சு. கோதண்டராமன்.

வேதம் – மனித குல வரலாறு

619px-Rigveda_MS2097

வேதம் அநாதி, அதாவது அது உலகம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே இருக்கிறது. வேதத்தை ஒரு நூல் என்று கருதினால் அதை அநாதி என்று கூற முடியாது. மனித இனம் தோன்றி நாகரிகம் வளர்ந்து மொழி வளர்ந்து அதற்கு இலக்கணம் ஏற்பட்ட பிறகு தான் வேதம் இயற்றப்பட்டது.

ஆனால் வேறு ஒரு வகையில் வேதத்தை அநாதி என்று கூறலாம். இது அநாதி காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதை விவரிக்கிறது. மனித குலம் ஏற்பட்டு நாகரிகம் வளராத காலத்தைக் குறிப்பிடுகிறது. மனிதனுக்குத் தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிய நிலையைக் கூறுகிறது. வழிபாட்டு முறை ஏற்பட்ட காலத்தைத் தெரிவிக்கிறது. எனவே வேதத்தைப் பிரபஞ்ச வரலாற்றுச் சுவடி என்று கூறலாம். விரிவாகப் பார்ப்போம்.

ரிக் 10 வது மண்டலம் 129வது சூக்தம் நாஸதீய சூக்தம் எனப்படுகிறது. அதில் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன் எப்படி இருந்தது என்பது விவரிக்கப்படுகிறது. இன்றைய விஞ்ஞானிகள் பல கால ஆராய்ச்சிக்குப் பிறகு சொல்லும் பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory) ரிஷிகள் தங்கள் உள்ளுணர்வினால் அறிந்து சொன்னது நமக்குப் பெரு வியப்பைத் தருகிறது. அங்கு தெளிவில்லாத இருளான சூன்யம் மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

அப்பொழுது இருப்பும் இல்லை. இல்லாமையும் இல்லை. காற்று இல்லை, வானமும் இல்லை. எது எதை மூடியிருந்தது? எங்கே மூடியிருந்தது? ஆழம் காண முடியாத நீர் இருந்ததா?

மரணம் இல்லை, மரணமின்மை இல்லை. இரவையும் பகலையும் பிரிப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. மூச்சில்லாத ஒன்று தன் சொந்த வலிமையில் மூச்சு விட்டுக் கொண்டு இருந்தது. அது தவிர வேறு ஒன்றும் இல்லை.

இருட்டு இருந்தது. அது இருளால் மூடப்பட்டிருந்தது. எல்லாமே இனம் புரியாத அந்தகாரம். இருந்ததெல்லாம் சூனியம். எதற்கும் உருவமில்லை. தவத்தினால் அந்த ஒன்று பிறந்தது.

அதன் பின் இச்சை பிறந்தது. அதுவே மனதின் முதல் விதை. தங்கள் இதயத்திற்குள் தேடிய ரிஷிகள் ஸத்துக்கும் அஸத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டார்கள்.

ஒளி பக்கவாட்டில் பரவியது. அதற்குக் கீழே என்ன இருந்தது? மேலே என்ன இருந்தது? வலிமையுள்ள அவர்கள் தோற்றுவிப்போர் ஆயினர். சுதந்திரச் செயல் கீழேயும் சக்தி மேலேயும் இருந்தது.

இதை உண்மையில் அறிந்தோர் யார்? இதைக் கூறவல்லோர் யார்? எங்கிருந்து அது தோன்றியது? எங்கிருந்து இந்த சிருஷ்டி வந்தது? தேவர்கள் சிருஷ்டிக்குப் பின் தோன்றியவர்கள். எனவே அவர்களாலும் இதைச் சொல்ல முடியாது.

படைப்பின் முதல்வனாகிய அவன் எல்லாவற்றையும் படைத்தானா? அல்லது அவன் படைக்கவில்லையா? அவனது கண் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது. அவனும் அறிவானோ மாட்டானோ?

(இருள் புள்ளியிலிருந்து பிரபஞ்சம் படிப்படியாக விரிவடைகிறது. ஒரு காலத்தில் மீண்டும் சுருங்கத் தொடங்கி மீண்டும் இருள் புள்ளி நிலையை அடைகிறது. இவ்வாறு மாறி மாறி விரிதலும் சுருங்குதலும் ஏற்படுவதை வேத இலக்கியம் கூறுவதாக விவேகானந்தர் கூறுகிறார். ரிக் வேதத்தில் அவ்வாறு இருப்பதாக என் கண்ணில் படவில்லை.)

பெரு வெடிப்புக்குப் பிறகு எல்லாமே விரைவில் நடந்தேறின. நிலம் உண்டாயிற்று. உயிரினங்கள் தாவரங்கள் தோன்றின. மனிதன் தோன்றினான். மனிதன் மிருகங்களைப் போலவே வாழ்க்கை நடத்தி வந்தான். இந்நிலையில் அவனது வாழ்வில் பெரும் மாறுதலைத் தோற்றுவிக்கும் வல்லமை படைத்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனிதன் தீயைக் கண்டுபிடித்த அந்த நிகழ்ச்சி மனித குல வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல். அது பற்றி வேதம், மாதரிச்வான் என்னும் காற்று ப்ருகுவிடம் அக்னியைக் கொண்டு வந்து கொடுத்தது, ப்ருகவர்கள் மரக் கட்டைகளைக் கொண்டு தீ மூட்டத் துவங்கினர் என்று கூறுவதிலிருந்து கீழ்க்கண்டவாறு நடந்திருக்கலாம் என ஊகிக்கலாம்.

கற்களை எறிந்து மிருகங்களை வீழ்த்தும் அறிவில் மட்டுமே மிருகங்களிலிருந்து மனிதன் வேறுபட்டிருந்த காலம் அது. வேட்டையாடக் கல்லைத் தேடி அலைந்து கொண்டிருந்தான் ஒரு மனிதன். பெரிதாகக் காற்று வீசியது. மரங்கள் இல்லாத பகுதியில் மண்ணை வாரிக் கொண்டு சென்றது. அப்பொழுது அந்த மனிதன் கண்ணில் இரண்டு கற்கள் தென்பட்டன. அவை அவன் அதுவரை பார்த்திருந்த கற்களிலிருந்து வேறுபட்டு இருந்தன. இது எங்கிருந்து வந்தது, இந்த வழியாக நான் பலமுறை போயிருக்கிறேனே, இது வரை கண்ணில் பட்டதில்லையே, அடியில் புதைந்து கிடந்த இது காற்றினால் மேல் மண் பறந்து போன பின் வெளிப்பட்டிருக்கிறது போலும் என்று பலவாறாகச் சிந்தித்தான். அதை வெளிப்படுத்தும் மொழித் திறன் அவனுக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தான் கிடைத்தது.

அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் ஒன்றைக் கையில் எடுத்தான். அது கை தவறிக் கீழே இருந்த மற்றொரு கல் மீது விழுந்தது. அதிலிருந்து தீப் பொறி வந்தது. காட்டுத் தீயையும் மின்னலையும் பார்த்து அஞ்சி வந்த இவனுக்கு மின்னல் போல் கண நேரம் ஒளிர்ந்து மறைந்தாலும் அச்சம் தராத இந்தச் சிறு தீப் பொறியைப் பார்த்து ஆச்சரியம் ஏற்பட்டது. மறுபடியும் கல்லை எடுத்துக் கீழே போட்டான். மீண்டும் தீப் பொறி வந்தது. திரும்பத் திரும்ப இந்த விளையாட்டைச் செய்து கொண்டிருந்தவனுக்கு மற்ற மனிதர்க்கும் இதைக் காட்ட வேண்டும் என்று தோன்றியது. குரல் எழுப்பி அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டான். எல்லோரும் இந்த வித்தையைப் பார்த்து வியந்தனர். ஆளுக்கு ஆள் பிடுங்கிக் கொண்டு போய் செய்து பார்த்தனர். சருகுகள் குவிந்திருந்த ஓரிடத்தில் அவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அவை தீப்பற்றி எரிந்தன. எல்லோரும் வியந்தனர், மகிழ்ந்தனர், கூத்தாடினர்.

தீயைக் கண்டுபிடித்தவனுடைய பெயர் ப்ருகு. (தீ எரியும்போது ப்ருக் ப்ருக் என்ற ஒலி உண்டாவதாக அந்த மக்கள் நினைத்தார்கள். இந்த ஒலியிலிருந்து அந்த மனிதனின் பெயர் வந்திருக்கலாம். அல்லது ப்ருகு என்பவரின் பெயரைக் கொண்டு அந்த ஒலிக்குப் பெயரிட்டிருக்கலாம்). தீக் கல்லைத் தனக்கு வெளிப்படுத்திய காற்றை அவன் ‘மாதரிச்வான்’ (பூமித் தாயின் மடியில் கீறுபவன்) என அழைத்தான்.

மனிதன் தீ மூட்டக் கற்றுக் கொண்டு விட்டான். அவனது நாகரிகம் துரித கதியில் நடை போடத் துவங்கியது. காட்டு விலங்குகளுக்குப் பயந்து குகைகளில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன், குகைக்குள்ளும் வந்து தாக்கும் மிருகங்களிடமிருந்து தப்பும் வழி அறியாது தவித்த மனிதன், தான் இருக்குமிடத்தில் தீ மூட்டி விலங்குகள் கிட்டே வர முடியாதபடி செய்தான். எங்கேனும் செல்ல வேண்டி இருந்தால் ஒரு எரியும் மரக்கட்டையைக் கையில் ஏந்தியபடி சென்றான்.

பிற்காலத்தில் மொழி அறிவு ஏற்பட்டபின், ‘முன்னால் சென்று வழிகாட்டிச் செல்பவன்’ என்ற பொருளில் தீக்கு ‘அக்னி’ என்று பெயரிட்டான். அதுவே அதன் இயற்பெயராக நிலைத்தது. தீ அவனது உணவைச் சமைத்துச் சுவை கூட்டியது. இரவிலும் அவனால் பார்க்க முடிந்தது. கொழுந்து விட்டு எரியும் தீச்சுவாலையின் அழகை வியந்து அணு அணுவாக ரசித்து மகிழ்ந்தான். தனக்கு இத்தனை நன்மைகளைச் செய்யும் தீயை நன்றியுடனும் மரியாதையுடனும் நோக்கினான், அதை வழிபடத் தொடங்கினான்.

கற்களை உரசுவதால் தீ உண்டாவது போல் பிற பொருள்களையும் அக் கூட்டத்தினர் உரசிப் பார்க்கத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த இரண்டு மரக்கட்டைகளை உரசியும் தீ மூட்ட முடியும் என்பதை ப்ருகுவின் கூட்டத்தினர் (ப்ருகவர்) கண்டுபிடித்தனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனிதன் மொழியைச் செம்மை செய்து தன் மனக்கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்கும் வல்லமை பெற்ற காலத்திலும் இந்த ஆச்சரிய, நன்றி, மரியாதை, பக்தி உணர்வுகள் குறையாமல் இருந்தன, வேத ரிஷிகளின் கவிதைகளில் அக்னியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான பாடல்களில் வெளிப்பட்டன. அதில் மாதரிச்வானையும், ப்ருகுவையும், ப்ருகவர்களையும் அவர்கள் நன்றியுடன் குறிப்பிடத் தவறவில்லை.

த்வஷ்டா என்பவர் மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். ரிபு சகோதரர்கள் அதைச் சீர்திருத்தி மெல்லிய ஆனால் உறுதியான மண் பாண்டம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தனர். வேதத்தில் இவர்கள் போற்றுதலுடன் நினைக்கப்படுகின்றனர்.

மனித குல வரலாற்றின் அடுத்த முக்கிய நிகழ்ச்சியில் அங்கிரஸ் மற்றும் அவரது கூட்டத்தினர் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

அங்கிரஸ் காலத்துக்கு முன்னரே மனிதர்கள் இயற்கையை உற்று நோக்கி அதில் ஒரு ஒழுங்கு முறை இருப்பதையும், மனிதனுக்கென்று ஒரு ருதம் இருப்பதையும் அறிந்து கொண்டனர். அங்கிரஸும் அந்த ஒழுங்கு முறையைப் பின்பற்றி நடந்தார். ஆனால் அவரது சிந்தனை இதைத் தாண்டி அப்பால் சென்றது. இந்த ஒழுங்கு முறையை ஏற்படுத்தி இயக்கிக் கொண்டு இருப்பது யார் எனச் சிந்தனை செய்தார். அவரது கூட்டத்தினர் இரு பிரிவாகப் பிரிந்து ஆராய்ந்தனர். பல மாதங்கள் தவம் செய்தனர். ஒரு கூட்டம் ஒன்பது மாத முடிவில் கண்டு பிடித்த உண்மையை மற்றொரு கூட்டம் பத்து மாதத்தில் தெரிந்து கொண்டது. அவர்கள் என்ன தெரிந்து கொண்டார்கள்?

ருதத்தை இயக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதற்கு தோற்றம் இறுதி இல்லை என்பது தான் அவர்கள் கண்ட உண்மை. அது என்றைக்கும் இருப்பது என்னும் பொருளில் அதற்கு ஸத் என்று பெயரிட்டனர். இப்படியாக அவர்கள் ருதத்தின் மூலம் ஸத்யத்தை அடைந்தனர். அந்த ஸத்யத்தை வழிபட்டால் ஆனந்தம், கால உணர்வற்ற அமரத்துவ நிலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொண்டனர். அதைச் சாமானிய மனிதர்கள் அடைய முடியாது தடுக்கும் தீய சக்தி எது என்பதையும் அவர்கள் அறிந்தனர்.

நமக்கு உரிமையான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடியாமல் யாரோ திருடிக் கொண்டு போய்விடுகிறார்களே எனச் சிந்தித்தனர். கடைசியில் நம்முடைய மனம் தான் நமக்கு எதிரி. நம்முடைய மனதில் உள்ள பகைவர்களை அழித்தால் ஆனந்தமாகிய பசுக்கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என அறிந்தார்கள். அந்த ஸத்தியத்தைத் தியானம் செய்யுங்கள் என்று சொன்னது அங்கிரஸ் கூட்டத்தினர் மனித குலத்துக்குச் செய்த ஒரு பேருபகாரம். வழிபாட்டின் சிறப்பை முதன் முதலில் உணர்ந்து கொண்டவர்கள் அங்கிரஸ்கள் என்கிறது வேதம். 10.67.2

கண்ணுக்குத் தெரியாத ஸத்தியத்தைத் தியானம் செய் என்றால் அது எல்லோராலும் சாத்தியமா? அந்த நிலையில் தான் மனிதர்களுக்குத் தெய்வத்தைத் தொழுவதற்கான ஒரு எளிய முறையைக் கண்டுபிடித்த அதர்வன் தோன்றினார். அவர் தான் யக்ஞம் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர். அக்னியைக் கண்ணால் பார்க்கலாம். மற்ற தேவர்களைக் கண்ணால் காண முடியாது. எனவே மற்ற தேவர்களுக்கான உணவை அக்னியில் சேர்த்து விடுங்கள். அவர் அதை அந்தந்தத் தேவர்களிடம் சேர்த்து விடுவார் என்று சொன்னார். தேவர்கள் பலரானாலும் எல்லோரும் ஒரே ஸத்யத்தின் பிரதிநிதிகள் தானே. அதனால் ஸத்தியத்தைத் தொழ விரும்பினால் உங்களுக்குப் பிடித்த தேவருக்கு அக்னி மூலமாக அவியுணவைக் கொடுத்து வழிபடுங்கள் என்று விளக்கினார். வேள்வி பிறந்தது.

ப்ருகு, அங்கிரஸ், அதர்வன் ஆகிய இந்த முப்பெரும் மனித குல முன்னோர்களும் வேதத்தில் பல இடங்களில் போற்றப்பட்டு இன்றும் நம்மால் நன்றியுடன் நினைவு கூரப்படுகிறார்கள்.

தர்ப்பணத்தின்போது இரண்டாவது ரிக்காகச் சொல்லப்படும் மந்திரம் இதற்கு ஓர் உதாரணம்.

எங்கள் முன்னோர்களாகிய, ஒன்பது மாதம் தவம் செய்த அங்கிரஸ்கள், அதர்வாணர்கள், ப்ருகுக்கள் ஸோமபானம் தந்து வழிபடுவதற்கு உரியவர்கள். போற்றத் தகுந்த அவர்களது நல்லாசிகளில் நாம் வாழ்வோமாக. 10.14.6

அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் யக்ஞியானாம் அபி பத்ரே ஸௌமனஸே ஸ்யாம: 10.14.6

இவ்வாறு பிரபஞ்சத் தோற்றம், தீயைக் கண்டுபிடித்தது, பரம்பொருள் ஒன்று உள்ளது என்பதை உணர்ந்தது, வேள்வி மூலம் வழிபடும் முறையை ஏற்படுத்தியது ஆகிய மனித நாகரிக வளர்ச்சியின் சில முக்கிய மைல் கற்களைத் தொட்டுக் காட்டும் வேதத்தை மனித குல வரலாற்றுச் சுவடி என்று சொல்வது பொருத்தமே.

 

 

படம் உதவி – விக்கிபீடியா:  http://commons.wikimedia.org/wiki/File:Rigveda_MS2097.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.