சூரன் முக்தி
சு. ரவி
பாடல் ஒலி வடிவில்:
அண்டம் பகி ரண்டம் பொடிபட,அலை
பொங்கும் கடல் சுண்டும் படியெரியழல்
எங்கும் எழ கங்குல் பகலறயுக
அந்தம் என மின்னொளிர் வேலாடும்
கட்டற்றிடும் எட்டுத் திசைகளும், ஒளி
வெட்டித் தறிகெட்டுச் சுழலுற,முகில்
சட்டச்சட சட்டச் சடசடவென
வெற்றிப் பறை கொட்டி யிடித்தாடும்
பண்டஞ்சிய நெஞ்சங் களில் ஒளிவர
பண்பஞ்சிய நெஞ்சங் களில் இருளுற
விண்கொண்டெழு க்ரௌஞ்சம்சிறு துகளுற
எங்கெங்கும் எழுந்தது போர்மேகம்
பற்றற்ற மனத்துத் தவமுனிவரின்
பக்திக்கனல் பற்றிக் கணகணவென
நெற்றிப் பொறியுற்றுச் சிவனருளிய
சக்திக் கனல் சீரலைவாய் மேவும்!
மண்ணஞ்சிய சிங்கன் தலையொருபுறம்
துண்டம்பட அங்கம் புழுதியில் விழ
கந்தன்படை விஞ்சும் ரணகளமதில்
பொங்கும் செங்குருதியின் ஆறோடும்
மட்டற்ற மகிழ்ச்சிக் களியொடு இரை
தட்டற்று கிடப்பக் கழுகலகைகள்
நிர்த்தத்தொடு சப்தக் குலவைகளிட
சுற்றத்தொடு தாரகன் தான்வீழும்
மண்டும்துயர் நெஞ்சம் தனில்புரையுற
தன்னந்தனி நின்றும் தனதகம்எழ
சின்னஞ்சிறுவன்என் றொருநினைவுடன்
செந்தில்புரம் சூரனின் தேர்மேவும்
முத்துச் சுடர் வெட்கக் குறுநகையொடு
சக்திப் படைதொட்டுச் சரவணபவன்
முக்திப் பதம் வைக்க ஜெய ஜெயவென
எத்திக் கிலும் முருகனின் பேர்பாடும்!

