நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (2)

0

 

இன்னம்பூரான்

‘மேலும் சொல்ல இருக்கிறது’ என்ற எதிரொலி என் காதில் விழ ஒரு வருடம் ஆகி விட்டது. ஆம். வயது ஆக ஆக காது மந்தம். சரி. விஷயத்துக்கு வருவோம்.

முதற்க்கண்ணாக, சென்னை பொது ஆஸ்பத்திரிக்கும், மதராஸ் மருத்துவக்கல்லூரிக்கும் நன்றி சொல்லவேண்டும். அவற்றின் வரலாறு எழுதிய டாக்டர் சுப்பா ரெட்டி காரு என் நண்பர். கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கு அது ஒரு தர்ம ஆஸ்பத்திரியாக பணி புரிகிறது. சேவையில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன. எக்கச்சக்கமான தவறுகள் நடந்து கொண்டு வருகின்றன. அபார சாதனைகளும் நிகழ்ந்துள்ளன. டா. ரங்காச்சாரி, டா. ராஜம், டா. பி.ராமமூர்த்தி போன்றோர் செய்த அருந்தொண்டுகள் நிகரற்றவை. அவர்களை பற்றி, பிறகு ஒரு நாள், வாசகர்கள் விரும்பினால், பேசலாம். ஒரு அரசு மருத்துவமனையுடன் உரிமையுடன் உறவு வைத்துக்கொள்வது எப்படி என்று கூட நாம் கலந்தாலோசிக்கலாம்.

மருத்துவ சேவை இடத்திற்கு இடம் வித்தியாசப்படுகிறது. இலவச மருத்துவ சேவையின் தரம் அபாயகரமாகக் குறைந்து விட்டதால், இந்தியாவில் மருத்துவம் அளிக்கும் கம்பெனிகளும், காப்புரிமை கழகங்களும் செல்வம் கொழிக்கின்றன. அமெரிக்காவில் யானை வாங்கலாம். டாக்டர்களிடம் போக முடியாது. அத்தனை செலவாகும். சர்வம் கலவரப்படுத்தும் காப்புரிமை அல்லது அரோஹரா. உழக்கு தவறினாலும் வழக்கு. இங்கிலாந்தில் மக்கள் நலம் பேணுவதை அடித்தளமாக வைத்து, அனூரின் பீவான், பார்பாரா கேஸில் போன்ற தீர்க்கதரிசிகள் அமைத்த நேஷனல் ஹெல்த் செர்வீஸ் பிரஜைகள் யாவருக்கும் வியக்கத்தக்க வகையில் இலவச மருத்துவப்பணி செய்து வருகிறது, அரை நூற்றாண்டுக்கு மேல். குற்றம் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், இது ஒரு மாடல் என்பதில் ஐயமில்லை. மக்களுக்குப் புரியும் வகையில், தரமுயர்ந்த, அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்ட ஆலோசனைகளை, கூவி, கூவி இலவசமாக வழங்குவது இங்கு நல்லதொரு பணி. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வது, நன்மை பயக்கும் என்று நம்புகிறேன்.

நான் டாக்டரல்ல. வாழ்நாள் முழுதும் குடும்பத்திலும், சுற்றத்திலும் உடல் நல சிக்கல்களுடன் போராடவேண்டியிருந்தது. கிடைத்தப் படிப்பினைகள் பல. உகந்த முறையில் அவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நான் எழுதுவதெல்லாம் மருத்துவ வேத வாக்கு அல்ல. விழிப்புணர்ச்சி நாடுமொரு பாதை மட்டுமே என்று எச்சரிக்கை செய்வது என் கடமை. இது ஏதோ என் மனநிறைவுக்காக மட்டும் எழுதப்படும் தொடரும் அல்ல. வாசகர்களுடன் அளவளாவி, வினவிய வினாக்களுக்கு விடை அளித்து, ஆதாரமுள்ள ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ அறிவுரைகள பகிர்ந்து கொண்டு இயங்க விழையும் பரஸ்பர சம்பாஷணை மையம். அந்த பணி திறன்பட நடப்பதற்காக உள்ள திட்டம்:

    எந்த கேள்வி எழுந்தாலும் பண்புடன் அதற்கான விடை, தேடல், பகிர்வு, பின்னூட்டங்கள் மூலம்.

    தனி மடல்களில் பிரத்யேக பதில் விரும்பினால், அதை அளிப்பது. வல்லமை ஆசிரியருக்கு அனுப்பலாம். ரகசியம் காப்பாற்றப்படும்.

    அடுத்த பகுதி என்ன என்றும், அது பற்றிய தொடர்புகளையும், முந்திய கட்டுரையில் அளிப்பது. அவரவர் வினா எழுப்ப அது உதவும்.

    தவிர்க்கமுடியாத இடங்களில், தெளிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிலத்திலும் எழுதுவது. நமது இலக்கு: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தனித்தமிழ் அல்ல.

    வல்லமை ஆசிரியரும், வாசகர்களும் அளிக்கும் ஆலோசனைகளை முடிந்தவரை ஏற்று நடப்பது.

இன்றைய விஷயம்: ‘டாக்டருக்கு எஃப். ஐ. ஆர். கொடுப்பது நாம் தான் என்பதும், அவரைச் சிறு தெய்வமாக அநேகர் கருதுவதும், அந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதும்.’.

மருத்துவம் செய்ய டாக்டருக்கு உறுதுணை: நாம் கொடுக்கும் எஃப்.ஐ. ஆர். தற்செயலாக, இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் நூல்: Dr.Tom Smith (2007) How to Get the Best from Your Doctor: Oxford: ISIS Publishing Ltd. டாக்டருக்கும் அவரை நாடுவோருக்கும் இருக்கும்/இருக்கவேண்டிய உறவை பற்றிய அருமையான நூல், இது. இதிலிருந்து பல விஷயங்களை கறக்கவேண்டியிருக்கிறது. அவ்வவ்பொழுது பார்க்கலாம். அவரிடமிருந்து ஒரு குறிப்பு:  “ நாங்கள் என்றும் மறவாத மருத்துவக்கல்லூரி பாடம், நோயாளிகளுடன் டாக்டர் எப்படி உறவாடவேண்டும் என்பதை பற்றியது… துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை எழுதியவர் ஒரு டாக்டர். ஷெர்லாக் ஹோம்ஸுக்கு லாஜிக் ஒன்றே குறி; உள்ளுணர்வு, உணர்ச்சி வசம் ஆகியவற்றிற்கு இடம் கிடையாது. மருத்துவமும் அப்படித்தான். அதற்கான மும்மந்திரங்கள்: PCO (patient complaining of) + HPC (history of the present complaint) + PMH (previous medical history).” இங்கிலாந்தில் பயன்படும் வகையில் அவர் பல விஷயங்களை அருமையாகவும், நுட்பமாகவும் அவர் எழுதியிருக்கிறார். நமக்கு வேண்டியதை, ஒவ்வொரு பதிவிலும், தவணை முறையில், எழுதுவதாக  பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அதே மாதிரி, என் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். மாதிரிக்கு ஒன்று: உசிலம்பட்டியில் சின்ன தாலுக்கா ஆஸ்பத்திரி, அந்த காலத்தில். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து, ‘டாக்டர்! முழங்காலில் சிராய்த்துவிட்டது. டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவுங்கள்’ என்றார். டாக்டரும் வினயமாக அதை செய்தார். ஒரே எரிச்சல் என்று முனகினார் காவல் தெய்வம். மருத்துவ சிறு தெய்வம், ‘இதற்கு மருந்து வேறே. நீங்கள் கேட்டதால், டிங்க்ச்சர் ஆஃப் அயோடீன் தடவினேன்’ என்றதே பார்க்கலாம்! படிப்பினை நம்பர் 1&2.

இன்று: எஃப்.ஐ. ஆர். பற்றி டா. டாம் ஸ்மித்.

‘வலிக்கிறது’ என்று வருகிறார், ஒரு நோயாளி: எங்கே வலிக்கிறது? வலியின் தீவிரம் என்ன? வந்து, வந்து போகிறதா? இல்லை ‘யதாஸ்தானம் பிரதிஷ்டாபயமி’ (வந்துவிட்டேன்; நகரமாட்டேன் என்ற அடம்) என்று வலிக்கிறதா? மந்தமாக நீடித்த வலியா? தாங்கமுடியாத வலியா? அது பகல்/இரவு பேதம் பார்க்கிறதா? எப்போது வலிக்கிறது ~உடற்பயிற்சி/ உணவு உண்ட போது/அசைந்தால்? நீங்களே என்ன செய்தால் வலி குறைகிறது? கத்தி குத்தினமாதிரி வலிக்கிறதா இல்லை தடியால் அடித்த மாதிரி வலிக்கிறதா? நீங்களே யோசித்துப் பாருங்கள். இத்தனை கேள்விகளுக்கு பிறகு உங்கள் டாக்டர் மருந்து கொடுத்தாரா அல்லது வலி என்றவுடன் க்ரோசின் அல்லது இபுப்ருஃபென் (Crocin or Ibubrufen) கொடுத்து விரட்டி விட்டு, ‘நெக்ஸ்ட்’ என்று அடுத்தவரின் தொண்டையை பார்க்கப்போய்விட்டாரா?

இந்த வினாத்தொடரை தலைவலி, வயிற்று வலி, இதய வலி என்று கேட்டுப்பார்த்தால், நான் சொல்வது புரியும்: (அதாவது) டாக்டரிடம் என்ன சொல்வது, என்ன கேட்பது என்பது பற்றி ஒத்திகை நடத்திக்கொள்ளுங்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – (3) மன அழுத்தத்தை பற்றி. முன்கூட்டியே கேள்விகள் கேட்கலாம். அதற்கு உதவ, சில இணைய தள தொடர்புகள் இங்கே:

Stress management: International Stress Management Association: www.isma.org.uk

Stress at work: www.hse.gov.uk/stress

Saneline: www.sane.org.uk

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *