நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’:: தொடர்-24
பெருவை பார்த்தசாரதி
சென்ற மாதம் வெளிவந்த 23 வது தொடருக்குக் கிடைத்த வல்லமை வார விருது, என்னை மேன்மேலும் சிந்திக்க வைத்துவிட்டது. விருதை வழங்கிய எழுத்தாளர் மதிப்பிற்குறிய திவாகர் அவர்கள், தனது முன்னுரையில் “நேரத்தின் முக்கியத்துவத்தை”ப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதைப் படித்தபோது, நேரமும், காலமும் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள, இந்த ‘பொன்னான நேரத்தை’ இந்த வாரத் தொடருக்காக அற்பணிக்கிறேன்.
நேரம் கிடைக்கும் போது, அதைத் திட்டமிட்டுச் செலவிட்டால் அதன் பலனுக்கு எல்லையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அனுபவத்தில் உணரமுடியும். நேரத்தை நல்வழியில் செலவிடும்போது, பயனுள்ள விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது, நண்பர்களின் தொடர்பு விரிவடைகிறது, உறவினர்களுக்கிடையே இருந்த உறவு மேலும் பலப்படுத்தப்படுகிறது, புதிய சுற்றத்தார்களின் நட்பு கிடைக்க வாய்ப்புகள் வருகிறது. இதே நேரத்தை வாசிப்பிலே செலவிடும்போது, பல எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளமுடிகிறது. நேரத்தைக் கணக்கிட்டு, சரியாகப் பயன்படுத்துபவர்கள் “நேரம் போவதே தெரியவில்லை’ என்று சொல்லக் கேட்டிருக்கிறோம் அல்லவா?… ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வழிகள் பல இருந்தாலும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே நேரத்தைச் சேமிக்க முடியும். நேரத்தைச் சிக்கனமாக்கி பயனுள்ள வழிகளில் சிந்தனையைச் செலுத்தும்போது, சிறிது நேரமாவது, இப்பிரபஞ்சத்தில் சந்தித்துக்கொண்டிருக்கும் தொந்தரவுகளிலிருந்து தற்காலிக விடுதலை கிடைக்கும் அனுபவத்தை அனைவரும் உணரமுடியும். பரபரப்பான நம் வாழ்க்கையில், எல்லாவிதமான ஆடம்பரமும் அத்தியாவசியமாகிவிட்ட இன்று, எதையுமே விட்டுக்கொடுக்கும் மனோபாவம் இல்லாமல் ‘நேரம்’ என்பது பல சமயங்களிலெ வீணே வெகுசீக்கிரம் கழிந்துவிடுகிறது என்பதும் உண்மை.
இன்றைக்கு, கிடைக்கும் நேரத்தில் நாம் அதிகமாக செலவிடுகின்ற இடம் இணையதளம், பொதுவாக அனைவரின் மனதையும் வெகுவாகக் கவரக்கூடிய தன்மையைப் பெற்றது. ஏனென்றால் வேறு எங்கும் தேடியது, இங்கு தேடாமலே கிடைக்கிறது. இவ்வாறு பயனடைபவர்கள், பயனை முழுவதுமாகப் பெற்றபின், தங்கள் கருத்துகளை பதிலாகத் தெரிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் எல்லா வலைப்பூக்களிலும் “comments please” என்ற வாசகத்தைப் படைப்பாளர்கள் பதித்திருப்பார்கள். தனக்கு வேண்டிய அத்துணை தகவல்களையும் முழுமையாகப் பெற்ற பிறகு கூட நன்றி தெரிவிக்காமல் ‘பதில்’ என்கிற விசையை அழுத்துவதற்கே நேரமில்லை சார்’? என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தமக்கு வரும் அஞ்சல்களை திறந்து பார்ப்பதே கிடையாது. நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு,பல்லாயிரக்கணக்காண அஞ்சல்கள் பார்வைக்காக (Mail-Inbox) தேங்கியிருக்கின்றன, அவை அனைத்தையும் பார்க்க வேண்டுமானால் இனி மறுபிறவி எடுத்தால் கூட முடியாது. அஞ்சல் எழுதுவதாவது? படிப்பதாவது?..அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்பச்சுமை, இத்யாதிகள்… இதற்கே நேரம் போதவில்லை, சாப்பிட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்குவதற்கே நேரமில்லை, இதற்கெல்லாம் ஏது நேரம்?…….என்று அலுத்துக் கொண்டு மேட்ச் (cricket) பார்ப்பதில் மூழ்குபவரும் இருக்கிறார்கள்.
யதார்த்த எழுத்தாளர் திரு லேணா தமிழ்வாணன் அவர்கள் நேரமில்லை என்று சொல்பவர்களுக்கு, நேரத்தைத் திட்டமிட்டு செலவிட பலவழிமுறைகளுடன் கையடக்கமாக ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டிருக்கிறார், நேரமிருந்தால் வாங்கிப் படித்துப் பயனை நேரத்தின் பயனை அனுபவிக்கலாம். நான் படித்த துணுக்கு ஒன்றையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒருவரிடம் எதைப் பற்றிக்கேட்டாலும் ‘நேரமில்லை’, ‘நேரமில்லை’ என்பாராம். இதற்கு அவருடைய நண்பர் ஒரு உபாயம் சொல்லியிருக்கிறார். உன்னுடைய மனைவி நிறையப் படித்தவர் ஆயிற்றே, உன்னிடம் இருக்கும் சில பொருப்புகளை அவரிடம் ஒப்படைத்து விட்டால் நேரத்தை மிச்சப்படுத்தலாமே. அவசியம் ஏற்ப்பட்டால் அவரையே ‘பர்சனல் செகரட்டரியாக’க் கூட நியமிக்கலாம் என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு, ‘என்ன உங்கள் மனைவி உங்களுக்கு உதவிகரமாக செயல்படுகிறாரா’?.. என்றாராம். அதற்கு அவர் எல்லாம் சரியாய்ச் சென்றுகொண்டிருக்கிறது, என்னுடைய பாதி வேலையை அவளே கவனிக்கிறா…இப்ப அவ்வளவா!….நேரங்கறது……ஆனா……என்று இழுத்திருக்கிறார். என்ன ஆனா, ஆவன்னா பதில் சொல்லுங்கள் என்று நண்பர் அதட்டலாகக் கேட்டதற்கு, அவர் கூறிய பதில்: ‘அவ என்னோட வேலைகளைச் செய்யும் போது, 24 மணி நேரமும் அவகூட நான் இருப்பதுதான் மிகவும் கொடுமையானது’ என்றாராம்.
நம் மனதைக் கவருகின்ற ஒரு முக்கியச் செய்தியைப் பற்றி படிக்கும்போது, அச்செய்தியைப்பற்றி எங்காவது ஓரிடத்தில் நேரம் கிடைக்கும்போது குறித்து வைத்தோமானால் அது என்றைக்காவது ஒருநாள் எழுதுவதற்கு உதவும். நேரம் போகவில்ல்லை, வேறு எதுவும் வேலையுமில்லை, என்ன செய்வது, இப்படி தூக்கம் வராமல் படுக்கையில் புரள்பவர்கள் உடனே பேனாவை எடுத்து எதையாவது மனதில் தோன்றுபவைகளை எழுதிப் பாருங்கள், உடனே தூக்கம் வந்துவிடும். நமது குழந்தைகள் சில சமயம், புத்தகத்தை கையில் பிரித்தபடி வைத்துக்கொண்டு அப்படியே தூங்குவது இதற்கோர் உதாரணம். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கையில் எப்போதும் ஒரு பேனாவும், சிறிய நோட்டுப் புத்தகமும் இருக்கும். எங்காவது பொதுக்கூட்டங்களில் பங்கு பெறும்போது, சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும், சிறு சிறு குறிப்புகளையும், நீதிக்கதைகளையும் ஞாபகம் வரும்போதெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு, சந்தர்ப்பம் வரும்போது, தனது உரையில் அச்சிறு குறிப்புகளை நினைவு கூறும் நற்பழக்கம் அவரிடையே இருந்தது.
தங்களுக்கு தெரிந்த ஒரு தகவல், மற்றவருக்கு தெரிந்திருக்கும் என்று யூகிக்க முடியாது, அதேபோல், மற்றவர்களுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களையும் நாமும் அறிந்திருக்க வாய்ப்பில்லையாதலால், அறிந்தவைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளும்போது, ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக்க வழிவகுக்கிறது. இதற்கெல்லாம் நேரம் கிடைக்கும்போது நூலகத்தையும் நம்மோடு இணைத்துக் கொண்டு நிறைய படிக்கவேண்டியிருக்கும். படிப்பதற்கு நேரமில்லை என்று சொல்வதைவிட, கிடைக்கும் நேரத்தை படிப்பதற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்!………பண்டித நேரு அவர்களும், அண்ணல் காந்தி அடிகளும் நேரம் தவறாமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள். அண்ணல் பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது, பிறந்த நாளையும், இறந்த நாளையும் கொண்டாடத் தவறியதில்லை. நமெகெல்லாம் காந்தியை நினைவிருக்கிறது, ஆனால் ‘காந்தியக்கொள்கை’ நினைவிருக்கிறதா?.. அண்ணல் அவர்கள் மனிதர்கள் மத்தியிலே தெய்வமாக வாழ்ந்தவர், இந்தியாவின் பிரதமர் பதவிக்கோ, ஜனாதிபதி பதவிக்கோ ஆசைப்படவில்லை, கடைசிவரை எளிமையாக ஒரு சந்நியாசியைப் போல வாழ்ந்து காட்டியவர். நேரம் தவறாமை என்பதும் அவரது கொள்கையில் ஒன்று. டால்ஸ்டாயின் பண்ணையில் பணிசெய்தபோது, பள்ளிச் சிறார்களுக்கு நேரத்தைச் செலவிடுவதற்கு திட்டமிட்டுக் கொடுத்தவர். பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில் குழந்தைகள் ஏதாவதொரு கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஸ்ரீ கால்லென்பாக், ஸ்ரீ பிரக்ஜி தேசாய் போன்றவர்களிடம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக் கொண்டார். பள்ளிக் குழந்தைகள் ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் இருக்க, தச்சுவேலை, நூல்நூற்றல், சமையல் போன்ற கைத்தொழிலை பள்ளிச் சிறார்களுக்குப் பயிற்றுவிக்க ஊக்குவித்தார். ஒருமுறை பொதுக்கூட்டத்துக்குச் செல்ல சற்று தாமதமாகி விட்டது. அவர் செல்லும் வழியில் ஒரு சைக்கிளில் சென்றவரிடம் அந்த சைக்கிளை இரவல் வாங்கி அவரே சைக்கிளை மிதித்துச் சென்று சரியான நேரத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக ஒரு நூலில் படித்திருக்கிறேன்.
இதே போல் பண்டித நேரு அவர்கள் தனியாக லிஃப்டில் மாட்டிக்கொண்டுவிட்டார். பிறகு லிஃப்ட் சரிசெய்யப்பட்டு, வெளியில் வரும்போது அருகிலிருக்கும் அதிகாரிகளிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். அவர் போட்ட உத்தரவு என்ன தெரியுமா? “இனிமேல் எல்லா லிஃப்ட்களிலும் தவறாமல் ஒரு நல்ல விஷயங்களைத் தரக்கூடிய ஒரு தரமான புத்தகம் வைக்கப்படவேண்டும்” என்பதே. “எனக்குக் கிடைத்த இந்த அரிய அரைமணி நேரத்தில் நான் பல நல்ல விஷயங்களைப் படித்திருப்பேனே”?…….என்று ஆதங்கப்பட்டுக்கொண்டாராம். அன்றைக்கு இருந்த பெருந்தலைவர்களெல்லாம், நேரம் தவறாமைக்கு (punctuality) மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள், இன்று நாம் சொல்லிப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொரு நாளும் எப்படிக் கழிந்தது?..கழிந்த நாட்கள் திரும்ப வருமா?..என்றெல்லாம் நாம் சிந்திக்கிறோம். ஒரு நாளில் இருபத்திநான்கு மணிநேரம் என்பது, அதில் உண்பதற்கு மூன்று மணிநேரம் (மூன்றுவேளை), அரசியல் கலந்த அலுவலகத்தில் பத்துமணி நேரம், மீதி இருக்கும் நேரமெல்லாம் தொலைக்காட்சிப் பெட்டி, இடையில் ஒன்றுக்கும் உபயோகமில்லாத வெட்டிப்பேச்சு, இத்யாதிகள் போன்றவற்றில் காலம் வீணே கழிந்து விடுகிறது. அனுதினமும், மூன்று வேளை உணவு உண்டு, இரவு தவறாமல் உறக்கம் செய்து மறுபடி திரும்பத் திரும்ப செய்த வேலைகளையே செய்து கொண்டிருக்கின்றோம்!…நமக்கு ஏதாவதொரு அற்பவிஷயம் தெரிந்து விட்டால் போதும், அதையே மறுபடி பேசிப்பேசி நண்பர்களைப் பகைத்துக் கொள்கிறோம், புதிதாக வேறு ஒன்றையும் கற்றுக் கொள்ள மனம் இயம்பவில்லை என்பதைச் சிந்தித்து மனம் வருந்துவதை!……..
“உண்டதே உண்டு உடுத்ததே உடுத்து
உரைத்ததே அடுத்தடுத்து உரைத்து
கண்டதே கண்டு கேட்டதே கேட்டுக்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்”
என்று நான்கு வரிகளில் மிக அழகாக ‘இறைவன் நமக்களித்த வாழ்நாள்’ என்றும், நித்தமதை வீணே கழிக்கிறோமே!……..என்றும், மாதுறவு நீக்கி மா-துறவு (மகத்தான துறவு வாழ்க்கை) விரும்பி ஏற்ற பட்டிணத்தடிகள் நம்மிடம் சொல்லிச் சொல்லி வருந்துகிறார்.
மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையோடு ஒன்றி வாழுகின்றன. உணவு, உழைப்பு, உறக்கம் இம்மூன்றையும் காலத்தோடு செய்து முடிக்கிறது. இப்பூவுலகைச் சுற்றியுள்ள கிரகங்களும் இம்மி பிசகாமல் திட்டமிட்டால்போல செயல்படுகின்றன, ஒரு நிமிடம் அவை மாறிச் செயல்பட்டால் இவ்வுலகில் எத்தகய மாற்றம் நிகமும்!…என்பதைச் சற்று சிந்தித்தால் வியப்பாக இருக்கிறதல்லவா?….இவை யாவுமே கிரமப்படி, திட்டமிட்டபடி செய்ல்படுவதால்தான் இயற்கை தன் வேலையைச் செவ்வனே செய்யமுடிகிறது. இப்படி காலமும் நேரமும் இயற்கையோடு இணைந்து செயல்படுகின்றன. நிமிடங்கள் பலருக்கு பொருட்டே இல்லை, ஆனால் அதே நிமிடங்கள் சிலருக்குத் திருப்பு முனையாகவோ, சாதனையாளராகவோ மாற்றுவதற்குத் துணை போகிறது. மகாபாரதத்தில், அருச்சுனன் தவசு பற்றி அறியாதவர் இலர். சிவபெருமானிடமிருந்து ‘பசுபதாஸ்த்திரம்’ என்ற அரிய அஸ்த்திரத்தைப் பெற தன்னைத் முற்றிலுமாக நேரத்தைத் திட்டமிட்டு காலைமுதல், இரவு படுக்கைக்குச் செல்லும் வரையில் தனது அன்றாட அலுவல்களை முறைப்படுத்தி ஒரு நாளில் கிடைக்கும் நேரத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என மாற்றி அமைத்துக் கொள்கிறான். சாதாரண மனிதனைப் போலல்லாது, படிப்படியாக தனது உணவு உண்ணும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்கிறான். முதல் ஆறு மாதத்திற்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் மூன்று வேளை உணவு உண்கிறான், அடுத்த ஆறு மாதம், அதற்கடுத்த ஆறு மாதம் என்று படிப்படியாக ஒரு வேளை உணவைக் குறைத்து, பதினெட்டாவது மாதத்திலிருந்து முற்றிலும் உணவு உண்பதைத் தவிர்க்கிறான். கடைசியில் வெறும் தண்ணீரையும், காற்றையும் உண்டு, சுவாசித்து, ஒற்றைக்காலில் நின்று கடும் தவமிருந்து, அவன் நினைத்த பசுபதாஸ்த்திரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றதாக மாபாரதத்தில் தகவல் உள்ளது. இந்தச் சம்பவத்தை, இத்தருணத்தில் நாம் நினைவு கூர்ந்தால், ஒவ்வொரு மனிதனும் நேரத்தின் அவசியத்தை உணர்ந்து திட்டமிட்டு செயல்படமுடியும்.
இந்த உலகத்தில் கண் இமைக்கும் நேரத்தில் என்னவெல்லாம் அதிசயம் நிகழ்ந்து விடுகிறது. உலகில் ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவதொரு அதிசயம் நிகழ்வதாக கூறுகிறார்கள். நமது நினைவுகளை ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றால் அன்று நேரத்தைக் கணக்கிடுவதிலும், செலவழிப்பதிலும் அதிக சிரமம் இருந்தது என்பதை உணரமுடியும். ஏனென்றால் அன்று பொழுதைக் கழிப்பதற்கு பொழுது போக்கு சாதனங்கள் (Electronic gadgets) அவ்வளவாக இல்லை. அன்றய சூழ்நிலையில் இணையதளம் (Net), டிவி (TV), கணிணி (Computer), முகநூல் (Facebook) முதலியவை இல்லை. ஒரு நிமிடம்தானே என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம், ஆனால் இந்த ஒரு நிமிடத்தில் நடக்கும் ஒன்றிரண்டு அதிசயங்களைச் சற்று கூர்ந்து படிப்போம்: ஒரு நிமிடத்தில் இந்தியாவில் 54 ஜனனமும், 10 மரணமும் நிகழுகிறது, 780 அலைபேசிகள் (cellphones) உருவாக்கப்படுகின்றன, உலகப் பணக்காரரான பில்கேட்ஸ் வருமானம் 15,000 டாலருக்கு மேல், இணையதளத்தில் 7,75,000 பேர் எதையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள், 141 மில்லியன் மக்கள் மெயில் மூலம் தகவல் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். முகநூலில் (Facebook) 50,000 பேர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, 1,35,800 பேர் தங்களது படங்களை தரவேற்றம் (uploading photos) செய்து கொண்டு, 5,10,000 கருத்துக்களும் (comments) எழுதப்படுகின்றன என்பதை இணைய ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இது போல் ஒரு நிமிடத்திற்குள் நடந்தேறும் இன்னும் பல ஆய்வுக் குறிப்புகளை நேரம் போவது தெரியாமல் அடிக்கிக் கொண்டே போகலாம். இதைப் படித்துக் கொண்டிருக்கின்ற நமது இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடித்திருக்கும், 15 முறை கண்சிமிட்டி இருக்கும். அற்ப ஜீவியான கொசு ஒரு நிமிடத்துக்கு 750 முறை தமது சிறகை அடித்துக் கொள்ளுகிறதாம். இத்தகய வியக்கத்தக்க அதிசயங்களை, சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொரு நிமிடமும் ஆச்சர்யப்படும்படி கழிந்துகொண்டு இருக்கிறது. நேரம் கிடைக்கவில்லை என்பதைவிட கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள, படித்த, சேகரித்த நல்ல தகவல்கள், செய்திகள் போன்றவைகளை மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்கின்ற பழக்கத்தைக் (Hobby) கடைபிடிக்கும்போது ‘இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்குமே!..என்ற ஆதங்கத்தை எழுத்தாளர்களாக இருப்பவர்கள் உணரமுடியும். ‘ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்’ என்ற பாடலும், ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார், வீணாய் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்’ என்ற திரையிசைப் பாடல்களின் வரிகளை நினைவு கூர்ந்து திட்டமிட்டு கிடைக்கும் சிறிது ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் செலவிட்டால் எந்நேரமும் நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் நல்ல நேரமாக அமையும் என்பதை உணரலாம்.
தொடரும்………
let us plan well to use our time gainfully.
பயனுள்ள தொடர் எழுதி நேரத்தை நல்லதாக ஆக்குகிறீர்கள் திரு பெருவை பார்த்தசாரதி அவர்களே
அன்புடன் தமிழ்த்தேனீ
தமது கருத்துக்களை வல்லமை வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட திரு ஹரி மற்றும் திரு தமிழ்த்தேனீ அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேரத்தின் அருமையை நன்றாக சொல்லியுள்ளிர்கள் ..,
நன்றிகள் பல .