Author: நாராயண் சுவாமிநாதன்

  • வயோதிகருக்குமுண்டு வெறி

    நாராயண் சுவாமிநாதன்

    “என்ன போட்டிருக்கு பேப்பர்ல ” என்றான் கோபாலன்.

    “சேலத்துல எண்பது வயசுக் கிழவன்  எட்டு வயசுப் பெண்ணைக் கற்பழிச்சிட்டானாம்” என்றான் ரகுபதி.

    ” நாட்ல சட்டம் சரியில்ல. மைனர், மேஜர், மனித உரிமைன்னு தண்டிக்கத் தடை வருது. பெண்கள் கவர்ச்சி உடை, சினிமா குத்தாட்டம், கவர் ஸ்டோரி எல்லாம் காரணம். இவனுகளை தூக்ல போடணும். இல்லாட்டி வேதியியல்  முறையில வலிக்காம ஆண்மை நீக்கம் கூட..”

    “ஆமாண்டா. இவனுக கதறக் கதற கற்பழிப்பானுக..இவனுகளைப் பிடிச்சு தண்டனை கொடுக்கறச்சே மட்டும் நோவாம நுங்கெடுக்கணுமா. ஒரு அருவாளால..”

    “வெறிபிடிச்ச வெளி ஆளுகள் செய்யறதவிட,  வீட்லேயே சொந்தக்காரங்க, தெரிஞ்சவங்க கூட தப்பு செய்யறாங்க. நம்ம வீட்டு வாசல்லயே நடக்கற ந்யூஸ் தெரியுமா உனக்கு ?”

    “இந்த வீட்டுலயா ? என்ன நடக்கறது ?”

    ” வாசல் திண்ணையில இருக்காறே கிழவரு…அவர் ஒரு ஜொள்ளுப் பேர்வழி. தெரியுமா”

    அவர்கள் குடியிருந்த அந்த வீட்டு  முன்னறையின் சன்னல் வழியாகப்  பார்த்தால்  வாசல் திண்ணையில ஒரு கிழவர் அமர்ந்திருப்பது தெரியும். அந்த  வீட்டு சொந்தக்காரரின் தகப்பனார் அவர். தினமும்  காலையிலும் மாலையிலும் தெருவில் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார் அவர்.

    ரகுபதியால் நம்ப முடியவில்லை.

    “பாவம் அவரைப் போயா ஜொள்ளு பேர்வழிங்கறே ?
    பேத்தாத. அவர் வயசென்ன..எழுவது எழுவத்தஞ்சுக்கு மேல இருக்காது ? தப்பாப் பேசாத…” என்று பொரிந்தான்.

    “பார்க்காம சொல்வனா..  மூணு நாளா வாட்ச் பண்றேன்”

    “என்ன பண்ணினாரு அப்படி ?”

    “ஒரு ஸ்கூல் பெண்ணுக்கு தூண்டில் போட்டு பிடிச்சிட்டாரு”

    “யார் அந்தப் பெண் ?”

    “இதே தெருல ரேவதின்னு ஹைஸ்கூல் பெண்ணு. பார்க்கத் தளதளன்னு இருக்கு.  இவரு கூப்பிட்டுப் பேசறாரு.  குழையறாரு. நான் கண்ணால பார்த்தேன்.
    அதுவும் விவரம் புரியாம இருக்கு”

    அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே கிழவர் தெருவை நோக்கி  “ரேவதி..ரேவதி இங்க வா” என்று அழைத்தார்.

    மினுக்கி குலுக்கி அந்தப் பெண் அவர் அருகில் வந்தாள்.

    ”கிட்ட வா” என்றழைத்து, அவள் கழுத்தை அணைத்தவாறே காதில் மெதுவாக  ஏதோ சொன்னார். ரகுபதிக்கு சரியாகப் புரியவில்லை. “மறக்காதே, அது ரொம்ப அவசியம் ” என்று சொன்னது கேட்டது.

    அவள் தலையசைத்து,  “சாயங்காலம் ஸ்கூல் விட்டவுடனே வந்திடவா ? ” என்றாள்.

    “வந்தா ஆறுமணிக்கு மேல வா. என் பிள்ளையும் மருமகளும் வெளிய போனப்பறமா வா. அவங்க  அஞ்சு  அஞ்சரைக்கு ஏதோ கல்யாண ரிசப்ஷன் போறாங்களாம். முன் ரூமில குடியிருக்கறவங்க ஏழு மணிக்கு மேலதான் வருவாங்க. நாம தனியா இருந்தா நமக்கு ஒரு தொந்திரவும் இருக்காது” என்று சொல்லி

     ” சொக்கும் விழிக்காரி  சொப்னசுந்தரி
      சொன்னது  தப்பாமல் வந்திரி “ என்று பாடினார்.

