரமாகவே உடலும் மனமும் சோர்ந்துபோக, சிறு குழந்தைகள்போல், `போகலாமா?’ என்று நச்சரிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்குப் பிற மனிதர்களுடன் தொடர்பு அநாவசியம் என்பதில்லை. ஆனால் சந்திப்பவர்கள் அனைவருடனும் `என்றைக்காவது உதவும்!’ என்ற மனப்பான்மையுடன் தோழமை கொள்வது இவர்களுடைய தன்மை இல்லை. தம்மைப் புரிந்துகொண்டு ஊக்குவிக்கும் சிலருடன் ஆழ்ந்த நட்புடன் பழகுவார்கள். பொதுவாக, ஒத்த மனதுடைய ஒருவர் எதிரே இருந்தால், அவருடன் நிறையப் பேசுவார்கள்.

பல தம்பதிகள் இப்படித்தான் மாறுபட்ட குணத்தவராக இருக்கிறார்கள். `இவர் ஏன் என்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் அயல்நோக்குடையவர்களுக்கு எழுகிறது.

குட்டிக்கதை

அவளும் பாடகிதான். ஆனாலும், ஒரே இடத்தில் அமர்ந்து நெடுநேரம் வயலின் வாசிக்கும் கணவரை `கரையான்!’ என்று பழிப்பாள்! தன்மேல் முழுக்கவனமும் செலுத்தாமல், வேறு எதிலோ ஆழ்ந்திருக்கிறாரே என்ற ஏக்கத்தில் பிறந்த கசப்பு அது.

அவரோ, வாய்திறவாது, தம் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்! பலகீனமானவர் என்பதில்லை. தான் மனைவியிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறோம், மாறினால் மனவருத்தம்தான் மிகும் என்பதைப் புரிந்துகொண்ட விவேகம்.

கதை

மைமூனாவுக்கு அடிக்கடி வீட்டிலுள்ள நாற்காலி, சோபா போன்றவைகளை இடம் மாற்றி, மாற்றி வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். கணவர் நாவிக்கோ மாறுதலே பிடிக்காது. தான் பேசுவதைவிட பிறர் பேசுவதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார். யாராவது கேட்டால்தான் நாவி தன் அபிப்ராயத்தைக் கூறிவாரேயொழிய, தன் `குரலைக் கேட்பதற்கென்று’ பேசுவது இவரால் இயலாத காரியம். அதாவது, பலர் கூடியிருக்கும் சபையில் தனித்திருப்பவர். எதையும் தீர்க்கமாக யோசித்துத்தான் முடிவெடுப்பார். அசாத்திய திறமை இருந்தாலும், எல்லாரும் தன்னைக் கவனிக்கவேண்டும் என்ற துடிப்பு கிடையாது.

மீனா மற்றும் மைமூனாவை ஒத்தவர்கள் பலருடன் பழகினாலும், அவர்களுடன் நெருக்கம் இருக்காது. கவனக்குறைவு வேறு! இத்தகையவர்களுக்கு பிறரைப்பற்றி அறிவதில்தான் ஆர்வம்.

எப்போதும் பேசிக்கொண்டும், பிறர் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் இருப்பதால், `நன்றாகப் பழகுகிறாள்!’ என்று பிறர் பாராட்டலாம். ஆனால், மனமும் உடலும் சோர்ந்துவிடாதா! அதனால், அநாவசியமாக கோபம் எழும். எப்போதோ நடந்தவைகளை நினைத்து, எதிரிலிருப்பவருடன் காலங்கடந்து சண்டை போடுவார்கள்!

தனிமை எதற்கு?

நாம் இனிமையாகப் பேச, பிறர் கூறுவதை ஆழ்ந்து கவனிக்க வேண்டுமென்றால், தனிமையில் கழிக்க சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டுவது அவசியம். உடலுக்குத் தேவையான ஓய்வு அப்போது கிடைத்துவிடுகிறது.

புகழ்பெற்ற நாவலாசியர்களைக் கேட்டால், `எனக்கு எழுத வருகிறது. எழுதுகிறேன். ஆனால் தனிமையில் பல நாட்கள், பல மணி நேரத்தை செலவிட வேண்டியிருப்பது கொடுமை!’ என்று அலுத்துக்கொள்வார்கள்.

இப்படிச் சலித்துக்கொள்பவர்களுக்கு கற்பனை வரண்டுவிடாதா!

கற்பனை வரட்சியிலிருந்து மீள சில வழிகள்

இரவில் தூங்குமுன், அடுத்து என்ன எழுதுவது, இந்தக் கதாபாத்திரம் எப்படி யோசிக்கும் என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிவிட்டுத் தூங்கினால், மறுநாள் தொடர்ச்சியாக மீண்டும் எழுத இயலும்.

அதேபோல், யோகா பயின்றால், உள்மனதில் ஆழமாகப் பதிந்து போயிருப்பவை — நாம் எப்போதோ கண்டது, கேட்டது எல்லாம் மேலே எழ, ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலனாகும்.

தியானமும் யோகா மாதிரிதான். `இம்மாதிரியான தருணங்களில் எவரும் வெறுமையாக உணர்வது கிடையாது. மனம் அமைதியாக இருக்கும்,’ என்பவர்கள் உள்நோக்குடையவர்கள். மேலும், மனம் பழைய அனுபவங்களை அசைபோட, செய்த தவற்றை தவிர்க்கும் வழிகள் புலனாகும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு பிறக்கும் என்பதை நடைமுறையில் கண்டிருக்கிறேன்.

அயல் + உள் நோக்குபவர்கள்

மிகச் சிலர் இருவித குணங்களையும் கொண்டிருப்பர். இவர்களுக்குத் தனிமையும் பிடிக்கும், பிறருடன் பழகுவதும் கைவரும் குணம். பல சாதனையாளர்கள் இத்தன்மை கொண்டவர்கள்தாம்.

இவர்களுடைய கலகலப்பான சுபாவத்தை ஒரு முறை பார்த்து ரசித்தவர்கள், அதனால் அகமகிழ்ந்து, எப்போதும் அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வார்கள்.

இவர்களோ, கார் பேட்டரியை அவ்வப்போது சார்ஜ் செய்வதுபோல், எப்போது தனிமையை நாடவேண்டும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள். அதனால், சோர்வு அதிகரிக்குமுன் விலகிவிடுவார்கள்.

`மாறிப்போயிட்டா!’ என்று சற்று ஏக்கத்துடன் இவர்களைக் குறிப்பிடுகிறவர்களுக்கு இவர்களுடைய தேவை, அது என்னவென்று இவர்கள் புரிந்துவைத்திருப்பது, புரிவதில்லை.

மனிதர்கள் பலவிதம். எல்லாரும் நம்மைப்போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நடக்கிற காரியமா? இதற்காக கோபமும், மனவருத்தமும் கொள்வது சக்தியை விரயமாக்கும் முயற்சிதான்.

யாரை மணக்கலாம்?

எதிர்மறையான குணமிருப்பவர்கள்தான் முதலில் ஈர்க்கப்படுகிறார்கள். இருந்தாலும், நாளடைவில், `இவள் ஏன் தன்னைப்போல் இல்லை?’ என்ற எரிச்சல் உண்டாகிறது.

இம்மாதிரியான சண்டையைத் தவிர்க்க ஒரு சாரார் தம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இறுதியில் விரக்திதான்.

சிலர் மாற மறுத்து, தம் போக்கிலேயே நடக்க முற்படுகிறார்கள்.

`சண்டை வருமே?’ என்கிறீர்களா?

எந்தக் குடும்பத்தில்தான் எப்போதும் அமைதி நிலவுகிறது!

அத்துடன், `மாற்ற முடியாது!’ என்று புரிந்துபோனதும், அடங்கி விடுவார்கள்.

யாரை மணக்கலாம்?

இம்மாதிரியான குழப்பங்களைத் தவிர்க்க, ஒரேமாதிரியான குணம் உடையவர்கள் ஒன்று சேர்ந்தால்தான் இல்வாழ்க்கையில் ஒற்றுமை நிலவும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

குணத்திற்கேற்ற தொழில்

குடும்ப வாழ்க்கையில் மட்டுமில்லை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் தொழிலும் அவரது குணத்திற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்.

கதை

இயற்கையிலேயே கூச்ச சுபாவம் கொண்டவர் கமலநாதன். இவருக்கோ, பலருடன் பழக வேண்டிய வேலை! தடுமாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தனக்குத் தைரியம் போதவில்லை என்று முடிவெடுத்து, மது அருந்த ஆரம்பித்தார் கமலநாதன். அதன்பின், பழகுவதில், அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பதில் கஷ்டம் இருக்கவில்லை. ஆனால், முரட்டுத்தனமும் சேர்ந்துவர, அவருடைய குடும்பத்தினர்தாம் அவரை அனுசரித்துப் போகச் சிரமப்பட்டார்கள்.

பல வருடங்கள் கழித்து, `என் உத்தியோகத்தால் கெட்டுப்போனேன்!’ என்று புலம்புகிறார்.

அவரது சுபாவத்துக்கு ஏற்றபடி, தனித்துச் செய்யும் உத்தியோகத்தில் அவர் ஈடுபட்டிருந்தால், நிம்மதியும், நிறைவும் கிடைத்திருக்கும். வெற்றிகளும் குவிந்திருக்கும்.

நாம் எத்தன்மையர் என்று புரிந்துகொண்டால், பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக மாறி, நம்மையே வருத்திக்கொள்ள வேண்டியிருக்காது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.