நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்: தொடர்-12
பெருவை பார்த்தசாரதி
படிக்கும் பழக்கம்
நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்றால், படிப்பறிவுடன் பட்டறிவும் துணை போகும் என்பதைக் கடந்த இதழ்களில் பல இடங்களில் மேற்கோள்களுடன் படித்தோம். தொடர்ந்து பல நன்னூல்களைப் படிப்பதன் மூலம் படிப்பறிவைப் பெற்று விடுவது என்பதும், ஆனால் பட்டறிவு என்பது ஒருவர் தம் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகவோ அல்லது மற்றவர்களுக்கு ஏற்பட்ட இன்ப/துன்பங்களைப் புத்தகங்களைப் படிப்பதின் மூலம் தெரிந்து கொள்வது. நமக்கு முன்னர் வாழ்ந்த ஆன்றோர், சான்றோர், பெரியோர்கள் போன்றோர்களின் அனுபவமே மற்றவர்களுக்குப் பாடமாக அமைந்து இனிய வாழ்க்கை வாழ உதவுகிறது.
மெத்தப் படித்தவர்களை மேதாவி என்று சொல்லி, “அவர் படித்தவர்” என்று வெளியுலகுக்கு அவரை விளம்பரப்படுத்துவது கல்வி ஒன்றுதான். மனிதன் நல்ல மனிதனாக வேண்டுமென்றால் படிப்பறிவுக்குத் தேவையான நூல்களைப் “படிக்கின்ற பழக்கம்” சிறுவயது முதலே அவனுக்கு வர வேண்டும். நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து, அதில் உள்ள கருத்துக்களைப் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்ளுமாறு, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தினால்….இதுவும் ஒரு நற்பழக்கத்தில் ஒன்றாகும்.
ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை அவனிடத்தில் குடி கொண்டுள்ள பழக்க வழக்கங்களை வைத்தே எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும். ஒரு பழக்கத்துக்கு அடிமைப்படுவது மனித இயல்பு. அது நல்ல பழக்கமாகவும் இருக்கலாம் அல்லது தீயவையாகவும் இருக்கலாம். நல்லதோ, தீயதோ எந்த ஒரு பழக்கத்துக்கும் அடிமையாகி விட்டால் அதிலிருந்து மீளுவது என்பது சற்றுக் கடினமே. மற்ற தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாவதைவிட படிக்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகப் பழக்கிக் கொள்ள வேண்டுமென்பதே மேதாவிகளின் கருத்து.
இன்றைக்கு நற்பழக்கங்களில் ஒன்றான தினமும் படிக்கும் பழக்கம் மற்றும் படிக்கின்ற ஆர்வம் மக்களிடையே பெரிதும் வளர்ந்து வருகிறது என்பதற்குச் சான்றாக இங்கே ஒரு உதாரணத்தை எடுத்துச் சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் நம் நாட்டில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்பதில் ஒன்றும் பெரிய விஷயமில்லை. புத்தகக் கண்காட்சி நடந்து முடிந்தவுடன். அதை நடத்துபவர்கள் ஒரு சில தகவல்களை வெளியிடுவார்கள். 2012 ஆம் வருடத்தில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் மிக அதிக அளவில் 5000 பிரதிகள் விற்பனையான புத்தகம், காந்திஜியின் “சத்திய சோதனை” என்பதே இவர்கள் வெளியிட்டிருக்கும் தகவல். ஒவ்வொரு வருடமும் புத்தகங்கள் விற்பனையில் அதிக அளவில் லாபம் அதிகரித்து வருவதும், மேலும் அதிகத் தொகை கொடுத்தும் ஒரு புத்தகத்தை வாங்கக்கூடிய மக்களின் மனப் பக்குவம் இவையெல்லாம் எதைக் குறிக்கிறது?. படிப்பதில் மக்களுக்கு இருக்கும் ஆர்வமா? காந்தியக் கொள்கையில் மக்களுக்கு ஈடுபாடு அதிகரித்து விட்டதா? என்பது போன்ற சிந்தனைகளை எழச்செய்கிறது.
படிக்கின்ற பழக்கத்தைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் போது தானும் அதைத் தினமும் பின்பற்ற வேண்டும். “என்னைக்கோ ஒருநாள் படிச்சுக்கலாம்’ என்றெண்ணி ஒரு சில புத்தகங்களை வாங்கி அலமாரியில் அடுக்கும் சிலருக்கு, “அந்த ஒரு நாள்” என்பது தன் வாழ்க்கை முழுவதும் வராமலே போய் விடுவதுண்டு. நண்பர்களையும் புத்தகங்களையும் ஒரே விதமாகவே அணுக வேண்டும். அதாவது நல்ல நண்பர்களையோ, நல்ல புத்தகத்தையோ எப்போதுமே தன்னுடனேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது நீதிநூல்கள்.
நாள் முழுவதும் உழைத்து விட்டு, கிடைக்கும் குறுகிய நேரத்தில் ஒன்றுக்கும் உபயோகப்படாத பொழுது போக்குகளில் ஈடுபடுவதை விட, ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது என்பதற்கு இங்கே சில உதாரணங்களைக் காணலாம்.
பண்டைக்காலம் தொட்டே பழமொழிகள் நம் வழக்கத்திலிருந்தன, பழமொழிக்கு இலக்கணம் சொல்லிப் பழமொழியை “முதுமொழி” என்ற சொல்லால் தொல்காப்பியர் குறிப்பிட்டதுபோல், இந்தப் பதிவிற்குச் சம்பந்தப் பட்ட சில முதுமொழிகள் சிலவற்றைக் காண்போம்.
‘இளமைக் கல்வி முதுமையில் காக்கும்,’
‘பருவத்தே பயிர்செய்,’
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’
‘இளமையில் கல்,’
‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’
போன்ற முதுமொழிகளைக் கருத்தில் கொண்டு,
“Strike the Iron while it is Hot” ……
என்பது போல, இரும்பை அடித்து நமக்கு வேண்டிய பொருள்களைச் செய்து கொள்வது போல், நல்ல புத்தகங்களைத் தேர்ந்து படிப்பதற்குப் பிஞ்சிளம் பருவத்திலேயே நம் குழந்தைகளைப் பழக்கி விட்டால், மற்ற பழக்கங்களோடு, படிக்கும் பழக்கமும் அவர்களுக்குள் ஒன்றாகி விடும்.
இது போன்ற முதுமொழிகளைக் கருத்தில் கொண்டு, கல்வி கற்பதற்கு வயது வரம்பு கிடையாது, எல்லையும் கிடையாது என்பதற்குச் சென்ற ஏழாவது தொடரின் கடைசிப் பகுதியில் பரத்வாஜ மகரிஷியின் நீதிக் கதை ஒன்றைப் படித்தோம் அல்லவா? கற்றவை எல்லாம் மனதில் பதிய வேண்டும் என்றால் இளவயதே ஏற்ற பருவமாகும், ஏனென்றால், இப்பருவத்தில்தான், மனதில் கவலைகள், சங்கடங்கள், மற்றத் தொந்தரவுகள் இல்லாத பருவம் என்பது நாம் உணர்ந்ததே.
நமக்கெல்லாம் நிறைய நேரம் இருந்தும், நாம் ஒன்றும் பெரிதாகச் சாதிக்க நினைத்து விடுவதில்லை, கிடைக்கும் நல்ல பொழுதையெல்லாம் டிவி பார்ப்பதில் வீணாகக் கழித்து விடுகிறோம், ஆனால் சிறையில் வாடிய பண்பாளர்கள் பலர், தமக்குக் கிடைத்த குறுகிய நேரத்தை நல்ல முறையில் செலவிட்டு, சிறைச்சாலையில் கூட, தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் சிந்தித்ததால்தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பல புத்தகங்களை எழுத முடிந்தது. இதற்குச் சான்றாக இங்கே ஒரு சில உதாரணங்களைக் கூற விரும்புகிறேன்.
1934ல் பண்டித நேரு அவர்கள் சிறையில் எழுதிய ‘கிலிம்சஸ் ஆப் தி வேல்ட் ஹிஸ்டரி’ (Glimpses of World History) என்ற அரிய நூல்.
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றுசொன்ன பால கங்காதர திலகர், 6 வருடங்கள் சிறையில் கழித்த பிறகு, தனது 52 வது வயதில் சிறையில் எழுதிய “கீதா ரகஸ்யம்” என்ற நூல்.
1925ல் அடால்ஃஃப் ஹிட்லர் எழுதிய “மெயின் கேம்ப்” (Main kamp)
1963ல் மார்ட்டின் லூதர் கிங் எழுதிய லெட்டர் ப்ரம் பர்மிங்ஹாம் ஜெயில் (From Burmingham Jail)
கவியரசர் எழுதிய “மாங்கனி” என்ற நூல்.
‘கப்பலோட்டிய தமிழன்’ ‘செக்கிழுத்த செம்மல்’ என்று எல்லோராலும் போற்றப்பட்ட வ.உ.சி அவர்கள், ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டு வாடும் போது, சிரமங்களைப் பொருட்படுத்தாது, சக கைதிகளுக்கு அறநெறிகளைப் போதித்தார். கைதிகளுக்குப் புத்தகங்கள் படிக்கும் உணர்வைத் தூண்டினார். இவர் எழுதிய எல்லா எழுத்துக்களுமே கவிதை வடிவில், அனைவரின் வாழ்க்கைக்கும் அறநெறிகளைப் போதிப்பதாகவே இருக்கிறது. எழுதப்பட்ட அனைத்தும், சுய முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. சொற்பொழிவாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், படிப்பாளர் என்ற பெருமைக்கெல்லாம் உடையவர்.
எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய நீதிநெறிகளைப் போதிக்கின்ற எண்ணற்ற நன்னூல்கள் இன்று எல்லா நூலகங்களிலும், கடைகளிலும் கிடைக்கிறது. அந்த நூல்களில் சொல்லப்பட்ட அறநெறிகளை, நீதிகளை நாம் படித்தால்தான் மற்றவருக்கு எடுத்துச் சொல்லமுடியும். இன்றைய பரபரப்பான கால கட்டத்தில், மனிதன் தன்னை ஒரு வட்டத்துக்குள்ளே சுருக்கிக் கொண்டு, அலுவலகம், குடும்பம் என்ற சூழ்நிலையில் பல இன்னல்களுக்கிடையே உழலும்போது, ஏதாவதொரு விதத்தில் மனதுக்கு இதமளிக்கும் ஒரு வடிகால் தேவைப் படுகிறது அல்லவா?…
அத்தருணத்தில்தான் இந்த நற்பொழுது போக்கான “வாசிக்கும் பழக்கம்” என்பது தேவைப் படுகிறது. எத்தனையோ பொழுது போக்குகளிலும், கேளிக்கைகளிலும் மனம் ஈடுபட்டாலும், முடிவில் கற்பதற்காகக் கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் போதுதான் மனம் கண்டிப்பாகச் சஞ்சலத்திலிருந்து விடுபடுவதை நாம் உணருகிறோம். சுவாமி விவேகானந்தர், காண்டேகர், டாக்டர் மு.வரதராசனார், தமிழ்தாத்தா உ.வே.சா போன்றவர்கள் எழுதிய நூல்களைப் படித்தால் மனதில் நல்ல எண்ணெங்களை உருவாக்கும். நல்ல நூல்களைப் படித்தால் நன்மையே விளையும் என்பதைப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது பள்ளிப் புத்தகங்களைத் தவிர இதர புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவேண்டும்.
‘ஒரு நல்ல வார்த்தை பேச வேண்டுமென்றால்’ 100 புத்தகங்களைப் படிக்க வேண்டுமாம். ஆனால் 100 புத்தகங்களைப் படித்தால்தான் ‘ஒரு நல்ல வார்த்தை’ நம் வாயிலிருந்து வருமென்பர். தொடர்ந்து படிக்கப் படிக்க, பேச்சாற்றல் திறமையும் வளரும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர்கள். ‘ஆப்ரஹாம் லிங்கன்’, ‘டெமஸ்தனிஸ்’, ‘ஜூலியஸீஸரின் நண்பர் மார்க் ஆண்டெனி’ போன்ற அயல் நாட்டவர்கள். நம் நாட்டில், ‘சுவாமி விவேகானந்தர்’, ‘சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி’ இவர்களெல்லாம் தம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருந்ததால்தான் தங்களுடைய பேச்சாற்றல் மூலமாக உலக மக்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இழுக்கும் ஆற்றல் பெற்றார்கள்.
நாம் நூல்களைப் படிப்போம், படித்தவைகளை நினைவில் வைப்போம், கற்றபடி நின்றொழுகுவோம் என்ற அடிப்படையில்தான் நமது முன்னோர்கள், ஆன்றோர்கள், மேதாவிகள் அனைவரும் நமக்காக அறிவுக்களஞ்சியங்களை எல்லாம் புத்தக வடிவில் கொடுத்திருக்கிறார்கள்.
‘திருப்பூர் கிருஷ்ணன்’ அவர்கள் ஒரு புத்தகத்தில் தாம் படித்த நகைச்சுவைத் துணுக்கு ஒன்றைக் குறிப்பிட்டிருந்ததைக் கூறுகிறேன். ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது நகைச்சுவையும் சேர்ந்து கொண்டால் மேலும் மேலும் படிக்கத் தோன்றுமல்லவா?…….
ஒருவர் எப்போதுமே படித்துக் கொண்டிருப்பாராம். படிப்பதைத் தவிர வேறொன்றும் அவருக்குத் தெரியாது. எப்போதுமே புத்தகமும் கையுமாக இருப்பதைப் பார்த்த இன்னொருவர் அவரைப் பார்த்து,
நீங்கள் நிறைய நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களே?, உங்களுக்குப் பிடித்த நூல் ஒன்றைச் சொல்லுங்கள்? என்று படித்துக் கொண்டிருந்தவரைக் கேட்டாராம்.
அதற்கு அவர்,
எனக்குப் பிடித்த நூல் ‘ட்வெய்ன் நூல்’ என்று சொன்னாராம்.
அதைக் கேட்டவர், “என்ன சார்?… நான் சீரியசாகக் கேட்கிறேன், நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள்” என்றாராம்.
“நானும் சீரியசாகத்தான் பதில் சொன்னேன்!…”
“புரியவில்லையே!..” என்றார் கேள்வி கேட்டவர்.
“அதாவது, எனக்குப் பிடித்த நூல், சிறந்த எழுத்தாளராகிய “மார்க் ட்வெய்ன்” அவர்கள் எழுதிய நூல்கள்” என்று பதிலளித்தார்.
தினமும் தொடர்ந்து ஒரு மணிநேரம் படிப்போம்,
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நூலகத்திற்குச் செல்வோம்,
தினமும் ஒரு மணிநேரம் படித்த நல்ல விஷயங்களைப் பற்றிப் பிறரிடம் பேசுவோம். படிப்பதற்கு நேரம் இல்லை, எந்த உபகரணமும் தேவையில்லை, இது எல்லோருமே எளிதாகப் பின்பற்றக்கூடிய ஒரு கலை.
“The time to read is any time: no apparatus, no appointment of time and place, is necessary. It is the only art which can be practiced at any hour of the day or night, whenever the time and inclination comes, that is your time for reading; in joy or sorrow, health or illness.”
—Holbrook Jackson (1874-1948)
தொடரும்
books are good friends like you for me
very very like this sir……..
Good article about reading books…
nice topic, reading also reduces the time spent before tv. write an article about harms of tv