-எம். ஜெயராம சர்மா -மெல்பேண்

பொங்கலென்று சொன்னாலே
பூரிப்புவந்து நிற்கும்
மங்கலமாய் நினைவுகளும்
மனங்களிலே நிறைந்துவிடும்!         http://www.dreamstime.com/royalty-free-stock-photo-indian-festival-pongal-illustration-image1753855

தங்களது வாழ்க்கையிலே
தைபிறந்தால் வழிபிறக்கும்
என்றுஎண்ணி யெல்லோரும்
இன்பமுடன் பொங்கிநிற்பர்!

குடும்பமெலாம் ஒன்றானால்
குதூகலமே நிறைந்துவிடும்
குத்துவிளக் கேற்றிவைத்து
கொண்டாடி மகிழ்ந்திடுவர்!

மூத்தவர்கள் கையாலே
முதலரிசி எடுத்தங்கே
பால்பொங்கி வருகையிலே
பக்குவமாய்ப் போட்டிடுவர்!

சர்க்கரையும் பாலுமங்கே
சரியாகக் கலப்பதுபோல்
சன்மார்க்கம் சந்தோஷம்
சகலர்க்கும் வந்துநிற்கும்!

பொங்கல்பொங்கி வருகையிலே
புதுச்சுவையும் கூடவரும்
புத்துணர்வும் அதனூடாய்
புறப்பட்டு வந்திடுமே!

பட்டணத்தில் பொங்கலென்றால்
பலபேர்க்குத் தெரியாது
பட்டிக்காட்டான் பொங்கலென்று
பகர்ந்துமே நின்றிடுவர்!

பட்டிக்காட்டான் இல்லையென்றால்
பட்டணமே இருக்காது
பட்டினியாய்க் கிடந்தங்கே
படவேணும் பலபாடு!

சேற்றிலே காலைவைத்துச்
சோற்றையே தந்த அவன்
நாட்டிலே இல்லையென்றால்
நம்பொங்கல் இனித்திடுமா!

பொங்கலென்று சொன்னாலே
புதுத்தெம்பு தருபவனே
எங்களது ஏருழவன்
ஏனதனை எண்ணவில்லை?

மஞ்சள்இலை வந்துநிற்கும்
மங்கலங்கள் நிறைந்துநிற்கும்
பொங்கிவரும் பூரிப்பால்
பொங்கலே மணக்குமங்கே!

பட்டணத்தார் பொங்கல்பார்க்கப்
பட்டிக்காடு போகின்றார்
பட்டிக்காடு எல்லாமே
பால்பொங்கி நிற்கிறது!

பட்டணத்தில் பொங்கலிப்போ
பத்திரமாய்க் கிச்சனிலே
பாத்திரத்தில் இருக்கிறது
பார்க்கமட்டும் பொங்கலாக!

என்றாலும் பொங்குகிறார்
இனிப்புவர வேணுமென்று
இனிக்கட்டும் எல்லார்க்கும்
எங்களது தைப்பொங்கல்!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "எங்களது தைப்பொங்கல்!"

  1. அருமையான பொங்கல் வாழ்த்து.
    பொங்கும் மங்களம் எங்கும் தங்கிப் பொலியட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.