(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

மீ.விசுவநாதன்

அத்யாயம்: 35

டாக்டர். ஆ. சங்கரநாராயணன்

amvஅவனுக்கு நெருங்கிய நண்பர்களில் சங்கரும் ஒருவன். அவனைவிட மூன்று வயது மூத்தவன். அவனுடைய வீட்டிருக்கு அருகில் இருக்கின்ற ஆதிவராக மாமாவின் மூத்த மகன். முழுப் பெயர் ஆ. சங்கரநாராயணன். அவன் அனேகமாக சங்கரின் வீட்டில்தான் விளையாடிக் கொண்டிருப்பான். சங்கரின் தம்பி ரகுவும் அவனுக்கு நண்பன். ஒரு முறை அவனும், சங்கர், ரகு, கபாலி இன்னும் சிலருமாக சங்கரின் வீட்டு நடையில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, சங்கரின் அம்மாவழித் தாத்தா அவனைப் பார்த்து,” நீ யாராதுப் பையன்” என்று கேட்டார். அப்பொழுது அங்கு வந்த சங்கரின் அம்மா கல்யாணி மாமி ,” அப்பா…இவனும் என்னோடு கொழந்தைதான்…இவனோடு அம்மா என்னோடு தோழி…இவன் பேரு கண்ணன்” என்று சொன்னாள். கல்யாணி மாமி, ” இவனும் என்னோடு கொழந்தை” என்று சொன்ன அந்த அன்பான வார்த்தை இன்னும் அவனுக்கு இதயத்தில் இருக்கிறது. கிராமத்து மனிதர்களிடம் இருக்கும் அன்பு கள்ளம் இல்லாதது.

சங்கர் சிறுவயது முதலே நல்ல படிப்பாளி. விளையாட்டிலும் திறமைசாலி. வானொலிப் பெட்டியில் ஹிந்திப் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தன்னுடைய பாடங்களைப் படிக்கக் கூடிய கவனம் சங்கருக்கு இருந்தது. அப்பொழுது “ஆராதனா” என்ற ஹிந்தித் திரைப்படம் வந்த சமயம். சங்கர் வானொலியில் “ரூப்புதேரா மஸ்தானா” பாடலைக் கேட்டு ரசித்தபடி “இப்படி ஒரு டுயூன்” தமிழ்ல இருக்கா” என்றான். அவனுக்கு இந்திப் பாடல்கள் புரியாது. ஆனால் அதன் இசை பிடிக்கும். “தமிழ்ல எம்.எஸ்.வி. பாட்டு பிரமாத மாக இருக்கும்” என்று அவன் தமிழுக்குக் கொடிபிடித்தான்.

ஒரு முறை அவனுக்கும் சங்கருக்கும் சண்டை வந்து, சங்கர் அவனை அடித்து விட்டான். அப்பொழுது அங்கிருந்த சங்கரின் அப்பா ஆதிவராக மாமா சங்கரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். எல்லோருக்கும் முன்னால் அவர் அப்படி அடித்ததில் சங்கருக்கு அவமானமாகப் போய்விட, கோபித்துக் கொண்டு வீட்டின் உள்ளே ஒட்டியே போனவன்தான். நீண்ட நேரமாகியும் சங்கரைக் காணவில்லை. வீட்டு வேலைக் காரர்களும் தேடினார்கள். யார் கண்ணிலும் அகப்பட வில்லை. எல்லோருக்கும் கவலையாகி விட்டது. அவனுக்கு அம்மா,” எல்லார் கூடவும் சண்டை போடராய்…இப்ப பாரு ஒன்னால சங்கர் எங்க போனான்னே தெரியலை..” என்று அவனைச் சத்தம் போட்டாள். சந்தியாகாலம் இருட்டும் வேளை சங்கர் மெதுவாக மாடியில் இருந்து இறங்கி வந்தான். மாடியில் ஒரு தொட்டி போன்ற ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டிருந்ததாகச் சொன்னான். மறுநாள் காலையில் அவனும், சங்கர், ரகு, கபாலி, சுரேஷ் நண்பர்கள் சூழ ஆத்தங்கரைக்குக் குளிக்கச் சென்றனர்.

