சுதந்திரத்தைப் பேணுவோம் !
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்த்திரேலியா )
அண்ணல் காந்தி
அஹிம்சை கொண்டு
அரவணைத்த சுதந்திரம்
மண்ணிலிருக்கும் நிலையைப்பார்க்க
மனசுஒடிஞ்சு போகுதே !
காந்திமகான் படத்தைமட்டும்
காசில்போட்டு வைத்துளோம்
காந்திநினைத்த அத்தனையும்
காற்றில்கரைந்து போயிற்றே !
காந்திமகான் உள்ளகாசை
கட்டுக்கட்டாய் பதுக்கிறார்
காந்திகூட கைதியாகி
கயவர்கையில் நிற்கிறார் !
மதுவையொழிக்க வேண்டுமென்று
மகான்காந்தி முழங்கிட்டார்
மதுபெருகி இந்தியாவை
மதிமயக்கி கெடுக்குது !
தெரிவில்பெண்கள் போவதற்கே
தினமுமச்சப் படுகின்றார்
திசைக்குத்திசை கயவர்கூட்டம்
தினமும்கற்பைப் பறிக்கிறார் !
காவல்நிலையம் போவதற்கே
கலக்கமாக இருக்குது
காவல்துறை கூடயிப்போ
கண்ணியத்தை மிதிக்குதே !
நீதிமன்று கூடயிப்போ
நெஞ்சைநிமிர்த முடியல
நீதிகூட காசைப்பார்த்து
நிலைகுலைந்து நிற்குது !
சாதிபேரைச் சொல்லிசொல்லி
பேதிகொடுத்து நிற்கிறார்
நாதியற்ற கூட்டமாக
நாட்டில்பலர் இருக்கிறார் !
ஓடிவரும் நீரைக்கூட
ஓரங்கட்டப் பார்க்கிறார்
உழவர்கூட்டம் நீருக்காக
உயிரைவிடப் பார்க்கிறார் !
உணவில்மருந்தில் கலப்படத்தை
உடனுக்குடன் செய்கிறார்
உடல்நலத்தைப் பற்றியெல்லாம்
உள்ளமேற்க மறுக்கிறார் !
காசுகாசு என்றுவெண்ணி
கண்ணியத்தைத் துறக்கிறார்
கடவுள்சிலையை திருடிவிற்று
காசைக்கணக்குப் பார்க்கிறார் !
வெள்ளையரை நாட்டைவிட்டு
விரட்டியடித்து விட்டாலும்
கொள்ளையரின் கையிலிப்போ
கொடுத்துவிட்டோம் நாட்டையே !
ஊழல்செய்யும் கூட்டத்தாரால்
நாளும்தீமை விளையுது
ஆளைமாத்தி ஆளைமாத்தி
அரசில்கொள்ளை நடக்குது !
நல்லவரை நாட்டில்காண
நமக்குளாசை இருப்பினும்
நல்லவரும் நம்மைவிட்டு
நாளும்வெளி செல்கிறார் !
எத்தனையோ தியாகம்செய்து
எடுத்தவெங்கள் சுதந்திரம்
ஏற்கவொண்ணா இன்னல்பட்டு
இந்தியாவில் இருக்குது !
சுத்தமான சுதந்திரத்தை
சுவைத்துச் சுவைத்துநின்றிட
அத்தனபேர் உள்ளங்களும்
அஹிம்சைபோற்ற வேண்டுமே !
காந்திநேரு காமராசர்
வந்தபாதை சென்றுநாம்
கலாமையா நினைவில்வைத்து
காத்துநிற்போம் சுதந்திரம் !
சுதந்திரத்தை அனுபவிக்க
சுதந்திரத்தை தேடுறோம்
சுதந்திரமாய் வாழநாங்கள்
சுதந்திரத்தைப் பேணுவோம் !