    ரேவதி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

    அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் தணிந்த குரலில் “பாத்தியா உன் கண்ணால. கிழத்துக்கு ஹார்மோன் பிரச்னை. அதான் அலையுது. ”அது” அவசியமா வேணுமாமே. எது ?ஆணுறையா? வெவரமான ஆளாத்தான் இருக்கு. தடயம் இல்லாம தப்பு செய்யப் பாக்குது”

    ரகுபதிக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.

    “இதைத் தொடர்ந்து கண்காணிக்கணும் கோபாலா..  இந்த மாதிரி ஜொள்ளு கிழத்தை எல்லாம் கேஸ்ட்ரேஷன்  பண்ணணும். என்ன  நடக்குதுன்னு இதை ரூம்லயே இருந்து கவனிக்கப்போறேன்.  நமக்கு என்னனு இல்லாம ஒரு சமூகப் பொறுப்போட நாம செயல்படணும்”
    என்று சூளுரைத்து சன்னல் கதவை லேசாக சார்த்தி வைத்தான்.

    “வம்புல மாட்டிக்காத. வாடகைக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமா இருக்கு. எனக்கு  ஆபீஸ்ல வேலை இருக்கு. என்ன நடக்கறதுன்னு பார்த்துச் சொல்லு” என்றான் கோபால்.

    சாயங்காலம் அஞ்சுமணி.

    “மாமா நாங்க திரும்பி வர ரெண்டு மணி ஆகும்.  மேஜையில அடை வார்த்து வெச்சிருக்கேன். சாப்பிடுங்கோ. கதவை சாத்தி வெச்சுங்கோ” என்று சொல்லிவிட்டு  கிழவரின் மருமகள் தன் கணவனோடு ஆட்டோவில்  ஏறிப் போனாள்.

    அவர்கள் போனதும் குஷியான கிழவர் ஒரு பாடலை  முணுமுணுத்தார்.

    “எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
    என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே “

    துள்ளுதோ ? வெட்டிப்போடறேன் என்று நினைத்துக் கொண்டான் அறையில் இருந்த ரகுபதி.

    சற்று நேரத்தில் ரேவதி வந்தாள்.

    மருளும் விழிகளால் சுற்று முற்றும் பார்த்தாள்.

    ” வா ரேவதி ,வா,  லைன் கிளியர்….. அவாள்ளாம் வெளிய போயாச்சு ” என்றார் கிழவர் பரபரப்புடன்.

    ரேவதி ஜாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறு சதுரமான பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க கிழவர் அதை மகிழ்வோடு வாங்கிக் கொண்டார்.

    அது என்ன என்று ரகுபதிக்கு அறையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

    பார்க்க ஆணுறை போலன்னா இருக்கு. அந்தப் பெண்ணே இதை எடுத்திட்டு வரதா. சே கேவலம்.  நாடு எங்க போயிட்டிருக்கு ? அந்த சின்னப் பொண்ணுதான் ஏதோ வயசுக் கோளாறு ஆர்வத்தில  வந்துட்டாலும், தாத்தன் வயசான இந்தக் கிழம் நல்ல வார்த்தை சொல்லி அவளை வீட்டுக்கு அனுப்ப வேணாம் ? வேலியே பயிரை மேஞ்சா…வெட்கக்கேடு.

    அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஏற்படுமுன் நிறுத்திடணும்.  நாக்கைப் புடுங்கிக்கிறா மாதிரி கிழவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடணும் என்று  அறையிலிருந்து வெளியே வந்தான்.

    அவனைப் பார்த்ததுமே ரேவதி தெருவில் இறங்கி ஓடிவிட்டாள்.

    கிழவர் நடுங்கும் கரங்களால் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தார். கட்டைவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்து அதில் ஏதோ எடுத்தார்…பின்னர்…
    சர்..சர்.. என்று  தன் மூக்கில்  இழுத்தவுடன்  அருகே வந்த   ரகுபதியைப் பார்த்தார்.

