திருமால் திருப்புகழ் (105)
கிரேசி மோகன்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
————————————————————-
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————

ஏலேலோ போடுமிந்த, பூலோகம் போதுமே,
மாலோலா, மாடுகள் மேய்ப்போனே, -கோலோகம்,
நீவந்து கூட்டிச்செல், நானங்கு கும்பலோடு,
கோவிந்தா போட்டு குதிப்பு….(136)
எமக்கே எமக்கென்று, இவ்வுடம்பைப் பேணி,
எமர்க்கே அளிப்பீர் எரித்து, -நமக்கே,
நமக்குண்டு நாரா, யணநாமம் நெஞ்சில்,
சுமப்பீர் அதனை சுமந்து….(137)
எண்ணம் ஒடுங்கிட, ஏகாந்தம் கூடிட,
கண்ணன் கருநீலக் காயாம்பூ, -வண்ணன்,
நினைப்பும் நினைத்திடும், நானும் கலக்க,
மனக்குறை நேர்நிறையா மே….(138)
எந்தவேலை செய்தாலும், தொந்தரவாய்த் தோணுதே,
இந்தநிலை ஏனெனக்கு நந்தலாலா, -அந்தநாளில்,
ஆளாள் குறைதீர்க்க, ஆதரித்தோய் இன்றுமட்டும்,
வாளா(து) இருப்பதேன் வா….(139)
எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,
நந்தலாலா நிந்தன் நினைவாக, -அந்தரங்க,
பாவம் தனில்மூழ்கி, பார்க்கும் இடத்திலெல்லாம்,
நீவந்து நீலமாய் நில்….(140)
எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
தொழில்காதல் , தாமரைத் தொப்புள் -சுழியில்,
உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
அலகிலாக் கண்ணன் அழகு….(141)
—————————————————————————————————————-
படங்களுக்கு நன்றி:
http://kamadenu.blogspot.in