மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துக் கூறுவோம்
ஆழ்கதீய அனைத்துமென்று
ஆசி வழங்குவோம்
பேசும்வார்த்தை கொண்டுநாளும்
பிணக்கைப் போக்குவோம்
வாழும்காலம் சிறந்துநிற்க
வாழ்ந்து காட்டுவோம்!
தீதும் நன்றும் வெளியிருந்து
வருவதில்லையே
யாவுமெங்கள் மனமிருந்து
கிளர்ந்து வருகுதே
வாதமிட்டு வாதமிட்டு
மனத்தை உடைக்கிறோம்
வாழும்நாளை மலர வைக்க
வாழ்ந்து காட்டுவோம்!
விதியைநொந்து விதியைநொந்து
மதியை இழக்கிறோம்
விடியுமென்னும் எண்ணமதை
தொலைக்கப் பார்க்கிறோம்
தெளிவுகொண்டு பார்ப்பதற்குச்
சிக்கற் படுகிறோம்
புவியின்மீது நல்லவாழ்வைக்
காண முயலுவோம்!


Leave a Reply