உயரிய பயன் அருளும் நெல்லூர் ஸ்ரீரங்கநாதர்….

0

இராஜராஜேஸ்வரி

“குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, தென்திசை இலங்கை நோக்கி ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ளார் ஸ்ரீரங்கநாதர்.

அதே போல் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூரில், வடதிசை முடியை வைத்து, தென்திசை பாதம் நீட்டி, குணதிசை பின்பு காட்டி, குடதிசை வடபெண்ணை நதியையும் நரசிம்ம கிரியையும் நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார் ஸ்ரீரங்கநாதர்!

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன், நெல்லூர் வழியே ஓடுகின்ற வடபெண்ணை நதிக்கரையில் (தெலுங்கில் பென்னா நதி) அமர்ந்து தவமிருந்தார் ஒரு யோகி. அவருக்கு ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி காட்சி தந்து உத்திர பினாகினி (வடக்கு நதி) கரையில் அமைந்துள்ள “தல்பகிரி’ க்ஷேத்திரத்தில் ஸ்ரீரங்கநாத சுவாமிக்கு ஒரு ஆலயம் எழுப்பும் படியாகக் கட்டளையிட்டார் என்றும்; அதன்படி இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது என்றும் தல புராணம் கூறுகிறது.

மற்ற ஆலயங்களைப் போன்று இந்த ஆலயத்தின் கோபுரமும் வாயில் கிழக்குப் பார்த்தே அமைந்துள்ளது. எனினும், பெருமாள் சந்நிதி மட்டும் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கு புறம், மதிற்சுவரை ஒட்டினாற்போன்று பெண்ணை நதி ஓடுவதாலும், நதியின் மறுகரையில் உள்ள “நரசிம்ம கொண்டா’ மலைமீது கோவில் கொண்டுள்ள நரசிம்ம சுவாமியை, “அழகியாள் தாதுன அரியுருவம் தானே’ என்பதற்கேற்ப, தன்னையே சிங்க உருவில் ரசித்துக் கொண்டு ஸ்ரீரங்கநாதர் மேற்குப் பார்த்து பள்ளி கொண்டார் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

வேறு சிலர், “பக்தன் ஒருவன் கேட்ட ஒரு வரத்தை அளிக்க மனமின்றி மறுபுறம் திரும்பிக் கொண்டார்’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், இது கர்ண பரம்பரைக் கதை.

எப்படியிருப்பினும் நரசிம்ம கொண்டாவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி, ஆண்டுக்கு ஒருமுறை நெல்லூர் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்துக்கு எழுந்தருளும் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரையில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதைப் பார்க்கும்போது முதலில் குறிப்பிட்ட காரணமே பொருத்தமாக அமைகிறது.

ஆலயத்தை ஒட்டிச் செல்லுகின்ற பெண்ணை நதியில், ஆலயத்தின் வாயிலுக்கு எதிரில் மட்டும் ஆழம் மிகவும் அதிகமாம்! சுமார் இருபது ஆண்டுகளுக்குமுன் ஒருசமயம் இந்நதியில் வெள்ளம் கரைபுரண்டு வந்தபோது, குழாயிலிருந்து தண்ணீர் வருவது போன்று, ஆலயத்தின் மதிற்சுவரில் இருந்த ஓட்டைகள் வழியாக நதிநீர் உள்ளே பாய்ந்து ஆலயப் பிரவேசம் செய்ததாம்!

மூலவர் ஸ்ரீரங்கநாதர் சந்நிதியில் முழங்கால் அளவு தண்ணீர் இருந்ததாம்! ஊர் மக்கள் செய்வதறியாது திகைத்துப் போய், “ஸ்ரீரங்க நாதர் அருளே கதி!’ என்று வேண்டிக் கொண்டனராம். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலையில் வெள்ளம் வந்த சுவடே தெரியாமல் தண்ணீர் வடிந்து விட்டதாம்! “எல்லாம் அந்த அரங்கனின் திருவருள்! இல்லையானால், இன்று நெல்லூர் என்ற ஒரு ஊர் இருப்பதற்கே வாய்ப்பில்லை’ என்று கண்ணீர் மல்கக் கூறினார் ஒரு வயோதிக பக்தர்.

இடப்பக்கம்- ஒரு தத்துவம்

சாதாரணமாக எல்லா வைணவ ஆலயங்களிலும் வலக்கரத்தில் தன் சிரசைத் தாங்கிக் காட்சியளிக்கும் ஸ்ரீரங்கநாதர், இவ்வாலயத்தில் இடக்கரத்தில் சிரசைத் தாங்கிக் காட்சியளிக்கிறார். இது இவரிடம் காணப்படுகின்ற மற்றொரு சிறப்பம்சம். “நெல்லூர் அரிசி’யை நமக்கு அளித்த ஸ்ரீரங்கநாதர், அவ்வுணவு நமது உடலில் சரியானபடி சேர்ந்து, உரிய பலனை அளிக்கக்கூடிய வகையை நமக்கு உணர்த்தும் நோக்கத்துடனேயே அவர் இடப்பக்கமாக ஒருக்களித்துச் சயனித்துள்ளாராம்.

அதாவது “உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு’ என்ற முதுமொழியின்படி, நம்மில் பலர் சாப்பாட்டுக்குப் பிறகு சற்று தலையைச் சாய்த்தால் தேவலை என்று எண்ணி அதைச் செயலாக்கும் போது, “”வலப்புற மாக ஒருக்களித் துப் படுத்தால், உண்ட உணவு உடலின் வலப் பாகத்துக்குப் போய், விழலுக்கிரைத்த நீர் போன்று பயனற்றதாகிவிடும். ஆகவே அப்படி செய்யக்கூடாது. உண்ட உணவு இடப் பாகத்துக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பயனை நாம் அடைய முடியும். அதற்கு நாம் இடப்புறமாகத்தான் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இதை நமக்கு எடுத்துக் கூறவே, அவர் அவ்வாறு பள்ளி கொண்டார் என்பது நெல்லூர் மக்களின் விளக்கம்.

ஆலய அமைப்பு

வானளாவியதும், அரிய பல சிற்பங்களைக் கொண்டதுமான கோபுரவாசல் விமானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு உள்ளே நுழைந் தால், எதிரில் சுவாமி சந்நிதியின் பின்புறச் சுவரின் மேலே, சங்கு, சக்கரங்களுடன் தென்கலைத் திருமண் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதற்கு இருபுறமும் இராமர், கிருஷ்ணர் ஆகியோரின் சிற்பங்கள் வண்ணம் தீட்டப் பெற்றுக் காணப்படுகின்றன.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.