சங்கருக்கு கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உண்டு. அதனால் “கல்லிடை கிரிக்கெட் கிளப்” ( K.C.C ) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினான். தெருவில் உள்ள நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சங்கரின் வீட்டு வாசலில் மூன்று “ஸ்டெம்ப்”களை நட்டு கிரிக்கெட் விளையாட்டு மிக மும்முரமாக நடக்கும். ஸ்டெம்ப், பேட், பந்து எல்லாமே சங்கரும், ரகுவும் வாங்கி வைத்திருந்தார்கள். சங்கர் பந்து வீசும் பொழுது “கமெண்ட்ரி” சொல்லிக்கொண்டே இருப்பான். பந்து, மட்டையில் படுவதற்கு முன்பே ,” he is out..he is out” என்று கத்திக் கலக்குவான். அந்த பயத்திலேயே பாதிபேர் “அவுட்” ஆகிப் போவார்கள். ஒரு முறை என்.ஆர். (இப்பொழுது மும்பையில் ராமசுப்ரமணிய சாஸ்திரிகள்) “பேட்டிங்”. சங்கர் ஓடியே வந்து பந்தை வீசியபடி ” he is out..he is out” என்றான். ,” சங்கர்.. என்னப்பா …பந்தே இன்னும் வல்லை…அதுக்குள்ளே நான் அவுட்டா…” என்று என்.ஆர். கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டனர். சங்கரின் பழக்கத்தில்தான் அவனுக்குக் கொஞ்சம் கிரிக்கெட் வாசனை அடித்தது. கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், பட்டோடி, சந்திரசேகர் போன்ற கிரிக்கெட் வீரர்களின் சாகசங்களை சங்கர் சொல்லி அவன் ரசித்திருக்கிறான். சங்கரின் வீட்டு வானொலியில் நண்பர்களுடன் அவனும் கிரிக்கெட் கமெண்டரி கேட்கும் பழக்கம் இருந்தது. சங்கரின் அப்பாவுக்கும் கிரிக்கெட் கமெண்டரி கேட்பதில் ஆர்வம் உண்டு. கிரிக்கெட் விளையாடும் பொழுது நண்பன் கபாலியை “கபிடலி” என்றுதான் ஆதிவராக மாமா அழைப்பார். ஒரு தெருவுக்கும், இன்னொரு தெருவுக்கும் போட்டி வைத்து பயிற்சி எல்லாம் தருவான். தோல்வி என்றால் அவனுக்குக் கோவம் வந்து விடும். எதிலுமே ஜெயிக்கவேண்டும் என்ற எண்ணம் சங்கருக்கு இயற்கையாகவே இருந்தது.

சங்கர் கல்லூரிப் படிப்பை முடித்து மும்பையில் B. A. R .C.ல் விஞ்ஞானியாகப் பணியில் சேர்ந்தான். அணு உலையில் வேலை. நாட்டின் பாதுகாப்பிற்கான பணி என்ற பெருமையோடு வேலை செய்து நற்பெயர் எடுத்தான். அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, “டாக்டர். ஆ. சங்கரநாராயணன்” ஆனான்.

அணு உலையில் வேலை செய்ததால், இறைவனின் படைப்பின் ரகசியத்தை அணு அணுவாக உணர முடிந்தது என்றும், எல்லாம் அந்த “சித்தி விநாயகர்” செயல் என்றும் சங்கர் சொல்லுவான். இசையில் உள்ள ஆர்வத்தால் “வயலில்” வாசிக்கக் கற்றுக் கொண்டான். நேரம் கிடைக்கும் பொழுது தன் வீட்டில் வாசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான். சங்கரின் குடும்பமே இசையில் வளர்ந்தது என்றுதான் சொல்லவேண்டும். சங்கீதக் கலாநிதி வேதாந்த பாகவதரின் சகோதரர் ஸ்ரீ ராமலிங்க பாகவதரின் சீடர்கள்தான் சங்கரின் அப்பா, சித்தப்பா, அத்தை, சகோதரிகள் எல்லோரும். மாட்டு வண்டி அனுப்பி, ஸ்ரீ ராமலிங்க பாகவதரை அழைத்து வந்து தன் வீட்டில் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர்கள். தீக்ஷிதரின் நவாவர்ண கிருதிகளை ஸ்ரீ ராமலிங்க பாகவதர் பாடி கேட்க வேண்டும். அத்தனை ஈர்ப்பு அதிலே இருக்கும். பாகவதர் பாட்டு கற்றுத் தரும் பொழுது பல நாள்கள் அவனும் தன் காது குளிர அந்த இசையைக் கேட்டிருக்கிறான். சங்கரின் கோமு அத்தையும், சகோதரிகள் சுதா, வசு எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள்.

இரண்டு வருடங்கள் முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் துடிப்போடு விஞ்ஞானியின் உணர்வோடு சங்கர் வாழ்வது அவனுக்குப் புரிகிறது. சமீபத்தில் ஒரு “வாக்கிங் ஸ்டிக்” தயாரித்திருப்பதாகவும், அது முக்கியமாக வயதானவர்களுக்கு, அதிலும் நினைவு மறதி உள்ள முதியவர்களுக்காகவே வடிவமைத்ததாகவும் சொன்னான். அந்த “வாக்கிங் ஸ்டிக்” கைப்பிடியில் ஒரு “மைக்ரோ சிப்” வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அந்த முதியவர்களின் இருப்பிடத்தை எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்றும், அதன் உரிமையைத் தான் வைத்திருப்பதாகவும் சொன்னான். விரைவில் ஒரு நல்ல நிறுவனம் மூலம் அதைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவனிடம் சொன்னது பெருமையாக இருந்தது.

ஒருநாள் மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, செல்வக் களஞ்சியமே” என்ற வரிகளைப் பாடிக்காட்டி, “செல்வக் களஞ்சியம் ..என்றால் என்ன தெரியுமோ கண்ணா…அன்பு. குழந்தைகள் அன்பின் செல்வக் களஞ்சியங்கள். எடுக்க எடுக்கக் குறையாத அன்பு குழந்தைகளிடம்தான் இருக்கிறது. அதைத்தான் பாரதியார் “செல்வக் களஞ்சியமே” என்றார்” என்று சங்கர் சொன்னது அவன் மனத்தைத் தொட்டது.

அவனுக்கு நண்பன் டாக்டர். ஆ.சங்கரநாராயணனும் அன்பில் செல்வக் களஞ்சியமே….

22.10.2015

அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *