வையவன்

“ஞானும் வரும்” என்றாள் பிரீதா.
இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சிவா.
“நீங்க என்ன சொல்றீங்க?” என்று பிரீதாவைக் கேட்டான்.

“ஞானும் ரிஷிகேஷ் வரும்.”
அவர்கள் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே வந்தாள் பிரீதா. இந்த நண்பர்களின் விவாதத்தைக் கேட்டாள். திடீரென்று எதிர்பாராவிதமாக தன் முடிவை அறிவித்தாள்.

“என்ன பிரீதா சொல்றீங்க?”
“எனிக்கு எவிடயோ போகணும் எவ்விடயெங்கிலும்” என்று தட்டுத் தடுமாறி அவள் தமிழில் தொடர்ந்தாள்.

“நான் இருபது நாட்களாக மனுஷியாகவே இல்லை. எனக்கு ஒரு பிரயாணம் தேவை!”
சிவாவைச் சாட்டை போல் அந்த வாசகம் தாக்கிற்று.

தாமுவின் மரணம் அவளை எவ்வளவு தாக்கியது என்பதை உணரவும் நேரமின்றித் தன் சொந்தத் துயரத்தில் மூழ்கிப் போனான்.

அது என்ன சுயநலம்!
“பதினைந்து நாளுக்கு மேலே ஆகுமே! ஐ திங்க் யூ மே நாட் கெட் லீவ். தனியார் நர்ஸிங்ஹோம்லே லீவ் தர மாட்டாங்களே” என்று வெற்றிவேல் அவள் வருவகையைத் தவிர்க்கும் விருப்பத்தோடு குறுக்கிட்டான்.

“எனக்கு லீவ் வேணும். கொடுக்க மாட்டேண்ணா நான் ரிஸைன் பண்ணுவேன்.”
அவள் இவ்வளவு தீவிரமாகப் பேசுவாள் என்று வெற்றிவேல் எதிர்பார்க்கவில்லை. சிவாவைப் பார்த்தான்.

“வரட்டும்!” என்றான் சிவா.
சற்று நேரத்துக்கு முன் வரவே மாட்டானோ என்று தாமும் நினைத்த சிவா, அவளும் வரட்டும் என்று சொன்ன பதிலில் தான் வர விரும்பவில்லை என்ற ஆட்சேபம் அடிபட்டுப் போனதை வெற்றிவேல் கவனித்தான்.

“தாங்யூ சிவா” என்று சிரித்தாள் பிரீதா. இருபது நாட்களுக்கு அப்புறம் அவள் முகத்தில் சிரிப்பு இப்போது தான் மலர்ந்திருந்தது.

நெடிய தொருக் கொடிய தீக்கானலில் மழையின்றிப் பட்டுப் போன ஒரு மரத்தில் மீண்டும் பெய்த மழையில் எங்கோ ஒரு சொட்டு போல் ஒட்டிக் கொண்டிருந்த உயிர்ப்பு மீண்டும் மலர்வது மாதிரி இருந்தது.

பிரீதா தான் வாங்கி வந்த ரொட்டியை எடுத்து வர உள்ளே போனாள்.

“பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்!” என்று வெற்றிவேல் சொன்னான்.

தன் தீர்மானமும் விமர்சனமும் தகர்ந்து போனதை வெற்றிவேல் சுட்டிக்காட்டுகிறான் என்று சிவாவுக்கு புரிந்தது.

“உண்மைதான்! நான் பிரீதாவுக்காக வருகிறேன்.”
“உன் தந்தைக்காக” என்று அந்தக் கருத்து பாபா ஓம்கார்நாத்தை அவமரியாதை செய்துவிட்டது போல் துடிப்போடு குறுக்கிட்டான் வெற்றிவேல்.

“ஸாரி வெற்றிவேல்! எனக்கு என் தந்தையின் மீது கோபமில்லை. பாபாவின் மீது உன் மாதிரி ‘ஒர்ஷிப்’பும் இல்லை… நான் வருவது” என்று பிரீதாவைப் பார்த்து பேசியதை முடிக்காமல் தவிர்த்தான்.

ரொட்டியை இருவருக்கும் பரிமாறிவிட்டு… “நான் கிளம்பறேன்! அரை மணி நேரம் பர்மிஷன் வாங்கி வந்தேன். நாம என்னிக்குப் புறப்படணும்?” என்றாள் பிரீதா.
“பதினெட்டாந் தேதி பாபா ரிஷிகேஷ்லேருந்து கௌம்பறார்.

ரெண்டு நாள் முன்னாடி நாம அங்கே போயிடணும்!”
“இன்னிக்கு பதினொண்ணு… எதிலே போகப் போறோம்…?”
“தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லே டில்லி போய்ட்டா அங்கிருந்து நெறைய டூரிஸ்ட்கோச் டெய்லி கௌம்பறதாம்.”
“ஆ யு ஷ்யூர்?” என்று வெற்றிவேலைக் கேட்டாள் பிரீதா.

“ஷ்யூர்.”
“அப்ப டிக்கெட் புக் பண்ணிடுங்க.. மூணு பேருக்கும்” என்றாள் பிரீதா. மீண்டும் அவளே யோசித்து விட்டுச் சொன்னாள்.

“டிக்கெட் கெடைக்கறது கஷ்டமாயிருக்கும். ஒரு ரயில்வே ஆபீசர் தன் மனைவி பிரசவத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கிறார். அது இங்கே அட்மிட் ஆயிருக்கு. ஐ’ல் போன் ஹிம். நீங்க பொறப்படறப்ப என்கொயரியிலே வந்து என்னைக் கூப்பிடுங்க”

“சரி”
பிரீதா புறப்பட்டுச் சென்றாள்.
“இது என்னடா சிவா திடீர்த் திருப்பம்?”
“திருப்பம் தான்; திடீர்த் திருப்பம் அல்ல”
“வாட் டு யூ மீன்?”

“நான் வர ஒப்புக்கிட்டது இவளுக்காக”
“யார் இவள்? ஐ-மீன் ஒனக்கு இவள் யார்?”
“ஓர் உண்மையான சிநேகிதி.”
“அதுக்கு மேலே?”

“தாமுவின் பார்ட்னர், நான் உருவாக வேண்டும் என்று அந்தரங்க விசுவாசத்தோடு விரும்புகிறவள். தாமு இவளைத் திருமணம் செய்து கொள்ள இருந்தான்” அவன் பெருமூச்செறிந்தான்.

“நீ அப்ஸெட் ஆயிட்டியா? தாமு ‘டெத்’தை சொல்றேன்.”
“இட் ஈஸ் பாஸ்ட்”
“அதுக்கு மேலே ஒண்ணுமில்லியா?”
“வாட் எல்ஸ்?”
“நீ… எழுத்தாளனா நீ? ஆர் யூ… எ… ரைட்டர்?” நம்பாதது மாதிரிக் கேட்டான் வெற்றி.

“ரைட்டர்…ஃபைட்டர் எல்லாம் அப்புறம் மனுஷன்! அதானே ‘பேஸிக்’. தாமு எனக்கு அதைத்தான் உணர்த்தினார். அவர் போனதும் உலகம் இருண்டது”

அவனைப் பேச விடுவது போல் மார்பின் மீது கை கட்டிக் கொண்டு வெற்றிவேல் சிவாவைக் கவனித்தான்.

“அது ஒரு தவறு. போராடு. உன்னைக் கண்டுபிடி. இதுதான் தாமு எனக்குத் தந்த செய்தி. மனிதன் மறைந்ததும் நான் உணர்ச்சி வசமானேன். அதிலே செய்தி மறந்து விட்டது.”
“பலவீனம்… அது தானே மனிதன்!”

“இல்லை. விழுந்து விழுந்து எழுகிற பலம். அதுதான் மனிதன்.”
“மறுபடியும் ஒரு கருத்து யுத்தமா?”

“இல்லேடா வெற்றி… எப்பவும் நான் அஃபென்ஸ் ஆடறதில்லே. டிஃபென்ஸ் தான். உன் கருத்து தாக்கறப்போ நான் என்னைக் காப்பாத்திக்க வேண்டாமா?”

“மேலே சொல்லு” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் வெற்றிவேல்.

“செய்தி மறந்துதான் போச்சு. மறைஞ்சு போயிடலே.செய்திகள் மறக்கறதில்லை. மனுஷன் தான் மறைஞ்சு போயிடறான். உயிரோட இருக்கறவன் சொந்த சுக துக்கங்கள்ளே சுயநலத்தினாலே அதைத் தள்ளிப் போடறான். அவ்வளவுதான். இன்னிக்குக் காலையிலே மறந்தது என் நினைவுக்கு வந்தது… போகட்டும்! எப்படி இருக்கு உன் விவசாயம்?”

“நீ வந்து பார்”
“சொல்ல மாட்டியா?”
“சொல்வதற்கு அது செய்தி அல்ல”
“ஆல்ரைட்… நானே வர்றேன்”
“உங்க அம்மாவைப் பார்த்தேன்!”

“எப்ப?”
“நேத்து ரிஷிகேஷ் போறேன். வாங்கண்ணு கூப்பிட்டேன்”
“என்ன சொன்னாங்க”
“சிரிச்சாங்க.”

“அப்புறம்?”
“கம்ணு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு சிவாவைக் கூப்பிட்டுகிட்டுப் போப்பாண்ணாங்க!”
“அப்பிடியா சொன்னாங்க?”

“ஆமாம். நீ தாமு மரணத்தைப் பத்தி எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினாங்க. ரொம்ப மனசு கெட்டுப் போயிருக்காம்பா… அவசியம் கூட்டிக்கிட்டுப் போண்ணு சொன்னாங்க சொன்னது மட்டுமில்லே” என்று ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினான் வெற்றி.

“இதிலே என்ன இருக்கு?”
“பத்தா ஆயிரம் ரூபா இருக்கு நீ அனுப்பிய காசையெல்லாம் அவங்க செலவழிக்காம பாங்க்லே போட்டு வச்சிருக்காங்க. அதிலேருந்து பத்தாயிரம் ரூபா எடுத்து ஒங்கிட்டே வழிச் செலவுக்குக் கொடுக்கச் சொன்னாங்க.”

கப்பென்று மார்பை எதுவோ பிடித்தது. மதகு வெள்ளம் திறந்த மாதிரி குபுகுபுவென்று மனசு நிறைந்தது.
‘எங்கிட்டே எதுக்குக் கொடுக்கறே?”
“அம்மா கொடுக்கச் சொன்னாங்க.”

சிவா கவரைத் தொட்டு விட்டு மீண்டும் விரல்களை எடுத்துக் கொண்டான்.
“சரி… நான் வாங்கிட்டேன்! வச்சுக்கோ. வழியிலே நீயே செலவு பண்ணு.”

“நீ என்னை அவமானம் பண்றே!” உனக்கு இசைவில்லாத ஒரு பிரயாணத்துக்கு உன்னை நான் கூப்பிடறேன். அதுக்கு நீ செலவு பண்ணணும்னு எதிர்பார்த்து வந்திருக்கேண்ணு நெனச்சியா?”

“நல்லது… நீயே செலவு பண்ணு. அந்தப் பணத்தை நீயே வச்சிரு. கேக்கறப்ப-நான் எப்பவாவது கேட்டா கொடு!”

“ஒன்னை மாதிரி பிடிவாதம் பிடிச்ச முசுடுகிட்டே எவண்டா ஆர்க்யூ பண்ணுவான்” என்று மெய்யாகவே கோபித்துக் கொண்டான் வெற்றிவேல்.

“வெற்றிவேல்” என்று பளிச்சென்று ஒரு தெளிவோடு சிவா ஆரம்பித்தான்.
“சொல்லு.”

“நான் ஆர்க்யூ பண்ணுவேன். ஆனா எப்பவும் நீ தான் ஜெயிக்கணும்னு விட்டுடுவேன்.”
வெற்றிவேல் உணர்ச்சி வசப்பட்டான். அதைக் காட்டிக் கொள்ளாமல் கண்களைக் கவிழ்த்துக் கொண்டான்.

“சரி விடு. கௌம்புவோமா?” என்று எழுந்தான் வெற்றிவேல். அவர்கள் கிளம்பிய போது வானம் மெல்ல மூடிற்று.

திரும்பி வரும்போது மழை தொடங்கிற்று. அது இரண்டு நாள் நீடித்தது.
இரண்டு நாளாகப் பொழிந்து தீர்ந்தும் இன்றும் வானத்தை விட்டுப் பிரிய மனமின்றி மேகங்கள் மூடியிருந்தன.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் கார்டின் சிக்னலுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
“சூரியன் இல்லாமே நல்லாவே இல்லே..” என்று சொன்னாள் பிரீதா.

ஜன்னலோரத்து ஸீட்டை அவளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு எதிர் ஸீட்டில் வெற்றிவேலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவாவுக்கு அந்த வெளியீடு மிகவும் அழகாகப் பட்டது.

“நாம சூரியனோட ரொம்ப பழக்கப்பட்டதாலே! வி மிஸ் தி சன்” என்று வெற்றிவேல் குறுக்கிட்டான்.
“இட் ஈஸ் எ வெரிகுட் எக்ஸ்பிரஷன்! ஆனா எனக்கு வானம் மூடிக்கிட்டு மழை பெய்துகிட்டிருக்கப்ப அந்த ஊரை விட்டுட்டு கிளம்பறது ரொம்பப் பிடிக்கும்.”

எதற்காகப் போகிறோம் என்பதை விட அந்த ரயில் பிரயாணத்தையே அவர்கள் மூவரும் விரும்பினர். அந்த மகிழ்ச்சியில் வெளியூர்ப் பயணங்களை ரசிக்கும் குழந்தைப் பருவத்தின் தூய்மையான ஆனந்தம் இருந்தது.

“சார்…!” என்று யாரோ வெளியே கூப்பிடும் ஓசை கேட்டது.
சிவா திரும்பிப் பார்ப்பதற்குள் பிரீதா முந்திக் கொண்டாள்.

“ஹலோ செங்குட்டுவன்… ஒனக்கு எப்படித் தெரியும்?”
சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் ஜன்னல் அருகே வந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது.
“நான் சொல்லியிருந்தேன்!” என்று சட்டென்று எழுந்தான் சிவா.

“நல்லா போய்ட்டு வாங்கம்மா!” என்று வாயெல்லாம் பல்லாக அவன் வழியனுப்புதல் சொன்னான்.
அப்புறம் கையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

“இதிலே என்ன இருக்கு?”
“ஒண்ணுமில்லேம்மா, கொஞ்சம் எலுமிச்சை சாதம்.. கொஞ்சம் புளி சாதம்.”
வெற்றிவேலுக்கு சிரிப்பு வந்தது.

“ப்ளீஸ் டோன்ட் லாஃப்” என்று அவன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டே வெற்றிவேலுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள்.

“இதெல்லாம் எதுக்கு செங்குட்டுவன்?
“வாங்கிக்கங்கம்மா. வழியிலே ஒருவேளை சாப்பிடுங்க. ஐயா வந்திருந்தா பிரியாணி வாங்கி வந்திருப்பேன்.”

செங்குட்டுவன் தொண்டை தழுதழுத்தது.
“ஹூ ஈஸ் ஹி?” வெற்றிவேல்.

“தாமுவினுடைய ஒர்க்ஷாப்லே சீனியர் மெக்கானிக்”
தான் சிரித்ததற்காக நாக்கைக் கடித்துக் கொண்டான் வெற்றிவேல். தாமுவின் அன்பு எங்கெல்லாம் வேர் பாய்ந்திருந்தது என்பது அவனுக்கு மிகவும் உறைத்தது.

வெற்றிவேல் திரும்பி பிரீதாவைப் பார்த்தான். தளதளவென்று புஷ்பித்துக் குலுங்கியது போன்ற அவள் மகிழ்ச்சி சட்டென்று குறைந்து முகம் வாடிற்று.

“சந்தோசமா போயிட்டு வாங்கம்மா” என்று அந்த நேரத்தில் தாமுவை நினைவுபடுத்திய பிழையை உணர்ந்து செங்குட்டுவன் சிரித்தான்.

“ஒன் மினிட்” என்று சிவா வெளியே போனான்.

‘எங்கே போறே?”
“செங்குட்டுவன் கட்டுசாதம் கொண்டு வந்திருக்காரு. நம்மகிட்டே வாட்டர் ஜக் இல்லே. இங்கே ஒண்ணு வாங்கிட்டு வந்துடறேன்.”

“டைம் இருக்கா?”
“இருபது நிமிஷம் இருக்கு” சிவா செங்குட்டுவன் தோள் மீது கை வைத்துக் கொண்டே பிளாட்பாரத்தில் நடந்தான்.

சிவா அதற்காக மட்டும் போகவில்லை என்று வெற்றிவேலுக்குப் பட்டது.
வேறு ஏதோ ஓர் அந்தரங்கம் பேசவே போகிறான் என்று நினைத்தான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *