செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(434)

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

-திருக்குறள் – 791 (நட்பாராய்தல்)

புதுக் கவிதையில்

நட்பு நாடி அதிலே
ஊன்றி நிற்பவர்க்கு,
ஒருவரோடு நட்பு கொண்டபின்
அந்நட்பை
விட்டு விலகுதல்
மிகக் கடினம்..

அதனால்
முன்பே ஒருவரைப் பற்றி
நன்கறிந்து ஆராயமல்
நட்புக் கொள்வதைப்போல்
கேடு தருவது வேறில்லை…!

குறும்பாவில்

நட்பை விரும்பியதில் ஊன்றிநிற்பவர்க்கு
ஒருவருடன் நட்புக்கொண்டபின் விலகுதல் கடினமென்பதால்,
நன்கறியாமல் நட்புக்கொளல் பெரும்கேடே…!

மரபுக் கவிதையில்

விரும்பியே நட்பினை ஏற்றவர்க்கு
விலகியே செல்லுதல் எளிதல்ல,
ஒருவரை நட்பினில் சேர்க்குமுன்னே
ஒழுங்குடன் அன்னவர் குணநலன்கள்
பெருமைகள் போன்றவை அனைத்தையுமே
பெரிதுமாய்த் தெரிந்திடா நிலையினிலே
நெருங்கியே நட்பினைக் கொள்ளுதல்போல்
நேரடிக் கேடென வேறிலையே…!

லிமரைக்கூ

நட்பினை ஏற்றபின் விரும்பி,
விலகுதல் கடினமென்பதால் நன்கறியாமல் ஒருவரிடம்
நட்புக்கொண்டால் கேடுவரும் திரும்பி…!

கிராமிய பாணியில்

நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லமொறயில நட்புகொள்ளு,
நல்லா அறிஞ்சி நட்புகொள்ளு..

நட்ப விரும்பி
ஒருத்தரோட நட்ப ஏத்தபெறகு
விட்டுவெலகுறது செரமம்,
அதுனால
ஒருத்தரப்பத்தி நல்லாத்
தெரிஞ்சிக்காம
நட்புகொள்ளுறதப்போல கேடு
வேற இல்ல..

அதால
நட்புகொள்ளு நட்புகொள்ளு
நல்லமொறயில நட்புகொள்ளு,
நல்லா அறிஞ்சி நட்புகொள்ளு…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *