அன்புச் சகோதரர் ஆண்ட்டோவிற்கு கவிதாஞ்சலி!
பவள சங்கரி
மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய்
முட்டிமோதி முளைவிடும் தருணமதில்
புயலாய் சுழட்டியடித்த வீச்சில்
பொருளாதாரமும் வாழ்வாதாரமும்
கேள்விக்குறியாகிப்போக
சிறுகன்றும் சீர்தூக்கி வாழும்
வகையறிந்து வல்லமையாய்
வடிவாய் வளர்ச்சியும் கொண்டு
வண்ணமிகு மலர்களும் கனிவாய்
கனிகளும் ஈன்று கற்பகவிருட்சமாய்
தமிழ்கூறும் நல்லுலகோருக்கு
கருணை மழையாய் கணிப்பொறி
கருத்தாய் கற்கும் வகையும் காட்டி
ஆக்கமும் ஊக்கமும் அலுக்காத
நீண்டதொரு இலட்சியப் பயணமும்
கணிப்பொறி ஆங்கில மாயையை
தெள்ளுதமிழ் விருந்தாய் தெளியச்செய்து
தெவிட்டாத தேனாய் அள்ளித்தந்து
திகைப்பாய் திரும்பிப் பார்க்கும் நேரம்
திகிலாய் மறைந்து நின்று
திக்கற்றவருக்கு தெய்வம் துணையென்று
நம்பச்செய்து நலிவடைந்தோருக்கு
நற்கருணை மழையாய் பொழிந்துநின்று
தாயிலியாய் தவித்து தத்தளித்த
சிறார்களுக்கு தாயுமாய் தந்தையுமாய்
தத்தெடுத்து தவம் மேற்கொண்டு
வாழ்ந்த வள்ளல் ஆண்ட்டோ பீட்டர்
ஆண்டுகள் சிலவே வாழ்ந்து போயினும்
கணினித்தமிழ் உள்ளமட்டும்
அழியாமல் நிலைத்து நிற்கும்
நித்தியமான பண்பாளர்!
வீடுவெல்ல சோதரன் நீ விரைந்தாலும்
தமிழ்நாடு கூறும் நன்றியுனக்கு!