-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா
பல்லவி
எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது காளியம்மா
மண்ணிலே நல்லவண்ணம் வாழுதற்குத் துணையானாய் (எண்ணமெலாம்)
அனுபல்லவி
கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா
கண்மணியே காளியம்மா காலடியைப் பற்றுகின்றோம் (எண்ணமெலாம்)
சரணம்
தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை
நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே
ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்
நேராக எமைபார்த்து நின்னருளைத் தருவாயே!
மருதமர நிழலினலே வாழுகின்ற தாயேநீ
உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா
வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்
அருமருந்தே காளியம்மா அனைவருமே தொழுகின்றோம் (எண்ணமெலாம்)

Leave a Reply