–மாதவ. பூவராக மூர்த்தி.

ஒண்ணாம் வகுப்பு குருமூர்த்தி வித்யாலயத்தில் சேர்ந்து என் அத்தை ரேணுகா (என்னை விட மூன்று வயது மூத்தவர்) என்னை பத்திரமாகக் கை பிடித்து அழைத்துப் போவாள். நல்ல பள்ளிக்கூடம். உள்ளேயே ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதன் இரண்டு திண்ணைகளில் ஒன்றில் தான் நான் மூணாம் வகுப்பு படித்தேன். விளையாட்டு மைதானத்துக்குப் பக்கத்தில் ஐயனார் கோவில், பக்கத்தில் பெரிய புளிய மரம். கப்பி ரோடு காவேரிபட்டினம் போகும். கோவிலுக்கு எதிரில் ஐயங்குட்டை. பள்ளிகூடத்துக்கு எதிரில் ஒரு சாலை சேந்தகுடிக்குப்போகும். பள்ளிக்கூடத்தின் மேற்கு எல்லையில் போகும் தெரு ஒத்தை தெரு.

ஒரு பக்கம்தான் வீடுகள் இருக்கும். எதிர்பக்கம் அதற்கு மேற்கே இருக்கும்இரட்டைத் தெருவின் கிழக்கு பக்கத்து வீடுகளின் கொல்லைப்பக்கம் கதவுகளுடன் இருக்கும். காலை வேளைகளில் அது லேசாக திறந்து வைத்து தோட்டி முறத்துடன் அவன் பணி முடிப்பான்.

சாலையில் ஒரு ஓரமாக சாக்கடை ஓடிக்கொண்டிருக்கும். அதைத் தாண்டி இருக்கும் கடைதான் எங்கள் வாயில் நீர் ஊறவைகும் கமர்கட், தேன் மிட்டாய், புளிப்பு மிட்டாய், எலந்த வடை, பர்பி,  பலபம் எல்லாம் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்.

எத்திராஜுலு நாயுடு கடையில் வாங்கிய பையில் என் புஸ்தகம் இருக்கும்

அப்போதெல்லாம் பரிட்சை மார்க்குகள் சிலேட்டிலேயே மார்க் போட்டு அனுப்புவார்கள். அதை அழிக்காமல் வீட்டுக்கு வரும் வழியெல்லாம் காட்டிக்கொண்டே போவோம்.

school-3காலையில் இறைவணக்கம் பாடி, வகுப்புக்கு வரிசையாக செல்ல வேண்டும்.. மதிய உணவுக்கு வானாகி மண்ணாகி பாடி மகிழ்வோம்.

பட்டம்மா  டீச்சர் கிளாஸில் படித்து நிறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணிவிட்டேன். அடுத்த ஆண்டு பள்ளிக்கூடம் திறக்கும் போது நான் இரண்டாம் வகுப்பு.

பட்டம்மா டீச்சர் என்னை அன்போடு அழைத்து எனக்கு முத்தமிட்டு மூர்த்தி நீ இந்த வருஷம் இரண்டாம் வகுப்பு படிக்கப் போறே.இனிமே நீ இரண்டாம் வகுப்புல போய் உட்காரணும் என்றார். எனக்கு அழுகையாக வந்தது. கண்ணில் நீர் வழிந்தோடியது. பட்டம்மா டீச்சர் இல்லாமல் என்ன வகுப்பு. நினைக்க நினைக்க விசும்பல் அதிகமானது. பட்டம்மா டீச்சர் அடிக்கமாட்டாங்க. என்னை கண்ணான்னு கூப்பிடுவாங்க. நல்லா சொல்லி கொடுப்பாங்க. நான் மறுபடியும் வேணா ஒண்ணாவதே படிக்கிறேனேனு சொல்லணும்னு தோணிச்சு.

டீச்சர் என்னை சமாதானப்படுத்தி கொண்டுபோய் இரண்டாம் வகுப்பில் உட்காரவைத்து விட்டார். யார் வருவாங்க? எப்படி இருப்பாங்க அடிப்பாங்களா இல்ல பட்டம்மா டீச்சர் மாதிரி ஆசையா இருப்பாங்களான்னு நிறைய தோணிச்சு. என்னோட படிச்ச நிறைய பையங்களையும் பொண்ணுங்களையும் என் கிளாஸ்ல பார்த்தேன். கொஞ்ச நேரத்தில டீச்சர் வந்தாங்க. பார்த்தா சிவப்பா அழகா சிரிச்சு கிட்டே வந்தாங்க. உள்ள வந்தவுடனே எங்க எல்லாரையும் பார்த்து அழகா சிரிச்சிகிட்டே காலை வணக்கம் அப்படின்னு சுப்பலஷ்மி டீச்சர் சொன்னாங்க. அப்பவே அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.

ஒரு வாரத்துல எல்லார் பேரையும் தெரிஞ்சுகிட்டு அவங்க என் பேரை மூர்த்தின்னு கூப்பிடும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன்.

அடிக்கடி ரீஸஸ் விடும்போது பட்டம்மா டீச்சரைப்பார்த்து காலை வணக்கம் சொல்வேன். கால் பரிட்சையில் எல்லா பாடத்திலயும் நான் தான் பர்ஸ்ட். சுப்பலஷ்மி டீச்சர் என்னை கூப்பிட்டு கன்னத்தைத் தட்டி நல்ல பையன் மூர்த்தின்னு சொன்னப்ப எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு.

இரண்டு நாள் டீச்சர் பள்ளிக்கூடத்துக்கு வரல்லை. அதுக்கு அப்பறம் வந்தாங்க. எல்லார்கிட்டயும் சிரிச்சு பேசிகிட்டிருந்தாங்க.

ஆனா அன்னிக்கு நடந்ததை என்னால மறக்க முடியல. கடைசி பீரியடு. டீச்சர் கண்கலங்கி எங்க எல்லாரையும் பார்த்து எல்லா நல்லா படிக்ககணும் நான் நாளையிலேர்ந்து வரமாட்டேன் அப்படின்னு சொன்னாங்க. எனக்கு அழுகையா வந்தது. அப்ப அவங்க என்னை கூப்பிட்டு மடியில உட்காரவைச்சு கிட்டு எனக்கு முத்தம் கொடுத்து மூர்த்தி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். நீ டீச்சரை மறக்காம இருப்பியா? அப்படின்னு கேட்டாங்க. நான் அழுதுகிட்டே தலையாட்டினேன்.

அப்பறம் பட்டம்மா டீச்சர் சொன்னாங்க அவங்களுக்கு கல்யாணமாம். வேற ஊருக்குப் போயிடுவாங்களாம்.

மறுநாள் அவங்க வரலை. பள்ளிக்கூடம் போகவே பிடிக்கலை. அம்மாகிட்ட சொன்னேன். அவங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது டீச்சர் நீ பெரிய ஆளா வரணும்னு சொன்னாங்க இல்ல. அதுக்கு நீ இப்ப பள்ளிக்கூடம் போகணும். போனேன். புதுசா வந்த சம்பந்தம் வாத்யார் குண்டா ஒசரமா இருந்தார். பாக்கவே பிடிக்கலே.. ஆனா கொஞ்சநாள்ல அவரும் நல்லா நடத்தினார். நான் படிச்சு ஐந்தாம் வகுப்பு வரை படிச்சு நேஷனல் ஹைஸ்கூல்ல சேர்ந்தேன். படிச்சேன் காலேஜ் படிச்சு வேலைக்கு சேர்ந்து நாடகம் நடிச்சு நல்ல பேர் வாங்கிகிட்டிருக்கேன்.

இதை படிக்கறவங்க யாருக்காவது மூர்த்தி உங்களை இன்னும் ஞாபகம் வைச்சிருக்கான்னு சுப்பலஷ்மி டீச்சரைப் பார்த்தா சொல்றீங்களா?

பின்னுரை:  இந்த நிகழ்ச்சி நடந்த 52 வருடங்கள் கழித்து, என் முகநூல் நண்பர் மாயவரம் ஶ்ரீனிவாசன், தற்போது அமெரிக்காவில் இருப்பவர் என்னிடம் தொலைபேசியில் பேசும்போது நான் அவரிடம் குருமூர்த்தி வித்யாலயம் பற்றியும் சொன்னேன். அவர் மிகுந்த சிரமம் மேற்கொண்டு எங்கள் ஊர் மாணவர்களைத் தேடிப்பிடித்து இந்த செய்தியை சொல்லி விபரம் கேட்டார்.  கணேஷ். ஶ்ரீனிவாசன் என்பவர் தற்போது மும்பையில் இருப்பவர், எனக்கும்  சீனியர், அவரும்  அந்த சுப்பலஷ்மி டீச்சரிடம் படித்தவர்,  அவர் இப்போது டீச்சர் மும்பையில் இருப்பதாகவும் அவருடன் இன்னும் தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அவர் புகைப்படத்தையும் தொலைப்பேசி எண்ணையும் எனக்கு அளித்தார். நான் அவரிடம் பேசினேன். அவர் மகன் என்னோடு அன்போடு பேசி மும்பைக்கு அழைத்தார். விரைவில் சென்று நேரில் சந்திப்பேன்.

படம் உதவிக்கு நன்றி: http://en.vikatan.com/article.php?aid=25549&sid=739&mid=33

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.