தேர்தலில் போட்டியிட, நடிகர் டிங்கு விருப்ப மனு
தமிழகச் சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சின்னத் திரை நடிகர் டிங்கு விருப்ப மனு அளித்துள்ளார்.
ரஜினியின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, கமலின் ‘கல்யாண ராமன்’ உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் டிங்கு. இவர் இப்போது சின்னத் திரை நடிகராக வலம் வருகிறார். ‘திருமதி செல்வம்’, ‘கோலங்கள்’ போன்ற மெகா தொடர்களில் நடித்துள்ளார். இவர் ஜி. கே. வாசன் பேரவையில் மாநில துணைத் தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் நடிகர் டிங்கு, 2011 மார்ச்சு 18 அன்று, சின்ன திரை நடிகர்கள் 50 பேருடன் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து, சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சினிமா, சின்னத் திரையில் நான்ன் நடிகனாக வலம் வருகிறேன். அத்துடன் அரசியல் ஈடுபாடும் எனக்கு உள்ளது. ஜி.கே. வாசன் பேரவையில் மாநிலத் துணைத் தலைவராகவும் இருக்கிறேன். இதன் மூலம் பல சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறேன். இப்போது எம்.எல்.ஏ சீட்டு கேட்டு காங்கிரஸ் கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளேன். திருமயம், ஆலந்தூர், ஆவடி, மயிலாடுதுறை ஆகிய இந்த நாலு தொகுதிகளுக்கும் மனு செய்துள்ளேன். இதில் ஏதாவது ஒரு தொகுதி கிடைக்கும் என நம்புகிறேன். எனக்கு ஆதரவாக சினிமா மற்றும் சின்னத் திரையில் ஏராளமானோர் உள்ளனர். எனவே நிச்சயம் என்னால் ஜெயிக்க முடியும். நான் விருப்ப மனு செய்யும்போதே கிட்டதட்ட 50 சின்னத் திரை நட்சத்திரங்கள் என்னுடன் திரண்டு வந்துள்ளனர். இதிலிருந்தே என் பலத்தைத் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
(பல கட்சிகளிலும் ஏராளமானோர் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், அவை அனைத்தையும் செய்தியாக வெளியிட இயலாது. ஆனால், நடிகர் டிங்குவின் தன்னம்பிக்கையைப் பாராட்டி, இந்தச் செய்தியை வெளியிடுகிறோம்.)