மீ. விசுவநாதன்

 

vallamai-300x150

நல்லோர்கள் வாழ்க்கை நமக்கொரு பாடத்தைச்
சொல்லாமல் கண்முன்னே சூக்குமமாய்ச் சொல்லுவதை
நல்லபடி நாம்கொண்டால் நன்றாகும் காலந்தான் !
வில்லங்க மில்லா விதி. (211) 29.07.2015

உணவில் விருப்பம் ; உயிரில் நெருக்கம் ;
பண”வில்” லெழுத பலநாள் சுணக்கம் !
அடடேய் மனிதா அரைநொடி அன்பில்
கிடடேய் அதுவே சிறப்பு. (212) 30.07.2015

பிறந்து சிறந்தோர் பிரிந்து மிருப்பர் !
இரந்து பிழைப்போர் இருந்தும் இறப்பர் !
துறந்து நடப்போர் துயரைத் துடைப்பர் !
பரந்த மனத்தோர் பசு. (213) 31.07.2015

பிறரை மனத்தால் பிரியமுடன் வாழ்த்தக்
குறையே வராது ; குணமே நிறையும் !
அதனால் சிரித்தும் அணைத்து மிருப்போ(ம்)
மதனால் மலரும் மனம். (214) 01.08.2015

படியளக்கும் தெய்வம் பதறாமல் என்னுள்
அடியளக்க வைத்தான் ; அதனால் முடிவெடுத்தேன்
எப்போதும் நன்மையே எல்லோர்க்கும் செய்வதாக !
முப்போதும் சாந்தி முகம். (215) 02.08.2015

கூடிப் பெருக்கு குலத்தை ; தினமும்நீ
றாடிப் பெருக்குன் அழகையே -பாடினால்
நாடி நரம்பெலாம் ஞானக் குளியலிலே
ஆடிப் பெருக்குமே அன்பு. (216) 03.08.2015

நன்றாய் உழைத்து நடுவீட்டில் எல்லோரும்
ஒன்றாய் இருந்தே உணவுதனை அன்றாடம்
சாப்பிடும் ஆனந்தம் சம்சாரப் பேரின்பம் !
கூப்பிடு தூரம் குஷி. (217) 04.08.2015

உயிர்வளர் நெல்லிக் கனியைத் தமிழின்
பயிர்வளர் “அவ்வை”யைப் பார்த்து வயிர்நிறை
கொள்ளென்றே தந்தான் கொடையில் உயர்ந்தவன் !
கொள்ளத் தகுந்த குணம். (218) 05.08.2015

புதிது புதிதாய்ப் புலர்கின்ற நாட்கள்
முதிய உருவில் முடிய, இளைய
நிலவும் மலரும் ; நினைக்க நினைக்க
மலரும் நினைவே மணம். (219) 06.08.2015

செடிகொடிக்கு நீரிடுதல், சித்தப் பிரமை
பிடித்தோர்க்கும், யாருமிலாப் பேதை படிப்பிற்கும்
ஓடிப்போய் அன்புடனே ஒர்கைகொடுப் போருக்கு
நாடி வருமே நலம். (220) 07.08.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.