போய்விடு போதையே!
-துஷ்யந்தி
சுதந்திர நாட்டில் சுதந்திரம் பறிக்க
ஏவினாய் விதை தூவினாய்
தலையை ஆட்டும் மந்தையாய் எமை
மீட்டினாய் ஆசை யூட்டினாய்!
அற்பமாய் மனதிலேபல ஆசைகள்
காட்டினாய் பழி ஈட்டினாய்
கற்பினை அழிக்கக் கயவர்கள் சிலரைத்
தோற்றினாய் புன்மை ஆக்கினாய்!
போதைக்கு அடிமையா யிருத்தல்
நியாயமோ இது தேவையோ?
சிந்தனை செய்யா மனிதனேயிது
நீதமோ பிடி வாதமோ!
உன்னதவாழ்வின் அழகிய நொடிகள்
மாறுமோ வீண் போகுமோ
புத்தி கூறிநல் வழிப்படுத்தல்
பாபமோ மனஸ் தாபமோ?
பெற்றதாய்க்கு இல்லை பிள்ளையெனப்
போகவோ நாங்கள் சாகவோ?
குற்றம் செய்வித்துச் சிறைக்குள்ளே
தள்ளுவாயோ பழி கொள்ளுவாயோ!
நல்ல மரத்திலே புல்லுருவியாய்நீ
தொற்றுவாயோ கைப் பற்றுவாயோ
வெற்றி வாகை சூடும்நேரம்
தாழ்த்துவாயோ எமை வீழ்த்துவாயோ?
புற்றுநோயாய்த் தொற்றி உயிர்குடிக்க
வந்திட்டாய் சமூகம் அழித்திட்டாய்
இன்னும்நீ செய்யும் கொடுமைக்கு
மலைவுறோம் சித்தம் கலைவுறோம்!
வந்தவழிதனில் திரும்பிப் பார்க்காது
போய்விடு எம்மை வாழவிடு!
நாளைய நாட்கள் வாசனைமலராய்
மலரட்டும் யுகம் புலரட்டும்!