விசாலம்

காலைப்பொழுது. ‘பால்’ என்ற சத்தம் கேட்டு விழித்தேன் ,என்னால் எழுந்திருக்க முடியவில்லை… தலைவலி, மண்டைப்பிளக்கும் தலைவலி ,டம்டம் என்று இடித்தது மழையில் நனைந்ததால் இருக்குமோ? அல்லது சைனஸ் தொந்தரவோ ? துப்பட்டாவை எடுத்துத் தலையில் முண்டாசுப்போல் கட்டிக்கொண்டேன், துப்பட்டா பலருக்கு இப்போதெல்லாம் மூட வேண்டிய இடம் மூடாமல் கழுத்தில் சிவனது பாம்பு போல் சுருண்டு கிடக்கிறது ..இப்போது அது என் தலையில் ஏறியது …என் கணவரோ ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார். காலையில் பேப்பர் அவர் கையில் கிடைத்துவிட்டாலோ பூலோகமா சுவர்க்கமா, ஒன்றும் தெரியாது அவருக்கு.

நல்ல வேளை, காலைக்காப்பி அவரே செய்து குடித்து விடுவதால் நான் தப்பித்தேன் ,

“கமலா கமலா’ அடுத்தாத்துப் பாட்டியின் குரல். என் தலை முண்டாசுடன் அவள் முன் தரிசனம் தந்தேன் ,

“ஐயோ என்ன இது ? தலைவலியா? மண்டை குத்துகிறதா?”

“ஆமாம் ” தலையை ஆட்டினேன்.

“இரு தலைக்குப்பத்து செஞ்சிண்டு வரேன்…….. அத நெத்திலே தடவிக்கோ சரியாப்போயிடும் ,

பாட்டி தன் வீட்டிற்குப்போய் சுக்கை நன்றாக இழைத்து அத்துடன் மஞ்சள் பொடி மிளகுப்பொடியைக்கலந்து நீருடன் கலக்கி இலுப்பக்கரண்டியில் சுட வைத்தாள், அது கொஞ்சம் இளகியதும், என் தலையில் தடவி விட்டார், தலை விறுவிறுவென்றுஇழுத்தது கொஞ்சம் எரிந்தது ஆனால் இதமாக இருந்தது. மறுநாள் எனக்குத் தலைவலி குறைந்தது. ஆனால் திரும்பவும் அன்றிரவு தலைவலி ஆரம்பித்தது.

என் தோழி சரோஜா யதேச்சையாக வந்தாள்,
“என்ன கமலா முகமெல்லாம் ரொம்ப வாடி இருக்கு ஏன் இப்படி டல்லாக இருக்கே?”

இல்லடி சரோஜ் தலைவலி….. பத்துப்போட்டும் போகலைனு கவலை”

“என்க்குத்தெரிந்த அலோபதி டாக்டர் சூப்பராகப் பார்ப்பார் நல்ல கைராசி .. அட்ரஸ் தரேன் அங்கு போய் காமி…” ஏதாவது டியூமர் போல் இருக்கப் போகிறது ,ரொம்ப ஈசியா எடுத்துக்காதே”

தலை உடலுக்கு மிக முக்கியமானது ஆயிற்றே. “எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் ” என்ற பழமொழியும் உண்டே! சரோஜா சொன்னது போல் தலையில் எதாவது கட்டி இருந்தால்…. மனதில் பயம் வர அவள் சொன்ன டாக்கடரைப் பார்க்க அலோபதிக்கு ஓடினேன் ….அவர் எல்லாம் சரிவரப்பார்த்து ஒரு பேபரில் ஒரு கிறுக்கல் வரைந்தார் அவைகள் ம்ருந்தின் பெயர்கள் அந்தத் தாளைப்பல பக்கங்கள் திருப்பிப் பார்த்தும் அவர் எழுதியதைப் படிக்க முடியவில்லை ,அதை மருந்துக் கடையில் கொடுக்க கடைக்காரர் பல மருந்துகள் கொடுத்தார். பிராக்சிவான் என்ற மாத்திரையும் இருந்தது ,கடையில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார் , இந்தப் “பிராக்சிவான்”என்ற மாத்திரையைப் பார்த்து “அம்மா இந்த மாத்திரையைப் பார்த்து போட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப
ஸ்ட்ராங்,,,,,,,கிட்னியை பாதிக்கும்” என்றார்

அவர் சொன்னது மனதிலே குடைய வீட்டிற்குப்போய் ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு பின் பயத்தில் நிறுத்தி விட்டேன். இரண்டு நாள் பிறகு திரும்பவும் அதே டாக்டரிடம் போனேன் .

“டாக்டர் இன்னும் தலைவலி வருவதும் போவதுமாக இருக்கிறது என்னசெய்வது?’ அவ்வளவுதான் …ஏண்டாப்பா கேட்டோம் என்று ஆனது ……..அங்கு மாட்டிக் கொண்டேன். ஸ்கேன், சுகர் டெஸ்ட், என்று பலவிதம் அதிக செலவுதான் ஆஸ்பதிரிக்கு அழுதேன் , ரிசல்ட் எல்லாம் நார்மல் என்று தான் வந்தது. அலோபதி மருந்து தலைவலி போகத் திருகுவலி வந்ததே! இல்லை…..இல்லை….. தலைவலி போகாமலே திருகுவலி…….. மாத்திரைகள் சாப்பிட்டதில் வயிறு எரிச்சலுடன் நெஞ்சும் எரிந்தது “ஐயோ ராமா இது என்ன! வயிறு வலியும் சேர்ந்து கொண்டதே! “அவர் கைராசி டாக்டர் தான்……. எனக்குத்தான் ராசி இல்லை போலிருக்கிறது ” என்று நினைத்து வீடு வந்தேன்

மகாகனம் பொருந்திய உமாபதி அதுதான, என் கணவரின் பெயர். “என்ன ஆச்சு ?’ என்று கேட்பது போல் முகபாவம் செய்தார் ,

“ஒன்றுமில்லை எல்லாம் நார்மல் தான் ” என்றேன் என்னைப் பார்த்து கிண்டலாக ஒரு சிரிப்பு சிரித்தார் ” உன் உடம்பில் ஒரு கோளாறும் இல்லை எல்லாம் மனசுதான் காரணம் ……… ஓடிஓடி ஏதாவது வேலைச்செய் சரியாகிவிடும் “என்றார் இரணடு நாட்கள் கழிந்தன ,என் அண்ணனைப்போல் ஒரு நண்பன் வந்தான் ,வந்தால் சும்மா இருக்காமல் “என்ன கமலா இப்படி இளைச்சு போயிட்டே! என்ன உடம்பு”? என்று கேட்டான் .

ஆரம்பித்தேன் திரும்ப என் இராமாயணம் “ஹோமியோபதி “டாக்டர் சிவராமன் ரொம்ப சூப்பர். ரொம்ப கரெக்ட்டாக மருந்து தருவார் , என் கூட வா
அழைத்துப் போகிறேன் “

சரியென்று ஹோமியோபதி டாக்டரைப் பார்க்கக் கிளம்பினேன் ,அங்கு அந்த டாக்டர் ஒரு கனமானப் புத்தகம் ஒன்றைத் திறந்து ஒவ்வொரு பக்கமாகப் பிரித்துப்பிரித்துப் பார்த்தார் ,
பின் சர்க்கைரைக் கோலிகளில் சில சொட்டு மருந்துகளை விட்டுக் குலுக்கிக் கொடுத்தார் அங்கு ஒரு ஆயிரம் செலவாயிற்று.. பணம் போனால் போகட்டும்…. உடம்பு சரியானால் சரி என்று என்னைத் தேற்றிக்கொண்டேன் ,டாக்டரிடம் சென்று வந்த பின்னர்மருந்து கலந்த அந்த சர்க்கரை கோலிகளை ஸ்வாமி படத்தின் முன் வைத்தேன். ஒரு தடவை எடுத்துக் கொண்டேன்.

