சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்.

அன்னை (பலர் குடியிருந்த (குடியிருக்கும்) கோவில்)

received_1572346819684554
அம்மா!

‘இந்த ஒரு வார்த்தையில்தான் அகிலமே உள்ளடக்கம்’.

ஆம், அன்னையானவள் இல்லத்தின் ஜீவநாடி. அந்தத் தாய் தன் திருமணத்தின் முன்னரே தன் அன்னை, உடன்பிறந்தவர்க்கு அன்னையாய்த் திகழ்ந்தவள். அடிமை இந்தியாவில் அவதரித்து இருப்பினும், தன் இல்லம் தழைத்தோங்கி நிற்கப் பாடுபட்டவள். குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்டும், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தபோதும் தந்தை ஸ்தானத்தைத் தான் எடுத்துக் கொண்டவள்.

தந்தையின் மரணம் அவளை வெகுவாய் பாதித்தது. இளம் வயதில் பத்தாம் வகுப்பு வரை பயின்று, தட்டச்சில் தேர்ச்சி பெற்று, குடும்ப நண்பர் உதவியுடன் குடும்பப் பொறுப்பைக் கையிலெடுத்தவள்.

ஏதோ புண்ணியம் செய்ததால். தன் மகள் போல பாவித்த அவர் உதவியுடன் முன்னேறி மெல்ல மெல்ல அவள் அரசுப் பணியில் சேர்ந்தாள். ஒரே சேலையைக் கிழித்து, அக்கா, தங்கை உடுத்து, தம்பி பாவம், அவன் பல இடங்களுக்குச் செல்பவன் எனப் பிள்ளையாய் அவனுக்கு நல்ல உடை அணிவித்து அழகு பார்த்தவள்.
தம்பி தங்கையை ஊக்குவித்து அவர்களையும் ஆளாக்கி, அரசுப் பணியில் அமர்த்தி பணியாற்றச் செய்தவள். பின் தன் பொறுமைக்குக் கிடைத்த பரிசாய் அமைந்த கணவனுக்கோ அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி. கணவன் உதவியுடன் தாய், தங்கை, தம்பிக்கு ஆதரவாய் இருந்து, உடன்பிறந்தோர்க்கும் நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவள்.

‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது’

என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப இல்லறத்தை இனிதாய் நடத்தி வந்து, கட்டினவன் இஷ்டப்பட, தான் கஷ்டப்பட்டு இரண்டு ஆண்பிள்ளைகள், ஒரே பெண் என மூவருக்குத் தன் கருவறையைக் கடனாகக் கொடுத்து, இந்த விந்தை உலகைக் காணச் செய்தவள் அந்தத் தாய்.

பிரசவத்திற்கு முன் தன் செல்ல மகளைப் பெற்றெடுக்க அவள் பட்ட வேதனை தான் என்ன சொல்ல. ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று, அந்தக் கஷ்டத்தினூடே அலுவலகம் சென்று பணியாற்றி, பெண் சிசுவைப் பாதுகாத்து ஈன்றெடுத்தாள்.

‘பெண் பிள்ளை வேண்டாமென்ற பழங்கூற்றைத் தான் போக்க
பத்துமாதம் பெண் சிசுவைக் கருவில் பாதுகாத்து வளர்த்தவள்’,
பின் ஈன்றெடுத்து, தந்தை அவர்தம் கைகளிலே தாலாட்டக் கொடுத்தப் பெருமை, நம் அன்னை அவளையே சாரும்.

குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க அவள் அன்னை உதவியாக இருந்ததால், அவள் சுமை சற்றுக் குறைந்தது. தானும், தன் கணவனும் அரசுப் பணியில் இருந்ததாலோ என்னவோ, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடிந்தது. எத்தனை வீடுகளில், அக்காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைப்பது சாத்தியம் என்பதைச் சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் நம் அன்னை புண்ணியவதி, பிள்ளைகளும் அதிர்ஷ்டசாலிகளே.

‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை’
என்னும் கூற்றுக்கிணங்க நம் அன்னையின் மழலைகள் அவளைப் போலவே படிப்பில் படு சுட்டியாய்த் திகழ்ந்தால்,

‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டத் தாய்’
என நம் ஐயன் வள்ளுவப் பெருமான் வாய்மொழிக்கும் உதாரணமான சிறப்பு அன்னை அவளுக்கு மட்டுமே.

பிள்ளைகளைக் கடைசி வரை ஆளாக்கி அன்னையென இருந்த பெருமை பாட்டி, அன்னை மற்றும் சிற்றன்னைக்கு உண்டு. எனவே அன்னையென மூன்று காவல் தெய்வங்கள் இருந்தால் இல்லம் கோவில் தானே?

பிள்ளைகள் படித்த கிறித்தவப் பள்ளியில் இரு செவிலித்தாய் அன்னையராய் குழந்தைகளை அரவணைத்து, அன்பு செலுத்தி கல்வி தந்ததால், நம் அன்னையின் இல்லம் மெல்ல மெல்லப் பல்கலைக்கழகமாக மாறத் தொடங்கியது. செவிலி அன்னையரின் பிரார்த்தனையால், அவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் சென்று வந்து அவர்கள் தந்த எண்ணெய் பிரசாதத்தாலும், அவளின் ஒற்றைத் தலைவலியும் நாளடைவில் மறைந்தது. இப்படி அன்னையானவள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியெனத் திகழ்கிறாள்.

அடுத்து தம்பி, தங்கை திருமணத்தை இனிதே நடத்திக் கொடுத்து, அவர்களின் அன்னையாய் கணவனுடன் நின்று ஆசி அளித்து இனிதே வாழ வைத்து, அவர்கள் பிள்ளைகளையும் அரவணைத்தவள் அவள்.

பாட்டியானவள் பேரப்பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து, சமையலும் முடித்து வைத்திடுவாள். அன்னை மற்றும் சித்தியின் பணி அன்னையாய் அலுவலகப் பணியின் இடையிலும், பள்ளி சென்று பிள்ளைகளின் நலன் நோக்குதல், பின் அவர் தேவையை படிப்பில் பூர்த்தி செய்தல் எனத் தொடர்கிறது. அன்னையின் அன்புக்கு என்றும் அழிவில்லை, அவள் பணிக்கு என்றும் ஓய்வில்லை.

அவள் மகனும், மகளும் உயர்நிலை பயிலும் போது பள்ளியிலேயே முதல், மூன்றாம் இடம் பிடித்த போது, கணவனுடன் அகமகிழ்ந்து அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வழி வகுத்துக் கொடுக்கும் நிலையில் அவள் இப்போது மூன்று பிள்ளைகளையும் ஏதுவான பிரிவில் சேர்த்து மேல்நிலைக் கல்வி பயில வகை செய்தாள்.

‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’
என்பது போல் பிள்ளைகளின் முயற்சிக்கும், கணவனுடன் கைகோர்த்து தாய் தந்த ஊக்கத்திற்கும் பலனாக மூத்த பிள்ளைக்கு மருத்துவக் கல்லூரி, மற்ற இருவருக்கு பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி. அவர்களின் கல்லூரி படிப்பு செலவிற்கு கணவன் உழைக்க, தானும் இல்லத்திலும் வேலை செய்து கொண்டு, அலுவலகத்திலும் இன்முகத்தோடு அயராது உழைத்திருப்பாள்? அந்த வேதனையை அவள் வெளிக்காட்டியதே இல்லை. ஏனெனில் தாய் பொறுமையின் இலக்கணம்.

செல்லமாய் வளர்த்த மகளைக் கல்லூரியின் விடுதியில் விட்டு அவள் நலன் அறிய நேரமானால், கணவனுடன் சேர்ந்து துடித்த வேதனையைச் சொல்ல வார்த்தையே இல்லை. பட்ட துன்பத்திற்கெல்லாம் பலனாக மூத்த மகனுக்கு அரசு மருத்துவமனையிலும், மற்ற மகன், மகளுக்கு பொறியியல் கல்லூரியில் பணி. இப்போது தாயின் மகிழ்வையும், மனநிலையையும் நான் உரைக்கத் தேவையில்லை.

அலுவலகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுப் பின், இரு மகன்களுக்கும் மருத்துவப் பணியில் உள்ள இரு குணவதிகளை மனைவியாய் அமைத்துக் கொடுத்து, மருமகள்கள் இருவருக்கும் அன்னையாய்த் திகழ்கிறாள் நம் அன்னை. பிறகு தன் தாயும் நோய்வாய்ப் பட்டுப் பிரிந்தபோது, தாங்கொண்ணா துயருற்ற அவளுக்கு அன்னை அவள் கணவன் மட்டுமே.

அன்னையாய் மருமகள்கள் இருவருக்கு மட்டுமின்றி, தம் பேத்திகளுக்கும் அன்னை அவளே. அவர்கள் இருவரையுமே பள்ளி செல்லும் வரை வளர்த்து ஆளாக்கி விட்டு மகன்கள் குடும்பத்திற்கும் துணை நிற்கிறாள். அன்னையாய் விளங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணயர்வு என்பதே கிடையாது.

அப்படித்தான் நம் அன்னை தன் கணவனுடன் இணைந்து மகன்கள், மருமகள்கள் பணிக்குச் சென்ற போது பேத்திகளை கண்ணயர்வின்றி கவனித்துக் கொண்டது. அன்னையின் பணி இதுதான் என நாம் பட்டியலிட முடியாது.

ஆனால் அந்த அன்னைக்கு இத்தனை மகிழ்விலும் ஓர் மனக்குறை மட்டுமே. தன் செல்ல மகள் மணம் தாமதமானால் எந்த அன்னை மனம் சகிப்பாள்? அன்னையாவாள் முதல் தெய்வம். அந்தத் தெய்வத்தின் மனக்குறையும் ஒரு நாள் நிவர்த்தி பெறுமா என்றால் நிச்சயம் நிவர்த்தி ஆகும். எல்லாம் வல்ல தெய்வம், அவள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் நிச்சயம் தரும்.

ஆம், ஒவ்வொரு பெண்ணுமே இந்த அவனியில் ஜனனம் எடுக்கும் தருணத்திலிருந்து, இவ்வுலகை விட்டு மறையும் வரை தாயாகத்தான் அவளை மாற்றிக் கொண்டு, தாய்மைப் பணிக்கென தன்னை அர்ப்பணிக்கிறாள் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் அவள் படும் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதும் உண்மையே.

அன்னையே அன்பின் முதல் மொழி, கண்கண்ட தெய்வம், ஏன் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம். ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’, என்பதை விடுத்து ‘அவளின்றி ஓர் அணுவும் அசையாது’ எனக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

அன்னையைப் பற்றிச் சுருங்கச் சொன்னால் அம்மா என்பதே அனைவர் அழைக்கும் முதல் வார்த்தை. அன்னையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்பின் திரு உருவம்,
அனைவர் வீட்டின் வாழும் தெய்வம்,
பத்து மாதம் நம்மை சுகமாய்ச் சுமந்த சுமைதாங்கி,
பரந்த உலகிற்காக நம்மை வழங்கிய வள்ளல்,
பிள்ளை நிலாவாய் இருந்த நமக்கு வான் நிலா காட்டி அமுதூட்டிய அன்புத் தோழி,
இளம்பிறையாய் இருந்த நம்மை முழுநிலவாய் வாழ்வில் மாற்றும் சிற்பி!

அதனால் மழலை நமக்காக, மாதாவாகிய அவள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அவளுக்காகப் பிரார்த்தித்து, மாதாவின் திருவடி பணிவோம். அன்னையை இழந்து வாடுவோர்க்கு மனக்குறையே வேண்டாம். அன்னை என்றாலே அன்பு. ஆம்! அன்னை மறைவதில்லை. அவள் ஒவ்வோர் இல்லத்திலும் ஒரு பெண் மகளாய் வேறு ஸ்தானத்தில் நித்தம் வலம் வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

அதனால் அன்னையின் அடி பணிவோம், அன்னையைப் போற்றுவோம், பெண்மையைப் போற்றுவோம், பேணிக் காப்போம். என்னைப் பெற்ற அன்னையின் அடி பணிந்து, என் கட்டுரையை இனிதே நிறைவு செய்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *