—ஆர்.எஸ்.மணி
நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.
எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.
அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.
அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.
—ஆர்.எஸ்.மணி
(கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)
காணொளி: http://youtu.be/JgArHotZTPE
திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:
“தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”
குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்
தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்
அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்
தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்
சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்
தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்
கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்
தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்
விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்
தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்
——————————————————————————-

Leave a Reply