அடுத்த வீட்டுப் பாட்டியின் குட்டிப்பேரன் இதைப் பார்த்தான். நான் குளிக்கச் சென்றேன். திரும்பி வந்து பர்த்தேன் அந்த சின்ன புட்டியில் ஒரு நாலு கோலிகள் தான் பாக்கி, மருந்துக்கும் எனக்கும் ராசி இல்லை போலிருக்கிறது என நினைக்கும் போது அந்த பேராண்டி வந்தான் “மாமி நான் அந்த சர்க்கரை
கோலிகளைத் தின்னுட்டேன்

“ஏன் தின்னே அது மருந்துடா கண்ணா”
’வந்து…. மாமி…..மாமி
ஸ்வாமி பிரசாதம்னு நினைத்தேன் ” …….எனக்குச்சிரிப்புத்தான் வந்தது .. இப்படியாக ஹோமியோபதியும் பாதியில் நின்றது ,

பின் வந்தது ஆயுர்வேதிக .பாற்கடலை கடைந்தபோது உதித்த தன்வந்திரி பகவான் ஆயுர்வேதத்தின் மருத்துவர் என்றே சொல்லலாம் என் வீட்டு அருகிலேயே புதிதாக ஒரு ஆய்ர்வேதிக கிளினிக் திறக்கப்பட்டது பெரிய ஆயுர்வேத புகழ திரு ராமன் நாயர் தான் அங்கு டாக்டர் . அவரிடம் சென்றேன் வழக்கம் போல் என் ராமாயணம் பாடினேன் ,அவரும் பல விதமான அரிஷ்டங்கள் கொடுத்து புளி எண்ணெய் தள்ளவேண்டும்
என்று சில பத்தியங்கள் சொன்னார் .

ஒவ்வொரு பாட்டிலும் தேன் கலரில் மருந்து இருக்க சில பொடிகள் அதாவது மருத்துவ மொழியில் சூரணங்களும் இருந்தன, காலை 6 மணி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ஆனால் ஆறு மணிக்கு முழிப்பு கொடுக்காமல் மெள்ள எழு மணிக்கு எழ பின் நேரே சூடான காப்ப்பிக்கு போயிற்று குரங்கு மனம். அதையும் தாண்டி மருந்தை குடிக்க தொண்டை வரையில் கசப்பு அப்பப்பா இந்த ஒரு வேளைக்கே இத்தனைக் கஷ்டங்கள் மேலே எப்படித்தொடர்வது ? எல்லாம் என் குரங்கு புத்திதான் …மனம் ஒரு நிலையாக நிற்காமல் ஏன் இப்படி தாவுகிறது.

ஒரு வாரம் சென்றது . மனம் மறுபடியும் குரங்குப்போல் தாவியது திரும்ப என்ன வைத்தியம் செய்தால் சரியாகும் என்று குழம்பினேன் ,ஒரு பத்திரிக்கையைத் திருப்பினேன் .கண்ணில் கொட்டையாகத் தெரிந்தது ஒரு விளம்பரம். “இயற்கை வைத்தியம் ” ஆம் இன்னொரு பதி. அதுதான் ஆங்கிலத்தில் “நேசரோபதி “எல்லாவிதவியாதிகளையும் மூலிகையினாலும் இயற்கை வைத்தியத்தினாலும் சரியாக்கி விடுகிறோம் குண்டுக்கு ஒரு சவால் , பீப்பாயாக இருக்கும் இடையாளை பிடி இடையாளாக ஆக்கிவிடுவோம் ” என்று ஒரு ராமாயணமே எழுதி இருந்தது , என் கண்முன்னே நான்பிடி இடையாளாக வந்து அழகுப் போட்டியில் கலந்து பரிசு வாங்கும்அருமையானக்காட்சி… இந்த மாதிரி ,கற்பனைக்காட்சி வந்து அடிக்கடி என்னை அங்கும் இங்கும் ஓட வைக்கும் கற்பனையும் நிஜமாகலாமே என்று நினைத்து போனை அடித்தேன் . மேலும் விசாரித்தேன் , அங்கு ஒரு பத்துநாட்கள் தங்க வேண்டுமாம் இயற்கைச்சூழலில் வைத்தியமாம். மூலிகையினால் வைத்தியமாம் ஒரு பக்க விளைவும் இல்லை ஆனால் பத்தாயிரம் கட்ட வேண்டுமாம்.

ஆஹா அருமைதான் வீட்டைவிட்டு ஹாய்யாக ஒரு பத்து நாள், சமையல் அறைக்கு விடுதலை “விடுதலை விடுதலை விடுதலை .. சமையலுக்கும் அரைச்சலுக்கும், சப்பாத்திக்கும் விடுதலை” என்று என் மனம் பாரதியார் என்ற நினனப்பில் பாடியது. வீட்டைவிட்டு ஒரு பத்துநாள் போனால்தான் கண்வருக்கு என் அருமைத் தெரியும் ஆனால் பூனைக்கு மணி எப்படி கட்டுவது ? அதான், அந்தப் பத்தாயிரத்தை எப்படி அவரிடமிருந்து கறப்பது? சரி நல்ல மூடில் இருக்கும் போது கிட்ட போகலாம்
என்று நினைத்தேன் ,

கிரிக்கெட் மாட்ச்சில் நம்மவர்கள் சம விளையாட்டு விளையாடி வெற்றி பெரும் நிலை. அவருக்கு ஒரே குஷி இதுதான் சரியான சமயம் என்று விளம்பரத்தைக் காட்டினேன் , “ஏன்னா இந்த விளம்பரத்தைப் பாத்தேளா?’ “நான் இங்கே போய்ச்சேர்ந்து வைத்தியம் செய்துக்கொள்ளட்டுமா?

” சரி சரி போ போ அதை ஒண்ணு பாக்கி வைப்பானேன் ,’ வழக்கம் போல் பஞ்சாங்கம் பார்ப்பாயே அஷ்டமி நவமி சந்தராஷ்டமம் என்று ..” அடுக்கிக் கொண்டே போனார்

கிண்டல்தான்! என்ன செய்வது ? நான் வளர்ந்த விதம் அப்படி. ஓடிப்போய் பாம்பு பஞ்சாங்கம் பார்த்து ஒரு நல்ல நாளை தேர்ந்த்டுத்தேன் ஆனால் கடைசியில் சின்ன எழுத்தில் கரி நாள் என்று எழுதியது என் கண்ணிற்குத் தென்படலையே….

ஆயிற்று ஒரு வாரத்திற்கு வேண்டிய உடைகளுடன் இயற்கை வைத்தியம் ” அரும்பாக்கத்திற்கு வந்தாயிற்று , உள்ளே ஒருவர் என்னை நன்றாக பரிசோதித்து தினமும் செய்ய வேண்டிய் அட்டவணையைக் கொடுத்தார்

ஐயோ இதெல்லாம் எப்படி செய்யப் போகிறேன் காலை 5 மணிக்குள் எழுந்திருந்து, வேப்பங்குச்சிஅல்லது ஆலங்குச்சியால் பல் தேய்க்க வேண்டும் .தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதையாவது செய்துவிடலாம் ஆனால் காப்பி இல்லாமல் வெறும் வயிற்றுடன் ஒரு 10 சுற்று ஓடவேண்டுமே… சீரியல்கள் எல்லாம் பார்க்க முடியாது அதுவே பெரிய தண்டனை ஆயிற்றே!,,

தவிர பிராணாயாமம தேகப்பயிற்சி மாலையில் பஜன் என அட்டவணையைக் கண்டேன் இரவில் டிபன் தான் ,அதுவும் உடலை பொருத்த மாதிரிதான்….

பத்துநாடகளுக்குத் தேவையான உடைகளுடன் இயற்கை வைத்தியம் ஆஸ்பத்திரியில் என் காலை வைத்தேன் மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சி போல் மணி அடித்து சுப்ரபாதம் வைக்கப்பட்டது ,காலை சூரியன் இன்னும் உதிக்கவில்லை பிரண்டு படுத்தேன் கண்முழித்தால்தானே.. பலர் எழுந்துவிட்டது நடமாட்டத்தினால் தெரியவந்தது , “சீ வெட்கக்கேடு
இன்னும் படுத்தால் நன்றாக இருக்காது என்று நினைத்து சுருட்டிக் கொண்டு எழுந்தேன் பல் தேய்த்தேன். மனம் சுடச்சுட “காப்பி காப்பி “என் ஜபம் செய்தது ,எத்தனை வருடப் பழக்கங்கள்?,விட்டுபோகுமா?

ஏதாவது சூடாகக்கிடைக்காதா என்று ஏங்கினேன்.. வந்தது ஒரு காப்பி சுக்குமல்லிக் காப்பியாம். அதை சாப்பிட என் மூஞ்சி போன போக்கைப் பார்க்கணுமே.. என்ன செய்வது ? உரலில் தலையைக் கொடுத்தாச்சு …என் கண் முன் பத்தாயிரம் ரூபாயும் அடிக்கடி வந்து நின்றது , கூடவே கண்வர் உமாபதியின் முகமும்……

பெரிய மைதானத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு சுற்று முடித்தேன், ஆமை முயல் பந்தயம் ஞாபகம் வந்தது , மூச்சு இறைக்க நின்று நின்று நடந்தேன் ஆ சொல்ல மறந்தேனே இதற்கென்று ஒரு சல்வார் கமீஸ் வேறு தைத்துக் கொண்டேன் …அப்பாடி போதும் போதுமென்று ஆகிவிட்டது, அத்துடன் கசப்பு மருந்துகள் வேறு, அதுதான் கஷாயமாமே…. பின் சாப்பாடு இருக்கும் என்று நினைத்தேனே… வந்தது பூஷிணிக்காய் ஜூஸ்……

அதே போல் ஒருநாள் அருகம்புல் ஜூஸ் பின் இளநீர் என்று வந்ததே தவிர
சாப்பாட்டைக் கண்ணிலே காட்டவே இல்லை , அட இரண்டு இட்லி சட்னியாவது தரக்கூடாதா…. இத்தனைப் பட்னிப்போட்டுத்தான் ” பிடி இடையாளாக ஆக்குகிறார்களோ….

மாலை வந்தது…… தேகப்பயிற்ச்சி முடிந்து திரும்ப பூஷிணிக்காய் ஜூஸ்… இப்படியே இரண்டு நாட்கள் தள்ளிவிட்டேன்.. என் கண்முன் மிளகாய் பஜ்ஜியும் வெங்காய பக்கோடாவும் பின் என்னைப் படுக்க வைத்து நெற்றி மேல் சொட்டு சொட்டாக எண்ணை விடுகிறார்கள் ஒரு செம்பு துளையுடன் இருக்க அது வழியாக மருந்தெண்ணை சொட்டுகிறது அசையாமல் படுக்க வேண்டும்.. இது தான் எண்ணைய் தாராவாம் இதில் ஊற சளிப்பிடித்தாற்போல் பிரமை முதுகெல்லாம் வலிப்பது போன்ற பிரமை. ஆடத் தெரியாதவளுக்கு முற்றம் கோணல்” என்பது போல் எனக்கு ஒன்றுமே ஒத்துவரவில்லை.. மனம் ஒத்துழைத்தால்தானே…. எல்லாம் ஒத்து வரும்?

மேலும் இதை வளர்த்துவானேன் நாலாவ்து நாள்… பொறுமை இழந்தேன் வீடே சுவர்க்கமாகத் தெரிந்தது ,10000த்தில் மூவாயிரம் தான் செலவானது இன்னும் பாக்கி இருக்கிறது என் கண்வர் உமாபதிக்கு, போன் போட்டேன்

” நான் திரும்பி வந்துவிடுகிறேன் , இங்கு சுக்கு மல்லிக்காப்பி தான் கிடைக்கிறது வீட்டுக்காப்பியைப் பார்த்து பல நாட்கள் ஆனால் போல் இருக்கிறது
என்ன!……. பேச்சே இல்லை ?”

அங்கிருந்து கடுமையானக் குரல் பதிலாக வந்தது .

“வேறு வேலை என்ன்? எல்லா இடத்திலும் காலை வைக்க வேண்டியது .அப்பறம் பாதியில் ஓடி வர வேண்டியது உங்கப்பன் சமபளம் பாரு”! ……. திரும்பம் நக்கல்.

“இல்லேன்னா என்னாலே ஓட முடியல்….. தவிர தினமும் பூஷணிக்காய் ஜூஸ் வேறு…. உள்ளே இறங்க மாட்டேங்கறது “

“ஆமாம் பெரிய ராணி… உனக்கு வாதாங்கீர் கொடுக்க.. இயற்கை வைத்தியம்னா பஜ்ஜி பகோடாவா கொடுப்பா. சரி சரி வீட்டிற்கு வா ,இதுதான் கடைசித்தடவை .. இனிமே அங்க போறேன் இங்க போறேன்னு சொல்லு.. என்ன செய்யறேன்னு பாரு” பட்டென்று டெலிபோனை வைத்து விட்டார் ,

அப்பாடி …..ஒரு எரிம்லை வெடித்து அடங்கியது உடனே வீடு கிளம்பினேன் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தனர் “கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை” என்று என் உள் மனமும் சொல்லியது .வாயையும் மனத்தையும் கட்டாமல் உடம்பில் தொல்லை என்றுச்சொல்லுவதில் என்ன பயன்? பொறுமை வீசை என்ன விலை என்று கேட்கும் எனக்கு என்ன வைத்தியம் ஒத்து போகும் ?

அசடு வழிய வீடு வந்தேன்… போன மச்சான் திரும்பி வந்தான் “என்பது போல் திரும்பி வந்தேன் க்ட்டியப்பணம்
கோவிந்தா ஆனது , என் கண்வர் முகத்தைப்பார்க்கவே எப்படியோ இருந்தது நல்ல காலம் ,,மாலையில் காலாற நடக்க போயிருந்தார் , சாவியை போட்டுத்திறந்தேன்

கிச்சன் என்னை வா வா என்று அழைக்க சூடாகக் காப்பி போட்டு குடித்தேன் , சுவாமிக்கு விளக்கு ஏற்றினேன் , “அப்பா பசுபதியே நீயே கதி ” அலோபதி பார்த்தாச்சு ஹோமியோபதி பாத்தாச்சு நேச்சுரோபதி பாத்தாச்சு இனி என் கணவர் உமாபதியுடன் இந்த பசுபதியே கதி, இனி நீதான் என்னை காக்கவேண்டும் பசுபதியே என்று சிவனை வணங்கினேன் திரும்ப ஒரு போன் வந்தது என் மைத்துனர் சபாபதி பேசினார் ,

“மன்னி உங்கள் தலைவலிக்கு அக்குபஞ்சர் அக்குபிரஷர்
வைத்தியம் இருக்கு ஒரு டாக்டர் ரொம்ப நன்னா பாக்கறார்…. வரேளா “

“என் தலைவலி போய்விட்டது இனிபசுபதிதான் வைத்தியர் “

போனை வைத்தேன் அப்பாடி இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது , எல்லா வியாதிகளுக்கும் மனமே காரணம் இல்லையா ?

படத்திற்கு நன்றி:

http://www.123rf.com/photo_8277987_fresh-herbs-and-spices-on-a-white-background.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பசுபதியே நீயே கதி !

  1. நகைச்சுவைக் கதை என்று சொன்னாலும், பல கசப்பான உண்மைகள் பொதிந்திருக்கின்றன, இந்தக் கதையில் குறிப்பிட்டுள்ள மருந்துகளைப் போல.மிக நல்ல முயற்சி.. தொடரவும்..

  2. அஷ்டபதிகளையும் கொண்டு வந்து நகைச்சுவையாய் நன்கு எழுதிருக்கீங்க விசாலம் மேடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *