குறளின் கதிர்களாய்…(325)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(325)

அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

– திருக்குறள் -178 (வெஃகாமை)

புதுக் கவிதையில்...

குறையும் தன்மையுள்ள
செல்வம்
குறையாமல் நிலைத்திருக்கக்
காரணம் ஏதெனப் பார்த்தால்,
பிறர் விரும்பும் கைப்பொருளைத்
தானும் விரும்பாமல்
தவிர்க்கும் செயலே…!

குறும்பாவில்...

குறையாமல் செல்வம் நிலைத்திருக்கக்
காரணம் பிறர் விரும்பும் கைப்பொருளைத்
தானும் விரும்பாமலிருப்பதே…!

மரபுக் கவிதையில்...

செல்வம் என்றும் குறையாமல்
சேர்ந்து நிலையாய் இருந்திடவே
சொல்லும் காரணம் வேறில்லை,
சொந்த மென்றே பிறனொருவன்
எல்லை வைத்தே விரும்புகின்ற
எந்தப் பொருளும் தனக்கென்றே
பொல்லா வகையில் விரும்பாத
போக்கி லிருக்கும் குணத்தாலே…!

லிமரைக்கூ..

குறையாமல் செல்வம் இருப்பு,
காரணம் வேறொருவன் விரும்பும் கைப்பொருள்மீது
கொள்ளாமல் இருப்பதே விருப்பு…!

கிராமிய பாணியில்...

ஆசப்படாதே ஆசப்படாதே
அடுத்தவன் கைப்பொருளுக்கு
ஆசப்படாதே ஆசப்படாதே..

கொறயும் கொணமுள்ள செல்வம்
எப்பவும் கொறயாம
நெலச்சியே இருக்கக்
காரணம் வேறயில்ல,
அடுத்தவன் விரும்பி வெச்சிருக்கும்
அவனோட கைப்பொருள
அடய விரும்பாம இருக்கதுதான்..

அதால
ஆசப்படாதே ஆசப்படாதே
அடுத்தவன் கைப்பொருளுக்கு
ஆசப்படாதே ஆசப்படாதே…!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *