சுதந்திரக் கொடிபிடித்த தமிழ்ச் சிறுவனின் மனதுக்குள்!
-தமிழ்நேசன் த. நாகராஜ்
அன்று பார் புகழ வாழ்ந்த இனம்
இன்று வஞ்சகத்தால் சூழ்ந்த இனம்!
அன்று பார் ஆண்ட மன்னன் இனம்
இன்று நாதியற்று போன இனம்!
எந்த இனமும் தந்திராத
பல சொந்த உயிர்கள் தந்த இனம்!
இந்திய நாட்டுக்குள் வாழ்ந்தாலும்
சிறு மாநிலத்தில் சுருங்கிய இனம்!
அணு உலையேனும் ராட்சசனைச்
சிறு சலனத்தோடு ஏற்ற இனம்
ஆழ்துளையிடும் மீத்தேனைப் பற்றி
அறியாமல் அனுமதித்த இனம்!
ஒரு பசுவைக் கொன்றால்கூடப் பதறியெழும் நாட்டில்
இருபது உயிர்களைச் சுட்டுக்கொன்ற வஞ்சகத்தை
வாய்மூடிப் பார்த்த இனம்!
தவித்த வாய்க்குத் தண்ணீர் இல்லை
நமக்கு முல்லைப் பெரியாறில் பங்கும் இல்லை!
எம் மாநிலத்தில் ஆங்காங்கே வெளிச்சம் இல்லை!
தயாரித்த எங்களுக்கே போதிய மின்சாரம் இல்லை!
தமிழகத்தில் காவிரி நதியின் ஓட்டம் இல்லை!
அதைக் கேட்க இந்தியாவிற்குத் தமிழன் மேல் நாட்டம் இல்லை!
கடல் கடந்து தமிழ் இனம் அழிந்த போது
அதை நிறுத்தவோ தடுக்கவோ முயலவில்லை!
கடல் நடுவே சுடப்பட்டு உயிர் இழக்கும்
நமது தமிழ் மீனவரைக் காக்கவும் முன்வரவில்லை!
நம்முடைய கச்சத்தீவை எவர் வசமோ தந்து விட்டு
அதை காக்க நீர்முழ்கிக் கப்பல்களைத் தந்த தேசம்!
சொந்த நாட்டுத் தமிழ்மக்களைக் கொன்று ஒழிக்க
அண்டை நாட்டுக்கு ராணுவத்தைத் தந்த தேசம்! சர்வதேச மாமன்றத்தின் போர்க்குற்றத் தீர்மானத்தில் கூடத்
தமிழர்களுக்கு ஆதரவு தராமல் மவுனம் காத்த தேசம்!!
இப்படித் தமிழனை அழித்த இந்த தேசத்தின்
இந்தச் சுதந்திரக் கொடியினை நாம் தீண்டலாமா?
என்று எண்ணுகிறானோ அந்தத் தமிழ்நாட்டுச் சிறுவன்?
வல்லமையில் எனது கவிதைகளை..
வெளியிட்டு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும்
இதழ் ஆசிரியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!