Author: கிருத்திகா

  • வாரிசு

    கிருத்திகா

    இரயில் புறப்படுவதற்கு இன்னும் 10 நிமிடங்கள் இருந்தன. மரகதம் ஏறி அமர்ந்து கொண்டாள். 56 வயதிலும் சுறுசுறுப்பும், திடமும் குறையவில்லை.

    18 வருடங்களுக்கு முன் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்த பின், தன்னால் இயன்ற வேலைகளைச் செய்து, தன் மகன் உதயாவை எந்த குறையும் தெரியாமல் வளர்த்தாள். அப்போது அவனுக்கு வயது 10 தான். தன் தாயை விட்டு எங்கும் செல்ல மாட்டான்.

    பள்ளி, கல்லூரி என எல்லா இடங்களிலும் படிப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெறுவான். பின் சென்னையில் நல்ல வேலையும் கிடைத்தது. அவனுக்கு தாயை விட்டு செல்ல விருப்பம் இல்லை. மரகதத்திற்கு அவனுடைய எதிர்கால வாழ்வுதான் கண் முன் நின்றது. ஆனால் அவளுக்கு தன் சொந்த மண்ணை விட்டு செல்லவும் மனது ஒப்பவில்லை. இறுதியாக அவனை மட்டும் அனுப்பி வைத்தாள்.

    விடுமுறை நாட்களில் தவறாது வந்து விடுவான். சரியான தருணத்தில், அவனுக்கும் பிரியாவிற்கும் திருமணம் செய்து வைத்து தன் கடமையை முடித்துவிட்டாள், மரகதம். இவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கும் கண்ணேறு பட்டுவிட்டது. இன்னும் மழலை மொழி அந்த வீட்டில் கேட்கவில்லை…..

    பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டு தன் வாழ்க்கை முடிந்தால் போதும் என்ற கனவுகளை அவள் மனம் எப்போதும் சுமந்து கொண்டிருக்கும்.  அப்போதுதான் திடீரென்று ஒரு நாள் உதயா போன் செய்து, “அம்மா!! நான் உங்களிடம் முக்கியமான விசயம் பேசனும்…… நீங்க ஊருக்கு உடனே கிளம்பி வாங்க……!!! “, என்றான்.

    அவளுக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும், காரணம் இல்லாமல் அவன் பேசமாட்டான். எனவே, அடுத்த இரயிலுக்கு உடனே புறப்பட்டு விட்டடாள்.

    சென்னை சென்ட்ரல் வந்துவிட்டதை ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது.தன் பைகளை எடுத்துக் கொண்டு இறங்கினாள். அங்கே உதயா அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

    காரில் செல்லும்போது, “ எதுக்குடா, இவ்வளவு அவசரமா வரச் சொன்ன…..??” என்று கேட்டாள்.

    “அம்மா….. அது முக்கியமான விசயம்னு தான் உங்களை நேர்ல வரச் சொன்னேன்…..  ஆனா இத உங்ககிட்ட எப்படி சொல்றதுனு தான் தெரியாம குழம்பி போயிருக்கேன்…..”

    “என்கிட்ட சொல்ல எதுக்குப்பா குழப்பம்…… உன்னோட நெருங்கிய தோழியா நினைச்சு என்கிட்ட சொல்லுப்பா… உன் முகத்த பார்க்கும் போதே ஏதோ முக்கியமான விசயம்னு புரியுது….”

    ”அம்மா…. வீட்டிக்கு போனதும் சொல்றேன்ம்மா…”

    வீட்டிற்குள் நுழையும்போதே உள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அவள் உதயாவை புரியாமல் பார்த்தாள்.      அவன் சொன்னான்: ”அம்மா..!! குழந்தை இல்லைனு வருத்தப்பட்டுகிட்டே இருக்கறதை விட, ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கிலாம்னு முடிவு பண்ணினோம். அத உங்ககிட்ட எப்படி சொல்றதுனு தெரியல… அதனால தான் உங்களை நேராகவே வர சொன்னேன்… ” இது தான் சரியான சமயம் என சொல்லி விட்டான்.

    ”ஆனா…. நீ தான் எனக்கு சொல்றதுக்கு முன்னாடியே குழந்தையை கூட்டிட்டு வந்துட்டியேப்பா… அப்பறம் எதுக்கு இவ்வளவு நேரம் சொல்ல கஷ்டப்பட்ட.. இது தான் என் குழந்தைனு ஒரு வார்த்தைல சொல்லிருக்கிலாமே.. நீ ரொம்ப பெரிய மனுஷன் ஆகிட்ட… இனி எல்லா முடிவையும் என்னை கேக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே…..” பொய்க் கோபத்துடன் பேசினாள்.

    “இல்லீங்க அத்தை.. நாங்க எப்பவும் உங்களை கேக்காம எதையும் செய்ய மாட்டோம்..” வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தாள், அவளுடைய செல்ல மருமகள் பிரியா. அவளை தொடர்ந்து கையில் குழந்தையுடன் ஒரு பெண் உள்ளிருந்து வெளியே வந்தாள்.

    மரகதம் சுதாரித்துக் கொண்டாள். பின் “ டேய்.. உதயா இப்பவே காரை எடுடா.. என்னோட பேரனை உடனே போய் கூட்டிட்டு வரலாம்…”  சொன்னதுடன் நில்லாமல் வேகமாக காரை நோக்கி சென்று விட்டாள்.

    உதயாவும், பிரியாவும் இதை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அவளை சம்மதிக்க வைக்க பல திட்டங்களை யோசித்திருந்தார்கள். ஆனால் இப்போது அதற்கு தேவையே இல்லாமல் போகிவிட்டது.

    காரில் அமர்ந்திருந்த மரகதத்திற்கு தெரியும்..

    ‘குழந்தையை தத்து எடுப்பது’ வேண்டாம் என மரகதம் நினைத்திருந்தால், இன்று உதயா என்றொரு மகன் இருந்திருக்க மாட்டான்…..    என்ற உண்மை..!!!!

    Share
  • அவன் என்னவன்!

    –கிருத்திகா

    அவன் இரண்டு நாட்களுக்குமுன்தான் எதிர் வீட்டுக்கு, அதாவது சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்தான். யாரையும் கவரும் அழகு. இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது அவனது கம்பீரமான நடையும், பார்வையும்…. அப்பப்பா!!

    இனி அவன் இங்குதான் தங்கப்போகிறான் என்பதையும் தெரிந்து கொண்டாயிற்று…  உடனே சோமுத் தாத்தாவின் வீட்டுக்கு ஓட்டம் எடுக்க மனம் துடித்தது. முடியவில்லையே….!

    என் வீட்டில் இருந்த நேரத்தைவிட அவர் வீட்டில் இருந்த நேரம்தான் அதிகம்… ஆனால் இந்த அம்மாவுக்கு என்னாயிற்று?? இதுவரை நான் அங்குச் செல்ல எந்தத் தடையும் சொல்லாதவர் அவன் வந்ததிலிருந்து அந்தப்பக்கம் பார்க்கக் கூட விடவில்லை…

    என் வீட்டு ஜன்னலில் இருந்தே எத்தனை நாள் அவனைப் பார்ப்பது..? அவனது ஒவ்வொரு கண்சிமிட்டலும் ஆயிரம் கதைகள் சொல்கின்றதே… என் நண்பர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை, முன்பைவிட அதிகநேரம் அங்கு தான் இருக்கிறார்கள்.

    இதற்கு முடிவுகட்டியே ஆக வேண்டும்… என்ன செய்யலாம்??

    இதுதான் சரியான திட்டம்… “அம்மா… நாளைக்கு எனக்கு பரீட்சை இருக்கு… இங்க இருந்தா எனக்கு டிவி பார்க்கத் தோணும்… நான் போய் மொட்டை மாடில உட்கார்ந்து படிக்கறேன்….”

    “என்னடா தங்கம்.. இங்க வா.. உனக்கு உடம்பு சரியில்லையா..? படிக்கறன்னு சொல்ற… அதுகூடப் பரவாயில்லை… டிவி பார்க்காம படிக்கப் போறேன்னு சொல்றயே… அதுதான் நம்ப முடியல…    சரிடா தங்கம்.. நீ போய் நல்லாப் படி”

    “நான் இனிமே நல்லாப் படிக்கணும்னு இருக்கேன்மா… அதான்…   சரிம்மா நான்போய்ப் படிக்கறேன்..” மனதுக்குள் ‘ப்ளான் சக்சஸ், இனிமே தினமும் நானும் அவன்கூடப் பேசலாம்….பழகலாம்..’

    எப்படியோ, மாடிக்கு வந்தாயிற்று…. இனி அவனுடன் பழகுவதற்கு யாரும் தடை இல்லை… தினமும் அவனுடன் சைகையில் உரையாடினேன்…. அவன்தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை…

    ஒருநாள் அம்மா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, சோமுத் தாத்தா வீட்டிற்கு அவனைப் பார்க்கச் சென்றேன்… முதலில் என்னைப் பார்த்தாலே கோபப்பட்டான்… இப்போதெல்லாம் அப்படி இல்லை…

    இருவரும் அப்படி இணைபிரியாதவர்களாக ஆகிவிட்டோம். தினமும் அம்மாவிற்குத் தெரியாமல் போய்ப் பார்ப்பேன்…. அம்மா இல்லாத சமயத்தில் அவனை என்வீட்டிற்கு ஒரு முறை அழைத்து வந்தேன்…. அப்பாவும் தடை போடவில்லை….  நான் அப்பாவின் செல்லமாயிற்றே!!  அவர் என் மகிழ்ச்சிக்குத் தடைவிதிக்க மாட்டார்…

    அவனோடு நான் பழகுவது அம்மாவுக்குத் தெரியாமல் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் இருந்தேன்… இருந்தும், இன்று அங்கிருந்து வரும்போது பார்த்துவிட்டார்…

    “அந்த நாய்கிட்ட போய் என்ன செய்ற..?  அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்…. இப்பதான் நீ மொட்ட மாடில போய்ப் படிச்ச அழகு புரியுது… நீ ஒண்ணும் குழந்தை இல்ல, ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக் குடுக்க…. ”

    முதுகிலும் பலமாக ரெண்டு வாங்கிக் கொண்டேன். அழுவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்ய முடியும்…?

    அம்மாவுக்கு நாய்களைக் கண்டால் பிடிக்காது… அதனால்தான் எங்கள் வீட்டில் நாய்க்குட்டி இல்லை… அதற்காக எதிர்வீட்டு நாயைக் கொஞ்சக்கூட அனுமதி இல்லை….

    நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் சின்னப் பையன் பாலுதான்… ஆனால் எனக்கும் குட்டிக்குட்டி ஆசைகள் உண்டு….!!!

    அந்த எதிர்வீட்டு சோமுத் தாத்தாவின் டாமி… என்னவன்…!   அவன் எனக்கு வேண்டும்… அவனை விட்டுப் பிரியமாட்டேன்!

     

     

    Share
  • தாய்மை

    கீர்த்தனா

    ”டேய், மகேஸ்!… எழுந்திருடா…… மணி 7 ஆச்சு….இன்னும் தூங்கிட்டு இருந்தா காலேஜ் பஸ் போயிடும்…..”

    “என்ன சீதா இப்படி பண்ணிட்டிங்க….இப்பதான் ஒரு நல்ல கனவு வந்தது…. சரி விடுங்க…அதை அப்படியே காலேஜ் போய் கண்டினியூ பண்ணிக்கிறேன்….” என்றான் மகேஸ்.

    “அதெல்லாம் அப்பறம் பண்ணிக்கலாம்….போய் முதல்ல பல் விலக்கிட்டு, உள்ளே சுடுதண்ணி வச்சிருக்கேன் குளிச்சிட்டு வா…”

    அவனை அனுப்பி விட்டு சமையல் வேலையை ஆரம்பித்தார், சீதா.

    குளித்து விட்டு வந்தவன், சமையலறைக்குள் புகுந்தான்…..

    ”இன்னைக்கு என்ன சமையல்……. வாசம் சுண்டி இழுக்குது…”

    ”என் தங்கத்துக்கு பிடிச்ச முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொரியல்-தான் செஞ்சிருக்கேன்….”

    “இதுதான் என்னோட சீதா-ங்கறது….. ஆனா இன்னும் கொஞ்ச நாள் கஸ்டப்படுங்க….. அதுக்கப்பறம்….”

    “அதுக்கப்பறம்…. நீ சமைக்க போறேனு சொல்லிடாதப்பா…..  நான் பாவம்ல”

    “ச்ச….ச்ச….. நான் அந்த மாதிரி கெட்ட பையன் இல்ல…… நான் என்ன சொல்ல வந்தேன் தெரியுமா….. ஒரு நல்ல மருமகளா கூட்டிட்டு வந்துடுவேன்… அவ உங்களை நல்லா கவனிச்சுப்பா….. நீங்க ஜாலியா இருக்கலாம்……. அவ்வளவுதான்..”

