மகளிர் தின வாழ்த்துகள்!
பவள சங்கரி
சுவாமி விவேகானந்தரின் பார்வையில் பெண்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படத் தொடங்கிய இந்து மத மறுமலர்ச்சியில் உருவான உன்னதமான பல ஞானிகளில் நம் சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மகான். பெண்களை துறவு வாழ்க்கைக்குத் தடையாக இருக்கும் மாய சக்தியாகக் காணும் பல துறவிகளுக்கிடையே சுவாமி விவேகானந்தர், மிக வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தார். சீதை மற்றும் சாவித்திரி. போன்ற கதாப்பாத்திரங்களை ,பெண்களைப் பற்றிய தம் நோக்கிற்கு முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். இந்தியப் பெண்களின் தூய்மை, அன்பு, பக்தி போன்ற மேன்மையான குணநலன்களைப் பாராட்டியுள்ளார். இந்தியப் பெண்களின் பெருமை என்றும் அவர்தம் தாய்மையிலேயே பிரகாசிக்கிறது என்கிறார். பெண்கள் சுதந்திரமும் வளர்ச்சியும் பெறுவதற்கு அடிப்படையான கல்வியைப் பெறுவதன் மூலமாக தங்களுக்குத் தேவைப்படும் சீர்திருத்தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொள்வார்கள். வெறும் புத்தகப் படிப்பை அளிப்பதைக் காட்டிலும், பெண்களுக்கு மதத் தத்துவங்கள், கலை, சுகாதாரம், ஆரோக்கியம், குடும்ப பராமரிப்பு, சமையல், தையல், அறிவியல் போன்ற அனுபவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும் என்கிறார். இளம் வயது திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இந்திய நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்.
1920-இல் மகாகவி பாரதியார் , ‘மாதர்களைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அபிப்ராயம் ’ என்ற கட்டுரையை எழுதினார். அதில் அவர், பெண்கள் நிலை, பெண் விடுதலை பற்றிய தமது கருத்துகளை தமக்கே உரிய பாணியில் ஆராய்ந்திருக்கிறார். கடைசியில் அவர் அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்தது குறிப்பிடத்தக்கது:
” இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும் படி தூண்டிய பேரன்பையும் கைக்கொள்வோமாயின், பாரத தேசத்து ஸ்திரீகளுக்கு பரிபூர்ணமான விடுதலை கிடைத்துவிடும்! அதனின்றும் பூ மண்டலத்துக்கு நன்மை உண்டாகும்”. என்கிறார்.
சுவாமிஜியின் வேத வாக்குகள்:
மேன்மக்கள் அனைவருமே பெண்மையை மதிப்பவர்கள். பெண்மையை மதிப்பவர்கள் அனைவரும் மேன் மக்களே.
மேன்மக்கள் அன்புகாட்டி பெண்களை அடிமை கொள்ள மாட்டார்கள். மாறாக, பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்து அதன் மூலம் அவர்கள் முன்னேறுவதையே விரும்புவார்கள்.
பெண்மைக்கு ஆதாரமாய் உள்ள தெய்வீக சக்தியைப் புரிந்துகொண்டு அதை வணங்குதலே அதற்குரிய மரியாதை.
Manliness எனப்படும் ஆண்மைப் பண்புகள் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உரியது ஆண்மை என்பது வீரம் மாத்திரமல்ல; பொறுமை, அன்பு, தியாகம், சேவை, செயல்வேகம், சிந்தனைத்திறன் போன்றவைகளும் அதில் உள்ளடங்கும்.
நல்ல சூழ்நிலையில் பெண்களின் கற்பு மலர் போல் இருந்து நல்லவர்களின் மனங்களை மேம்படுத்துகிறது. அதே சமயத்தில் சூழ்நிலை பாதகமாகும்போது பெண்களின் கற்பு சுட்டெரிக்கும் நெருப்பாகித் தீயவர்களைச் சுட் டெரிக்கிறது.
பெண்களை ஆளும் ஆதிக்கங்கள் அநேகம் உள்ளன. கணவன் – மனைவி உறவில் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மாமியார்- மருமகள் உறவில் பெண்களைப் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதேபோல ஆண்களை அடக்கி ஆளும் பெண்ணாதிக்கமும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
ஒவ்வொரு பெண்ணும் தன் உடல், உள்ளத்தின் பலவீனங்களுக்குத் தன்னைத் தானே அடிமையாக்கிக் கொள்ளும் ஆதிக்கங்களிலிருந்து பெண்கள் மட்டுமல்ல, அனைவரும் விடுபட்டு ஆன்ம சுதந்திரத்தில் திளைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் ஆன்ம ஆற்றலை உணர்ந்து அதை வெளிப்படுத்தி, தங்கள் சொந்தக் கால்களிலேயே நிற்க வேண்டும். இதில் ஆண் பெண் என்ற பேதமின்றி இருவருக்கும் சம வாய்ப்பும், உரிமையும் உள்ளன.
அன்பை அள்ளித் தரும் அன்னையாய்
பாசமூட்டும் நெறிகளாக பாட்டியாய்
சகல நேசங்களையும் கொட்டிடும் சகோதரியாய்
அப்பாவின் பெண்பாலாக அத்தையாய்
பெரிதுவக்கும் பண்புகளில் பெரியம்மாவாய்
சிலாகிக்கும் செயல்களில் சித்தியாய்
அன்னைக்கு அடுத்தபடியாக அண்ணியாய்
மனதை புரிந்து கொள்ளும் மச்சினியாய்
மனமுருக வைத்திடும் மகளாய்
மகிழ வைத்திடும் மருமகளாய்
இவை அனைத்திற்கும் மேலாக
கஷ்டமாய் இருக்கும் போது இஷ்டமாய்
தோள் கொடுக்கும் தோழியாக
உள்ளத்தில் மட்டுமல்ல
உணர்வில் மட்டுமல்ல
உடைகளில் மட்டுமல்ல
உணவில் மட்டுமல்ல
உயிரிலும் கலந்திருப்பது
நீங்கள் தான்
சரித்திரம் படைத்த பல பெண்மைகளுக்கும்
புதிய சரித்திரம் படைக்கப் போகும் பெண்மைகளுக்கும்
சிரம் தாழ்ந்த வந்தனங்கள் பல
தோல்விகள் பல உங்களை மிக
எளிதாக கடந்து போகலாம்
துவண்டு விடாதீர்கள்
உங்களை தங்கமாய் புடம் போட வந்த
படிக்கட்டுகள் காத்திருங்கள் நாளைய
ஊடகங்கள் உங்களை மட்டுமே
சிலாகிக்கப் போகிறது
புதிய யுகம் உங்களால் மட்டுமே
மார்ச் 8
மறக்க முடியாத இமயம் தொட்டு
– க.கமலகண்ணன், எழுத்தாளர்,
சென்னை.
மகளிர் தின கட்டுரைகளில் நூறாவது இன்று நான் படித்து இருப்பேன். அவற்றில் சில நன்கு அமைந்திருந்தன. அவற்றில் ஒன்று நம்பர் 1. அது, இது. வல்லமை ஆசிரியர் நான் எழுதப்போவதை நன்றாக ஆருடம் மூலம் அறிந்து, என்னை விட சிறப்பாக எழுதி என்னை படுத்துகிறார்!
ஸ்வாமி விவேகானந்தரின் அவ்ர்கள் சமுதாய முன்னேற்றம் பற்றி எழுதிய கருத்துக்கள் அபாரம். அவற்றை தொகுத்து எழுதப்போனால், இந்த பெண்ணரசி முந்திக்கிறார்!
என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளவும்
அன்பின் ஐயா,
ஊக்கமான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி. தட்டிக்கொடுத்து ஊக்கம் கொடுக்கும் வல்லவர் தாங்கள் என்பது அனைவரும் அறிந்ததுதானே..
உன்னதமான சமநிலை நோக்குடன் எழுதப்பட்ட கட்டுரை. வாழ்த்துக்கள்.
சர்வதேச மகளிர் தினத்தில் நமது உறுதி மொழி வேண்டுகோள்
1. பெண்டிருக்கு மதிப்பும், பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்க யாவரும் ஒத்துழைப்போம்.
2. விதவையர் கோலமிடுவதை நீக்கி, மறுமண இல்வாழ்வில் வாழ வழி வகுப்போம்.
3. விடுதலை நாட்டில் பெண்டிர் கண்ணியமாக வேலை பார்க்கவும், தகுந்த ஊதியம் கிடைக்கவும் வாய்ப்புக்கள் அளிப்போம்.
4. தாய்மைக் காலங்களில் போதிய ஓய்வும், ஊதியமும், உதவியும் கிடைக்க பணிச்சலுகை வழங்க வகை செய்வோம்.
5. பெண்டிரைக் கொடுமைப் படுத்துவோர் தண்டிக்கப்பட நீதிநெறிச் சட்டம், காவல் துறைகள்அமைப்போம்.
6. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்.
இன்னும் சேர்க்க விழைவோர் முன்வாருங்கள்
சி. ஜெயபாரதன்
அன்பினிய சகோதரி பவளா ! அருமையான காலக்கட்டாயமான பதிவு. அருமையான எடுத்துக்காட்டுகள். மகளிர் ஆற்றலுக்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள் சகோதரி.