-மேகலா இராமமூர்த்தி

பழந்தமிழ் ஏடுகளைத் தேடி ஊர் ஊராய் அலைந்து அவற்றைத் திரட்டிப் பதிப்பித்தவரும் தென்னிந்திய கலைச்செல்வரும், தாம் செய்த அரிய தமிழ்ப் பணிகளுக்காகத் ’தமிழ்த் தாத்தா’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான டாக்டர் உ.வே.சா.வைத் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறியும்.

ஆனால், தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பதில் ஆர்வங்காட்டிய தமிழ்த் தாத்தாவைப் போலவே தமிழ் இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதில் ஆர்வங் காட்டி, அவற்றைப் பிழையறப் பதிப்பித்தவரும் தமிழ் இலக்கணத்தில் தேர்ந்த புலமைபெற்று விளங்கியமையால் ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என அன்று பாராட்டப்பெற்றவருமான மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை இன்றைய தமிழர் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அத் தமிழ்ச்சான்றோரைத் தமிழர்க்கு மீள் அறிமுகம் செய்துவைத்தல் நலம் என நினைக்கின்றேன்.

1896ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ஆம் நாள் மேட்டுப்பாளையம் வீராசாமிப் பிள்ளை, பாக்கியம் அம்மையார் இணையருக்கு மகனாய்ப் பிறந்தவர் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையவர்கள். இவரின் உடன்பிறப்புக்கள் மொத்தம் ஏழு பேராவர். சொந்த ஊர் சென்னை சைதாப்பேட்டைக்கு மேற்கில் அமைந்திருந்த சிற்றூரான மேட்டுப்பாளையமாக இருந்தபோதிலும், குழந்தைகளின் கல்விக்காகச் சைதாப்பேட்டையில் குடிபுகுந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார் வீராசாமிப் பிள்ளை.

வேணுகோபாலருக்கு ஐந்து வயது நிரம்பியதும் அங்கிருந்த ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைச் சேர்ந்த மாதிரிப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு ஓராண்டுக் காலம் கல்விபயின்றார் அவர்.

அப்போது வறுமை மேகம் வேணுகோபாலப் பிள்ளையின் குடும்பத்தைச் சூழவே, மாதிரிப் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டுத் திண்ணைப் பள்ளிக்கூடமொன்றில் சேர்க்கப்பட்டார்.

இன்னல்கள் ஒன்றன்பின் ஒன்றாக அக் குடும்பத்தை முற்றுகையிடவே சைதாப்பேட்டையில் தாம் வாழ்ந்துவந்த 40,000 உரூபாய் மதிப்புள்ள வீட்டை 2000 உரூபாய்க்கு விற்றுவிட்டுப் பல்லவபுரத்திற்கு (பல்லாவரம்) குடும்பத்தோடு குடிபெயர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளையின் தந்தையார். பின்னர் அங்கிருந்து புரசைப்பாக்கத்திற்கு (புரசைவாக்கம்) குடிபெயர்ந்தது அக்குடும்பம். இவ்வாறு தொடர்ந்து வீடு மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் வேணுகோபாலப் பிள்ளையில் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.

கல்வியில் ஆர்வமிருந்தும் கற்க இயலாத குடும்பச் சூழலால் வேப்பேரியிலுள்ள அச்சகத்தில் பணியிலமர்ந்தார் வேணுகோபாலப் பிள்ளை. காலை எட்டு மணிமுதல் மாலை 5 மணிவரை அப்பணியில் உழைத்த அவர், அறிஞர்கள் சிலர் இணைந்து நடத்திய இரவுப்பள்ளியில் சேர்ந்து ஓய்வுநேரத்தைக் கல்வி கற்பதில் கழிக்கலானார்.

வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் தமிழ் ஆகியவற்றைப் பயிற்றுவித்த வழக்கறிஞர் டி.என். சேஷாசலம் ஐயரவர்கள், வேணுகோபாலரின் தணியாத தமிழார்வம் கண்டு, தக்கார் ஒருவரிடம் அவர் தனியே தமிழ்பயிலுதல் நன்று என்று அவருக்கு அறிவுறுத்தினார்.

வேணுகோபாலப் பிள்ளைக்கு ஆங்கிலம் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் சென்னைக் கல்வித்துறைத் துணை இயக்குநராகப் பணியாற்றிய திரு. வி.ஆர். அரங்கநாத முதலியார், திரு.கே. மாசிலாமணி முதலியார், வழக்கறிஞர் திரு. எம். தாமோதர நாயுடு, திரு. மோகனரங்கம் பிள்ளை ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

என்ன இது இம் மனிதர்களுக்குப் பின்னால் ஐயர், முதலியார், நாயுடு, பிள்ளை என்று ஒரே சாதிப் பெயர்களாக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா?

பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.

வேணுகோபாலப் பிள்ளையின் வரலாற்றுக்குத் திரும்புவோம்!

சேஷாசலம் ஐயரின் அறிவுரையை ஏற்ற வேணுகோபாலப் பிள்ளை, அந்நாளில் தமிழிலக்கண இலக்கியங்களில் வல்லுநராகவும் நல்லாசிரியராகவும் விளங்கிய சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியர் கோவிந்தராச முதலியாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை முறைப்படிக் கற்றார்.

பின்னாளில் தமிழ்ப் பெரும்புலவராக விளங்கிய மங்கலங்கிழார், தமிழ்ப் பேரறிஞர் மதுரை முதலியார், அருச்சுன முதலியார் ஆகியோரும் அப்போது வேணுகோபாலரோடு உடன்பயின்ற மாணாக்கர் ஆவர். இப்பெருமக்களுடன் இறுதிவரை இடையறா நட்பு பூண்டிருந்தார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

1920ஆம் ஆண்டுமுதல் 1923ஆம் ஆண்டுவரை சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் உதவித் தமிழாசிரியராய்ப் பணியாற்றினார் வேணுகோபாலப் பிள்ளை. அப்போது அவரைச் சந்தித்த புரசைப்பாக்கம் லூத்தரன் மிஷன் பெப்ரீஷியஸ் நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. எம். ஏ. வேதநாயகம் அவர்கள், தம் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராய்ப் பணியாற்றுமாறு வேணுகோபாலருக்கு வேண்டுகோள் விடுக்கவே, அதனையேற்று அப்பள்ளியில் தமிழாசிரியர் பொறுப்பில் அமர்ந்தார். பின்னர் அப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக வளர்ச்சியடைந்தது.

அக்காலக்கட்டத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றுப் பட்டதாரியானார் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை.

வேணுகோபாலப் பிள்ளை பணியாற்றிய லூத்தரன் பள்ளியின் மேற்பார்வையாளர்களாக ஜெர்மானியப் பாதிரியார்கள் இருந்தனர். அவர்களுக்குத் தமிழிலும் நல்ல புலமை இருந்தது. அவர்களின் நட்பால் வேணுகோபாலருக்குப் பள்ளியில் இருந்த மதிப்பும் செல்வாக்கும் மேலும் உயர்ந்தன. வேறெந்தப் பள்ளியிலும் தமிழாசிரியருக்கு அத்தகைய செல்வாக்கு கிடைத்திராது எனலாம்.

ஜெர்மனியிலிருந்து சென்னை வந்த அந்நாட்டு அறிஞர் சிலரும் அவர்தம் மனைவிமாரும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ் பயின்றனர். இப்பள்ளியோடு தொடர்புடைய பாதிரியார்களால் சென்னையிலுள்ள கீழ்ப்பாக்கத்தில் குருகுல் கல்லூரி ஒன்றும் நடத்தப்பெற்று வந்தது. அக்கல்லூரியில் கிறித்தவமதத் தொண்டில் ஈடுபடுவதற்குப் பயிற்சிபெறுவோர்க்குச் சைவ வைணவ சமய நூல்கள் சிலவற்றைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் வேணுகோபாலர் விளங்கினார். 1938ஆம் ஆண்டு தம் ஆசிரியத் தொழிலைவிட்டு நீங்கினார் அவர்.

பின்னர், பதிப்புப் பணியிலும் எழுத்துப் பணியிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணாக்கர்கட்கென்று பல நூல்களை எழுதினார். அந்நூல்களின் வழியே பல்லாயிரக்கணக்கான தமிழ் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிமுகமானார் வேணுகோபாலப் பிள்ளை. அவர் எழுதிய நூல்களைப் பல இதழ்களும் மதிப்புரை வழங்கிப் பாராட்டின. அவ்வாறு அவர் எழுதிய நூல்களுள் ஒன்று அரிச்சந்திர புராணச் சுருக்கம் என்பதாகும்.

உரைநடையில் அமைந்த அந்நூல் குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 8ஆம் நாள் ’நவசக்தி’ இதழில் வெளியிட்ட மதிப்புரையின் ஒரு பகுதி இது…

”……தீந்தமிழ்ச் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அமைந்துள்ள உரைநடையைக் கொண்ட கதைச் சுருக்கம், ஒரு பூங்காவெனப் பொலிகிறது. அதனிடைத் தென்றற் காலும் வீசுகிறது. திரு. வேணுகோபாலர் தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மை செய்யும் பெற்றி வாய்ந்ததென்று சுருங்கக் கூறலாம்.”

தமிழ்நூல்கள் அளவில் சிறியவையாயினும் பெரியவையாயினும் அவை பிழையின்றித் திருத்தமாக வெளிவரவேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் வேணுகோபாலப் பிள்ளை. பதிப்புத்துறையின் நுட்பங்களையெல்லாம் ஆங்கில நூல்கள் வாயிலாகக் கற்றுத்தேர்ந்த அவர், பதிப்பித்த நூல்களின் விவரம் வருமாறு:

இறையனார் அகப்பொருளுரை
தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – நச்சினார்க்கினியர் உரை
யாப்பருங்கல விருத்தியுரை
யாப்பருங்கலக் காரிகை
விசாகப் பெருமாள் தமிழிலக்கணம்
தஞ்சைவாணன் கோவை – விளக்கக் குறிப்புரை முதலியன.

வேணுகோபாலப் பிள்ளையைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக் காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது என்பது கருதத்தக்கது.

மேற்கண்ட இலக்கண நூல்களேயல்லாமல்,

அட்டப்பிரபந்தம் – விளக்கக் குறிப்புரை
நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
நளவெண்பா
நீதிநூல்கள்
பதினெண் சித்தர் ஞானக் கோவை
விநோத ரச மஞ்சரி

திருவாய்மொழி ஈட்டு வியாக்கியானம் – 10 பகுதிகள்

உள்ளிட்ட இலக்கிய நூல்களையும் பதிப்பித்து, பதிப்புத் துறையில் ஆழமாய்க் கால்பதித்த வேணுகோபாலர், சிறந்த சொற்பொழிவாளராகவும் பரிமளித்தார்.

அவற்றுள் 1931ஆம் ஆண்டு, சென்னை லயோலா கல்லூரியின் மாணவர் தமிழ்க்கழக ஆண்டுவிழாவில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவும், 1948ஆம் ஆண்டு மன்னார்குடியில் நடைபெற்ற தமிழ்த் திருநாளில் அறிஞர் அண்ணாவுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவும் குறிப்பிடத்தக்கன.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 4, 5 தேதிகளில் ’தமிழ் அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் வேணுகோபாலப் பிள்ளை ஆற்றிய சொற்பொழிவு நூலாகவும் வெளிவந்துள்ளது.

தமிழ்நூல்களில் காணப்பெறும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கற்பனைகளை இந்நூலில் நமக்கு அடையாளம் காட்டுகின்றார் வேணுகோபாலப் பிள்ளை. அவ்வகையில், குறுந்தொகையிலுள்ள ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் இறையனார் எனும் பெயரிய மானுடப் புலவரேயன்றிக் கண்ணுதற் கடவுளான சிவனார் இல்லை என்று விளக்கும் வேணுகோபாலர், சமண முனிவர்கள், தாம் பாண்டி நாட்டைவிட்டுப் போவதற்குமுன் ஆளுக்கொரு வெண்பாவை எழுதித் தம் ஆசனத்தின்கீழ் வைத்துவிட்டுச் சென்றதாகவும், அவற்றை வையை ஆற்றில் பாண்டிய மன்னன் எறியச் சொல்ல, அவற்றில் எதிரேறி வந்த நானூறு பாடல்களின் தொகுப்பே நாலடி நானூறு என்பதும் பொருந்தாக் கருத்தே என்கிறார்.

வேணுகோபாலப் பிள்ளையின் சொந்த வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதானால் ஜானகி அம்மையார் என்ற பெண்மணியை மணந்து மூன்று புதல்வர்களைப் பெற்றார். அப்புதல்வர்களுள் ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே வருந்தத்தக்க வகையில் இறந்துபோனார்.

சென்னையில் வசித்துவந்த வேணுகோபாலப்பிள்ளையின் குடும்பம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அங்கு ஏற்பட்ட குழப்பங்களால் சென்னையைவிட்டுக் காஞ்சிபுரத்துக்குக் குடிபெயர நேர்ந்தது. அக்காலத்தில் வித்துவான் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தமிழ் மாணாக்கர் பலருக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார் வேணுகோபாலப் பிள்ளை.

தமிழ்படிக்க விரும்பும் மாணவர்கள் தம் பொருளாதாரச் சூழலால் அவ்வாய்ப்பை இழந்துவிடக் கூடாது எனக் கருதிய அவர், “தாம் பெற்ற தமிழ்க்கல்வி பெறுக இவ்வையகம்” எனும் உயரிய நோக்கோடு மாலை நேரத்தில் இலவசமாகவே மாணவர்களுக்குத் தமிழ் வகுப்புக்களை நடத்தினார். அவரிடம் தமிழ் பயின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்கள்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களேயன்றிச் செக்கோஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரான கமில் சுவலபில் அவர்களும் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்பயின்ற அனுபவம் உடையவராவார். தமிழகச் சித்தர்கள் குறித்து தாம் எழுதிய “The Poets of the Powers” என்னும் நூலில் தம் ஆசிரியர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையின் புகைப்படத்தை வெளியிட்டு “எனது குரு” என்று சுவெலபில் குறிப்பிட்டிருப்பது அவரது நன்றியறிதலையும் வேணுகோபாலப் பிள்ளைபால் அவர் கொண்டிருந்த அளவற்ற அன்பினையும் புலப்படுத்துகின்றது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமணரான ஜீவபந்து ஸ்ரீபாலர் என்பவர் வேணுகோபாலப் பிள்ளையிடம் தமிழ்ப் பெருங்காப்பியமான சீவக சிந்தாமணி குறித்துச் சொற்பொழிவாற்ற வேண்டினார். அவ்வேண்டுகோளை ஏற்று ஜைனத் தமிழ்க் கழகத்தின் சார்பில் ஞாயிறுதோறும் சீவக சிந்தாமணிச் சொற்பொழிவை மூன்றாண்டுகள் நிகழ்த்தி முடித்தார் வேணுகோபாலர். இப்பெருந்தொண்டினைப் பாராட்ட விழா எடுத்தனர் ஜைனத் தமிழ்க் கழகத்தார்.

அவ்விழாவில் சிந்தாமணிச் சொற்பொழிவு நினைவுமலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. வேணுகோபாலப் பிள்ளைக்குப் புத்தாடைகளும் விலைமதிப்பு மிக்க பார்க்கர் பேனாவும் பரிசளிக்கப்பட்டன.

