எட்டுக் கோணல் பண்டிதன் – 3

0
1

தி. இரா. மீனா

நீரில் மூழ்கிய பிறகு கடலின் அடிப்பகுதியான வருணனின் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கஹோதாவிடம் வருணன், தான் அவரிடம் என்ன விரும்புகிறான் என்பதை விரிவாக விளக்குகிறான். அறிஞர்கள் பலரும் கூடிச் செய்கிற வேள்விப் பணி அது. வருணனின் கட்டளையை அடுத்து, வேள்விக்கான பணிகளில் கஹோதாவும், மற்றவர்களும் ஈடுபடுகின்றனர். வேள்வி முடியும் கட்டத்திற்கு வந்த பிறகு வருணன் கஹோதாவிடம் ஜனகரின் அவையில் அஷ்டவக்கிரன்  பண்டியைத் தோற்கடித்த செய்தியைச் சொல்கிறான். மகனுக்கும், பண்டிக்கும்  இடையே நடந்த விவாதம் பற்றிக் கேள்விப்பட்டு கஹோதா பெருமையடைகிறான்.

கஹோதா தண்ணீரை விட்டு வெளியே வந்த தன்னைச் சுற்றிக் கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கிறான்… ஆனால் அவன் கண்கள் ஒரே ஒருவனிடம் தான் நிலைக்கின்றன. வளைந்த உறுப்புகளோடு, உடல் கோணலோடு முகத்தில் வெற்றிப் புன்னகையுடன் ஓர் இளைஞன்…. அவனைப் பார்த்துச் சிரிக்கிறான். தந்தைக்கு மனமும் உடலும் துடிக்கிறது. மகனைப் பார்த்த கணம், உலகையே தன் வசமாக்கியவன் போல என் மகன் இருக்கிறானே என மனம் கும்மாளமிடுகிறது. நீரிலிருந்து வருவது தன் தந்தை என அஷ்டவக்கிரன் உணர்ந்த தருணத்தில், தந்தை மகனை நோக்கி ஓடி வந்து அன்புடன் அணைக்கிறார். அறிஞர்கள் அனைவரும் அருகே வந்து பண்டியை வெற்றி கொண்ட தன் மகனைப் புகழும் போது எல்லையற்ற உவகையுண்டாகிறது..

ஆசிரமத்திலிருக்கும் கஹோதாவின் மனைவி சுஜாதா, தன் மகன் அஷ்டவக்கிரன் என்ன செய்திருப்பான், எம்மாதிரியான நிகழ்வுகள் அவையில் நடந்திருக்கும் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள். தன் பணிகளில் அவளால் முழுமையாக ஈடுபட இயலவில்லை… அடிக்கடி ஆசிரமத்தின் வாயில் கதவுகளைப் பார்த்தபடி இருக்கிறாள். திடீரென எதையோ பார்த்துக் கண்கள் வெறித்து மீண்டும் அங்கேயே பார்க்கிறாள்… அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் வருகின்றனர்…அவர்களுடன் ஒரு மனிதன்— கஹோதா.. அவர்களைக் கண்ட அதிர்ச்சியில் பெரிதாக குரலெழுப்பியபடி அவள் வாயிலருகே ஓட, சத்தம் கேட்டு என்ன நடக்கிறது என்றறிய ஆசிரமத்தில் உள்ளவர்கள் பதற்றத்துடன் வெளியே வருகின்றனர். தங்கள் கண்கள் பார்க்கும் காட்சியை அவர்களால் நம்ப இயலவில்லை.

வெற்றிக் களிப்புடன் மகிழ்ச்சி பொங்க அஷ்டவக்கிரன்… கூடவே சுவேத கேதுவும், கஹோதாவுமிருக்கின்றனர். குருவான உத்தாலக ஆருணி முன்னே வர, அவர்கள் அவரை வணங்கி, நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விவரிக்கின்றனர். பண்டியை அஷ்டவக்கிரன் தோற்கடித்த கதையை முழு ஆசிரமும் கேட்டு அஷ்டவக்கிரனைப் பெருமையோடு பார்த்து மகிழ்கிறது. பின்பு வருணன் தன்னை வேண்டிக்கொண்டது, அதற்கு தாங்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு அதை விரும்பிய வகையில் அமைத்துக் கொடுத்தது என வேள்வியில் நடந்தவற்றை கஹோதா விவரிக்கிறார்.

“வருணன் என்னிடம் இன்னொரு செய்தியும் கூறினான்’

உத்தாலகா, அஷ்டவக்கிரன், சுவேதகேது அனைவரும் அவரையே பார்க்க, ’மகனே,  இங்கே வா” என அழைக்கிறார். வருத்தம் வாட்ட அவனைத் தழுவிக்கொண்டு ”என்னை மன்னித்து விடு. உன் தாயின் கருப்பையிலிருக்கும் போதே என் தவறைச் சுட்டிக் காட்டும் தைரியம் உனக்கிருந்தது.. நான்..’

ஒரு நிமிடம் நிறுத்தி விட்டுத் தொடர்கிறார்.

’அந்நாட்களில் நான் உணர்வுபூர்வமாக பக்குவப்படாத ஒரு நிலையிலிருந்தேன்… நான் உன்னை இம்மாதிரியான நிலைக்குத் தள்ளியிருக்கக் கூடாது. இதனால் நீ அனுபவித்ததென்பது…’

அஷ்டவக்கிரன் தலையை ஆட்டி மறுத்து ஏதோ சொல்ல நினைக்க,  கஹோதா தொடர்கிறான்.

’சுஜாதா, நீ செய்ய வேண்டிய செயல் ஒன்றுள்ளது. நீயும் அருகில் வா’ என்று மனைவியை அழைக்கிறார்.

பின்பு  ஆசிரமத்தின் எதிரான பாதையில்  நடக்க, அனைவரும்  அவரைத் தொடர்கின்றனர். அங்குள்ள சமங்கா ஆற்றின் அருகே சென்று நின்றுகொண்டு ’மகனே! கடற்கடவுளை வணங்கி விட்டு நீ ஒருமுறை நீருக்குள் மூழ்க வேண்டும்…’ என்றார்.

இந்த ஆணையால் அஷ்டவக்கிரன் சிறிது குழப்பமடைந்தாலும் தந்தை சொன்னபடி செய்கிறான்.

’சுஜாதா, நீயும்  கடற்கடவுளிடம் உன் மகனுக்காக வேண்டிக்கொள்’ என்கிறார்.

அஷ்டவக்கிரன் நீருக்குள் மூழ்கும் போது பெற்றோர் கடவுளை வணங்குகின்றனர். சில கணங்களுக்குப் பிறகு, சுஜாதா கண்களைத் திறந்த போது, அவளால் தன்னையே நம்ப முடியவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு இன்னொரு முறை பார்க்கிறாள். கண் முன்னரான காட்சி, அவள் வழிபாட்டிற்கு கடவுள் செவி சாய்த்திருப்பதைப் புரிய வைக்கிறது. அவளது அஷ்டகோணலான மகன்… உடல் முழுவதும் குறையுள்ளவன்.. நீரிலிருந்து வரவில்லை! புதுத் தோற்றமும் பொலிவும் மிக்க அஷ்டவக்கிரன் முழுமையாக வெளியே வந்த போது அவள் மட்டுமில்லை, ஆசிரமத்தைச் சேர்ந்தவர்களும் தங்களை  நம்ப முடியாமல் உறைந்து, அதிர்ந்து போய்ப் பார்க்கின்றனர். அவன் இப்போது எந்தக் குறையும் உடையவனில்லை.. முழுமையானவன்… அவன்… தனக்குள் இருக்கும் அறிவினாற்றலை வெளிப்படுத்தும் உறுதியான, பொருத்தமான தோற்றம் கொண்டவனாக…. முழுமையும் நிறைவும் உடையவனாக..

[தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.