-மீனாட்சி நாகப்பன்

பேதைப் பருவத்தில்
கதைகேட்ட காலங்களும் கடந்து
ஓடித் திரிந்து ஒளிந்தும்
விளையாடி ஒளியும் ஒலியும்
வெள்ளியன்று
கண்டு ரசித்த நாட்களையும்
வீதியிலே நாடகமும் ,வெள்ளைத்திரையில்
வண்ணப்படமும் விடிய விடியப் பார்த்து
மறுநாள் முழுவதும்
உறக்கம் கலையாத நேரங்களை
நினைத்தாலே சிந்தனையில்
சிலிர்ப்பாய் இருக்கிறது!
அந்தத் தருணங்கள் அழகாய் இன்னமும் !

பள்ளியிலும் கல்வியிலே கவனம் கொண்டு
கரையேறிக் கணிதத்தில் சதம்பெற்ற தருணமும்
கல்லூரி வனத்திலே கால்பதித்துச்
சிட்டுக்குருவியாய் எட்டிப் பறந்த
ஏற்றமிகு நாட்களும் என் எண்ணத்தில் பதிந்த
வண்ணக்கோலங்கள் அவை!

சிங்காரச் சென்னையிலே
ரீங்காரமிட்டுத் தமையனின்
தலைமையில் கண்டு ரசித்த,
சென்றுவந்த இடங்கள் ஏராளம்!

மணக்கோலத்தில்மாங்கல்யம் பெற்று
மன்னவனுடன் வாழ்க்கைக் களத்தில்
மனதார அடியெடுத்துவைத்த
நன்னாளும் மறக்க முடியாத
பொன்னாளே!

சிறிய அழகிய கோலமாய் இருக்குமென நினைத்த வாழ்க்கை
சிக்கல் கோலமாய் விரிந்தாலும்
சிக்கனமாய்ப் பக்குவமாய்ச் சிறகடித்துப்
பறக்கின்ற தருணத்திலே
அன்னையாகி ’அம்மா’வென்று
அழைக்கும் அழகிய தருணம்
அமையப்பெற்று வாழ்க்கையின்
அடுத்தகட்டம் நுழைந்த நன்னாளும்
மறக்கமுடியாத மனதின் நினைவுகள்!

கல்வித்துறையிலே கால்பதிக்க
அவசரமாய் அவசியமாய்
ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற,
அரசாணை வாங்கிய நன்னாளும்
பொன்னாளே என்றும்!

உள்ளன்புடன் உணர்ச்சியுடன்
உருவாகும் தருணங்கள் அனைத்தும்
உலகில் மறக்கமுடியாத
உன்னதத் தருணங்களே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.