முகில் தினகரன்

இளைஞனே!

அன்னையிடம் அமிழ்துண்ட
அனிச்சமலர் உதடுகளில்
அமிலத்துகள்களா?

மழலை குழைத்து மிருது காட்டிய
மகிழம்பூ நாவில்
மரணத் துணுக்குகளா?

யார் சொன்னது?
புத்துணர்ச்சிப் புதையல் அந்தப்
புதை குழிக்குள் உள்ளதென்று?

உன்
வாழ்க்கை ஏட்டின் பக்க எண்ணிக்கை
வலுக் கட்டாயமாய் கிழிபடுவது
வாலிபக் கண்களுக்கு
வசப்பட வில்லையா?

உன்
விழிகளின் விளிம்புகளில்
கரு வளையம் வரைந்த
கல்லறை விரல்கள்
பான் பராக் பரல்களென்பது
புரிய வில்லையா?

உன்
சுறுசுறுப்பு வீணையில் சுகராகம் மீட்டிட
லாகிரிக் குதிரைக்கு
லாடம் அடிக்கும்
லௌதீகம் எங்கு கற்றாய்?

உன்
உதிரத்தைச் சுத்திகரிக்கும் உபாயம் மறந்து
குருதி வீரியம் குறைக்கும்  பெட்டிக்கடைச் சரக்கிற்கு
வாய் மேடையில் வாய்ப்பளித்து
வாய்க்கரிசி வரம் பெறாதே!

வேண்டாம்….
நரம்புகளின் நந்தவனத்தில் நச்சுப் பூக்குவியல்!
நாகரீக நிசப்தத்தில் நரியின் ஊளை!

படத்திற்கு  நன்றி
http://www.partywiththedead.com/
 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.