தேசியகீதத்தில் பிழை!

2

-இரா. சந்தோஷ் குமார்

கல்லறையும் மரணித்துவிட்டது
இன்றைய விஞ்ஞானத்தில்
மின் மயானம்!

***
புகைப்பிடிக்கிறது பூக்கள்
தேசிய நெடுஞ்சாலை நடுவில்
அலங்காரச் செடிகள்!

***

போதைப்பொருளாகக் காந்தி
ஆயிரம்ரூபாய் விநியோகத்தில்
மதிமயங்கியது வாக்குரிமை !

***
அரசு கஜானா
தள்ளாடும் போதெல்லாம்
தாங்கிப்பிடிக்கிறார்கள்
டாஸ்மாக் வாடிக்கையாளர்கள் !

***
உலக மேதாவிகளின்
சிந்தனைகளைத்
தின்றுச் செழிக்கிறது
நூலகத்து கறையான்கள் !

***
பெரியாரின் கோட்பாட்டில்தானோ
மனித ஜாதிகளைப்
பேதமின்றித் தொடுகிறது
கொசுக்களும் ஈக்களும்?

***
சமூகப்பிணிகளைக் குணப்படுத்தத்
தமிழிலக்கியத்தில் இல்லையோ
மனித(ம்) லேகியம்?

***

அகோரப்பசியெடுத்து காத்திருக்கிறது
பகுத்தறிவு வெண்ணிலா
அமாவாசை மானிடர்களே!
கொஞ்சமேனும் கவனியுங்களேன்!

***

தேசியகீதத்தில் கருத்துப்பிழை
தமிழகத்தைக் காப்பாற்றவில்லை
காவேரியும் முல்லைப்பெரியாரும்!

***

கடைசியாக
இன்றைய அரசியல்வாதிகள்
கண்டுபிடித்து விடுவார்கள்
இந்திய இறையாண்மையை
அகராதியில்!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேசியகீதத்தில் பிழை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *