அந்த வெடி வெடிக்கையில் அந்த விதைகள் முளைக்கிறது..

0

வித்யாசாகர்

 

கொலம்போ விமான நிலையைம். தலையை ஒதுக்கி வாரி, தலைப்பாகையை எடுத்து மேல்கட்டிக் கொண்டு, காவித் துண்டு ஒன்றினை அகல விரித்து மார்பு முதுகு சுற்றி பின்னிடுப்பில் சொருகிக்கொண்டு, பொத்தான்போலயிருந்த மினி காமிரா ஒன்றினையெடுத்து துண்டு துண்டாக கழற்றி சிறு சிறு பிரத்தியேக காகிதத்தில் சுற்றி மடித்து அதை சாப்பாட்டுப் பொட்டலத்திற்கு நடுவில் திணித்துவைத்துக்கொண்டு தோள்பையொன்றினை எடுத்து மாட்டிக்கொண்டவாறு கழிப்பறையிலிருந்து வெளியேறி இமிக்ரேசனில் நுழைந்து அதிகாரிக்கு வணக்கம் தெரிவிக்கிறானவன் ஆங்கிலத்தில்..

“பாஸ்போர்ட் கொடு..”

“ம்ம்.. “

“உன் பேரென்ன ?”

“கலிங்கா தராசி”

“இந்துவா ?”

“இல்லை”

“எங்கிருந்து வர? “

“இந்தியாவுலருந்து”

“இங்க எதுக்கு வர ? கடும் போர் நடக்குது தெரியுமில்ல.. (?)”

“தெரியும், நான் போற இடத்துல சண்டையெல்லாம் இல்லைன்னு சொன்னாங்க”

“எங்க போற? ஸ்பெசல் பர்மிசன் எதனா இருக்கா?”

“ம்ம்.. கெண்டி க்கு போறேன், அங்கிருக்கும் கெண்டி சிங்கள பௌத்த மையம் ஒரு உலகளாவிய மாநாடு நடத்துது அதுக்குப் போறேன்”

“அழைப்பிருக்கா?”

“ம்ம்”

“எங்கே காண்பி”

“இதோ., அழைப்பும் அனுப்பி, அதோட அரசிடம் ஒப்புதல் வாங்கியும் அனுப்பியிருக்காங்க பாருங்க”

“ம்.. ம்.. சரிதான் என்ன விசயமா போற”

“உலக பெளத்த ,மாநாடு நடக்குதுல்ல; அதுல கலந்து பேசப்போறேன்”

“நீயா?”

“ஏன், பௌத்தம் நான் பேசக்கூடாதா? பௌத்தத்தின் கோட்பாடு, ஆசையை அறு, அதுவே துன்பத்திற்குக் காரணம், ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம், மனம் சொல் செயல் ஆகியவற்றில் தூய்மை வேண்டும், எப்போதும் உண்மையே பேசவேண்டும், எல்லாம் உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும் என்பன எனக்கு மிக பிடிக்கும்..”

“ஓ.. மகிழ்ச்சி மகிழ்ச்சி இங்க எதைபத்தி பேசப் போற?”

“பௌத்தம் சொல்லித் தரப்போறேன்”

“வாட்………….., நாங்க நாடு தழுவிய பௌத்தமதத்தினர், எங்களுக்கேவா..?” என்றவன் கேட்பதற்குள் இவன் முந்திக்கொண்டான்.

“உங்கள் மண்ணில் தானேடா பாய்கிறது ரத்த ஆறு? அதிலென்ன முகம் கழுவிக் கொண்டுள்ளனரா உங்களுடைய பௌத்த துறவிகளெல்லாம்? என்று வெடுக்கென கேட்கநினைத்திருப்பான் போல. அதை மறைத்துக்கொண்டு “எல்லோருக்கும் பரவலா தெரிலை இல்லையா, அதான் நான் அதைபத்தி பேசப் போறேன்” என்றுசொல்லி மழுப்பினான்..

“ஓ.. சரி சரி எங்கருந்து வர்ற?”

“வடக்கு நாடு, தமிழகம்..”

“நோ நோ … தமிழனா நீ ? நீ ஆங்கிலத்துல பேசவே உன்னை எங்க இனம்னு நினைத்தேனே, உனக்கெல்லாம் அனுமதி கிடையாது வெளியே போ..”

“எனக்கு சிறப்பு அழைப்பு இருக்கு, நான் பௌத்தம் பத்தி பெருசா பேசப் போறேன்..”

“உள்ளேப் போனா உயிருக்கு நாங்க உத்தரவாதம் இல்லை பரவாயில்லையா?”

“யாருக்குதான் இங்க இருக்கு?”

“வாட்…………..?”

“இங்க நம்ம எல்லோருமே அப்படித் தானே, உங்களை மாதிரி தானே நானும்னே(ன்)”

“சரி சரி.. ம்ம்.. பாஸ்போர்ட் புடி, அதோ அந்த அறைக்குப் போ, உள்ள யாரும் இருக்க மாட்டாங்க சும்மா போயிட்டு உள்ள நில்லு, பீப் சத்தம் வந்ததும் வெளிய போய்டு”

அவன் சோத்துப் பொட்டலத்தை எடுத்து வெளியே மேஜையில் வைத்துவிட்டு உள்ளேப் போக, அந்த ஆர்மியும் கூட ஒருவரும் ஓடி வந்து அவசரமாக அந்த பொட்டலத்தை எடுத்துப் பிரிக்க அவன் உள்ளிருந்து வெளியே வந்து ஐயையோ அது சோறுங்க வாசனை அடிக்கும் அதான் வெளியவைத்தேன் என்றிழுக்க, ஆர்மிகாரர்கள் அவசரமாக அதைப் பிரித்து மேலே கிளறி சற்று கீழேயும் கொட்டிவிட ஒரு ஊசி போன நாற்றம் வேறு அடிக்கவே கண்கள் பிதுங்கியவாறு மூடியும் மூடாமலும் அவனிடம் நீட்டினார்கள். அவன் அதை வாங்கி மடித்துவைத்துக் கொண்டு நமுட்டுச் சிரிப்போடு நன்றி கூறியவாறு வெளியேறினான்..

“உன் நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம், சிறப்பு காவல்படை உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்கும், எங்கு அத்துமீறினாலும் அங்கே உன் உயிர் விலையின்றி போகும்; எச்சரிக்கை!!”

‘எங்கள் உயிர் விலைபோயிதான் வருடங்கள் பல ஆகுதேடா..’ என்று நினைத்துக் கொண்டே அந்த ஆர்மிக்காரனைப் பார்த்து முறைத்தான் கலிங்கன் எனுமந்த வாலிபன்..

“என்ன பார்க்குற ?”

“ஒண்ணுமில்ல மிக்க நன்றி..”

“நன்றியெல்லாம் வேண்டாம் போ..”

“கலிங்கன் ஏதோ மனதிற்குள் முனகிக் கொண்டே விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து அவனை கொண்டுபோக வந்த நபரை சந்தித்து அவரோடு வண்டியிலேறி கெண்டி மாநகரை நோக்கி விரைந்தான்..

இடையே இடையே அவனை கொண்டுசெல்ல வந்த ஓட்டுனர் ஏதேதோ கேட்டு விசாரித்துக் கொண்டே வந்தான்.

“எப்போ..ண்ணே பொறப்புட்டீங்க”

“ஊர்ல இருந்து காலைல புறப்பட்டேன், மதியம் சென்னை வந்து விமானம் ஏறினதும் ஒரு மணி நேரத்துல இங்க வந்துட்டன் மன்னாரு..”

“எதனா கேட்டானுங்களா ஏன் போற என்ன விசயம்னு?”

“கேட்டான் கேட்டான்..”

“போர் நடக்குறதால தமிழன்னா உள்ளேயே விடுறதில்லைன்னு கேள்விபட்டேன் (?)”

“ஆமா, முதல்ல அப்படித் தான் பண்ணான், பிறகு பௌத்த மாநாடுன்னு நீ அனுப்புன கடிதம் காட்டுன பிறகுதான் போடான்னு விட்டுட்டான், அது போகட்டும் –

எப்படி இருக்கு நிலைமை, மண்ணை மீட்பாங்களா?”

“எங்கண்ணே.., உயிரை கொடுக்குறாகண்ணே பாவம், எப்போ யார் சாவுறான்னு தெரியமாட்டேங்குது, அதுலயும் வன்னி முழுக்க நெருப்பும் புகையுமா அடஞ்சி கெடக்கு”

“இவனுங்க ஓயவே மாட்டாங்களா? நம்ம மக்களுக்கு விடுதலையே கிடைக்காதா? செய்தியில காட்டும்போது மட்டும் ஏதோ ஒண்ணுமேயில்லாத மாதிரி காட்றானுங்க, நாங்க கூட ஏதோ போர்தான் முடிவுக்கு வந்துடுச்சோன்னு நம்பிட்டோம், பிறகு நீ அனுப்புன மின்னஞ்சல் பார்த்துதான் எல்லாமே அதிர்சியானோம், இனி இங்க ஒரு உயிர் மண்ணுல விழுந்தாக்கூட அங்க ஒரு புரட்சி வெடிக்கும், தமிழன்னா என்னன்னு இனி காட்டனும்டா மன்னாரு, இங்கே பாத்தியா பொத்தான்ல கேமரா வெச்சிருக்கேன்..”

“ஐயோ ஏர்போர்ட்ல புடிக்கில”

“அவுங்கப்பன் இல்லை அவனோட பாட்டன் வந்தாக் கூட என்னைப் புடிக்கமுடியாது”

“தனியறை சோதனை ?”

“எல்லாம் செஞ்சாங்க”

“அப்புறம் எப்படி”

“பார்ட்ஸ் கொண்டுவந்தேன் மன்னாரு”

“ஓ….ஹோ..”

“வெளிய வந்து உனக்காக நின்னப்பதான் டாய்லெட்ல வெச்சி பிக்ஸ் பண்ணேன்”

“ஓ..”

“இங்க பாரு.. மன்னாரு..”

“அண்ணே அண்ணே ஆர்மிகாரன் வாறான் கையை கீழப் போடுங்க அந்த பையை எடுத்து கீழே வையுங்க..”

“ஹேய்.. நில்லு நில்லு..”

“ .. “ வண்டி உறுமி நின்றது

“எங்கருந்து வறீங்க..”

“கொலம்போவுலருந்து”

“ஏன் அங்கே போன?”

“விமானநிலையத்துலயிருந்து.. இவரைக் கூட்டியாறேன்”

“எந்த ஊரு நீ இந்தியாவா?”

“ஆமாங்க..”

“பாஸ்போர்ட் எங்க ?”

“இதோ..”

“உன் பேரென்ன ?”

“கலிங்கா!!”

உன்னை கேட்டனா? ஏன் சாருக்கு பேர் தெரியாதா நீ கீழ இறங்கு முதல்ல’

“பேரு கலிங்காங்க., தராசி குடும்பம்”

“ஓ சிங்களமா?”

“முன்ன போனவங்க, அப்படி கூட இருக்கலாம், முழுப்பேரு கலிங்கா தராசியா, தராசின்னுதான் கூப்பிடுவாங்க. ஊரு தமிழ்நாடு, இந்தியா” அவனே கலிங்கனே குனிந்து ஆர்மியை வணங்கிவிட்டு சொன்னான்.

“நீ.. நல்லவனாத் தான் தெரியற –

இவன் யாரு…., ஏன்டா அவனுக்கு நீ பெரிய ஆளா?”

“இல்லீங்க, நான் வண்டி ஓட்றவனுங்க, அவரைக் கூப்பிட வந்தேன்”

“எங்க போறீங்க ரெண்டுபேரும்..”

“கெண்டி பௌத்த மாநாட்டுக்கு போறோம், இதோ அழைப்பிதழ் இருக்கு.. பாருங்க”

“ஓ அப்படியா, புத்தஞ் சரணம்.. புத்தஞ் சரணம்…, போங்க போங்க.., யாராச்சும் கேட்டா இந்த அழைப்பிதழை முதல்ல காட்டுங்க”

ஓ.. சரி சரியென்று தலையாட்டிவிட்டு, ஏறி வண்டியில் அமர்ந்ததும் கலிங்கனுக்கு சற்று வியர்த்துதான்போனது”

“தமிழன்னாலே சிங்களன்கிட்ட ஒரு மரியாதையே இல்லல்லே மன்னாரு ?”

“மரியாதையா ? இழிவா பார்ப்பாங்கண்ணே, (இ)தோப் பாருங்க இங்க ஒருத்தன் வறான்.. “

“இவனும் கேட்பானா?”

“ஆயிரம் பேர் வந்தா ஆயிரம் பேரும் கேட்பான், பேசாத இருங்க”

“நிறுத்து நிறுத்து, எங்க போற ?” லட்டி வைத்து வண்டியின்மீது தட்டுகிறான் அந்த ஆர்மிகாரன்

வண்டியை உடனே நிறுத்த –

“எங்க போற ?”

“கெண்டிக்கு..”

“எங்கருந்து வர ?’

“நான் கெண்டி, அவரு தமிழ்நாடு, இந்தியா”

“நீ என்னத்துக்கு? பாஸ்போர்ட் எங்…”

“பௌத்த மாநாட்டுக்கு போறேங்க, அனுமதி கடிதமிருக்கு பாருங்க.., இதோ பாஸ்போர்ட்”

“ம்ம் போ போ..”

“என்னடா மன்னாரு வழியெல்லாம் இப்படிதானா? நெறைஞ்சிக் கிடக்குறானுங்களே..”

“நம்மலை மட்டும்தான் இப்படி சலிப்பானுங்கண்ணே..”

“சரி என்னை அங்க கூட்டிகிட்டு போயேன் வன்னி பக்கம்”

“ஐயோ ஆபத்துண்ணே!!”

“ஏன் இப்படி பதறுற?”

“உயிரோட திரும்பி வர முடியாது”

“எனக்கு உயிர் வேண்டாம் மன்னாரு, அந்த மண்ணுக்குப் போகனும், அப்படி ஒருவேளை நான் அங்கேயே இறந்துட்டா, பின்ன அங்கருந்து என் தோழர்கள் இம்மண்ணுக்காக என் மரணத்திலிருந்து போராடுவாங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு மன்னாரு, நீ நேரா வண்டியை அங்கே விடு..”

“இல்லைண்ணே, இப்ப வேண்டாம், மாட்டிகிட்டா, அநியாய சாவாப் போகும், இன்னைக்கு இரவு வேணும்னா காட்டு வழியாப் போவோம்..”

அவர்கள் பேசிக்கொண்டே, அந்த விழா நடக்குமிடம் சென்று சேர்ந்தனர். கலிங்கன், எல்லாவற்றையும் சுற்றி சுற்றி பார்த்தான். அங்கே அதே மண்ணின் ஒரு புறத்தில் போர் நடந்துக் கொண்டிருக்க, இங்கே இவர்கள் ஆடிப்பாடி களித்துக் கொண்டிருப்பதை காண வேதனையாக இருந்தது. மனதை அடக்கமுடியாமல், அங்கிருந்து புறப்பட்டான்.

விரிந்த மார்பும் ஆறடிக்கு அதிக உயரமும், கனலென தகிக்கும் கண்களும், தலையில் சுற்றிய காவிநிற தலைப்பாகையும் பைஜாமா உடுத்தி தோளில் மாட்டிய பையுமென காண்பதற்கு மலை கடக்கும் சாமிபோலிருந்தான் கலிங்கன். எதிர்த்துநிற்குமொரு கூட்டத்தில் பத்து நபரையாவது சுலபமாக சுழற்றிவீசிடத் தக்கதொரு லாவகமும் கம்பீரமும் அவனுடைய உடல்மொழியில் பொதிந்திருந்தது. எட்டி எட்டி வைத்த ஒவ்வொரு காலடியின் வேகத்திலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழுறவுகளிலிருந்து ஒருவரையேனும் காத்துவிடவேண்டுமெனும் தவிப்பு அவனுக்கு கூடிக்கொண்டேயிருந்தது. மறைமுக மலைப்பாதை ஒன்றினூடாக நடந்து ஆற்றைக் கடந்து மறுநாள் விடியும் நேரத்தில் வன்னி வந்திருந்தான் கலிங்கன்.

போர் நடக்குமிடம் அதிபயங்கரமாக இருந்தது. புகை மூடிய வெளிச்சத்தில் சூரியன் மறைந்திருக்க, எங்கும் வெடி சப்தமும் ஓட்டமும் கத்தலும் கதறலுமென அவதிப் பட்டுக் கொண்டிருக்குமொரு தாய்மண்ணைக் காண்கையில் கைகாலெல்லாம் மனசோடு சேர்ந்து களிங்கனுக்கு நடுங்கத்தான் செய்தது. குத்திட்டு நின்ற கால் கை மயிர்களை நீவி விட்டுவிட்டு, அருகிலிருந்த ஒரு குளத்தில் இறங்கி நீர் மோந்து முகத்தில் அடித்தான். தலையிலெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டான்.

நனைந்த தலையில் துணி வைத்து சுத்திக் கொண்டு, குளத்திலிருந்து ஏறி ஒரு காட்டிற்குள் புகுந்து உக்கிரமாக போர் நடக்கும் வேறொரு ஊரின் ஓரப்பகுதியில் அமைந்திருந்த மக்கள் வசிக்குமொரு  இடத்தை நோக்கி வந்து அங்கிருந்த ஒரு பெரிய மரத்தின் மீதேறி ஒசரமாக நின்றுக் கொண்டான்.

மேலிருந்துப் பார்க்கையில், பச்சைநீர் பரவி ஊரெங்கும் கவிழ்ந்துக்கொண்டதுபோல், ஒரு செந்தாமரை ஊரெங்கும் இதழ்பரப்பி பச்சையாக விரிந்திருப்பதுபோல் பசுமை பூத்திருந்தது வன்னி மண். எழில் செறிந்த ஒரு மண்ணின் நடுவே, எரிமலை குமுறுவது போல் வெடித்து புகைந்துக் கொண்டிருந்தன அந்த உரிமைக்கான போரும், போரிடையே சிக்கிக்கொண்ட வன்னி மண்ணும்.

எதிரிகள் நெருங்கி வன்னியின் பாதியை நெருங்கிவிட்ட செய்தி மரணத்தை காற்றில் கலந்ததுபோல் கலந்து காற்றோடு காற்றாக வந்து காதில் விழ, பதற்றமெங்கும் பரவி, இருக்கும் இடத்தை எப்படியேனும் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் உயிரை துப்பாக்கியில் அடைத்துக்கொண்டு போராடினர் மொத்தத் தமிழரும் களத்திலிறங்கி.

ஒரு இனத்தின் விடுதலைக்கான வேட்கையை, தான் ஒடுக்கப்பட்டதன் நியாயத்தைக் கோரிய மனிதர்களை, மண்ணில் மார்தட்டி விளைந்திருந்த வீரத்தையென தமிழரின் ஒட்டுமொத்த பெருமதிப்பையும் தனது நயவஞ்சகத்தால் கொச்சைப்படுத்தி அவர்களுக்கு தீவிரவாத முகத்தை அணிவித்து கூண்டோடு கொண்றுதீர்க்கும் நாடுகளை மானசீகமாக சபித்துக் கொண்டிருந்தனர் அம்மக்கள்..

திடீரென மேலே பறந்துவந்த விமானமும் அடுக்கடுக்காக வீசும் குண்டுகளும் கைக்கெட்டிய உயிரைப் பறித்துக்கொள்ள; களிங்கனும் அவனோடு சிலருமாய் சேர்ந்து ஓடி ஓரிடத்தில் மறையவேண்டி அருகிலிருந்த ஆற்றின் வழியே இறங்க அங்கொரு ஆர்மி கும்பல் அவர்களை கண்டு விரட்டியது..

திரும்பிச் சுட முடியாத ஒரு நிலையில் அந்த கூட்டம் கலிங்கனையும் சேர்த்தணைத்துக் கொண்டே ஓடியது. கலிங்கனுக்கும் உயிரென்றாலென்ன யெனும் கேள்விக்கான பதில் தெரியும் நேரமிதாகயிருந்தது. முடிந்தால் ஓடிப் பிழைத்துக்கொள்ளெனும் சவாலொன்றினை எதிர்கொள்ளுமொரு உணர்வு நரம்புகளில் எழும்பிப் புடைத்துக்கொள்ள, முழு பயமும் வந்து முகத்தில் அறைந்ததுபோல் ஓடினான் கலிங்கன்..

தன் மக்களைப் பார்க்கவேண்டும் அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணம் கொண்டு வந்திருந்தாலும் அவனுக்கு இப்படி ஒரு அனுபவம் மரணவாசல் வழியே ஓடும் ஒரு கொலைக்காரனைப் போல், தன்னை தானே பார்க்குமிந்த அனுபவம் மிக கொடூர மரணவேகம் கொண்டதாக இருந்தது.

வேறு வழியின்றி, ஓடி ஓடி ஓரிடத்தில் மொத்தபேரும் புகுந்துக் கொள்ள அந்த கூட்டத்திலிருந்து ஒரே ஒருவன் அந்த ஆர்மிக் காரர்களிடம் மாட்டிக்கொள்ள அவனைப் பிடித்து துப்பாக்கியால் குத்தி மண்டையில் அடித்து வாயில் துப்பாக்கி முனையைக் கொண்டு தாக்கி ஏதோ விசாரிக்கிறார்கள்.

அவன் மரணத்தை காரி எச்சிலின் வழியே அவர்களின் முகத்தின் மீதுமிழ.. அந்த அரக்க மனிதர்கள் கத்தியெடுத்து உயிரிருக்கும்போதே கை வேறாக கால் வேறாக வெட்ட இன்னொருவன் துப்பாக்கியை வைத்து அவரின் உடல் முழுதையும் சல்லடை சல்லடையாக சுட்டு தூர எறிகிறான்.

அந்த செத்த உடம்பை வேறு இன்னும் இரண்டு பேர் சென்று காலால் எட்டி உதைத்து விட்டு, அதன்மீது காரி உமிழ்ந்துவிட்டு புகைப்படம் எடுக்கிறார்கள். பின் அங்கிருந்து இவர்கள் இருக்கும் இடம் நோக்கித் தேடியவாறு வெறிபிடித்தாற்போல் ஓடி வருகிறார்கள் அந்த கூட்டத்தினர்.

கலிங்கனுக்கு கண்கள் சிவந்து உடம்பெல்லாம் வியர்த்து கைகாலெல்லாம் ஆடி ஒரு கிலி பிடித்ததுபோல ஆகியிருந்தான். அடுத்த நொடியின் எந்த நகர்விலும் நான் இறந்துவிடுவேன் எனும் பயம் உள்ளே அவனைப் பற்றிகொண்டது..

இங்கே நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை இவ்வாறு கேள்வியுற்று, சிலதை படங்களில் நண்பர்கள் மூலம் பார்த்து பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கிறான் கலிங்கன். என்றாலும், பௌத்த விழா வந்து தன் மண்ணைத் தொட்டுப் போகும்’ பார்த்துப்போகும் ஆசையொன்றே இருந்து இங்கு வந்திருந்தான். ஆனால் – இங்கு நடக்கும் சம்பவங்களைப் போன்றெல்லாம் அவன் கனவில் கூட கண்டதில்லை.

மார்பு மேலும் கீழுமாக இறங்கி ஏறி விடாது மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. இடையிடையே அம்மா அம்மா என்று பெருமூச்சு விட்டு பிதற்றிக் கொண்டிருந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் அங்கே வந்துசூழ்ந்த தமிழ்போராளிகளில் சிலர் அதைக்கண்டு அவனை அடையாளம் கண்டுக்கொள்ள “டேய்.. நம்மட தமிழ்நாட்டண்ணன் இடமறியாது வந்திருப்பார் கொண்டுபோங்கள்” என்று சொல்லி ஓடி வந்து சூழ்ந்துக்கொண்டனர். அவன் பயத்தில் மூர்சையாகிவிடுவதைப் போலிருந்தான்.

