நாகையநல்லூர் சமையல்காரன்

0
brahmin cook image

கார்கில் ஜெய்

அது 2000த்துக்கு முன்பு. அப்போது வேலையில் சம்பாதித்த 2ஆம் மாதம். முதல் மாதம் அம்மாவுக்குப் புடவை. ரெண்டாம் மாதம் சம்பளத்தில் காலேஜ் ஜுனியர் சங்கருக்கு ட்ரீட். சும்மாவா? ஒரு செமெஸ்டர் முழுக்க அவன் ரூமில் ப்ரீயாகத் தங்க இடம் கொடுத்தவன். ஜீன்ஸ் பேண்டும், டீ சர்ட்டும் வாங்கிக்கொண்டு அண்ணா பல்கலை, கிண்டிக்குச் சென்றேன். காந்தி மண்டபத்தில் பேருந்திலிருந்து இறங்கி, பல்கலைக்கழக வாயிலில் நுழைந்து தென்மேற்காக 1 கிமீ நடந்தால் ஹாஸ்டல்தான். அவனைச் சந்தித்தேன். அவன் சொன்னதுதான் “நாகையநல்லூர் சமையல்காரன்”.

சங்கரா, இப்போ எல்லாம் ஹாஸ்டல் மெஸ்ல சாப்பாடு எப்படி இருக்குது? என்றேன்.

“வழக்கம் போலத்தான். நடுவில ஒரு மாசம் சூப்பர் டேஸ்ட் இருந்தது. மறுபடியும் சகிக்கல”.

உயர்ந்து வளர்ந்திருந்த தூங்குமூஞ்சி மரங்களின் நிழலில் நடக்க ஆரம்பித்தோம்.. பேச்சும் தொடர்ந்தது..

“ம்ம்..ஒரு மாசம் மட்டுமா? எப்படி?”

நாகையநல்லூர்லேர்ந்து ஒரு சமையல்காரன் வந்திருந்தான். அய்யரு போலிருக்கு… யப்பா… என்ன ஜாலம் பண்ணினானோ தெரியல.. தோசைல தங்க நிறத்துல வெந்தய வாசனை மணக்கும்.. சாம்பார் அதுமாதிரி நான் யுனிவர்சிட்டில சேர்ந்ததில் இருந்து சாப்பிட்டதே இல்லை…. ரசம் தேவ லோகத்துலேர்ந்து வந்தா மாதிரி.. தனித்தனியா கருவேப்பிலை, மஞ்சள், கொத்தமல்லி, பெருங்காயம்னு மணக்கும்ங்க…

..தனித் தனியான்றேன்….. தனித் தனியா வாசனை தெரியும்…. என்ன பண்ணினான்னே தெரியல.. அவன் கைல பத்து விரலுக்கும் மோதிரம் போடணும்.. அவன் சொர்க்கதுலேர்ந்து வந்தவனுங்க..

சொர்க்கத்துலேர்ந்தா? நாகையநல்லூர்னியே?

நீங்க வேற கடிக்காதீங்க.. சொல்றதைக் கேளுங்க.. எல்லா ஐட்டமும் செம டெஸ்ட்.. நான்லாம் ஹாஸ்டல் மெஸ்ல ரெண்டு தோசைக்கு மேல அந்தக் கருமத்தைத் தின்ன மாட்டேன்.. அதுவும் எத்தையாவது தின்னு தொலைக்கணுமேன்னு தின்னுட்டுக் கெளம்பிருவேன். நாகையநல்லூர் அய்யர் கை டேஸ்ட்ல நாலு தின்னேன்..

தோசைன்னு இல்ல, உப்புமா, பொங்கல், பொரியல் எதெடுத்தாலும் சான்ஸே இல்ல.. சப்பாத்தியோட தக்காளி கடலை மாவு சப்ஜி…. கத்திரிக்கா பயத்தம் சாம்பார், செய்வாம் பாருங்க… இட்லி புடிக்காத நானே தொட்டுக்கிட்டு ஆறு தின்னேன்…

“அந்த ஆளுக்கு ஏதாவது பிரமோஷன் கொடுத்தாங்களா?” என்றேன். பழக்கமான நாய் ஓடி வந்து வாலாட்டியது. போன வருஷம் நாய் போட்டிருந்த குட்டிகள் இப்போது பெரிதாக வளர்ந்து இருந்தன. அவை தூரத்தில் நின்று சந்தேகத்தோடு வாலாட்டின.

