மீசை!
பாகம்பிரியாள்
நறுக்கான என் மீசையைப்பார்த்து மோகித்தே,
நாடி எனைத் திருமணம் செய்து கொண்டாள் என்னவள்.
மகிழ்ந்திருக்கும் பொழுதுகளில் அதற்கு செல்ல கவனிப்புகள் உண்டு.
மோதல்களின் போது, வலிக்க வலிக்க இழுத்து, கூடவே
முரட்டு ராட்சசா என்ற பட்டமும் தருவாள் அவள்.
மகன் பிறந்த பின், மௌசு கூடிப்போனது என் மீசைக்கு! .
முகத்தோடு வைத்து கொஞ்சுகையில், பிஞ்சது நெளிகையில்,
மெல்லவே வந்து விலக்கி விட்டு, பெருமிதமாய்ச் சிரிப்பாள்.
பேசத் தெரிந்தபின், மகனுக்கு கதையெல்லாம் சொல்லி,
முத்தத்தைப் பெற எத்தனிக்கும் பல சமயங்களில்,
” மீசை குத்துது, வேணாம்பா” என்ற மகன் சொன்னதால்,
மெல்லவே முறிந்தது மீசை மேல் வைத்த ஆசை.
அழகு நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது,
ஓர் சந்தேகம். மீசையின்றி முகம் மாறுவதை மழலை
மனது எப்படி ஏற்கும்? அழுவானோ? புறந்தள்ளுவானோ?
கூடவே மோதியது அடி மனதிலிருந்து-
ஓர் நிழற்காட்சி இதே போல் அப்பா அமர்ந்திருந்த
அந்த நாளும், அவர் அனுபவித்த இனம் புரியா வலியும்!
படத்திற்கு நன்றி
http://vinrowe.blogspot.in/2008/12/moustache-big-ears.html
மீசை வழியே
நல்ல
பாசக் கவிதை…!
-செண்பக ஜெகதீசன்…
பாசக் கவிதை என்று பாராட்டு தந்த திரு செண்பக ஜெகதீசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
இந்த அனுபவம் எனக்கே உண்டு. என் பெண் குழந்தைக்காக என் கட்டை மீசையை நறுக்கு மீசையாக சுருக்கிக் கொண்ட அனுபவம் எனக்கும் உண்டு.
திரு முகில் தினகரன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.