மலர் சபா

புகார்க்காண்டம் – 04. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை

வைகறை வரையில் காமன் திரிதல்

அன்னம் போன்ற
மென்னடை;
ஆம்பல் மலர் போன்ற
நறுமணம்;
தேன்நிறைந்த நல்வாசனையுடைய
தாமரை மலர் போன்ற
சிவந்த வாய்;
குளிர்ச்சி பொருந்திய
கருமையான மணல் போன்ற
கூந்தல்;

இவை அனைத்தும்
தன்னகத்தே பெற்றவள்
நன்னீர்ப் பொய்கை மகள்.
அவள் விழிப்பதற்கெனப்
பள்ளியெழுச்சி பாடி நின்றன
வண்டுகள்.
பள்ளியெழுச்சி கேட்ட
அவள்தம் குவளை மலர்க்கண்கள்
விழித்தெழுந்தன.

பறவைகளின் ஆரவாரச் சத்தம்
முரசொலி போல முழங்கிட,
புள்ளிகள் செறிந்த
சிறகுகள் உடைய
அழகிய சேவல் கூவிட,
முள் போன்ற
கூர்மையான வாயுடைய
சங்கும் ஒலித்து நின்றது.

இங்ஙனம்
தத்தம் முறைமைக்கேற்ப
எழுந்த அதிகாலைக்குரிய
சிறப்பொலிகள்,
துயிலாழ்ந்திருந்த
கடல்போல் பரந்து நின்ற
புகார் நகரின் மக்களை
எழச் செய்தன.

இருள் மிக்க
இரவுப்பொழுது தொடங்கிப்
புலர்ந்து நின்ற வைகறைப்
பொழுது வரையில்
நொடி ஒன்றும் உறங்காதவனாகத்
தொடர்காவல் நின்றனன்
சற்றும் சோராத மன்மதன்.

மணத்தில் சிறந்த
ஐவகை மலர்களால்
செய்த அம்பினையும்
கரும்பு வில்லையும்
கையில் ஏந்தி
மீன் பொறித்த
வெற்றிக் கொடியுடன்
உலாவிக் கொண்டிருந்தனன்
காவல் காதல் மன்மதன்.

அவன் தம் ஆட்சியில்
காவல் மிக்குச்
சிறந்திருந்தது
பூகார் நகரம்.

வெண்பா

தன்னிடம் உறவு கொண்டார்க்கெல்லாம்
குளிர்ச்சி தந்தருளுமாம்;
பகை கொன்டார்க்கெல்லாம்
வெப்பம் கொண்டு தருமாம்
சிறப்புப் பெற்ற சோழ மன்னனவன்
வெண்கொற்றக் குடையது.
அதனை ஒத்த தன்மைத்து
அந்த நிலவு.

அந்நிலவுதானும்
மலர்கள் இதழ் அவிழ்க்கும்
இரவுப்பொழுதினில்
வானமதில் தவழ்ந்து சென்று….

தலைவனைக் கூடியிருந்த
மாதவிக்கு இன்பத்தையும்
தலைவனைப் பிரிந்து நின்ற
கண்ணகிக்குத் துன்பத்தையும்
தந்து தகித்தது.
(அந்திமாலைச் சிறப்புச்செய் காதை முற்றிற்று. தொடர்வது இந்திரவிழவு ஊர் எடுத்த காதை.)

அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 72 – 84
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram10.html

படத்துக்கு நன்றி:
http://blog.artoflegendindia.com/2010/10/kamadeva-god-of-love.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.