இந்தியன்!
-கவிஜி
கண்ணீரில் மிதக்குது பூமி – அட
எங்கிருக்க நீ தான் சாமி…?
நாட்டுக்குள்ள எங்க ஊரு சேரி – கொஞ்சம்
எட்டிப் பாரு கிடைக்கும் நூறு சேதி!
அன்னனைக்கு உழைச்சா சோறு…
மழை பெஞ்சா வீதியெல்லாம் சேறு…
கோடைக்காலம் கொள்ளி வைக்கும் பாரு…
இந்தியாதான் எங்களுக்கும் நாடு!
தண்ணி வேண்டி காத்திருக்கா பொம்பள…
தண்ணிக் கட முன்னால ஆம்பள!
எதிர்காலம் எங்களைத்தான் நம்பல – அட
எதிர்நீச்சல் போட இனித் தெம்பில்ல!
வறுமை வாட்டுது வயசக் கூட்டுது
வாழ்க்கை பறபறக்கும் ரயிலு…
பணந்தான் ஆட்டுது பந்தப் போல உருட்டுது
இலக்கே எங்களுக்கு கூழு!
சாக்கடையும் பூக்கடையும் ஒண்ணுதான்…
கொசு வளர்க்கும் பண்ணை இந்த மண்ணுதான்…
வெட்டிப் பேச்சு திண்ணை இங்க இல்லைதான்
வெட்டியான் வேலைகூட தில்லுதான்!
சாரங்கட்டி தொங்குவோம் கயிறுல…
சாவப்பாத்து பயப்படத் தெரியல…
சங்கடந்தான் ரத்தம் எங்க உயிருல
சரித்திரத்தில் எங்களுக்குப் பெயரில்ல!