    ஒரு அசட்டு சிரிப்புடன் ” ஆபீஸ்லேருந்து சீக்கிரமா வந்துட்டீங்களா? இந்த மூக்குப் பொடிப்பழக்கம் என்னால விட முடியல. என் மகனும் மருமகளும்  வாங்கித் தர மாட்டேங்கறா.. நான் பொடி போடறது அவங்களுக்குப் பிடிக்கல. நல்ல வேளையா மூணாம் வீட்டுப்பெண்  ரேவதிதான் வாங்கிட்டு வந்து
    கொடுத்துது. காசு கூட வாங்கிக்காம ஓடிப்போயிட்டுது.  இதை நீங்க எங்க வீட்ல யார் கிட்டயும் சொல்லிட வேண்டாம்” என்று சொல்லி, பொடிப் பாக்கெட்டை வேட்டியில் பத்திரமாய் முடிந்து கொண்டார்.

    பிறகு, மிகுந்த மனநிறைவுடன், ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா ரகுபதி ?” என்று கேட்டுவிட்டு,

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    என்று பாடிக் கொண்டே உள்ளே எழுந்து போனார்.

    =========

    என். சுவாமிநாதன்
    லாஸ் ஏஞ்சலஸ்

    Share
  • காதல் கல்யாணம்

     

    என். சுவாமிநாதன்

    காலையில் கண்விழிக்குமுன் அந்த உரையாடல் என் காதில் கேட்டது.

    என் மனைவியும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    “எங்கடி உன் கத்திரிக்கோல் ? அப்பாக்குத் தலையில முடி வளர்ந்து அசிங்கமா இருக்கு. நாமளே வெட்டி விடலாம். இல்லாட்டி கடைக்குப்
    போயி ஏகப்பட்ட காசு செலவழிச்சு வெட்டிண்டு வருவார்”

    “அம்மா. கத்திரிக்கோல் ஸ்கூல் காபினெட்ல இருக்கு. அது முடி வெட்டற கத்திரிக்கோல் இல்ல. பேப்பர்தான் வெட்டும்”

    “அது போறும் உங்கப்பாக்கு முடி வெட்ட. நாளைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வரச்சே எடுத்துண்டு வா”

    இதைக் கேட்டவுடனே எனக்கு மயிர்க்கூச்செறிந்தது. “பாவிகளா, என் தலைதான் கிடச்சுதா உங்களுக்கு. நீங்க அம்பது, நூறுன்னு செலவழிச்சு ஹேர்டிரஸ்ஸிங் பண்றது தெரியல. நான் வருஷத்துக்கு ரெண்டு தடவை சலூனுக்கு போனா உறுத்தறதா”.. சொல்லத்தான் நினைத்தேன், ஆனால் வெளியே சொல்லவில்லை.

    அன்றே காலையே நான் வழக்கமாகப் போகும் மரியாவின் சன் சலூனுக்கு போய்விட்டேன்.

    சலூனில் மரியா ஒரு ஜப்பானியக் கிழவருக்கு முடி திருத்திக் கொண்டிருந்தாள்.
     
    என்னைப் பார்த்து, ”குட் மார்னிங். கம். ஸிட் டவுன். யு ஆர் நெக்ஸ்ட்” என்றாள்.

    சோபாவில் அமர்ந்து அங்கிருந்த ஸ்பானிஷ் பத்திரிக்கைகளைப் புரட்டினேன். மரியா ஸ்பானிஷ்காரி. ஆங்கிலம் கொஞ்சம் பேசுவாள். ஸ்பானிஷும் இங்கிலீஷும் கலந்து அவள் பேசுவதில் பாதி புரியாது. ஆனால் தொழிலில் கெட்டிக்காரி.

    அரைமணி ஆச்சு. இன்னமும் சிரத்தையாக திருத்திக் கொண்டிருந்தாள்.

    அவள் முடி வெட்டிக் கொண்டிருந்த ஆளுக்கு தலையில் மிகக் கொஞ்சமே முடி இருந்தது. கவுண்டமணி மாதிரி அந்த ஆள் மீது பாய்ந்து இருக்கிற முடியைப் பிடுங்கி கையில் கொடுத்து முடி வெட்டியாச்சு, இந்த இடத்தை விட்டு ஓடுடா என்று சொல்லலாமா என்று தோன்றியது.

    அப்பொழுது எனக்கு பீட்டர் நினைவு வந்தது.

    ”மரியா.. நேரமாகுமா.. உன் தம்பி பீட்டர் இருக்கானா ? வருவானா?” என்றேன்.

    “பீட்டர்…நோ கம் ”….

    மொட்டையா இப்படிச் சொன்னது எனக்கு புரியவில்லை.

    லீவு எடுத்துவிட்டானோ இல்லா லேட்டா வருவானோ..

    ஆறுமாசம் முன்னால் வந்தபோது மரியா ஒரு சிறுவனுக்கு முடி வெட்டிக் கொண்டிருந்ததால், பீட்டரைத்தான் எனக்கு முடி வெட்டச் சொன்னாள். ”பீட்டர் என் தம்பி, மெக்சிகோவிலிருந்து வந்திருக்கிறான்” என்று விளக்கினாள்.

    பீட்டர் வந்து எனக்கு வணக்கம் சொன்னான். நாற்காலியில் அமர வைத்தான். என் மூக்குக் கண்ணாடியை வாங்கி மேசைமீது வைத்தான். என்னை கழுத்தைத் துணியால் போர்த்தினான்.

    தலை முழுவதும் தபலா வாசிப்பது போல விரலால் தட்டி, “ லாங் ?மீடியம் ? ஷார்ட் ?” என்று வினவினான்.

    மரியா இப்படிக் கேட்கமாட்டாள். அவளுக்கு ஷார்ட் என்று சொல்ல வராது. ஷாட் என்றே சொல்வாள். “ஷாட், நோ ஷாட்” என்பாள்.   ஷாட் என்றாள் முடியைச் சின்னதாக வெட்டிவிடுவாள், நோ ஷாட் என்றால் தலை மொட்டையாகும்.

    மையமாக “மீடியம் லாங்” என்றேன்.

    இது புரியாமல் மரியாவிடம் அவன் ஏதோ கேட்க, அவளுக்கும் இவனுக்கும் ஸ்பானிஷில் ஒரு வாக்குவாதம்  நடந்தது. கடைசியில் மரியா பீட்டரிடம் ஒரு கத்திரிக்கோலை எடுத்துக் கொடுத்தாள். அவளிடம் பலமுறை கேட்டு பற்பல கத்திரிக்கோல்களால் வெட்டினான். என் தலை ஒரு முடி வெட்டலில் அவ்வளவு தினுசு கத்திரிக்கோல்கள் கண்டதில்லை. எனக்கு முன்னும் பின்னாலும் ஒரடி தள்ளிநின்று ஏதோ பார்ப்பான். பிறகு பாய்ந்து வந்து வெட்டுவான். அவனிடம் ஒரு சிற்பக் கலைஞனின் நேர்த்தியும், கவனமும் இருந்தன.

    அவனுக்கு திருப்தி ஏற்பட்டதும் ஒரு கத்தியைத் தீட்டி என் முகத்தில் சோப்புத் தடவி மழிக்க ஆரம்பித்தான்.

    திடீரென்று “ஃபிரம் இண்டியா?” என்றான்.

    நான் தலையசைக்க, “நேற்றிரவு ஒரு இண்டியா படம் பார்த்தேன். பாட்டு சூப்பர். டான்ஸும் சூப்பர்” என்றான்.

    என்ன படம் என்று கேட்டதற்கு அவனால் சொல்ல முடியவில்லை. மரியாவைக் கேட்க அவளுக்கும் சொல்ல முடியவில்லை. ”அந்தக் கதநாயகி அழகாக இருந்தாள். பெயர் தெரியவில்லை. இப்படி இருப்பாள்” என்று கைக் கத்தியால் காற்றில் ஒரு படம் வரைந்தான். அளவுகளைப் பார்த்தால் நமீதா அல்லது மல்லிகா ஷெராவத் என்று தோன்றியது.

    கொஞ்ச நேரம் முக மழிப்புக்குப்பின் “ அந்தப் படத்துல எனக்கு ஒண்ணு புரியல. கதாநாயகியும் கதாநாயகனும் ஏழைங்க. எப்படி அவங்களுக்கு பிரான்ஸுலயும், கனடாவிலயும் போய் டான்ஸ் ஆடமுடியுது? காசு ஏது ?” என்றான்.

    எனக்கும்தான் அது புரியவில்லை. ”அது கனவு சீன்தான். காசு செலவு இருந்திருக்காது” என்று ஏதோ சொன்னேன்.

    “இன்னொரு விஷயம். அவள் அழகா இருக்கா. அவளோட பாய்ஃபிரண்டும் நல்லா இருக்கான். ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கு. ஏன் அவள் அப்பன் அவர்கள் கல்யாணத்துக்கு சம்மதிக்கலை ?” என்றான்.

    ”எல்லா இந்தியப் படத்தோட கதையும் இதான். ஜாதி, மத, அந்தஸ்து வித்யாசத்தால் இப்படித்தான் ஆகிறது” என்றேன்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “பிராடஸ்டெண்ட், கத்தோலிக் போலவா” என்றான்.

    ”அது போலத்தான்”

    “இருக்கட்டுமே. அவள் அப்பனுக்கு என்ன வந்தது ? பொண்ணு செய்யற முடிவை இவன் ஏன் தடுக்கணும் ? இது அனியாயம் இல்லியா ?”
    என்று என் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வினவினபோது, உலகத்துக் காதல் கல்யாணங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாய் அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல் நானே முன்னின்று நடத்தி வைக்கத்தயாராய் இருப்பதைச் சொன்னேன்.

    “குட்” என்று சொல்லிக் கத்தியைக் கீழே வைத்தான்.

    நாற்காலியை ஒரு முறை சுழற்றி என் தலையை பல கோணங்களில் பார்த்து இறுதியாக சிறு திருத்தங்கள் செய்து, வெட்டிய முடித் துண்டுகளை வாக்வம் கிளீனரால் விலக்கி, தலையில் எண்ணெய் போட்டு படிய வாரி கழுத்தையும் இதமாய்த் திருகிவிட்டான்.

    நான் அவனுக்கு கூடுதலாய் இரண்டு டாலர் டிப்ஸ் கொடுத்தேன்.

    இன்று அவன் இல்லாமல் போனது வருத்தமாக இருந்தது.

    மரியா கிழவருக்கு முடிதிருத்தி முடித்து விட்டாள். அப்பாடா என்று பெருமூச்சுடன் எழுந்தேன்.

    மரியா கிழவரிடம் ஒரு பாட்டிலைக்காட்டிச் சரமாரியாக ஸ்பானிஷில் ஏதோ சொன்னாள்.அவள் கையால் காட்டிய சாடைகளிலிருந்து, அந்த பாட்டில் தைலத்தை தலையில் தேய்த்துக் கொண்டால் தலைமுடி முழங்கால் வரை வளரும் என்பதாகப் புரிந்தது.

    பொய் சொல்லுவதற்கும் ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

    ”நாலு பாட்டில்கள் கொடு” என்று வாங்கிக்கொண்ட கிழவர், ஒரு நூறு டாலர் நோட்டைக் கொடுத்து, ”பாக்கியை நீயே வெச்சுக்க” என்று சொன்னதும், மரியா இடுப்புவரை குனிந்து வணங்கி வாசல் வரை போய் அவரை வழியனுப்பிவிட்டு வந்தாள்.

    என்னைப் பார்த்து ”கமான், ஸிட் டவுன்” என்று உபசரித்து என்னை நாற்காலியில் அமர்த்தினாள்.

    “எவ்ளோ நேரமா காத்திருக்கேன் ?பீட்டர் இருந்தா நல்லாயிருந்திருக்கும். அவன் எங்க ? தனியாக் கடை வெச்சுட்டானா ?” என்று வினவினேன்.

    அவள் ஒரு நிமிஷம் என்னைப் பார்த்தாள். அவள் கண்கள் சற்று கலங்கி விழியோரத்தில் ஒரு சொட்டு கண்ணீர் தெரிந்தது.

    “பீட்டர்..பீட்டர்.. இன் ஜெயில் இன் மெக்சிகோ” என்று தயக்கத்துடன் சொன்னாள்.

    “ஜெயிலா ? ஏன் ? என்னாச்சு ?”

    அவள் சொன்னதிருந்து எனக்குப் புரிந்தது:

    “பீட்டர் தன் குடும்பத்தைப் பார்த்து விட்டு வர மெக்சிகோ போயிருக்கிறான். தன்னுடைய பெண் ஒரு குவாட்மாலா நாட்டுப் பையனைக் காதலித்துக் கல்யாணம் செய்ய விரும்புவது அவனுக்கு பிடிக்கவில்லை. ஒரு பார்ட்டியில் அந்தப் பையனைக் கண்டிக்கப் போய் பெரிய வாக்குவாதமாகி அவனை பீட்டர் கத்தியால் குத்திவிட்டான். போலீசு பிடித்துக் கொண்டு போய் வழக்கு போட்டு, இப்பொழுது ஜெயிலில் இருக்கிறான். வெளியில் வர அஞ்சு வருஷத்துக்கு மேலாகும்”

    =======================

    Share