தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதம்

0

இராஜராஜேஸ்வரி

திருக் கார்த்திகை விளக்கு 

கந்தன் வேலன் கடம்பனுக்கு

நெஞ்சில் கருணை கொண்டு ஏற்றி வைக்கும்

கார்த்திகை விளக்கு..

 தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை மாதமல்லவா இது? 

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் 

மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே 

அது கால காலமாய்க் கவிதைகள் பாடுமே 

முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு  

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு 

கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே 

வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்  

கார்த்திகை மாத முழுநிலாவில் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி.. 

 மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது.  

“மதிநிறைந்து அறுமீன் சோரும் அகல் இருள் நடுநாள்” என்றது, கார்த்திகை மாத முழுநிலா நாளைக் (பெளர்ணமி) குறிப்பதாகும். முருகனைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்ததால் அவர்கள் வரம் வேண்டியபடி வானில் ஆறு விண்மீன்களாயினர் என்பது புராணச் செய்தி. முருகனோடு தொடர்புடைய கார்த்திகை நாள் ஒவ்வொரு மாதத்தில் வந்தாலும் அது கார்த்திகை மாத முழு நிலவோடு கூடி நிற்கும்போது சிறப்புக்குரியது. 

அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம் ஆகும். பெரும் தீபங்கள் ஏற்றுவதால் புயல் தோன்றுவது தடுக்கப்படும் என்றும் தோன்றிய புயலின் வேகம் தணிக்கப்படும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவியர்களும் ஒருங்கே பிரசன்னமாகி அருள் பாலிக்கின்றனர். சுடர் லட்சுமியாகவும், ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது. ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் இடையிலுள்ள உறவை திருவிளக்குகள் உணர்த்துகின்றன. விளக்கில் சுடர் எரிவது நமக்கு நன்றாக தெரியும் புறத்தோற்றமாகும். ஆனால் அந்தச் சுடர் எண்ணெயை மெல்லக் கிரகித்து எரிகின்றது என்பது நாம் உணர வேண்டிய அகத் தோற்றமாகும்.  வாழ்க்கையில் தெளிவான புறத்தோற்றத்தையும் அதற்கு அடிப்படையான, நுட்பமான அகத்தோற்றத்தையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை தீப வழிபாடு நமக்கு எடுத்துக் காட்டுகிறது. திருவிளக்கால் அறியத்தக்க மறை பொருள்கள் பல இருக்கின்றன என்பதை தெரிந்து செயல்பட்டால் வாழ்வில் இருள் நீங்கி, ஒளி பெருகும். 

கிருதயுகத்தில் ஒரு கார்த்திகை மாதப் பௌர்ணமி நாளில், முக்கண்ணன், தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்து திரிபுரத் தகனம் நடத்தினார். திரிபுரத் தகனத்தின் போது,  சிவனின் சிரிப்பொலி உலகெங்கும் பரவி, ஜோதியாகப் பிரகாசித்து உலகையே ஒளிவெள்ளத்தில் ஆழ்த்தியது. தீய சக்திகளுக்கு அக்னிப் பிழம்பாகவும், உலகிற்கு வெளிச்சமாகவும் விளங்கிய சிவனின்  அந்தப் பிரகாசத்தினை வழிபடும் விதத்தில் தான் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப் படுகின்றது. 

தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும், சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும், பார்வதியின் சக்தியையும் ஒன்றாகச் சேர்த்திருப்பது.   எனவே மூன்று தேவிகளின் வடிவமான தீபத்தைக் காணும் எந்த ஓர் மனிதனும், புழு, பூச்சி, பறவைகள் கூட நற்கதி எய்தும் என்பது ஆன்றோர் மொழி. எனவே தான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது.எனவே கார்த்திகைத் தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், முத்தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். 

விளக்கு எரியும் வீட்டுக்குள் திருடர் புகத் துணியார். மனத்தினுள்ளே தெய்வத்தின் ஞான விளக்கேற்றி வைத்திருக்கும் பொழுது புல்லிய எண்ணங்கள் என்ற கள்ளர் புகுவதில்லை.  

திருமூலரின் திருமந்திரம், ஐம்புலன்களை வென்றோர் அப்புலன்களையே விளக்காக்கி வழிபடுவதை உணர்த்துகிறது. நம் உடம்பே ஆலயம் என்றால், அங்குப் புலனடக்கம் செய்த ஞானி அப்புலன்களையே விளக்காக்கி இறைவனை வழிபடுகிறான். புலன்களை இவ்வாறு ஞானத்தால் எரித்து விடுகிறான் (not in literal sense) என்றும் கொள்ளலாம். 

உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

ஐம்புலன்களும் காலா மணிவிளக்கு 

அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங் கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறைவனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர். 

திருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள் பாலிக்கும் விசிறிச் சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்புப் பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார். 

கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:

கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா 

ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா

 ப்ரதீபம் ஜந்ம பாகிந:

பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.

இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம். 

தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர்.  

கார்த்திகை விரதத்தைப் பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள்.  

தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மைச் சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரைச் சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. தீபஜோதியாக நின்று உலகைக் காக்கும் பரம்பொருளை வழிபட்டு சகல நலமும் பெறுவோமாக. 

இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி …… விடமேநீ 

ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை …… யிவையோடே 

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு …… முளநோய்கள் 

பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் …… அருள்வாயே 

வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக …… இசைபாடி 

வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை …… விடுவோனே 

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் …… மணவாளா 

சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு …… பெருமாளே. 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.