அந்நினைவு மலருக்கு நன்மொழி எனும் பெயரில் பொன்மொழிக் கட்டுரை ஒன்றை நல்கிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள்,

”வகுப்பை நடாத்திய மகாவித்துவான்
மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை அவர்களுக்கு
என் வாழ்த்து உரியதாகுக! அவரைச்
சிந்தாமணிச் செல்வர் வேணுகோபாலப் பிள்ளை
எனத் தமிழ்நாடு இனி வழங்குவதாக!”

என்று தம் கட்டுரையில் குறிப்பிட்டதை ஏற்று அவரைச் ’சிந்தாமணிச் செல்வர்’ என்று அழைத்து மகிழ்ந்தது தமிழ்கூறு நல்லுலகு.

அரசு இலக்கண இலக்கியப் பாடநூல்களின் தலைமைப் பதிப்பாசிரியர்; சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவின் தலைமைப் பதிப்பாசிரியர்; தமிழகப் புலவர் குழுவின் தலைவர்; அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கம்பராமாயணப் பதிப்புக் குழு உறுப்பினர் எனப் பல பெரும் பொறுப்புகளை ஏற்று, அவற்றைத் திறம்படச் செய்த செயல்வீராகவும் திகழ்ந்தார் வேணுகோபாலப்பிள்ளை.

காஞ்சியில் நடைபெற்ற அன்னாரின் மணிவிழாவில் தமிழவேள் பி.டி. ராஜன் அவர்கள் மீனாட்சி கருணையைப் பொன்னாடையாகப் போர்த்துகின்றேன் எனக்கூறி வேணுகோபாலப் பிள்ளைக்குப் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கு வந்திருந்த தமிழறிஞர்கள் அவரை ’மகா வித்துவான்’ எனப் போற்றினர்.

காஞ்சி அன்னை தமிழிலக்கிய மன்றத்தினர், அருந்தமிழ் வளர்த்த பெருந்தகையாம் வேணுகோபாலப் பிள்ளைக்கு ’தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தனர். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தார் அவருக்குப் ‘பேரவைச் செம்மல்’ பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.

1967-இல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் வேணுகோபாலப் பிள்ளைக்குச் ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. 

நற்றமிழ் அறிஞராய், நல்லாசிரியராய், சிறந்த சொற்பொழிவாளராய், தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த புலமையாளராய் விளங்கி, ஒல்லும் வகையிலெல்லாம் தமிழ்த்தொண்டாற்றித் தமிழன்னையைச் சிறக்கச் செய்த மே.வீ. வேணுகோபாலப் பிள்ளையை மறவாது போற்றுவோம்!

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை நூற்றாண்டு விழா மலர் – தமிழ்வளர்ச்சித் துறை வெளியீடு.
  2. https://www.hindutamil.in/news/literature/513791-venugopala-pillai.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தமிழ் இலக்கணத் தாத்தா! 


  1. வணக்கம்! அரிய பதிவு. கட்டுரையாளர் தற்கர்லத் தலைமுறையினர்; பலரும் அறியாத வரலாறு மட்டுமன்று. தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் புலப்படாத பெயர்.

    பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும் பேதம் ஏதுமின்றித் தமிழர்கள் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது. இப்போதோ பெயரளவில் சாதியை ஒழித்திருக்கின்றோமே தவிர அது முன்னைக் காட்டிலும் கூர்மையடைந்து பேதங்களையும் சமூகத்தில் அளவற்ற சேதங்களைவும் விளைவித்து வருகின்றது என்பதுதான் நடைமுறை உண்மை.”

    என்னும் தொடர்கள் மிகவும ஆழமானவையாகவும் நடப்பியலைப் படம்பிடித்துக் காட்டுவனவாகவும் பின்னொட்டும் முன்னொட்டும் எந்த நிலையிலும் யாரையும் உயர்த்தாது தாழ்த்தாது என்பதையும் அது ஒரு சாதாரண சமூக நடைமுறை என்பதையும் புலப்படுத்துகின்றன. பதிவாளருக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *