-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

kannadasan     கற்பனைக் கடலுள் மூழ்கி
     கணக்கில்லா முத்தெடுத்து
     அற்புதக் கவிதை தந்து
     அனைவரின் கவிஞன் ஆனாய்!

     சொற்சுவை அனைத்தும் சேர்த்து
     சுந்தரத் தமிழில் தந்த
     பொற்புடைக் கவிதையாலே
     புவியெலாம் புகழுதுன்னை!

     காவியம் செய்து நின்ற
     கவி கண்ணதாசனே நீ
     கவிதையால் உலகையாண்டு
     காவியம் ஆகி விட்டாய்!

     ஓவியம் போல  நீயும்
     ஒவ்வொரு கவிதை தந்தாய்
     பாவிடைத் தோய்ந்தாய் நாளும்
     பாட்டுக்கே அரசனானாய்!

     ஊரெலாம் உன்னைப் போற்ற
     உன்கவி உதவிற்றன்றோ
     வாரிநீ தந்து நின்றாய்
     வளமுடைத் தமிழை நாளும்!

     கார்முகில் போல நீயும்
     கவிமழை பொழிந்து நின்றாய்
     கவி கண்ணதாசனே நீ
     கவிதையில் வாழுகின்றாய்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *