கவிதையாகும் விளங்காமை!

0

-மெய்யன் நடராஜ்

விளக்கமாக விளக்கிச் சொல்லியும்
விளங்காத நிலையில்
விளங்குச்சா என்னும்
வாத்தியாரின் அதட்டலில்
விளங்காததையும்
விளங்கியதாய் தலையசைக்கும்
விடலைநாட்களின் தொடர்ச்சி
விடவே இல்லை இன்னும்….

விளங்கிப் படிச்சவங்க எல்லாம்
விலங்கியலும் பௌதீகமும் என
விரிவாகப் படிக்கப் போனபோது
விளங்காம படிச்ச எனக்கும்
விளங்கிப் படிச்சிருந்தா கொஞ்சம்
விளக்கமாப் படிக்கலாமுன்னு
விளங்கியது,
விளங்க வேண்டிய நேரத்தில்
விளங்கிக்காம இருந்துட்டு
விளங்காததை இப்போ
விளக்கமாக விளக்குமாறு
விளங்கியவர்களிடம் கேட்க, எடு
விளக்கமாத்த என்பதில்
விரிகிறது விசனத்தின் விசும்பு.

விளக்குமாறு பற்றி
விளக்குமாறு கேட்டால்
விளக்குமாறே விளக்கும்

விளக்கு மாதிரி இருந்தும்
வெளிச்சம் தர மறுக்கும்
விளக்கமானோர் எல்லாம்
விளங்கியும் விளங்காமல் நடிக்கும்
விவஸ்தைஇல்லா அவஸ்தைகளில் நின்று
விடுதலைக்காய் போராடுவதிலும்
விளங்காமல் இருப்பதே மேலென்று
விளங்குவதில் விளங்குகிறது
விளங்காம படிக்காததின் விளக்கம்

விளக்கமாக படித்ததின்
விலைகளில் நிர்ணயமாகின்ற
விளக்கங்கள் இருதயம் மூடும்
விசித்திரங்களில் விளையாடும்
விளையாட்டு மைதானத்தில்
விளையாடப்படும் பந்தாய்
விளையாட்டுக்கும் விளையாடாமல்
விளைவிக்கப்படும் சந்தோசங்களில்
விளையாடுகிறது
விலைகொடுத்தும் கிடைக்கா வான
வில்லின் அழகுகள்

விளங்கியதை விளங்காததாய் நோக்கும்
விலங்கு மனசு வேண்டுவதற்கு
விளக்கமாகும் விளக்கங்களுக்கு
விலைகொடுக்கும் கொலைகளிலும்,
விளங்காமலிருக்கும் கலைகளில்தான்
வீணை வாசிக்கிறாள் என் சரஸ்வதி
என்பதால்தான்
வைத்தியமும் உபாத்தியாயமும்
பொறியியலும் வணிகமும் என்ற
பணம்பிடுங்கும் பிழைப்புகளிலும் நுழைந்து
கவிதையாகி நிற்கிறது என் விளங்காமை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.