பிரமோஷனா? கிழிச்சானுங்க.. தலைகீழா நடந்தது.. நீங்க குறுக்க பேசாமே கேளுங்க ஜெய்…

சூப்பர் டேஸ்ட்னால பசங்க எல்லாரும் உட்காந்து கார்த்தாலை 9 வரைக்கும் சாப்ட்டானுங்களா…. மெஸ் வெளில கியூ வெயிட்டிங்.. கிளாஸுக்கு லேட் ஆச்சு.. எப்பவும் மெஸ் பில்லு அறுநூறு ரூவாதான் வரும்.. அந்த மாசம் மளிகை சாமான் அதிகமாகி எழுநூத்து நாப்பது வந்தது..

வார்டன் ரேமண்ட் உதறியராஜ் மெஸ்சுக்கே வந்தாரு.. அய்யரைக் கூப்புட்டு “எலேய் என்ன பெரிய மயிராட்டம் சமக்கியாமா?.. உனக்கு முன்னாடி இருந்தவங்க சமைக்கா மாதிரி நீயும் பண்ணுலே.. எல்லாருக்கும் ரெண்டு மடங்கு சோலி வெக்கியாம்”

“சார், அவா தட்டெல்லாம் சுத்தமா அலம்பறது இல்லே.. சுண்ணாம்பு பவுடர்லாம் கலக்கறா.. அப்படி பண்ணினா ஸ்டுடென்ட்ஸ் வயிறு கெட்டுடும் சார்.. கொஞ்சம் சாப்பிட்டாலே எழுந்துடுவா”.

“எலேய் பசங்க இங்க படிக்க வர்றாங்களா, இல்லை தின்னுட்டுப் பேள வர்ரானுங்களா? பசங்க பத்து நிமிஷத்துக்கு மேல சாப்பிடக் கூடாதுன்னு தானே சொல்றோம். குனுக்கு வலிக்க சமைச்சா பத்தாதுலே.. புத்தி வேணும்” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப மரியாதை இல்லாம பேசிட்டாரு.

அய்யர் “என் தோப்பனார் சொல்லிக் குடுத்த வித்தையைக் கடமை தவறாம செய்யறேன்.. யாரும் 10 வருஷமா குத்தம் சொல்லலை.. நீங்கோ மட்டும் ஏன் சார் கோவிச்சுக்கறேள்?” னு கேட்டார்.

“ஏலேய், நான் சொல்லுதது உனக்கு விளங்குதா இல்லையா? ஒன் அப்பன் வித்தை மயித்தைச் சொல்லிக் கொடுத்தான்குற.. ஒன் அப்பனா ஒரு ஸ்டுடென்ட்டுக்கு 140 ரூவா அதிகமா கட்டுவான்?..”

அய்யருக்கு கண்லாம் கலங்கிப் போச்சு… குரலுடைய “ஸார் அவன் இவன்லாம் போயிட்டவாளப் பத்தி பேசாதேள்.. ஜட்ஜ், கலெக்டர் வீட்டுக்கெல்லாம் கூட போயி சமைச்சிருக்கேன், யாரும் இப்படிப் பேசினதில்ல”.

கண்ணீரைப் பார்த்து இறங்கின வார்டன் சொன்னாரு “கேளுவே, சமையல்ல டேஸ்ட் இருக்கக் கூடாது, பசங்களுக்குச் சாப்பிடவே பிடிக்கக் கூடாது, 330 பேரு 12 லேர்ந்து 1க்குள்ள லன்ச் முடிக்கணுமே? வந்தான்ன்னா சாப்புட்டு ருசியே இல்லை கருமம்ன்னுட்டு அஞ்சே நிமிசத்தில வெளில போயிரணும்.. அப்போதாம்வே நம்ம ரிசர்வ்ல நாலு காசு மிஞ்சும்.. ஆடிட் பிரச்சனை வராது… நீ நல்லா சமைச்சு ஸ்டுடென்ட்ஸ் தின்னுட்டு தெனவெடுத்துப் போயி இருந்தாம்னா படிக்க மாட்டானுவ..கலாட்டா செய்வானுங்க..”

“ஸார், என் தொழில் தர்மத்தை, கத்துண்ட வித்தையை மீற மாட்டேன் சார், கைப்பக்குவம்லாம் பகவான் பரம்பரையா அனுக்ரஹம் பண்ணினது. இங்க படிக்கற பசங்க எல்லாம் சரஸ்வதி கடாட்சத்துக்காக, பெத்த அம்மா சமையலை விட்டுட்டு வர்றா; எங்கெங்கேர்ந்தோ வந்து படிக்கற குழந்தேள் கிட்டேர்ந்து சுபோஜனத்தைப் பறிக்கப்படாது.. நான் கடமையை விடாம சரியாத்தான் செய்வேன்.. வேணும்னே மட்டமால்லாம் சமையல் செய்ய என்னால முடியாது..”

“அப்புடியா ஸார்வாள்…. பாப்பான்ற திமிரு போல… அப்போ நீ தட்டு கழுவுலே.. இனி டேபிள்லேர்ந்து எச்சை தட்டு எடுக்கறது, களுவறதுதாம்லே உன் வேலை. இன்னிலேர்ந்து சமையலை ஏளுமலை, இசக்கி பாத்துப்பானுவ”..

மறுபடியும் நான் பேசினேன் “…ஏன் சங்கர், எதுக்கு முதல்ல அந்த அய்யரு நம்ம ஹாஸ்டலுக்கு வந்தான்? அசிங்கப் படறான்?” என்றேன்.. எதுக்கு இவ்ளோ கடமையுணர்ச்சி, தொழில் தர்மம் பொருத்தமில்லாத இடத்துல?

சங்கர் பேச்சில் மாற்றம் தெரிந்தது. சமையல்காரனை அவர் என்றும் வார்டனை அவன் என்றும் சொல்லிப் பேச ஆரம்பித்தான்.

நாங்க பிரண்ட்ஸ் எல்லாரும் போயி வார்டன் கிட்ட பேசினோம். கொஞ்சமும் மசியலை. “நீ ருசிக்காக 140 அதிகம் கொடுப்பே. மத்தம் 330 பசங்களுக்கும் சேத்து நீ 46,000 கொடுப்பியாவே? ஒவ்வொருத்தனும் 1 மணி நேரம் சாப்பிடுதான்.. எல்லாரும் உக்காந்து மொக்கின அப்புறம் கடைசி ஆளா நீ சாப்பிடணும். செய்வியா?”ன்னான்.

அப்புறம் அய்யர் கிட்ட போனோம். என்னய்யா ஜட்ஜ், கலெக்டர்ங்கற. என்னத்துக்கு கம்மி சம்பளத்துக்கு இங்க ஹாஸ்டல் கேன்டீன்ல சமைக்கறீரு ன்னோம். அப்போதான் உண்மையான கதை தெரிஞ்சது

…அய்யரோட அம்மாவுக்கு உணவுக் குழாய்ல கேன்சராம்.. அது தெரியாம 6 மாசம் வீட்டுல வேலைக்கு போவாம அம்மாவைக் கவனிச்சுக்கிட்டு இருந்திருக்கார். அப்புறம் இப்போ கிண்டி கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல அட்மிட் பண்ணிட்டு, தொண்டைல டியூப் வச்சு தான் ஆகாரம். தங்க இடம் இல்ல, லாட்ஜுக்கு பணம் இல்ல.. என்ன பண்ணுறதுன்னு யோசிச்சு, தூங்க எடத்துக்காகவே பக்கத்துலேயே நம்ம ஹாஸ்டல் மெஸ்ல வேலைக்குச் சேந்துட்டார்.. அப்படியே ஹாஸ்டல்லயே ஓரமா வாட்ச் மேனோட தங்கிக்கலாம்னு பிளான் பண்ணிருக்கார்… வீட்டு வாடகை, ஆட்டோ சார்ஜ் மிச்சம். அதனாலதான் குறைஞ்ச சம்பளம், அவமானம், கடுமையான வேலையெல்லாம் தாங்கிக்கிட்டு இங்கயே கெடந்தார்.

அவரே இதெல்லாம் சொன்னாரா?

ஆமாம்.. ஆனா அவரோட தொழில் தர்ம உணர்ச்சி, அவரை நிம்மதியா இருக்க விடல. எதுக்கு அய்யரோட கடமை உணர்வைத் திட்டணும்? திட்டினாலும் இந்த வார்டன் ரேமண்டைத்தான் திட்டணும்.. அப்படியே இந்த எச்சைப் பாத்திரம், தட்டு எல்லாம் கழுவிட்டு இருந்தார் அய்யர்; வேலைய முடிச்சுட்டு ரெண்டரை மூணு வாக்குல அம்மாவப் பார்க்க கேன்ஸர் இன்ஸ்டிடியூட் போவாரு.. போவரத்துக்கு நான் என்னோட சைக்கிளைக் கூடக் கொடுத்திருந்தேன்… அப்புறம் ஆறரைக்குத் திரும்ப வந்து வேலை செய்வார்..

ஆனாலும் ரெண்டு மாசம் கழிச்சு வார்டன் விடல… ஞாயிறு காத்தால சர்ச்சுக்கு போக டிரஸ் பண்ணிட்டு கார் எடுத்துட்டு குடும்பத்தோட வந்தான். ஆம்பிளைங்க ஹாஸ்டலுக்குப் பொண்டாட்டியோட இது வரைக்கும் வந்ததே இல்லை. நாங்க எல்லாம் வார்டன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிட்டு இருந்தோம்.

“அய்யிரே, இனிமேலாவது மத்தவன் மாதிரி சமைப்பியாலே?”

“ஸார், என் உயிரே போனாலும் உத்யோக தர்மத்தை மீறமாட்டேன்”.

“ஒண்ணு பண்ணுவே.. ருசியா சமைக்க வேணும்னா எங்க சாந்தோம் சர்ச்சுல வந்து வக்கணையா, ருசியா சமைச்சுப் போடு.. என் வைஃப்தான் சர்ச்சுல செகரட்டரி; பாஸ்டர்கிட்ட பேசி உனக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்லே”.

“மன்னிக்கணும் சார். நளனும் பீமனும் பண்ணின கலையை சரஸ்வதி கடாட்சம் உள்ள இடம்கறதால இங்க பண்றேன். சர்ச்சலெல்லாம் பண்றதுக்கில்லை ஸார்.. நான் எச்சை தட்டே அலம்பிண்டிருந்தாலும் பரவாயில்லை”.

வார்டனின் மனைவி, குழந்தையை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கிடுகிடுவென காரில் சென்று அமர்ந்தார். ஒரு சாதாரண சமையல் கலைஞனின் முன் தன் கணவனின் பணம், படிப்பு, பதவி, அந்தஸ்து எல்லாமே தோற்றதைத் தாங்க முடியவில்லை.

“எதுக்குய்யா மூஞ்சில அடிச்சாப்பல பேசின? படிப்புக்கு மரியாதை தரவேணாம்? அந்தாளே ஒரு சாடிஸ்ட்டு.. என்ன பண்ணுவாரோ?”

“இப்பவே ரொம்ப மோசாமாதான் இருக்கேன். இதைவிட மோசமா என்ன பண்ணிட முடியும்?ன்னுதான்”.

வார்டனால் முடிந்தது.

‘ஏண்டா சர்ச்சல சமைக்க மாட்டியா? பெரிய ஜில்லா கலெக்டரா நீ?’ ன்னு கருவிக்கிட்டுக் கிடந்த வார்டன், வேணுமுன்னே அய்யரை நான்வெஜ் மெஸ்ஸுக்கு மாத்திவிட்டான்.. வெஜ் மெஸ்ஸுல சாப்பிட அவருக்கு அனுமதி இல்லைன்னுப்புட்டான் படுபாவி.. அய்யரைச் சிக்கன் சாப்பிட்ட தட்டெல்லாம் எலும்பு பொறுக்கிக் கழுவ சொன்னான்..

அய்யோ… சே… அப்புறம் என்னாச்சு? அன்னிக்கே வேலையவுட்டு போயிட்டாரா?

போகல்லை. அம்மாவுக்குக் குணம் ஆகிற வரைக்கும் என்ன கேவலப்பட்டாலும் போமாட்டேன்னுட்டார். நான்வெஜ் மெஸ்ஸில் அய்யரால சாப்பிட முடியாது. ஆனா கார்த்தால டிபன் எப்பவும் சைவம் தானே? அதை மட்டும் சாப்பிடுவார்; மதியம், ராத்திரி சாப்பாடு இல்லை; தூக்கமும் இல்லை; திறமைக்கு மரியாதை இல்லை; நல்ல சம்பளமும் இல்லை; அஞ்சு நிமிஷம் ஓய்வில்லை. கடமையை மட்டும் தவறாம செஞ்சார்.

அப்படியே ஒரு மாசம் ஓடிச்சு.. சாப்பிடாம இளைச்சுப் பூட்டாரு அய்யரு. அன்னிக்கு டிஸ்க்ரீட் மாதேமட்டிக்ஸ் பரீட்சைக்குப் படிச்சுட்டு இருந்தோம். அய்யரு பாத்திரமெல்லாம் தேய்ச்சு, தட்டெல்லாம் அலம்பி வச்சுட்டு ஹாஸ்டலுக்குப் படுத்துக்க ராத்திரி 12 மணிக்கு வந்தார்.

நாங்க எல்லாரும் ஆளுக்கு 5 ரூபாய் போட்டு 80 ரூபாய் சேர்த்துக் கொடுத்தோம்.

அண்ணே விடிகாத்தால, சொல்லாம கொள்ளாம நீங்க கிளம்பிடுங்க. இந்த காலேஜ் ஒத்து வராதுன்னு சொன்னோம். அவரு கண் கலங்கி பணத்தை வாங்கிக்கிட்டாரு. பையிலிருந்து ஒரு சாமி படத்தை எடுத்தாரு. சிருங்கேரி அம்மனாம்.

“அம்மா சாரதாம்பா.. கண் தெறந்து பாறேன்.. நான் இன்னும் உயிரோடதான் இருக்கணுமா? அம்மா கண் திறம்மா” ன்னு குலுங்கிக் குலுங்கி அழுதார். அப்படியே குளிச்சுப்புட்டு மொட்டை மாடிக்குப் போயி நிலாவை வெறிச்சுப் பார்த்துட்டே தூங்கிட்டார்.

நான் எதுவும் கேட்கக் கூடத் தோணவில்லை. கொஞ்ச நேரம் மயான அமைதி.. பெருமூச்சு.. சங்கரே தொடர்ந்தான்.

அடுத்த வாரம் அம்மா கண் திறந்துட்டா… வழி விட்டுட்டா..

சாராதாம்பாளா?

இல்லை. அய்யரோட அம்மா… கேன்ஸர் இன்ஸ்டிடியூட்ல இறந்துட்டாங்க. அவரு பாடிய எடுத்துட்டு ஊருக்குப் போயிட்டாரு.

-*-*-*-*-*-*-*-*-*-*-*-

இது நடந்து 25 வருடங்கள் ஆகின்றன. பல்கலை மாணவர்கள் வெள்ளிவிழாச் சந்திப்புக்கு (college reunion) வந்த நானும் சங்கரும் நாகையநல்லூர் சென்றோம். அவர் ஹாஸ்டலுக்கு அனுப்பிய பொங்கல் வாழ்த்தில் இருந்து சங்கர் முகவரி சேகரித்திருந்தான்.

அக்ரஹாரத்தில் விசாரித்ததில் ஒருவர் “நீங்களும் போலீசா? இப்போதான் ஒருத்தர் தேடிட்டு வந்தாரு.. பஜனை மடத்துலேர்ந்து ஆறாவது வீடு.. இந்த பழைய நெம்பர்லாம் செல்லாது….” என்றார்.

எப்படியோ தேடி வீட்டைக் கண்டுபிடித்தோம். சுண்ணாம்பு பெயர்ந்த சுவரில் அகல் விளக்குக்கான பிறையில் காரை பெயர்ந்து இருந்தது. வளைந்து கொடுக்கா நேர்மையின் விளைவு, வீட்டின் ஏழ்மையில் தெரிந்தது.

உள்ளே ஒரு போலீஸ்காரர், அவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

எங்களை “நீங்க யாரு? எதுக்கு வந்தீங்க” என்றார் போலீஸ்.

அய்யர் பதில் சொன்னார்: “இவரு அண்ணா காலேஜ்ல நான் கேன்டீன்ல வேலை செய்யறச்சே படிச்சார்” என்று சங்கரைக் காட்டி .. “இவரு அவரோட சிநேகிதர் போலிருக்கு” என்று என்னைக் காட்டினார்.

பதற்றத்தோடு “ஸார் ஏன் சார்? எதாவது பிரச்னையா சார்?” என்று போலீசிடம் கேட்டேன்.

“இல்லல்ல… இவரோட பொண்ணு அமெரிக்கால படிச்சுட்டு இருக்கு.. இவரும் அமெரிக்கா போகப் போறாரு.. பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக வந்தேன்”.

“சாராதாம்பா கண்ணைத் திறந்துட்டாடா” – கண் கலங்கினேன்.

 

AI image by Google Gemini; prompt by Annakannan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.