    “ஆசைப்படுடா…… அதுக்காக பேராசைப்படறியே!   வர்ற மருமக என்னை கவனிக்கலைனாலும் பராவாயில்லை….உன்னை எப்பவும் ஒரு தாய் மாதிரி பார்த்துக்கிட்டா, அதுவே எனக்கு போதும்….”

    “ அதெல்லாம் பார்த்துக்கலாம்… உங்களுக்கு ஆபிஸ்க்கு லேட்டாகிடுச்சு….இந்தாங்க உங்க லஞ்ச் பாக்ஸ்…….. நீங்க கிளம்புங்க”

    “உன்கிட்ட பேசிகிட்டே மணிய பார்க்காம இருக்கேன்… சரி.. நான் புறப்படுறேன்…. ரூம்ல உன் டிரஸ் அயர்ன் பண்ணி வச்சிருக்கேன்… உன்னோட பொருள் எதையும் தேட வேண்டியதில்லை…. எல்லாம் ஹால்ல இருக்கு…. அப்பறம் உன் ஹூவையும் பாலிஸ் போட்டுடேன்….

     சீக்கிரம் புறப்பட்டு போ தம்பி…. காலேஜ் பஸ்ஸ விட்டுட்டு, வெளி பஸ்ல போய், கூட்டத்துல மாட்டிகிட்டு சிரமப்படாத…”

    “சரி.. சரி.. நான் பார்த்து போய்க்கிறேன்….”

    அவர் கிளம்பி போனதும், அவனுடைய வேலைகளை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிற்கு சென்றான்.

    அங்கு அவன் நண்பன் யாதவ் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.

    “டேய், என்னடா! இன்னைக்கும் லேட் பண்ணிட்ட…….. பஸ் போயி 10 நிமிஸம் ஆகுது… சரி வா ஏதாவது டவுன் பஸ் வந்தா போகலாம்..”

    “சாரிடா….. லேட்டாயிடுச்சு..” என்றவனின் நினைவில் சீதா வந்தார்…… அவர் முன்பே அவனை எச்சரித்திருந்தார் அல்லவா!!!!

    ’இன்னைக்கு காலேஜ் பஸ்ஸ விட்டுட்டோம்னு சீதாவுக்கு தெரிஞ்சுது…… கண்டிப்பா என்மேல கோவிச்சுப்பாங்க…’

    அடுத்ததாக வந்த பஸ்ஸில் ஏறினார்கள். கூட்டம் நிரம்பி வழிந்தது…..

    யாதவ், “சரிடா.. இன்னைக்கு புட்போர்டு-தான் போலருக்கு” என்றான்.

    மகேஸ், “அதெல்லாம் முடியாது! எங்க வீட்டுல வெளி பஸ்ல போகவே வேண்டாம்னு சொல்வாங்க……. நீ என்ன புட்போர்டு அடிக்க கூப்பிடற……. வந்து மேலே ஏறுடா…..”

    உள்ளே போனதும்தான் தெரிந்தது….அந்த பஸ்ஸில்தான் சீதாவும் இருந்தார். அவனை பார்த்து விட்டார். ஆனால் எதுவும் பேசவில்லை. அவருடைய ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி சென்று விட்டார்.

    காலேஜ் போன பின்னும் இதே நினைவுதான்….. அவரின் அமைதி அவனை அலைக்கழித்தது.  ’நல்லா கோவிச்சுகிட்டாங்கன்னு நினைக்கிறேன்….’

    அங்கு சீதாவும் நிம்மதியாக இல்லை. ‘இன்னும் விளையாட்டுப் பையனா இருக்கானே…… இப்படி கூட்டத்துல ரொம்ப நேரம் நின்னுட்டு போனா, அவன் அதுலயே டயர்டு ஆகிடுவான். நான் சொன்னதை புரிஞ்சிக்கவே இல்லையே……

    இதுக்காகதான்  நான் அவனை காலேஜ் பஸ்ல போக சொல்றேன்…… பேசாம, ஒரு பைக் வாங்கி குடுத்துடலாமா?……. அவன் விருப்பப்படற நேரத்துக்கு புறப்பட்டுக் கொள்ளலாம்……

    ஆனா, பைக்லையும் பார்த்து கவனமாக போகனும்…… இப்ப எல்லாம்  டிராபிக்கும் அதிகம்…… அவன் வயசு பசங்க எல்லாரும் வச்சிருக்காங்க…. அவனுக்கும் ஆசை இருக்கும்……. இதுவரைக்கும் பைக் வாங்கி குடுங்கன்னு அவனா கேட்டதில்லை…..’

    மாலை 6 மணி…

    பல எண்ணங்களோடு ஆபிஸிலிருந்து கிளம்பினார்.

    வீட்டில் ஏற்கனவே மகேஸ் வந்திருந்தான்…..

    அவர் உள்ளே வந்ததை கவனித்தவன்…. அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

    “ தயவுசெய்து, என்னை கோவிச்சுக்காதிங்க….. ப்ளீஸ்..நான் இனிமே லேட்டாக போக மாட்டேன்…”

    ”டேய், உன்மேல எப்பவும் எனக்கு கோபம் வராது…. ஏன்னா, நீ என்னோட செல்ல பையன்…. அதனாலதான் உன்னோட எல்லா வேலையிலும் குறுக்க வரேன்னு நினைக்கிறேன்….”

    ”எனக்கு தெரியும் அப்பா!! நீங்க இத்தனை நாளா என்மேல காட்டுன அன்பு, பாசம் எல்லாமே அம்மா உயிரோட இருந்தாக்கூட காட்டிருக்க முடியுமான்னு தெரியல… என்னோட 10 வயசுல அம்மா இறந்தப்ப இருந்து இந்த நிமிஸம் வரைக்கும் அம்மா இல்லாத குறையே தெரியாம வளர்ந்து இருக்கேன்….. அது உங்களால தான் அப்பா!!! “

    தன் மகனை சமாதனப்படுத்தினார், சீதா என்கிற சீதாராமன்.

    அவனை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார்…… அங்கு புது பைக் அவனுடைய பிறந்தநாள் பரிசாக நின்று கொண்டிருந்தது….. நாளைக்கு அவனது பிறந்தநாள்…..

    அந்த பைக் இரு அன்பு நெஞ்சங்களை சுமந்து கொண்டு ஊர்வலம் சென்று கொண்டிருந்தது!!!!!!!

    Share
  • இன்றைய குடிமகன்

      கிருத்திகா கீர்த்தனா

    ‘காலேஜ் விட்டதும் முதலில் யாழினியைப் பார்க்க வேண்டும்’ மனதுக்குள் எண்ணியவனாக அரைகுரையாக பாடத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான். கல்லூரி முடிந்ததும் யாழினியே கௌதமை பார்க்க வந்துவிட்டாள்.

    மாலை வெயிலின் தாக்கம் இல்லாமல் குளிர்காற்றை வாரி வழங்கி கொண்டிருந்தது, வேப்பமரம். அதன் கீழ் அமர்ந்து இருவரும் மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்தனர்.

    “கௌதம், நாம கண்டிப்பா வீட்டை விட்டுப் போகனும….? இன்னொரு முறை யோசிச்சுப் பாரேன்”

    “இல்லை, யாழினி. நான் பலதடவை யோசிச்சுப் பார்த்துட்டேன்…… இதைத் தவிர வேற வழி இல்ல……”

    “இருந்தாலும்… அப்பாகிட்ட நாம பேசி புரிய வைக்க முடியாதா?.. நாம போனபிறகு அவர் இதே மாதிரி மனசை மாத்திக்காமல் இருந்தா என்ன செய்றது…… அம்மாவுக்கும் இதனால பிரச்சனை வரலாம்….”

    “நீ இனிமே இதப் பத்தி பேசாத….. நான் முடிவு பண்ணிட்டேன்….நாளைக்கு நாம கிளம்பறோம்….உனக்கு தேவையானதெல்லாம் எடுத்திட்டு தயாரா இரு…….”

    “ம்ம்ம்……….. நீயும் அப்பாவப்போலவே பிடிவாதமா இருக்க….. நாளைக்கு சாயந்திரம்   5 மணி ட்ரெய்னுக்கு கிளம்பிடலாம்….”

    ”இதுதான் சரி…..இப்ப வா வீட்டுக்குப் போகலாம்…”

     மறுநாள்…  யாழினி வீட்டில்…..

    யாழினியின் அப்பா, முருகானந்தம் கண்களில் வருத்தம் நிரம்ப எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா, சிவகாமி செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவிதமாக யாழினியின் அறையில் ஏதோ எடுக்கச் சென்றவரின் கைகளில் அந்தக் கடிதம் கிடைத்தது.

    “அப்பா, நான் உங்களை ஏமாற்றிவிட்டுச் செல்வதாக நினைக்க வேண்டாம். உங்களின் பிடிவாதத்தை மாற்ற நான் எடுத்துக் கொண்ட சிறிய முயற்சியே இது.. கௌதமும், நானும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். உங்களிடம் இருந்து நல்ல முடிவு வரும் வரை காத்திருப்போம். ஆனால் உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாங்கள் திரும்பி வர மாட்டோம்…. இது உறுதி. எங்களைத் தேட வேண்டாம். உங்கள் முடிவே, எங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்”

                                                          இப்படிக்கு,

    உங்கள் பாசத்திற்குரிய மகள்

             யாழினி….

             கடிதத்தைப் பார்த்ததில் இருந்து,  “இனியும் உங்களை புரிஞ்சிக்கலைனா, நான் ஒரு நல்ல அப்பாவா இருக்க முடியாது. இனி எந்தக்காலத்திலும் குடிக்க மாட்டேன்… இது சத்தியம்.. நீயும், கௌதமும் திரும்பி வந்துடுங்கம்மா….குடிப்பழக்கத்தால என் குடும்பம் சீரழியறத நான் இனி அனுமதிக்க மாட்டேன்”, எனக் கதறிக் கொண்டிருந்தார்.

    சிவகாமியும் கண்களில் நீர் அரும்பியவளாக, “நீங்கள் எடுத்த முடிவு அவங்களை நம்மகிட்ட கொண்டு வந்து சேர்க்கும்….. நீங்க மனசை தளர விடாதிங்க…..அவங்க நிச்சயம் வந்துடுவாங்க…..” என ஆறுதல் கூறினாள்.

    அவர் உண்மையாகவே திருந்திவிட்டார் எனப் புரிந்து கொண்டாள். அவருக்கு தெரியாமல் ரூமுக்குள் சென்று கதவைத் தாளிட்டாள். கௌதமுக்கு போன் செய்தாள்.

    “ஹலோ…… கௌதம் நான் அம்மா பேசறேன்…….நீயும் உன் அக்கா யாழினியும் உங்க பெரியப்பா வீட்லருந்து கிளம்பி காலைல வந்துடுங்க……..உங்கப்பா உண்மையிலே மனசு மாறிட்டார்…..’இனி நான் குடிக்கவே மாட்டேன்’னு சத்தியம் பண்ணுனார்……நீ போட்ட ப்ளான் நல்லா வேலை செய்யுது…..”

    ”அம்மா… என்ன சொல்றீங்க….. நீங்க சொல்றது உண்மையா….. இதுக்காகத்தான நானும் அக்காவும் இவ்வளவு சிரமப்பட்டோம்.. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்துடுவோம். இங்க பெரியப்பாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டோம்…

    அப்பாவை குடியை நிறுத்தச் சொல்லி எத்தனையோ தடவை கேட்டுப் பார்த்தாச்சு…. கேட்கவே இல்லை. அவர் எங்க பேச்சைக் கேட்கலைனாலும் எங்க மேல அவருக்கு பிரியம் ஜாஸ்தி…. அதனாலதான் நாங்க இந்த மாதிரி ப்ளான் பண்ணுனோம்… அதாவது அவரை விட்டுட்டு போயிடுவோம்னு ஒரு பயத்தை ஏற்படுத்துனோம். இப்ப அதனாலதான் அவர் மனசு மாறியிருக்கார்…

    இத விட சந்தோசம் நமக்கு வேற என்ன வேணும்….

    இருந்தாலும்… நாங்க ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அம்மா……”

    “அதெல்லாம் ஒண்ணும் இல்ல…. என் பிள்ளைங்க எப்பவும் தப்பு பண்ண மாட்டாங்கனு தெரியும்…. ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி இது உங்க ப்ளான்னு என்கிட்ட சொல்லாம இருந்திருந்தா…. நான் என்ன ஆகிருப்பேன்னு எனக்குத் தெரியல….”

    “உங்களுக்கு ஒன்னும் ஆகாதும்மா…… அப்புறம் இந்த ப்ளானப் பத்தி அப்பாவுக்குத் தெரிய வேண்டாம்…..”

    “நான் எதுவும் சொல்லல…..நீங்க சீக்கிரம் வந்துடுங்க….”

    “சரிமா…. நான் போனை வைக்கிறேன்…”

    இன்றைய குடிமகன்களை திருத்த இன்றைய குடிமகனின் திட்டம்…!!!!!!!!

    Share