“அண்ணே.. உங்களை யாரு இங்க வரச் சொன்னது, பயப்படாதீங்க, சுவாசத்தை நல்லா இழுத்து இழுத்து விடுங்க, அதிகமா பயப்படாதீங்க மூச்சு நின்னு போயிரும், அதுக்குபதிலா நீங்க ஒரே ஒரு எதிரியையாவது கொன்னுட்டு சாவலாம்..” என்றொருவர் சொல்ல –

கலிங்கனுக்கு அந்த வார்த்தை அசுர பலத்தைத் தந்தது. “ஆம், ஆம் அதுதான் சரி. இல்லை, எனக்கொன்றும் பயமில்லை இனி பயமில்லை, முகத்தை உதறி வெளிறிய முகத்தை வழித்துவிட்டுக் கொண்டான்,  மார்மீதிருந்த துணியை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு புறப்படுங்க புறப்படுங்க நான் வரேன் வரேன் வாங்க போகலா…மென்றான்..

 “ஷ்… சத்தம் போடாதீங்க, இங்க எப்படியும் ஆமிக்காரர்கள் வந்துவிடுவார்கள், இங்கருந்து முதலில் ஓடணும்.., ஓடி எப்படியாவது அந்த கட்டடம் மேல ஏறிட்டா போதும் அடுத்த ஒன்றிரண்டு மணித்துளியில ஏர்பஸ் வந்திடும் சீக்கிரம் மூவ் மூவ்.. கார்மல் குரலெழுப்பி கட்டளையிட எல்லோரும் நகர்ந்து நாலுக்கால் பாய்ச்சலில் ஓடினார்கள்.

ஓடி அவர்கள் அந்தக் கட்டிடத்தை நெருங்கப் போவதற்குள் கலிங்கனுக்கு மூச்சிரைத்து மார்பை அடைத்தது. அதற்குப் பின் ஒரு நொடி கூட ஓடமுடியாதது போல் பொதீரென அவன் கீழே விழ, ஆர்மிகாரர்கள் அங்கு வந்து நிற்க அதை கலிங்கன் வேறு பார்த்துவிட..

ஐயோ செத்துட்டமோ எனும் பதற்றத்தில் எழுந்து மீண்டும் ஓட எத்தனிப்பதற்குள் இன்னொருவர் வந்து கலிங்கனை தூக்கி விட்டு போ போ ஓடு ஓடுன்னு விரட்டி நகர்வதற்குள் ஆர்மிகாரனில் ஒருவன் தன் துப்பாக்கியை தூக்கி எரிய.. மேலே அதேநேரம் விமானம் வர, அவர்கள் ஓடி ஏறிவிடுவதற்குள் அந்த துப்பாக்கி சீறிவந்து அந்த தூக்கிவிட்டவனின் மீது பட்டு அவன் கீழே விழுந்து எழுவதற்குள் ஆர்மிகாரர்கள் ஓடிவந்து அவனைப் பிடித்து விடுகிறார்கள்.. விமானம் மேலே சர்ரென பறந்துவிடுகிறது.

விமானத்தோடு அந்தக் கூட்டத்தை விட்டுவிட்ட கோபக்கொந்தளிப்பில் அவனைப் பிடித்து கொண்டுபோய் அருகே கொதிக்கக் கொதிக்கயிருந்த தார் காய்ச்சும் எந்திரம் போன்ற ஒன்றில் தள்ளிவிட, அவன் துடித்தெழுந்து துள்ளி கீழே விழ மீண்டும் அதனைத் திறந்து அந்த கொதிக்கும் நீர்மத்தை அவன் மீது துள்ளத்துடிக்க பாய்ச்சிவிடுகின்றனர். அது அவனைக் கரைத்துக்கொண்டு வெப்பத்தில் குழம்பாக உருகி ரத்தமும் குழம்புமாகக் கலந்து வேறொரு நிறத்தில் ஒரு பிண்டம்போல அவனை உருக்கிக்கொண்டு தரையில் உருளுகிறது..

கலிங்கனின் கண்கள் அழையினாலும் கதறலினாலும் அலறி மூடிக்கொள்ள உடம்பெல்லாம் துடிதுடித்துப் போனது. அவனின் காமிரா கண்கள் மட்டும் இவைகளை எல்லாமே கண்கொட்டப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் இயக்கியபோதெல்லாம் அந்த காமிரா கண்கள் ஒவ்வொரு நொடிப்பொழுதின் அசைவையும் சேகரித்து வைத்துக் கொண்டேயிருந்தது.

அதற்குள் விமானம் மேலே பறந்து வேறொரு எல்லைக்குள் போக.. அவனை சமாதானப் படுத்தி, வந்த விவரம் மற்றும் அவனைப் பற்றிய விவரமெல்லாம் கேட்டுக் கொண்டு அவனை தன் வீட்டிற்கு கொண்டுபோனான் கார்மல்.

கார்மல் அந்தப் பகுதியில் போராடப் பணிக்கப்பட்டிருந்த போராளிகளின் உபதலைவன். மலையுச்சியின் மேலேயொரு ஒதுக்குப்புறத்தில் பெரிய அரங்கமொன்றை அமைத்து அதன்மூலம் எதிரிகளைக் கொன்று மண்மீட்டுக் கொண்டிருக்கும் போராளியவன்.

கார்மலின் வீடுநிறைய யிருந்த பொதுவான மரணபயத்தைக் காட்டிலும் அன்பு அங்கே மிக அதிகமாகயிருந்தது. விடியலின் பொழுதொன்றில்தான் அவர்களின் விமானம் வந்திறங்கி நிற்க, கார்மலின் அம்மா ஓடிவந்து உபசரிப்போடு அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்து, எல்லோருக்கும் ஊக்கபானம் ஊற்றி அருந்தக்கொடுத்து உடைமாற்ற சொல்லி இதர விவரங்களைக் கேட்டு நிலவரம் அறிந்துகொண்டதும் ‘பல் விளக்கி வாருங்கள் பசியாறலாமென்று கேட்க, களிங்கனிடம் அன்பாக விசாரித்து ஆரத் தழுவி நாம் வெல்வோம் நம்பிக்கையோடிரு என்று சமாதானப்படுத்தி, வா பசியாறலாமென்று அழைக்க’ அதற்கவன் மறுப்பதற்குள் அவள் தன்னுடைய பல்துலக்கும் குச்சியெடுத்துக் கொடுத்து பல்விலக்கி வா என்கிறாள். கலிங்கன் அவளை அணைத்துக்கொண்டு அழுதான். அந்த தாய்மடியின் மீதிருக்கும் மண்ணின் களங்கம் அகற்ற மேலுமவன் துடித்தான்..

எங்கு திரும்பினாலும் அந்த இருவரை அவர்கள் கொன்றது மட்டுமே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது. இப்படியெல்லாம் ஒரு மனிதரை சித்திரைவதை செய்து கொல்வதை காண்பது அவனுக்கு மிகப் கொடூரமாக இருந்தது. மனசு அதனால் அதிர்ந்தபடியே யிருக்க ஓடி வந்த பயம் உடம்பெல்லாம் காய்ச்சலாகி கனத்தது. சாப்பிடும் எண்ணமெல்லாம சற்றுமில்லை. ஓரிடத்தில் அமர்ந்து இதுவரை எடுத்ததை எல்லாம் விண்டோவ்ஸ் வீடியோவிற்கு நடுங்கிய மனதோடு மாற்றி ஜிப் செய்து இந்திய நண்பர்களுக்கு அனுப்பினான். நடந்த விவரமெல்லாம் சொல்லி இனி நான் திரும்பி வருவதில் உறுதியில்லை என்றும் மின்மடல் செய்தான்.

அந்த ஊர் மிக அழகாக மலைக்குன்று போல் இருந்தது. பார்க்க கிராமம் போல் இருந்தாலும் எளிதில் யாரும் தொட்டுவிடமுடியாத ஒரு பெரிய நெட்வொர்க் ஒன்று அங்கே இயங்கியது. தமிழீழப் போராளிகளின் அசைக்க முடியாத இடமாக அது விளங்கியது. உலகை ஒரு புள்ளியில் இணைக்கும் எல்லாம் வசதியையும் அங்கே அவர்கள் செய்துவைத்திருந்தனர். எங்கும் காணுமிடமெல்லாம் தமிழில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, கண்ணுக்கெட்டிய தூரம்வரை தமிழீழத்தின் நேர்த்தியை அடையாளப்படுத்தியது அந்த சிறிய ஊர்.

என்றாலும், நேரம் நெருங்க நெருங்க விசகுண்டு ஏந்தி எதிரியொருவன் உட்புகும் இடைவெளிக்கான சுதந்திரமாகவே அந்த தருணம் விளங்கியது. அதற்குள் கார்மலின் குடும்பத்தார் அவனைநோக்கி ஓடிவந்து யாருக்கேனும் பேசுவதானால் ஊருக்கு பேசு வா, பாதுகாப்பாக இருக்கிறாய் என்று தகவல் சொல்லு வா என்றழைத்தனர். அதலாம் இனி எனக்கு யாருமில்லை, யாரிடமும் பேச எனக்கென்ன உண்டு, நாம் வேறெங்கேனும் போக வேண்டுமா சொல்லுங்கள் அங்கேப் போவோமென்றான் கலிங்கன்.

அவனுக்கு மனசெல்லாம் வலித்தது. துடிதுடித்தது. விட இருக்கும் தனதுயிரை இம்மண்ணுக்கென விடுவதாக தீர்மானித்தான். கண்களெல்லாம் சிவந்து ஒரே எண்ணத்தில் ஒரே மூச்சாக ஒரே திசையில் சொருகிக் கொண்டிருந்தது. கார்மல் அதைப் புரிந்துக் கொண்டு ஒரு இடம் போகலாம் வா என்று அழைத்துப் போக, போகும் வழியில் ஆர்மிக் காரர்களின் விமானம் சாரை சாரையாக நுழைய, மாறி மாறி சுட்டுக் கொள்வதும் குண்டு வீசி எறிவதும், சில வீடுகள் சிதறி உயிர்கள் பிரிவதுமாக இருக்க, அதைக் கண்கூடாக கண்டு மேலும் பதறிபோனான் கலிங்கன்.

குழந்தை ஒன்று வெடிபட்டு பாதி சிதறியபடி துடித்தது, பெண்கள் கையிழந்து காலிழந்து கதறினர், வயோதிகர் மற்றும் நடுத்தர ஆண்களென எல்லோரும் ஆங்காங்கே முகம் பிய்ந்து தலை வெடித்து முன்பாதியாகவும் பின்பாதியகவும் கிடந்தனர். தமிழன் ஒரு இனமாக அங்கே அழிபட்டுக் கொண்டிருந்தான். கலிங்கனால் தாளமுடியவில்லை, இரண்டுகைவைத்து மார்பில் அடித்துக் கொண்டு கத்தினான். வெறிவந்த சிங்கமொன்று தன் கைகளால் மார்பிலடித்துக் கொண்டு சீறுவது போல் சீறினான்.

சப்தம் கேட்டுத் திரும்பிய எதிரிப் படையினர் துப்பாக்கியினால் சரமாரியாக அவனைநோக்கிச் சுட்டனர், கலிங்கன் ஒதுங்கி ஓடி கீழிருந்த துப்பாக்கி எடுத்து நேரே எதிரியை சுட்டுக்கொண்டே ஓடினான். கண்ணில் பட்டவரையெல்லாம் சுட்டு சல்லடையாக்கினான். எதிரேயிருந்த பீரங்கி நோக்கி ஓடி, அதிலிருந்தவரை இழுத்துக் கீழே போட்டு துப்பாக்கியினால் நெஞ்சுக் குழியில் வைத்துச் சுட்டான். அவன் சரிந்ததும் புயலென எகுறி பீரங்கியின் மேலமர்ந்து வெறிபிடித்ததுபோல் எதிரிகளை நோக்கிச் சுட்டு சுட்டு வீழ்த்தினான். அடங்கிக் கிடந்த பாம்பொன்று அதன் வால் மிதித்ததும் திமிறியதைப் போல் திமிறி பொங்கும் கடலின் உச்சியென கலிங்கனின் மார்பு விரிய விரிய கொன்று குவித்தான் எதிரிகளை. அவன் கோபத்தில் கொந்தளிக்க கொந்தளிக்க வன்னி மண் மெல்ல மாறி தமிழர்களின் மூச்சுக் காற்றைத் திருப்பி தன்பக்கம் பெற்று சுதந்திரமாக சுவாசிக்கத் துவங்கியது..

யாருக்கும் கட்டுப்பட்டுவிடாத ஒரு கடல் திமிங்கிலம் போலவனுடல் இங்குமங்குமென அளவலாவி தனது மண்ணிற்கான விடுதலையை மிக வேகமாக மீட்டுக் கொண்டிருக்க; எட்டிய தூரம்வரை சுட்டு சுட்டு பொசுக்கிய இடத்திலெல்லாம் எத்தனை உயிர்கள் செத்துமாய்ந்ததோ தெரியவில்லை, ஆனால் அந்த தருணத்தில் ஒரு வீரியம் மிக்க போராளி தமிழ்மண்ணிற்கெனப் பிறந்திருப்பதை எதிரிகள் தன் கணக்கில் எழுதிக்கொள்ளத்தான் வேண்டியதாயிற்று…

ஈழவிடுதலைக்கான முதல் வெற்றிக்கொடி அநேகம் இன்றிரவு அங்கே பறக்குமெனும் செய்தியை எல்லோருக்கும் மின்னனஞ்சலில் அனுப்ப கார்மல் ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தான்..

அடுத்தடுத்த ஊர்களில் அந்த எதிரிகளின் வெடிகள் இன்னும் வீரியமாக வெடிக்கத் துவங்கின, ஒவ்வொரு வெடி வெடிக்கும் சப்தத்தின்போதும் ஒரு விதை அந்தந்த மண்ணின் சுதந்திரத்திற்கென ஆங்காங்கே முளைவிட்டுக் கொண்டேயிருந்தது..

——————*——————*——————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *