குறளின் கதிர்களாய்…(302)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(302)
அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
– திருக்குறள் – 1076 (கயமை)
புதுக் கவிதையில்...
கேட்டறிந்த
மறைவான செய்திகளை
மனதில் வைத்துக்கொள்ளாமல்
கேட்காமலே கயவர்
மக்களிடம் செர்லித்திரிவதால்,
அவர்கள்
அடிபடும் பறைக்கு ஒப்பாவர்…!
குறும்பாவில்...
மறைவான செய்திகளை மறைக்காமல்
பிறரிடம் சொல்லியலையும் கயவர், அடிபடும்
பறை போன்றவர்களே…!
மரபுக் கவிதையில்...
கேட்ட றிந்த சேதிகளில்
கெட்டியாய் மனதில் மறைத்தேதான்
பூட்டி வைக்க வேண்டியதைப்
புவியில் மாந்தர் பலரறியக்
கேட்டி டாமலே போய்ச்சொல்லும்
கெட்ட குணமுடைக் கயவரவர்,
நாட்டோ ரறியப் போட்டடிக்கும்
நாதப் பறையதற் கொப்பாமே…!
லிமரைக்கூ..
கேட்டறிந்த செய்திகளை மறை,
மறைக்கவேண்டியவற்றை வெளியேசொல்லும் கயவனுக்
கொப்பாமே அடிபடும் பறை…!
கிராமிய பாணியில்...
கேட்டுக்கோ கேட்டுக்கோ
கெட்ட கொணம்வராமப் பாத்துக்கோ,
கெட்டவனா மாறிடாமப் பாத்துக்கோ..
கேட்டு தெரிஞ்ச சேதியில
ரகசியமா வைக்கவேண்டியதயும்
கேக்காமலே
போட்டு ஒடச்சிப் பலரறிய
வெளிய சொல்லுற
கேடுகெட்டவனும்
போட்டடிச்சி அடிவாங்குற
பறக்கொட்டும் ஒண்ணுதானே..
கேட்டுக்கோ கேட்டுக்கோ
கெட்ட கொணம்வராமப் பாத்துக்கோ,
கெட்டவனா மாறிடாமப் பாத்துக்கோ…!