சு. திரிவேணி
கோவை

வேலை நேரம் முடிந்த மாலை
சுமையற்ற பை, ஜன்னலோர இடமென
மகிழ்ச்சிகளின் அணிவகுப்பு!
நிர்மலமான விழிகளும்
நெகிழ்த்தும் புன்னகையுமாய்
ஈர்த்த அந்தக் குழந்தைக்கு
அதைப் போலவே குட்டியாய்
இருந்த என் பை பிடித்துப் போனது.
என் முகம் பார்த்து, விரல் தொட்டு,
கரம் பிடித்து எனப் பையை நோக்கிப்
பயணித்து வசப்படுத்திக் கொண்டது,
புதிதாய் முளைக்கும் பற்களின் குறுகுறுப்புக்குப்
பையை இரையாக்க முயன்றது.
கடித்துப் பிடித்துக் கொண்டு
குண்டுக் கைகளால் மத்தளம் தட்டியது.
ஒருமுறை தவறவிட்டு
வாங்கி விடுவேனோ என
ஐயத்துடன் முகம் பார்த்தது.
எடுத்து அதனிடமே கொடுத்ததும்
பரிசாய்ப் புன்னகை கிடைத்தது.
இறங்குமிடம் வந்ததும் –
சேயறியாமல் தாய் மூலம்
வந்தடைந்தது என் பை.
திரும்பிப் பார்த்தேன்-
பையை ஏக்கத்தோடு தேடியது குழந்தை.
மடியிலிருந்த பை கனக்கத் தொடங்கியிருந்தது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *