தமிழ்த்தேனீ

என்னது, ராசைய்யா இறந்து போயிட்டாரா ! அதிர்ச்சியா.. துக்கமா… ஆச்சரியமா… ஏதோ ஒன்று தாக்கியது வேணுகோபாலை. செய்தி கேள்விப்பட்டு பதறி அடித்துக்கொண்டு கையில் கிடைத்த சொக்காயைப் போட்டுக்கொண்டு ஓடினார் வேணுகோபாலன். ராசையா வீட்டிற்கு சென்று அவருடைய உடல் கிடத்தப்பட்டு இருந்ததைப் பார்த்த  வேணுகோபாலுக்கு, ஏதோ ஒரு பாதி தன் உடலிலிருந்து பிரிந்து போனதைப் போன்ற உணர்வு ஆட்கொண்டது. அவரை அறியாமல் மனதின் துயரம் கண்களில் வெளிப்பட்டது.

எழுவத்தி இரண்டு வயதான ராசைய்யா நேற்று இரவு வழக்கம் போல தூங்கச் சென்றார். ஆனால் காலையில் தூக்கத்திலேயே அலுங்காமல் குலுங்காமல் இல்லாமல் இறந்து போயிட்டார். ராசையா வீட்டு உள்ளே அவரின் பூத உடல் கிடத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. வேணுகோபால் உள்ளே நுழைந்தவுடன் அவரைப் பார்த்து, ராசையாவின் உறவினர் அனைவரும் ஒருமித்த குரலில் உரக்க அழ ஆரம்பித்தனர். யாருக்கும் ஆறுதல் சொல்ல வழியில்லாமல் மௌனமாய் இருந்தார் வேணுகோபாலன்.

எத்தனையோ ஆத்திகர்கள் யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் படுத்த படுக்கையாய் இராமல் பட்டென்று உயிர் போய் விடவேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருக்க, எந்த ஒரு வேண்டுதலும் இல்லாதிருந்த ராசைய்யா கல்யாணச்சாவு என்பார்களே அதுபோல ஒரு அருமையான முடிவை எட்டியிருந்தார்.

கடந்த 72 வரை எந்த நோயும் தாக்காது, விருப்பமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்த அவர் இது வரையில் கடவுளைக் கும்பிட்டதே இல்லை. கோயிலுக்கு போனதில்லை, ஆனால் யார் வந்து உதவி என்று கேட்டாலும், அல்லது யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், உடனடியாக களத்தில் இறங்கி தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யத் தயங்கியதும் இல்லை. மற்றவர்களையும் உதவிகள் செய்யத் தூண்டுபவர். மொத்தத்தில் மனித நேயத்தை இறையாகக் கொண்டவர்.

அப்படிப்பட்ட ராசைய்யா தன் அந்தரங்கங்களை பகிர்ந்து கொள்ளும் ஒரே ஆதமார்த்தமான நண்பர்  வேணுகோபால். இறை நம்பிக்கை உடையவர். ராசையா போலவே மற்ற அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர். மாற்று சாதியைக் கொண்டவராக இருந்தாலும்  ராசையாவின்மேல் சிறு வயது முதற்கொண்டே ஒரு ஆதமார்த்தமான நட்பு கொண்டவர். இருவருக்கும் உள்ள மன ஒற்றுமை ஊரே வியக்கும் அளவுக்கு இருந்தது.

ராசையாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வேணுகோபால்.  ராசையாவின் மனைவி, “அண்ணா பாத்தீங்களா, என்னைத் தனியா விட்டுட்டு அவருமட்டும் போய்ட்டாரு. நான் என்னா செய்வேன் !” என்று கதறிக்கொண்டிருந்தாள்.

ராசையாவின் மூத்த மகன் வேணுகோபாலின் அருகிலே சென்று, “மாமா பார்த்தீங்களா அப்பாவை !” என்றான். அதற்குமேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை. குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கினான். ஆறுதலாக அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு, முதுகைத் தடவிக் கொடுத்துவிட்டு, “தம்பி சுரேஷ், நீங்கதான் தைரியமா இருக்கணும். அம்மாவை யார் சமாதானப் படுத்த முடியும்? ஆகவேண்டிய காரியங்களைப் பாருங்க. நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்! அவரோட ஆன்மா சுத்தமானதுன்னு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அவ்வளவு ஏன் ஊருக்கே தெரியும்.

ஆறுதல் சொல்லி ப்ரயோசனமே இல்லாத ஒரு நிகழ்வு இதுதான் உலகத்திலே, என்னா செய்யிறது” என்றார் வேணுகோபால்.

“உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவரோட ஆன்மா நல்லவிதமா கரையேற தேவையான காரியத்தை செய்யுங்க. வேறென்ன சொல்ல ?” என்றவர் அடுத்து மற்ற ஏற்பாடுகளைக் கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் மனம் மட்டும் ராசைய்யாவையே சுற்றி வந்துகொண்டிருந்தது.

மருமகள்களும்,மாப்பிள்ளையும், பெண்ணும் மற்றும் உறவுக்காரர்கள் அனைவருமே கதறிக்கொண்டிருக்கின்றனர். ஒரு மனிதரால் இப்படி வாழ முடியுமா.? வேணுகோபாலுக்கு ஆச்சரியம், ஆனால் வாழ்ந்து காட்டியிருக்கிறாரே  ராசையா. ராசையா போன்ற மனிதர்கள் இறக்கும் போதுதான் மனிதம் வாழவே ஆரம்பிக்கிறது என்னும் உண்மை வேணுகோபாலுக்கு உள்ளுக்குள் விளைந்தது.

திரு ராசையாவுக்கு மூன்று பிள்ளைகள், ஒரு பெண். எல்லோரும் அவரவர் இல்லறத் துணைகளோடு வந்திருந்தனர். எல்லா சம்பந்திகளும் வந்திருந்தனர். அனைவரின் கண்களிலும் சத்தியமான வருத்தம், கண்ணீர். எப்படி இது சாத்தியமாயிற்று திரு ராசையாவுக்கு..?

அவருக்கு இது நியாயமாகக் கிடைக்கவேண்டிய புஷ்பாஞ்சலிதான் என்று தோன்றியது வேணுகோபாலுக்கு. ஒவ்வொரு பிள்ளைக்கும் திருமணம் செய்து வைக்கும்போதும், பெண்ணைப் பெற்றவர்களிடம் நான் பிள்ளையைப் பெத்து வெச்சிருக்கேன், நீங்க பெண்ணை பெத்து வெச்சிருக்கீங்க, அவ்ளோதான் நமக்குள்ளே வித்யாசம். எனக்கு பணத்தைவிட மனுஷங்கதான் முக்கியம். அதுனாலே கடன்படாமல் உங்களாலே என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்க போதும். என்னோட பிள்ளைங்க கல்யாணம் மட்டுமில்லை இது பொண்ணா இருந்தா என்ன, பிள்ளையா இருந்தா என்ன? அதுனாலே நம்ம புள்ளைங்களோட கல்யாணம். அது நல்லபடியா மகிழ்ச்சியா நடக்கணும்.

அதுக்கும் மேலே எனக்குன்னு ஒரு விருப்பம் இருக்கு. உங்க பொண்ணுங்க என்னை மாமனாரா நடத்தக் கூடாது. என்னையும் தகப்பன் ஸ்தானத்திலே வச்சி அன்பு செலுத்தச் சொல்லுங்க, அது போதும். கல்யாணம் செய்துகொள்ளும் சின்னஞ்சிறுசுகள் மகிழ்ச்சியா இருக்கணும். அவங்க மனசுலே எந்த பாரமும் இருக்கக் கூடாது. பட்டாம் பூச்சி போல அவங்க வாழ்க்கையை மகிழ்ச்சியா அமைச்சுக்கணும்.

அதுக்கு பெத்தவங்க நாமதானே உதவணும் ? அதுதான் நம்மோட கடமை. அதுனாலே கல்யாணச் செலவிலே பாதி எங்களோடது. நாம சேர்ந்து இந்தக் கல்யாணத்தை ஒரு மகிழ்ச்சியான விழாவா கொண்டாடலாம் என்று சொல்லி, அதே போல வரதக்ஷணையோ, வேற எந்தப் பொருட்களோ வாங்காமல், ஒரு தகப்பனா நீங்க உங்க பொண்ணுக்கு உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி கல்யாணம் செய்யுங்க போதும்னு சொல்லி, மூன்று கல்யாணத்தையும் நடத்தி வெச்சாரு ராசைய்யா. அதுக்கு ஏத்தா மாதிரி வந்த மூணு மருமகள்களும் ஒத்துமையா இன்னிக்கு வரைக்கும் குடும்பம் நட்த்திவராங்க.

அது மட்டுமில்லே, அவர் பொண்ணுக்கும் இவரை மாதிரியே ஒரு நல்ல சம்பந்தியும் கிடைச்சது அதிர்ஷ்டம். மாப்பிள்ளையும் இவருக்கு மகன் மாதிரியே அமைஞ்சது அதைவிட அதிர்ஷ்டம். இப்பிடி ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கை எல்லாருக்கும் அமைவதில்லை. வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து கொண்டவர் திரு ராசையா.
உரில் உள்ள அனைவரும் அதிர்ச்சியையும் உண்மையான வருத்தத்தையும் கண்களில் தேக்கி, வீட்டு வாயிலில் குழுமி இருந்தனர். ஆளுக்கொரு வேலையை பொறுப்பெடுத்துக்கொண்டு செய்து கொண்டிருந்தனர். எப்படிப்பட்ட மனிதர் ! நினைவு தெரிந்த நாள் முதல் தன்னுடைய வேலையைத் தானே செய்துகொண்ட நல்லவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். ஒரு முறையும் கோயிலுக்குள் நுழையாதவர் திரு ராசையா. ஒரு நாளும் இறைவனை வணங்கியதும் இல்லை. நிந்தனை செய்ததும் இல்லை. இறைவன் இல்லையென்று அவர் வாயால் கூறியதும் இல்லை.

எத்தனையோ பழுத்த ஆன்மீக வாதிகள் இல்லறத்திலிருந்துகொண்டு படுக்கையில் படுக்காமல் யாருக்கும் தொந்தரவு அளிக்காமல்,நினைத்தவுடன் உயிர் போய்விடவேண்டும் என்று பல வேண்டுதல்களைச் செய்தவர்களுக்கெல்லாம் கிட்டாத, அமைதியான முடிவை வெகு சுலபமாக எட்டியிருக்கிறார் திரு ராசைய்யா. திரு ராசையா மனிதர்களை மனித நேயத்தை மட்டுமே மதித்து வாழக்கற்றவர்.

மகள் திருமணம், பிள்ளைகள் கல்வி, கோயில் திருவிழா எல்லாவற்றையும் சமமாகப் பார்க்க கற்றவர். யார் வந்து கேட்டாலும் எல்லோருக்கும் ஒரே விதமான மரியாதையை அளித்து அவரால் முடிந்த பொருளுதவியைச் செய்தவர். நினைக்க நினைக்க ஆச்சரியமாய் இருந்தாலும் வேணுகோபாலுக்கு இவையெல்லாம் பழகிப் போயிருந்தன. ஆனாலும் ஆச்சரியம் விலகவில்லை வேணுகோபாலுக்கு.

ஒரு சிறந்த நாணயமான நாத்திகவாதி. ஒரு நாத்திகவாதி, பகுத்தறிவுவாதி என்பவர் எப்படி வாழவேண்டும் என்றும் நாத்திகவாதியாக இருந்தாலும் ஆத்திகவாதிகளை மதிக்கத் தெரிந்த மனிதர். மனிதம் முக்கியம் என்றுணர்ந்த நாத்திகவாதியும் ஆத்திகவாதியே என்று உணர்ந்த மனிதர். ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கும் உதாரண புருஷனாக வாழ்ந்த மறைந்தவர் நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது வேணுகோபாலுக்கு. அதனால்தான் இப்படி ஒரு அருமையான முடிவு கிடைத்ததோ..?

எப்படி இது எப்படி முடிந்தது ? என் எண்ண ஓட்டங்கள் திரு ராசைய்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது . எப்படி இந்த மனிதருக்கு இப்படி ஒரு அருமையான முடிவு கிட்டியது? எல்லோருக்கும் இந்த சுபமான முடிவு கிடைக்குமா..? யோசிக்க யோசிக்க ஆத்திகவாதியான வேணுகோபாலுக்கு ஒரு எண்ணம். ஒரு முடிவு  திடமாக உறுதியானது.

நிச்சயமாக பூர்வ ஜென்ம நடத்தைகள், நம்மை அடுத்த ஜென்மத்திலும் பாதிக்கிறது என்பது உண்மைதான். ஒன்று வாழவைக்கிறது அல்லது வீழ வைக்கிறது என்பது சத்தியமான உண்மை. பூர்வஜென்மம்,மறுஜென்மம் எனபதெல்லாம் கட்டுக்கதை இல்லை. சத்தியமான உண்மை. இந்த எண்ணங்கள் மனதில் வந்ததும், தம்மையறியாமல் சில மனிதர்களின் கபடநாடகங்களை எண்ணிப் பார்த்தார். எதற்குமே கொடுத்து வைக்க வேண்டும். வேணுகோபால் நாத்திகவாதியான ராசையாவையே கடவுளாக நினைத்து நண்பா ‘எனக்கும் இது போன்ற வரம் தா’ என்று வேண்டிக்கொண்டார்.

அனுபவப்பட்டாலும் மனிதர்களுக்கு மாயை விலகுவதில்லை என்னும் உண்மை உறைக்கவே சிரிப்பு வந்தது. அவருக்கு அடுத்த கணமே,  யாராவது பார்த்தால் இந்த இடத்திலே சிரிக்கிறாரே என்று தவறாக நினைத்துக்கொள்ளப் போகிறார்களே என்று அந்த விரக்திச் சிரிப்பை அடக்கிக்கொண்டார்.

ஆனாலும் அவரை அறியாமலே அவருக்கு உள் மனதிலிருந்து துக்கம் பொங்கி வந்தது. வேணுகோபால் எதற்காக அழுகிறோம் என்பதே தெரியாமல் அவரையறியாமல் ஏதோ ஒன்று அவரை உலுக்கியது. ஒரு ஓரமாகச் சென்று மௌனமாகக் கண்ணீர் வடித்து துக்கத்தை தோளில் கிடந்த துண்டால் அடக்கியும் முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார் வேணுகோபால். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.