Tag: சேக்கிழார் பாநயம்

  • சேக்கிழார் பா நயம் – 39

    சேக்கிழார் பா நயம் – 39

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    தில்லையின் எல்லையிலே நின்ற சுந்தரர் , திருக்கோயிலுக்குள் நுழையத் தலைப்பட்டார்.அங்கேவந்தவருக்குஅன்னம்பாலிப்பும்,குடிக்கத்தக்க குளிர்நீரும் வழங்கும் சாலைகள் மிகுந்த, உலகின் அழகெல்லாம் திரண்ட திருவீதிக்குள் புகுந்தார். அங்கே திருமால் ,அயன். மறறும்தேவர்கள், முனிவர்கள் திரண்டு நெருங்கி உட்புக முயன்றனர். அவர்களுள் பக்தி வயப்பட்ட, தகுந்த சிவனடியார் மட்டுமே அனுமதிக்கப்பெற்றார்கள். கணநாதர் போன்றோர் வணங்கிஉள்ளேபுகுந்தனர்! பொன்னால் வேயப்பட்ட ஒளிமிகுந்த பேரம்பலத்தைக் கடந்து , சிற்றம்பலத்தின் அணுக்கன் திருவாயிலை அடைந்தார். அவ்வாயில் அடியார்கள் சிந்தையில் வேதத்தின் பெருமையைப் அவர்கள் கூறும் பிரணவத்தால் உணர்த்தி நிற்கிறது.

    சிந்தை என்பதற்குச் சீவனென்றும், சீவனுக்குச் சிந்தை என்றும் வந்திடும். சிந்தை – சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவு என்க. அவ்வறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். அவ்வானந்தக் கூத்தை அவ்வியல்பிற் கும்பிட்டுச் சிவபோதத்தாலே அருளிய தமிழ் மறைகளின் முத லிடை கடைகளிலே பிரண வத்தினுட்பொருளாகிய ‘திருச்சிற்றம்பலம்’ என்பதைக் கூறித் தொடங்குதலும் முடித்தலும் அமைவுடைத்து என்பது பெரியோர் துணிபு. திருச்சிற்றம்பலம் – சிறுமை – அம்பலம் என்ற இருசொற் புணர்ந்த தொடர்மொழி. சிறுமை – இங்கு நுண்மை – (சூக்குமம்). சிவசத்தியை நோக்க மற்ற இருவகை மாயா காரியப் பொருளுந் தூலப் பொருள்களேயாம். தடையிலா ஞானமாகிய சிவசத்தி சொரூபமே அம்பலமாகலின் அது சிற்றம்பலம் எனப்பெறும். இச்சிறுமையை வடநூலார் தகரம் என்ப. – திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பலம்முன் அணுக்கன் திருவாயில் புகுந்தார் என்பதாம். சுழுமுனையைக் கடந்து அதன்மேல் விளங்குவது சிவஞான ஒளியாதலின் மேருவலங் கொண்டு சிற்றம்பல வாயில் புகுந்தார் என்று கூறியவாறு.

    மறையின் முதல் – நடு – கடைகளில் அலர்ந்த – திருச்சிற்றம்பலம் பிரணவ உருவமாய் விளங்குதலாலும், அது சமட்டி – சேர்ந்தநிலை – ஓம், வியட்டி – பிரிந்தநிலை – அ – உ – ம் என்ற இரண்டு நிலையிலும் வேதங்களில் முதல் நடு முடிவுகளில் அமைந்து உச்சரிக்கப்படுதலாலும் இவ்வாறு கூறினார். வியட்டி நிலையில் – அகாரம் இருக்கு வேதத்தின் முதலிலும் (அக்நி மீளே), உகாரம் எசுர்வேதத்தின் நடுவிலும் (யோநிஸ் சமுத்திரோபிந்து), மகாரம் சாமவேதத்தின் முடிபிலும்….(சமாநம்வரம்) விளங்குவதென்று பெரியோர் கூறுவர். தகராகாயத்தைக் குறிக்கும் தகரத்தோடு ஓ என்ற உயிர் கூடிய தோ – (தோடு உடைய) என்று தொடங்கிய தெய்வத்தமிழ்த் திருமுறை, உலகெலாம் என்றதில் ம் என்றதுடன் முடிபு பெற்றிருத்தலும் இங்கு உணரத்தக்கது.

    திருவணுக்கள் திருவாயில் – இறைவன் ஆடுமிடத்திற் கருகில் உள்ளது. இதற்கப்புறம் வேறு வாயில்கள் இல்லை. அகத்தும் புறத்தும் இறைவனைக் காணக் கடந்துசெல்ல வேண்டிய எண்ணிறந்த வாயில்களிலே உள்ளிருந்து கணக்கிடும்போது முதற் றிருவாயில். அணுக்கத் தொண்டர்களே உட்புகக் கூடியதாதலின் இப்பெயர் பெற்ற தென்றலுமாம். இது அம்பலஞ் சூழ்ந்த மாளிகைப் பத்தியிற் கிழக்குத் திருவாயில் போலும். என்றெல்லாம் உரைகாரர்கள் விளக்குவர்!
    இப்பாடலில் சிவபெருமான் ஆடும் திருக்கூத்தின் வகைகளை முதலில் விளக்குகிறார்!

    உயிர்களை ஆட்டுவிக்கும் இறைவன் தாமே ஆடுகின்றார்! அவ்வாறு ஆடும் ஆட்டம் சில வகைப்படும். மாலும் அயனும் தேட அண்ணாமலையாய் ஆடிய ஆட்டம், அண்டத்தில் வையகம் பொலிய ஆடும்ஆட்டம், சிலம்பொலிக்க ஆடும்ஆட்டம், தில்லைமன்றினுள்ளே ஆடிய ஆட்டம், சிவஞானத்தால் விளங்கிய ஆன்ம அறிவினுள்ளே விரிந்து விளங்கும் திருச்சிற்றம்பலத்திலே இறைவன் பிண்டத்துச் செய்யும் திருக்கூத்து நிகழும். இத்திருக்கூத்து இதயத்துள்நிகழும்! இதனைத் திருவள்ளுவர், ‘’மலர்மிசை ஏகினான் ‘’ என்ற திருக்குறளில்கூறுவார். பரிமேலழகர், ‘அன்பானினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்தவடிவோடு விரைந்து சேறலின்’ என்ற உரை கூறியது காண்க, அப்பரடிகள்,

    நாடி நாரண னான்முக னென்றிவர்,
    தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ,
    மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்,
    தாடி பாதமென் னெஞ்சு ளிருக்கவே“

    என்று பிரித்துக் காட்டுவார். திருச்சிற்றம்பலம் இதயத் தானமாவதும் உணர்க.. இதனையே சைவசித்தாந்தம் ஞான நாடகம், ஊனநாடகம் என்றுகூறும் .

    ‘’வையகம் பொலிய’’ என்றதொடர் இன்பத் துன்பங்களாகிய போகங்களை மட்டும் நுகர்தற்கிடமாகிய சுவர்க்க , நரக உலகங்கள் போலாது, சிவகருமஞ் செய்து முத்தி யடைதற்குரிய இடமாகிய வையகம் பொலிய எனப்பொருள் படும் . தேவர்கள் இதைக்காணவேபூமியில் பிறக்க விரும்புவர் இதனை,

    ‘’புவனியில் போய்ப் பிறவாமையில் நாள் நாம்
    போக்குகின்றோம் அவமே, இந்தப்பூமி
    சிவன் உய்யக் கொள்கின்றவாறு’’

    என்று மாணிக்கவாசகர் பாடுகின்றார்!

    இனி, ‘’மறைச் சிலம்பு அரற்ற ‘’ என்ற தொடரால், உலகத்தோற்றத்துக்கு உரிய காரணத்தைச் சேக்கிழார் கூறுகிறார்.

    – நாதமாகிய சிலம்பு ஒலிக்க. வேதம் நாத சொரூபமானது. அதுவே இறைவன் காற்சிலம்பாம். நாதத்திலிருந்து விருத்தியாய் வேதம் தோன்றும். குடிலையின் வழியே புவனங்கள் தோன்றும். அவ்வாறு தோன்றிய புவனங்களிற் பிறந்த உயிர்களுக்கு வேதமே வழிகாட்டும். இறைவன் வேதாந்தத்து விளங்குபவன்; ஆதலின் அவன் காலில் நிற்பது நாதமாகிய சிலம்பு என்க.’’ என்பது உரை.

    வையகம் பொலிய ஆடும் இத்தகைய நடனத்தை உள்ளே அகக்கண்களாலும் கண்டுணர்ந்த சிவனடியாராகிய சுந்தரர் , முதலில் கைகளைக் கூப்பி அஞ்சலிசெய்தார். அடுத்து புறக்கண்களால் அம்பலத்தில் ஆடும்நடனத்தைக் கண்டுமகிழ்ந்தார். பின்னர் அகக்கரணங்களால் அன்பு கலந்து கண்டுணர்ந்தார்! இவ்வாறு கைகளைக் கூப்பி, அகக்கண்ணால் கண்டு, அந்தக்கரணங்களில் கலந்து நிற்கக் கண்டார். இந்த மூவகைகளில் கண்டுமகிழ்ந்த காட்சிகளுள் , எதுமுன், எதுபின் எனப்புலப் படாதவாறு ஒன்றினுள் ஓன்று கலந்து விட்டனவாம்! இதனை,

    ‘’ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்த அன்பு’’

    என்கிறார். ‘’முன் குவித்த கைகளோ – கண்களோ – அந்தக்கரணமோ அன்பு உந்த – அன்பு தூண்டுதலினாலே மனம் முதலிய உட்கரணங்கள் தொழில் செய்யும் – பின்னர் அவைஏவுதலினால் கண் காணும் – கண்டதனால் அதன்பின் கைகுவியும்; ஆனால் இவை இங்கே தவயோக முயற்சியி னாலே ஒருங்கே நிகழ்ந்தமையாலே, அம்முறையிற் கூறாது மாற்றிக் கூறினார். ஒன்றன்பின் ஒன்றாய்ப் பின்னே நிகழ வேண்டியவை அவ்வாறன்றி முன்னே நிகழ்ந்தன என்பார் முன் என்றார். நிருவி கற்பம் சவிகற்பம் என்ற காட்சி யிரண்டனுள்ளே முதலிற் கண்டபோது பொது நோக்காகிய நிருவிகற்பக் காட்சி நிகழும். பின் மனதோடு கலந்து உற்றறிதல் உண்டாகும். அதன்பின் இன்னது செய்தல் வேண்டுமென்பது தோன்றும். பின்னரே அச்செயல் நிகழும். இந்த நான்கு வகை நிகழ்ச்சிகளும் கர்ப்பூரத்திலே தீப்பற்றுதல்போல் தீவிர தர பத்தி யுடையார்க்கு எது முன்னர் நிகழ்ந்ததென்றறியமுடியாதபடி விரைவிலே நிகழும்’’ என்பார் உரையாசிரியர். – உட்கரணங்கள் நான்கு. சித்தம், மனம், அகங்காரம், புத்தி என்பன. உயிர் – சித்தமாய் நின்று இது யாதாகற்பாலது எனச் சிந்திக்கும்; அதன்பின் மனமாய் நின்று இஃது இன்னதாகற்பாலது எனப் பற்றும்; அதன்பின் அகங்காரம் இது ஆமோ? அன்றோ? இதனை இன்னதெனத் தெளிவேன் யானெனத் தெளிவு பிறவாதெழும்; அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னதெனத் தெளியும்; இவ்வகை வெவ்வேறாய் முற்றுப்பெறாத செய்கையுடையன வல்லாதபடி முன்பயிற்சியாலே ஒருங்கே முற்றிய செய்கையுடையன ஆயின என்க

    அத்தகைய கலந்த அன்புடன் சுந்தரர் தில்லையம்பலத்தின் அணுக்கன் திருவாயிலில் புகுந்தார்! இதனையே ,

    வையகம் பொலிய மறைச்சிலம் பரற்ற
    மன்றுளே மாலயன் தேட
    ஐயர்தாம் வெளியே ஆடுகின் றாரை
    யஞ்சலி மலர்த்திமுன் குவித்த
    கைகளோ திளைத்த கண்களோ அந்தக்
    கரணமோ கலந்தவன் பந்தச்
    செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
    திருக்களிற் றுப்படி மருங்கு

    என்று பாடுகிறார் . இப்பாடலில்உள்ள திருக்களிற்றுப்படி என்பது – யானைத் துதிக்கை வடிவுடையனவாகிய திரணைகள் இரண்டுபுறமும் அமைந்துள்ள ஐந்து படிகள். இவ்வைந்தையும் ஏறிக் கடந்து சென்றால் அருட் பெருங் கூத்தனைக் காணலாம். களிற்றுக்கை சூழ்ந்தமையால் இது இப்பெயர்பெற்றது. களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருவைந்தெழுத்தையும் குறிக்கும். ஐந்தெழுத்தால் அறியப்பெறுபவன் அவை குறிக்கும் ஐந்தொழில் ஆனந்தக் கூத்தனாதலை அவற்றின்மேற் காணும் இறைவனது திருவுருவம் இயம்பும். இக் களிற்றுக்கை எடுத்து நடராசர் திருப்பாதத்தே வைத்தமையால் காரணப் பேர் பெற்றது திருக்களிற்றுப்படியார் என்ற சைவசித்தாந்த சாத்திரம்..

    Share
  • சேக்கிழார் பா நயம் – 35

    -திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    திருவதிகை வீரட்டானத்தில் சித்த வட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி தலைமேல் திருவடியைப் பலமுறை வைத்தருளியதன் உட்பொருளைச் சுந்தரர் உணர வில்லை. அவருக்கே உரிய இறுமாப்புக்கொண்டு இறைவனிடமே கேள்விகேட்டார்! இறுமாப்பு என்பது தன்னை அறியாத தருக்கு! அது தலைவனையும் அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளிவிடும்! அதனால் தம்செயல், இறுமாப்பினால் அதாவது செம்மாப்பினால் விளைந்தது என்பதை ’’செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் !’’ என்று வருந்தும் நிலைக்குத் தள்ளியதே என்று சுந்தரர் கூறுகிறார்! அதன் பின்னர் அவர் தெளிவடைகின்றார். இங்கே இறைவன் சுந்தரர் தலைமேல் பலமுறை திருவடியை வைத்தது, அவருக்கு அவர் நிலையைத் தெரிவிக்கவே என்பது புலனாகின்றது. அருணகிரிநாதர் தம் தலைமேல் முருகன் திருவடி பட்டமையால் நிகழ்ந்த நன்மையைக் கூறுகிறார்!

    ‘’அவன் கால் பட்டழிந்தது இங்கு என்தலைமேல் அயன் கையெழுத்தே!’’ என்பது அவர் இயற்றிய கந்தரலங்காரம்! இதனைச் சித்தாந்தம் ‘’;திருவடி தீட்சை’’ என்று கூறும். இவ்வாறு வலிய வந்து சிவபெருமான் தம்திருவடியால் சுந்தரருக்கு ஞானம் தந்தார் .அதனால் யான் அறியாமையால் தவறு செய்தேன் இப்போது அறிவு பெற்றேன்! அதனால் ‘’எத்தகைய தவறுசெய்தேன்! ‘’ என்று வருந்துகிறார். அதனால் தம் இழிந்த மனநிலைமையால், தம்தலைவரைக்கூட அறியாத தொண்டனாகி விட்டேனே! என்றுவருந்தி,

    ‘’தம்மானை அறியாத சாதியார் உளரே!’’ என்று கூறுகின்றார். அனைவருக்கும் தலைவராய், வீரட்டானம் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவபிரானை நினைக்கிறார்! அப்பிரான் ஆணவத்தால் எதிர்த்து வந்த மதங்கொண்ட யானையின் தோலை உரித்து அணிந்த வீரச் செயல் புரிந்த தலம், வீரட்டானம்! ஆகவே செம்மாப்பை, – இறுமாப்பை விலக்குவதற்காக அவர் திருவடி பதித்தார்! முன்பு திருக்கைலையை விட்டுநீங்கிய நிலையில் நினைவால் ஞானம் தரும் ‘’மானஸ தீட்சை’’ எனப்படும் திருவுள்ளதீக்கை யாலும், திருவருட்டுறையில் காட்சிதந்தபோது, நேரில் கண்டு ‘’சட்சுதீட்சை’’ எனப்படும் திருக்கண் தீக்கையாலும், பின்னர் அந்தண வேடத்துடன் சித்தவடமடத்திற்கு வந்த போது, திருவடி தீட்சை எனப்படும் பரிச தீக்கையாலும், ‘’எம்மைப்பாடு!’’ என்றபோது, உபதேச தீட்சை எனப்படும் வாக்குத் தீக்கையாலும், தடுத்தாட் கொண்டார். இவையனைத்தையும் தம் திருப்பாடலில், சேக்கிழார் அமைக்கிறார்.

    ‘தம்மானை அறியாத சாதியாருளரே’ – இது உண்மையுணர்ந்தவுடனே நம்பிகள் பாடிய திருப்பதிகத்தின் முதற்குறிப்பு. தமது தலைவனையும் அறிந்துகொள்ளாத வகுப்பாரும் உலகத்தில் உண்டோ? சாதியார் – வகுப்பினர் – வகையிலே – பட்டவர் – அறியாத வகையினர். சாதி – வகுப்பு என்ற பொருளில் வந்தது. தமது தலைவனைத் – தம்மை ஆளாகக்கொண்டு காக்கின்றவனைத் தமது நலங்கருதியேனும் யாவரும் அறிவர். அவ்வாறு அறியாத வகையினர் உலகில் இல்லை என்றபடி. உளரே – ஏகார வினா இல்லை என்ற விடை குறித்து நின்றது. வேறு ஒருவரும் இல்லை; ஆயினும் யான் ஒருவன் இறைவனை யறியாது இறைபோதும் இகழ்வன் போலும் என்பது பதிகக் கருத்து. முன்னர் ஆணவ மறைப்பினாலே ‘பலகாலும் மிதித்தனை’ என வெறுத்த அந்தக் கழலையே மறைப்பு நீக்கம் பெற்ற இப்போது பணிந்து துதித்தார்.

    (1) எம்மான்ற னடிக்கொண்டென் முடிமேல் வைத்திடு மென்னு மாசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் – இது திருவடி தீக்கையிலே நம்பிகள் ஆசை வைத்திருந்ததைக் குறிக்கும் “இறைதாள் புரிவுடைய மனத்தினராய்“ என்ற சரிதத்துக்கு அகச்சான்றாம். அறிவிலா நாயேன் – முன்னர் வழக்கு இட்டபோது அறியாததுபோலவே இன்றும் இறைவர் தாமே வெளிவந்தபோதும் அறியாமலிருந்ததற் கிரங்கிய கூற்று.

    (2) முன்னே எம்பெருமானை மறந்தேன்கொல் மறவா தொழிந்தேன்கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன். இதுவும் நம்பிகளது அறிவு நிலையை மிக நன்றாக உணர்த்தும் அகச்சான்றாம்.

    (3) வளராத பிறையும் வரி அரவும் உடன்றுயில வைத்தாளும் எந்தை – உடன்றுயில
    – ஒன்றாய் வாழ; வளராத பிறை –

    ‘மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமே னாகந்
    தெறுமென்று தேய்ந்துழலு மாவா – உறுவான்
    தளரமீ தோடுமேற் றானதனை யஞ்சி
    வளருமோ பிள்ளை மதி’

    – காரைக்காலம்மையார் அற்புதத்திருவந்தாதி – 36

    காண்க.

    4) நாற்றானத் தொருவனை – ‘இது நாலா நிலையாகிய சிவயோகத்தைக் குறிக்கும் என்பர். நாற்றானத் தொருவனை – என்பது திருக்களிற்றுப்படி. நின்மல துரிய நிலையே தசகாரியத்துள் சிவயோகநிலை. சிவம் தெளிவாக விளங்கும் நிலை இதுவே! நம்பிகள் ஞானயோக நெறியை விளக்கவந்த ஆசாரியராதலும் காண்க

    “பத்திப்போர் வித்திட்டே பரந்த வைம்புலன்கள் வாய்ப்
    பாலே போகா மேகாவாப் பகையறு வகைநினையா
    முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள் வாய்
    மூடாவூடா நாலந்தக் கரணமு மொரு நெறியாய்ச்
    சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள்
    சேர்வார் தாமே தானாகக் செயுமவன்’’

    தலவிசேடம் – அட்டவீரட்டங்களில் ஒன்று. திரிபுரமெரித்த வீரம் நிகழ்ந்த தலம். அப்பர் சுவாமிகளை ஆட்கொண்ட வரலாறு அப்புராணத்துக் காண்க. திலகவதியம்மையார் திருப்பணி செய்தமர்ந்த தலம். இவர்களது திருவுருவங்கள் இங்கு அமைத்துப் பூசிக்கப் பெறுகின்றன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்கு இறைவன் இங்கு முன்னே எதிர்காட்சி கொடுக்க ‘ஆடும் வீரட்டானத்தே’ என்ற குறிப்புடன் பதிகம் பாடியருளினர். இறைவனது இலிங்க அருட்டிரு மேனி மிக உன்னதமாய் விளங்குவது. தீர்த்தம் – கெடிலநதி. சுவாமி – திரிபுராந்த கேசுவரர். தேவியார் – திரிபுரசுந்தரி. இது நடுநாட்டுத் தலங்களில் 7-வது தலம். கெடில நதியின் வடகரையில் உள்ளதென்பது பதிகம் . பண்ணுருட்டி இருப்புப்பாதை நிலையத்திலிருந்து கிழக்கே ஒரு நாழிகையளவில் அடையத்தக்கது. இனி ,முழுப்பாடலையும் காண்போம்.

    ‘’செம்மாந்திங்கு யான்அறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
    ‘தம்மானை அறியாத சாதியார் உளரே ‘ என்று
    அம்மானைத் திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
    கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்!’’

    Share
  • சேக்கிழார் பா நயம் 34

    திருச்சி  புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தியாரை, இறைவன்  திருவருட்டுறையமைந்த  திருவெண்ணை நல்லூரில் ஓர் அந்தணராக வந்து  ஆட்கொண்டருளியபின்    இறைவன் மேல்  அருச்சனை யாகிய சொற்றமிழ்ப் பதிகம்  பாடினார்!  பின்னர் அங்கிருந்து  புறப்பட்டுத் திருநாவலூர் கடந்து  திருத்துறையூரில்  தவநெறி தந்தருள வேண்டிப்   பாடினார். பின்னர் பெண்ணை  யாற்றைக்   கடந்து திருத்தில்லையில்  நடமாடும் கூத்தப் பிரானின்   திருப்பாதம்  பணிய   எண்ணினார்.  தில்லை  செல்லும்   வழியிலே திருமாணி குழியைக்  கடந்து  திருவதிகை என்ற  தலத்தை அடைந்தார்.

    அங்கேதான்  திருநாவுக்கரசரைச்  சிவநெறியில்   செலுத்த  வேண்டித்  திலகவதியார் வழிபட்டார்;  பின்னர்   அப்பருக்குத்  திருநீறளித்தார்!  அந்தத்  திருத்தலத்தில் உறைந்த இறைவனைக்  ‘’கூற்றாயினவாறு’’  என்ற  பதிகத்தால்   திருநாவுக் கரசர்   வழிபட்டார், அந்த அருள்  வரலாற்றை எண்ணிய  சுந்தரர், திருநாவுக்கரசர் நடமாடிய திருத்தலத்துள் கால்வைக்க மாட்டேன் என்று ஊருக்குப்  புறம்பேயுள்ள ‘’சித்தவட மடம்’’ என்ற   வழிப்போக்கர் தங்கும் இடத்தில்  சற்றே சாய்ந்து   படுத்தார்.          

    சுந்தரர் செல்லுமிடந்தோறும்  எழுந்தருளும்  சிவபிரான், அந்தச்   சித்தவட மடத்தில் சுந்தரர்  படுத்திருந்த  இடத்திற்கு ஓர்  அந்தணர்  உருவுடன் வந்தருளி,  அவர் தலைமேல்  தம் பாதத்தை  வைத்தபடிப்  படுத்தார்! தம் தலைமேல்  கால் படும்படி, அவர் படுத்திருப்பதைக்  கண்ட சுந்தரர், ‘’அருமறை உணர்ந்த அந்தணரே, இவ்வாறு  என் தலைமேல்  கால் படும்படிப்  படுக்கலாமா?’’ என்று  கேட்டார். சுந்தரருக்குத்  தாமும் உயர்ந்த  அந்தணர் குலத்தில் பிறந்தோம்  என்ற செருக்கு! அதனால்  ஓர் அந்தணர்  தம் தலைமேல்  பாதம் படப்  படுக்கலாமா?  என்ற  சினத்துடன், ‘’அரிய  வேதங்களைக்  கற்ற  அந்தணரே! இவ்வாறு  அடுத்தவர் தலைமேல் கால் வைத்துப் படுக்கலாமா?’’ என்று கேட்டார்.

    வந்தவர் வேதம் பயின்ற  அந்தணர் என்பதைத்  தம் வாக்கால் வெளிப்படுத்திய  சுந்தரர், தம்மைத்  திருவெண்ணெய் நல்லூரில்  தடுத்தாட்கொள்ள  வந்த சிவபெருமான்  வேதம் பயின்ற அந்தணர்  கோலத்தில்தானே வந்தார், என்பதை மறந்து விட்டார்! வந்த அந்தணர்  சிவபெருமானே  என்பதையும் உணர வில்லை.  அதனால்  அந்தணரிடம்  சினங் கொண்டார்! இன்னும் அவர் மையல் மானுடமாய்  மயங்கினார்! ஆனால் அவரைத்  தொடர்ந்து வந்த சிவபெருமான் , தம் அடையாளத்தை  நுட்பமாக  உணர்த்தினார்! ‘’ எனக்கு  அகவை  மிகவும் அதிகம். ‘’யான்  என்று பிறந்தவன்  என்று  உணராத  இயல்பினன்!’’என்றார்! அவரைப்‘’பிறவாயாக்கைப்பெரியோன், முதுமுதல்வன்’’என்று  சங்கப்பாடல்கள் கூறும். காலப்  பெருவெளியில் என்றும்   நடனமாடுபவர் அவர்! அவர்  ஆடும்  பரவெளிக்குத் திசைகள்  இல்லை !  ஆதலால், ‘’என் மூப்பு என்னைத்   திசை அறியா  வகையில் இவ்வாறு உன்னை மிதிக்கச்செய்துவிட்டது!’’ என்று   அவரே  கூறியருளினார்!  இதனைக்   கேட்ட  பின்னரும் சுந்தரர் பெருமானை உணரவில்லை. ஆதலால் முதியவரை  விட்டு  விலகி சற்றுத்   தள்ளிப்   படுத்தார்! இதனைச்  சேக்கிழார்,  

    ‘’அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய் உன்னடி என்

     சென்னியில் வைத்தனை ‘’

    என்று பாடினார்!  உடனே சிவபிரான் ,

    ‘’திசை அறியா   வகை செய்தது  என்னுடைய   மூப்புக்  காண் ! ‘’    என்றார். அப்படியும்  உணராத சுந்தரர் ,

    ‘’அதற்கு இசைந்து

     தன் முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ் நாதன்.’’

    என்று  பாடினார் . அங்கும்  அவர் தலைமேல்  தம் காலை நீட்டினார்   இறைவன்! ‘’இங்கே மீண்டும் மீண்டும்  என்னைத் தொடர்ந்து வந்து  பலமுறை மிதித்தது  ஏன்?’’ என்று  சுந்தரர் கேட்டார்! கங்கையைச்  சடையில் மறைத்துக் கொண்ட சிவபிரான் , ‘’என்னை அறிந்து கொள்ள வில்லையோ?’’ என்று கேட்டு , அங்கேயே  மறைந்தார்! அதன் பிறகே  சுந்தரருக்கு  உணர்வு  வந்தது. எந்தக்  கூத்தன் திருவடியில்  வணங்கிப்  பணிய வேண்டும் என்று ஆசைப்பட்டுத்  தில்லை நோக்கி நடந்தேனோ, அந்தப் பெருமானே  எளியேன் தலை  மேல்  திருவடி பதித்தானே !’’ என்று புலம்பினார்! எண்ணங்களின் அலைபாய்ந்த  அவர் உள்ளம்,   செங்கயல் மீன்கள் பாயும் குளம்  போல  அலைபாய்ந்தது  என்பதைச் சேக்கிழார் ,  

    ‘’அங்குமவன்   திருமுடிமேல்  மீட்டும் அவர்   கால் நீட்ட

    செங்கயல் பாய்   தடம்புடைசூழ்  திருநாவ    லூராளி

    ‘’இங்கென்னைப்   பலகாலும்  மிதித்தனைநீ   யார்?’’ என்ன

    கங்கைசடைக்  கரந்தபிரான்   ‘’அறிந்திலையோ?’’ எனக்கரந்தான் ‘’

    எனப் பாடினார்! இப்பாடலில்  சுந்தரர் மனக்கலக்கமும், இறைவன்  அருளிய மொழியும், அடியார்  ஒழுக்கமும், ஆண்டவன்  விளையாடலும் எனப் பல்வகைச்  சொல்லாட்சித்  திறத்துடன்  விளங்குவதைக்  காணலாம்!

    Share