Tag: திருமலை சோமு

  • மனிதன் எனும் விருட்சம்

     

    திருமலைசோமு

    மனிதனுக்கு
    வரையறை வகுக்க
    எவரால் முடியும்

    எல்லைக்குள் கட்டுப்படவும்
    எளிதில் முற்று பெறவும்
    மண்ணில் கரையும்
    மழையின் துளியோ
    மனிதன்…

    இரவில் ஜனித்து
    பகலில் மரிக்கும்
    பனியின் துளியோ
    மனிதன்…

    இரு கரைக்குள் அடங்கி
    நடைகள் மாற்றி
    பயணம் போகும்
    நதியோ மனிதன்….

    இல்லை
    துளி விந்தின்
    விருட்சம் மனிதன்…

    தன்
    நெடும் பயணத்தில்
    நீண்ட வெற்றிகளை
    நெற்றிக்குள்
    குவியலிட்டுக் கொண்டவன்
    விரல் நுனிக்குள்
    உலகை இயக்கும்
    நூதனம் அறிந்தவன்

    மனிதன்
    மனிதனாய் மட்டுமல்ல
    இறைவனாகவும்
    அவதரிப்பவன்.

    படத்திற்கு நன்றி :

    http://www.livingpictures.org/trees.htm

     

    Share
  • எங்கும் பரவும் டெங்கை முறியடிப்போம்

     

    திருமலை சோமு

    மனிதன்.. மகத்தானவன்

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், சுத்தம் சுகாதாரம் தரும்.. வரும் முன் காப்போம் என்றெல்லாம் எத்தனையோ மூத்தோர் சொல்லை  நாம் நினைவில் வைத்திருந்தாலும். இன்றைய அதிவேக விஞ்ஞான உலகத்தில் மருத்துவத்துக்கு சவால் விடும் வகையில் புதுவகையான நோய்கள் அவ்வப்போது மனிதனை அச்சுறுத்திக்கொண்டேதான் இருக்கிறது.. சில நாட்களாக சிக்குன் குனியா, பன்றிக்காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்று பயந்து  கிடந்த நாம் இப்போது மீண்டும் டெங்கு காய்ச்சலை கண்டு அச்சப்பட்டு இருக்கி றோம்.. டெங்கு காய்ச்சல் பற்றி பயப்பட வேண்டாம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்கும் என்றெல் லாம் நம்பிக்கை வார்த்தைகளை அவ்வப்போது சொன்னாலும்.. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பது போல் டெங்கு தாக்கி அவதிபட்டு வரும் மக்களிடம் என்ன பேச முடியும்.?
    இந்த டெங்கு நேற்று இன்று முளைத்ததில்லை உலகின் பல நாடுகளில் 200 ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கொடிய தொற்றுநோயே டெங்கு காய்ச்சல். கடந்த 30 ஆண்டுகளில் இதன் தாக்குதல் அதிகரித்துள்ளது. 1779ம் ஆண்டு முதல் டெங்கு காய்ச்சல் நோய் சீனாவில் உறுதி செய்யப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.1820-ன் முற்பகுதியில் கிழக்கு ஆப்ரிக்காவில் டெங்கு தொற்று நோய் உருவானது என்றும் உலகம் முழுதும் சுமார் 2500 மில்லியன் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆண்டுக்கு சுமார் 50 மில்லியன் மக்களை டெங்கு தாக்குகிறது என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது.

    டெங்கு காய்ச்சலுக்கு மூல காரணம் ‘எடியஸ் எஜிப்டி’ வகைக் கொசுக்கள் என்று நாம் அறிவோம்.. இக்கொசுக்கள் தேங்கியுள்ள மழைநீரில், நன்னீரில் இனப்பெருக்கம் செய்கிறது. . சூரிய உதயத்திலிருந்தது 2 மணி நேரமும் சூரியன் மறையும் மாலையில் 2 மணி நேரமும் இவை கடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டெங்கு பாதித்தவருக்கு 105 டிகிரி வரை காய்ச்சல். கடுமையான தலைவலி, தலையில் அதிக சூடு, கருப்பு நிறத்தில் வாந்தி, வயிற்றுப் போக்கு, தோலில் தடிப்பு, காய்ச்சல் முற்றிய நிலையில் வலிப்பு, மூட்டுக்களில் வலி, உடல் துளைகளின் வழியாக ரத்தப்போக்கு, சீறுநீர்த் தடை போன்ற பிரச்சனைகள் இருக்கும். கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்றுப் போக்கு இருப்பதால் உடலின் நீர்ச்சத்து விரைவாக குறைந்து விடும் (De hydration) ஆபத்து உருவாகிறது. அபாய கட்டத்தை நெருங்கும் போது மூக்கு இதர உடல் துளைகள் வழியாக ரத்தக் கசிவு ஏற்படுகிறது. கடுமையான காய்ச்சலின் போது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படுகிறது. டெங்கு வைரஸ் ரத்தத்தில் அதிவிரைவில் பெருகுகிறது. இந்த வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டுக்களை (Platelets) அழித்து விடுகிறது. இதன் காரணமாக ரத்தம் அதன் தன்மை மாறி துளைகளின் வழியாக வெளியேறுகிறது. மேலும் ரத்தம் உறைகிற தன்மையும் குறைந்து விடுகிறது.

     ”பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்சலுக்கு உரிய சிலவகைமருந்துகளைக் கொடுத்து விட்டு நீர்ச்சத்து குறைந்து விடாமலிருக்க பழரசங் கள்,தூய்மையான குடிநீர், இளநீர் ஆகியவற்றைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சர்க்கரையும் உப்பும் கலந்த கரைசலை யும் கொடுக்கலாம்” என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.  ரத்தத்தின் மூலப் பொருட்களுள் ஒன்றாகிய பிளேட் லெட்ஸ் வெகுவேகமாக குறைவ தால் ரத்தத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட பிளேட்லெட்டை தனியே உடலில் ஏற்ற வேண்டும். பிளேட்லெட் கிடைக்காத போது ரத்தத்தையே ஏற்றலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப் பட்டவரின் நோய் எதிர்ப்பாற்றல் குன்றிவிடுவதால் அவருக்கு வேறு வகையான தொற்றோ அல்லது பாதிப்போ ஏற்பட் டால் அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் உயிர்சேதம் ஏற்படலாம்.

    டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை ஆங்கில மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. சித்த ஆயுர்வேத மருந்துகள் பயனளிக்கின்றன. ஆயுர்வேதத்தில் அம்ருதாரிஷ்டம் (Amrutha Aristitam) 25 மிலி மருந்து  சமஅளவு வெந்நீருடன் கலந்து காலை, மாலை பருகினால் டெங்குவை தடுக்க முடியும். மேலும் நிலவேம்பு கசாயம் தினம் – காலை, மாலை 30 மிலி வெறும் வயிற்றில் 3 வாரம் தொடர்ந்து பருகினால் டெங்கு உள்ளிட்ட வைரசால் பரவும் காய்ச்சலை தடுக்க முடியும். சித்த மருந்துகளில் பிரமானந்த பைரவம், வாதசுர குடிநீர் போன்றவை டெங்கு சுரத்தைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகின்றன.1996-ல் டெல்லியில் டெங்கு பேரளவில் தாக்கிய போது அரசின் உத்தரவுக்கிணங்க, டெல்லி மாநில ஹோமியோபதி கவுன்சில் ‘Eupatorium Perf ’ என்ற ஹோமியோபதி மாத்திரையை பல்லாயிரம் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்தாக வழங்கி முழுவீச்சில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினார்கள். மேலும் டெங்கு காய்ச்சல், ரத்த கசிவு டெங்கு சுரம் இரண்டையும் (ஆங்கில மருத்துவத்தில் உரிய மருந்துகள் இல்லாத நிலையில்) ஆற்றல் மிக்க 25 ஹோமியோபதி மருந்துகள் மூலம் குணப்படுத்திக் காட்டினர். டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்க பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.

    கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளது என அறியப் படுகின்றது. மேலும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்காமல் தடுப்பது அவசியம். ஜக்குகள், வாளிகள், பூந்தொட்டிகள், நீர்த் தொட்டிகள், பாட்டில்கள்,டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பானைகள் போன்றவற்றைச்சுத்தப்படுத்துவதும், வெயிலில் காய வைத்து பயன்படுத்துவதும் அவசியம். குளிர்சாதன பெட்டியை (பிரிட்ஜ்) வாரம் ஒரு முறையேனும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு நாம் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்து கொண்டால் நம்மை யார்தான் வெல்ல முடியும்? கொசுக்கடிக்கு இரையென மாயும் அற்ப ஜீவனாய் வீழ்வோம் என்று நினைத்தாயோ.. மனிதன்.. மகத்தானவன்!

    படத்திற்கு நன்றி

    http://blogs.burlingtonfreepress.com/weather/2011/09/20/vermonts-mosquito-coast/

    Share
  • இலக்கிய வானில் நூற்றாண்டு கடந்து சுடர்விடும் க.நா.சு

    திருமலை சோமு

    க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988)

    நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவர், க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமண்யம், 1912ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வலங்கைமானில் பிறந்தார். கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம் என்ற க. நா. சு. சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாகத் தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் தன் படிப்பை தொடர்ந்தார். அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். ஆனால் க.நா.சு கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணத்தின் போதே எழுத்து பணியில் இறங்கி இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும் வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம் க.நா.சுவுக்கு இருந்தது.  தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். 1930களில் தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்த அவர் தினமணி அலுவலகத்தில், தன் எழுத்துகளுடன் கால் பதித்தார். 

    அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார். வ.ரா. வெடுக்கென்று கேட்டார், நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா, கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?    சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர். கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும் என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.

    ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். ‘பொய்த்தேவு’ புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1946ல் இவர் எழுதிய இந்த நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன், சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கைத் தேடல் குறித்த சுவையான படைப்பு. 1986ம் ஆண்டு அவரது ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர். 

    40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.

    படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த காந்தி இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.

    மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக உருவாக்கப்பட்ட ஆசான் கவிதைப் பரிசு 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு வழங்கப்பட்டது.   அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான். அதற்கு முன் தமிழக அரசின் பரிசை  ‘கோதை சிரித்தாள்’ என்ற நூலுக்காகப் பெற்றிருந்தார்.

    க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு, அவர் சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது மருமகன் பாரதி மணி சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்குக் கொடுத்தார்.

     

    ஆர்வமுடையோர் படித்து இன்புற -க.நா.சுவைப் பற்றிய தகவல் தரும் சில முக்கிய இணையப் பக்கங்கள்:-

    க.நா.சு பற்றிய விக்கிபீடியா சுட்டி:

    க.நா.சு.வும் நானும் -வெங்கட் சாமி நாதன் கட்டுரை  (http://www.tamilhindu.com ல் வெளி வந்தது-மூன்று பாகங்கள்)

    சொல்வனம்- க.நா.சு சிறப்பிதழ்

     http://azhiyasudargal.blogspot.in/2012/10/blog-post_9.html

     எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு.- பாரதி மணி

    Share
  • உன் அருகே

     

    திருமலை சோமு

    எல்லாம் இருந்தும்
    வெறுமைக் காற்று வந்து
    வெற்றிடம் நிரப்பும்..

    ஒவ்வொரு பொழுதும்
    உன் மூச்சே உனக்கு
    கனக்கும்

    உலகை ஒளிர்விக்கும் கதிரவன்
    உன் கண்களில் மட்டும்
    இருளை பீச்சுவான்..

    நினைவுகள் எல்லாம்
    எதிர்காலத்தை புதைத்து விட்டு
    பின்நோக்கி செல்லும்

    உன்னோடு உயிராக
    உனக்குள்ளே கலந்த உன்னவள்
    உன் அருகே .. இல்லையென்றால்

    உன் வீட்டு நாட்காட்டியும்
    கடிகார முட்களும் கூட
    உன் இதயத்தை போலவே
    நின்று விடத்தான் துடிக்கும்..

    என்ன செய்வது
    உன் அருகே வீசும் காற்றுக்கும்
    உயிர் கொடுப்பவள் அவள்தானே..!
    படத்துக்கு நன்றி

    Share