மாணவர் தளம்: தமிழார்வம்
இன்னம்பூரான்
1.முகவுரை
1.1. இன்று விஜயதசமி. வித்யாரம்பத்திற்கு உகந்த சுபதினம். துவஜாரோகணம். கொடியேற்றத்துடன் துவங்குவோமாக.
1.2. மாணவர்கள் படிக்கும்போது குறிப்பு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அந்த நல்ல பழக்கத்தின் அடுத்த கட்டம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினால், இந்த பயிற்சி மேன்மை பெறும். அதற்கு எல்லை என்பது இல்லை. தொடுவானம், நெருங்க நெருங்க, எட்டக்கூடாமல் நகருவதைப் போல், கற்றுக்கொள்வதற்கு விண்மீன்களை போல கணக்கற்ற விஷயங்கள் உளன. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு. வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது, கல்வி ஒன்றே. ஏன்? அதற்கு பின்னும் கல்வியின் அரும்பணி தொடருகிறது. அதனால் தான் 2012ல் கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். இந்த எல்லை கடந்த யாத்திரையை ‘தமிழார்வம்’ துவக்கி வைப்பது ஒரு நன்நிமித்தமே.
1.3. தமிழ் மொழி தொன்மையானது. அதனுடைய இலக்கியத்தின் எழிலும், இலக்கணத்தின் கட்டுக்கோப்பும், வழுவமைதியும், நீதி நூல்களின் நன்கொடையாகிய நன்னெறியும் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு ஒளி வட்டமாயின. காப்பியங்களின் விசால தளங்களும், இயல், இசை, நாடக கலைகளின் கவின் வசீகரமும், பக்தி இலக்கியத்தின் ஆழமும், அதற்குக் கட்டியம் கூறின. பரண்களில் தூங்கிய ஏட்டுச்சுவடி கருவூலங்களும், சி.வி.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா போன்ற சான்றோர்களின் திருப்பணியால், அச்சுக்கு வந்தன. தமிழார்வலர்களின் உழைப்பினால், இன்று பல நூல்கள் மின் கருவூலங்களில் சேகரிக்கப்படுகின்றன.
1.4. நூறாண்டுகளுக்கு முன்னால், குடத்திலிட்ட தீபம் போல் ஆங்காங்கு தமிழ் மணம் பரப்பிய புலவர் பெருமக்கள் பலர். அவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழன்னைக்கு மாலை மரியாதை செய்து, வணங்கியது. குருகுலவாசமும், திண்ணைப்பள்ளிக்கூடங்களும், அணி வகுத்து, அவளை ஆராதித்தன. அதற்கு பின் வந்து நூதனமாக வந்த தமிழ் உரை நடை, நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும், விரைவாகவே வளர்ந்தது.
1.5. செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன். நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.
1.6. ‘மாணவர் தளத்தில்’ இயல்பாகவே குற்றம் குறைகள், தவறுகள் இருக்கலாம். திசை மாற்றாமல் அவற்றைக் களைந்தும், மேலதிக விவரங்களை அளித்தும், மேன்மை படுத்துவோர்க்கு என் நன்றி உரித்ததாகுக.
1.6. அடுத்து வருவது, முதலாவதாக மூலிகைத்தமிழ்.
(தொடரும்)
இன்னம்பூரான்
24 10 2012
*
அனுபந்தம் :மாணவர் தளம்: தமிழார்வம்
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றிலிருந்து:
‘தமிழியல் ஆய்வானது இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பன்முகத்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தமிழியல் ஆய்வுகள் என்பவை இப்பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நடைபெறுகின்றபோதிலும், அவை தனித்தனி தீவுகளாகவே இருந்துவருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து வேறு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் பெரும்பான்மையினருக்குப் போதிய அறிமுகம் இருப்பதில்லை. சமகால ஆய்வுப் போக்குகள் குறித்து பரஸ்பர புரிதல் இல்லாத சூழலே இன்றளவும் தமிழியல் ஆய்வுலகில் நிலவிவருகிறது. அவ்வாறான புரிதலை வளர்த்தெடுப்பதற்கான அக்கறையும் அரிதாகவே காணப்படுகிறது.
ஒரு பொருண்மை குறித்து முன்னர் நடைபெற்ற அல்லது சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள், அவற்றில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வு முடிவுகள் என இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாத சூழலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாறாகச் சமகால ஆய்வுப் போக்குகளை உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வானது ஆய்வுப் பொருண்மை குறித்த புரிதலை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதாக அமையும்.
பலதரப்பட்ட பொருண்மைகளில் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பான தங்களது கருத்துகளை, ஆய்வு முறைமைகளை, ஆய்வுலகில் சந்திக்கும் சிக்கல்களை இன்ன பிறவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வெளியை உருவாக்குவது இன்றைய தமிழியல் ஆய்வுலகில் அவசியத் தேவையாக உள்ளது. இத்தகு வாய்ப்புகளை ஆய்வாளர்களுக்கு உருவாக்கித்தருவதன் மூலம் அவர்களது சிந்தனையையும் ஆய்வு தொடர்பான புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்.
தமிழியல் ஆய்வுலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழியலின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் ஒரு களத்தை அமைத்துத்தருவதாகக் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கருத்தரங்கை முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்படுகிறது.’
Retrieved with thanks,on October 24, 2012 and acknowledging their copyright, from
http://www.ifpindia.org/Research-in-Tamil-Studies-A-Platform-for-Dialogue.html
சித்திரத்திற்கு நன்றி: http://img129.imageshack.us/img129/7631/tamil3qe.gif
===================================================================